Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

என் சரித்திரம் - பாகம் 5
(அத்தியாயம் 101-122)
உ.வே.சாமிநாதையரவர்கள்

en caritiram (autobiography)-
part 5 (chapters 101-122)
of U.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    We thank the Tamil Virtual Academy for providing an electronic version of this work.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2016.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

    என் சரித்திரம் - பாகம் 5 (அத்தியாயம்101-122)
    மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
    டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள்


    Source:
    என் சரித்திரம்
    உ.வே. சாமிநாதையரவர்கள்
    1ம் பதிப்பு வெளியீடு எஸ். கல்யாணசுந்தர அய்யர், 1950
    மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம்,
    சென்னை, 2ம் பதிப்பு, 1982
    ----------

    உள்ளடக்கம் - என் சரித்திரம் பாகம் 5
      101. அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி
      102. அடுத்த நூல்
      103. சுப்பிரமணிய தேசிகர் வியோகம்
      104. திருநெல்வேலிப் பிரயாணம்
      105. பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள் 640
      106. நல்ல சகுனம்
      107. கண்டனப் புயல்
      108. பத்துப்பாட்டுப் பதிப்பு
      109. சிலப்பதிகார ஆராய்ச்சி
      110. பயனற்ற பிரயாணம்
      111. பல ஊர்ப் பிரயாணங்கள்
      112. தமிழ்க் கோயில்
      113. ஹிருதயாலய மருதப்பத் தேவர்
      114. சிலப்பதிகாரப் பதிப்பு
      115. சிலப்பதிகார வெளியீடு
      116. கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும்
      117. புறநானூற்று ஆராய்ச்சி
      118. மூன்று துக்கச் செய்திகள்
      119. புறநானூற்றுப் பதிப்பு
      120. மணிமேகலை ஆராய்ச்சி
      121. மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம
      122. நான் பெற்ற பட்டம்
    -----------------

    அத்தியாயம்- 101
    அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி

    சிந்தாமணியைச் சேர்ந்த முகவுரை, கதைச் சுருக்கம் முதலியன அச்சிட்டு நிறைவேறின. அச்சுக்கூடத்தில் புத்தகத்தைப் பைண்டு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு இல்லை. விசாரித்ததில் முருகேசமுதலியார் என்பவர் திறமை உடையவரென்றும் நாணயமாக நடப்பவரென்றும் தெரிந்தமையால் அச்சிட்ட பாரங்களையெல்லாம் அவரிடம் அச்சுக்கூடத்தாரைக் கொண்டு ஒப்பிக்க நினைத்தேன். அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்துவிட்டே பாரங்களைப் பைண்டரிடம் ஒப்பிக்கச் செய்வதுதான் நலம் என்று தெரிந்தது. ஆனால், கையிற் பணமில்லாமையால் திருவல்லிக்கேணி சென்று, என் நண்பரும் நார்ட்டன் துரை குமாஸ்தாவுமான விசுவநாத சாஸ்திரிகளைக் கண்டு ரூபாய் முந்நூறு கடனாக வேண்டுமென்றும் சில வாரங்களில் வட்டியுடன் செலுத்தி விடுவேன் என்றும் விஷயத்தைச் சொல்லித் தெரிவித்தேன். அவர் அங்ஙனமே அந்தத் தொகையைக் கொடுத்து உதவினார். உடனே அச்சுக்கூடத் தலைவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். அவர் அச்சிட்ட பாரங்களையெல்லாம் பைண்டரிடம் ஒப்பித்து விட்டார்.

    பெருமாள் தரிசனம்

    அன்று சனிக்கிழமையாதலால் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாளைத் தரிசனம் செய்தேன். அந்தக் கோயிலில் சில ஸ்ரீ வைஷ்ணவ வித்துவான்களைக் கண்டு சம்பாஷித்தேன். அவர்கள் சிந்தாமணி நிறைவேறியது குறித்து என்னைப் பாராட்டினார்கள். அவர்களுள் வை.மு. சடகோபராமானுஜாசாரியரும் ஒருவர். முதன்முதலாக அப்பொழுதுதான் அவரைக் கண்டேன், அக்காலத்தில் அவருக்குப் பதினாறு பிராயம் இருக்கும். நல்ல சுறுசுறுப்புடையவராகவும் புத்திசாலியாகவும் தோற்றினார். ‘பிற்காலத்தில் சிறந்த நிலைக்கு வருவார்’ என்று கருதினேன். அது முதல் அவருடைய பழக்கம் விருத்தியாகி வந்தது.

    இராமசுவாமி முதலியார் பாராட்டு

    பெருமாள் தரிசனம் செய்து கொண்டு ஜாகைக்குப்போய் மனக்கவலையின்றித் துயின்றேன்.

    அச்சிட்ட சிந்தாமணிப்பிரதிகள் ஐந்நூறு. அவற்றிலும் ஏறக்குறைய நூறு பிரதிகள் அச்சுக்கூடத்தாருடைய கவனக்குறைவால் வீணாகிவிட்டன.

    மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பைண்டர் மாதிரிக்காக ஒரு பிரதியைப் பைண்டு செய்து கொடுத்தார். அதைக் கையில் எடுத்துக்கொண்டு இராமசுவாமி முதலியாரிடம் சென்றேன்.

    அவரிடம் புஸ்தகத்தைக் காட்டினபோது அவர் அடைந்த ஆனந்தம் இவ்வளவென்று சொல்லி முடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறைவேற்றி விட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இப்படியே அச்சிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று சொன்னார்.

    “எல்லாம் செய்யலாம், எல்லாவற்றிற்கும் பணம் வேண்டியிருக்கிறதே, அதற்கு நான் எங்கே போவேன்! நேற்று நான் விசுவநாத சாஸ்திரிகளிடம் முந்நூறு ரூபாய் கடன் வாங்கிச் சிந்தாமணிப் பிரதிகளை அச்சுக்கூடத்திலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று முதல் நாள் நிகழ்ச்சிகளை விரிவாகச் சொன்னேன்.

    முதலியார் மிகவும் வருந்தி, “கையொப்பமிட்ட கனவான்களிடம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கடனுக்கு ஈடுசெய்து விடலாமே” என்றார்.

    “நான் இன்றிரவே புறப்பட்டு நாளைப்பகலில் கும்பகோணம் காலேஜு க்குப் போக வேண்டியவனாக இருக்கிறேன். இந்த அவசரத்தில் நான் யாரிடம் போய்ப் பணம் கேட்பது?” என்றேன்.

    “அப்படியானால் மற்ற நண்பர்களிடம் நான் கேட்டு வாங்கிச் சாஸ்திரியாரிடம் கொடுத்து விடுகிறேன். அரங்கநாத முதலியாரை மாத்திரம் நீங்களே போய்ப் பாருங்கள், அவர் கொடுக்க வேண்டிய பணத்தைத் தருவார்” என்றார்.

    ‘அவர் இந்தப் புஸ்தகத்தைக் கண்டால் மிகவும் சந்தோஷமடைவார்; நிச்சயமாகத் தாம் வாக்களித்தப்படி உதவி செய்வார்’ என்ற எண்ணத்தோடு அரங்கநாத முதலியார் வீட்டை அடைந்தேன். அவர் தம்முடைய அறையில் இருந்தார். அப்போது பிற்பகல் நான்கு மணியிருக்கும். என் வரவை அறிந்த முதலியார், “நான் இப்போது பரீட்சைக்குரிய வேலையில் இருக்கிறேன், அவகாசம் சிறிதும் இல்லை. பார்க்க முடியாததற்கு வருந்துகிறேன். நாளைக் காலையில் வந்தால் பார்த்துப் போகலாம்” என்று சொல்லியனுப்பினார். மிக்க ஆவலோடு சென்ற நான் எதிர்பாராத வருத்தத்தை அடைந்தேன். ‘அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் மனிதர்களுக்குச் சேர்ந்தே வருகின்றன, என்றெண்ணி இராமசுவாமி முதலியாரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு அன்றிரவே கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன்.

    இந்த அலைச்சலினால் அன்று முழுவதும் நான் ஆகாரம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் என் கையில் இருந்த பைண்டான சிந்தாமணிப் பிரதியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்து கொண்டிருந்தேன். ரெயில்வே ஸ்டேஷனில் ஸி.எஸ்.எம்.பள்ளிக்கூடத்துத் தமிழ்ப் பண்டிதராகிய பு.மா.ஸ்ரீநிவாஸாசாரியரென்பவர் என்னைச் சந்தித்துச் சிந்தாமணி நிறைவேறியது பற்றிப் பாராட்டினார். “இந்தத் தேசத்தில் கம்பெனியாருடைய பிரதிநிதியாக இருந்த கிளைவ் துரை தம்முடைய எதிரிகளை அடக்கி வென்று பல பிரதேசங்களைக் கம்பெனியாருக்கு உரியமையாக்கி மீட்டும் தம் நாடு செல்லும்போது கம்பெனி உத்தியோகஸ்தர் யாவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு அவரை வழியனுப்பினார்களாம். உங்களைக் காணும்போது எனக்கு அவருடைய ஞாபகம் வருகிறது” என்று சொல்லித் தம் உவகையைப் புலப்படுத்தினார்.

    அரங்கநாத முதலியாருக்கு எழுதிய பாடல்கள்

    மறுநாட் காலையில் கும்பகோணம் வந்து இறங்கினேன். என்னுடைய அன்பர்களெல்லாம் சிந்தாமணி பூர்த்தியான சந்தோஷத்தை விசாரித்தார்கள். அடுத்த நாள் எனக்கு அரங்கநாத முதலியார் ஞாபகம் வந்தது. ‘மறுநாள் நம்மை வரச் சொன்னாரே? அவரைப் பாராமல் வந்து விட்டோமே; என்ன நினைப்பாரோ?’ என்று நினைந்து விஷயத்தை விளக்கி அவருக்கு ஒரு கடிதம் எழுதத்தொடங்கினேன்: கடிதம் பாடல்களாகவே அமைந்தது.

      1,
      “குலத்தினாற் புலவர் மெச்சும் குணத்தினாற் பலநூ லாயும்
      புலத்தினாற் றிசைய ளக்கும் புகழினாற் புரையில் வாய்மை
      வலத்தினா லடுத்தோர்த் தாங்கும் வன்மையால் வன்மை மிக்க
      நலத்தினாற் றிகழ ரங்க நாதமா முகிலீ தோர்க.”
      (புலம் - அறிவு. புரை - குற்றம், தாங்கும் - ஆதரிக்கும், நலம் - குணம்.)

      2.
      “திருத்தகுமா முனிவனருள் தெள்ளியசிந் தாமணியைத்
              திருவி லாதேன்
      வருத்தமிக வாய்ந்தச்சிற் பதிப்பித்து முடித்தபெரு
              மகிழ்வை யோதும்
      கருத்துடையே னாகியந்த நூலையுங்கைக் கொடுநின்னைக்
              காண வந்தும்
      பெருத்தவபாக் கியமென்னைத் தடுத்தமையால் நினைக்காணப்
              பெற்றி லேனால்.”
      (திருத்தகுமா முனிவன் - திருத்தக்க தேவர் திருவிலாதேன் -
      பொருளில்லாத வறியவனாகிய யான்.)

      3.
      “ஆயினுநின் அன்புடைமை யென்னளவு மகலாதென்
              றகத்திற் கொண்டே
      தாயினுமன் பமைந்திலகு மிராமசா மிக்குரிசில்
              தன்பாற் பின்னர்
      மேயினனின் பால்விளம்ப வெண்ணியவெலா மவன்பால்
              விளம்பி வந்தேன்
      நீயிரிரு வீர்களுமோர் மனமுடையீ ரென்பதனை
              நினைந்தே மன்னோ.”
      (மேயினன் - சென்றேன்.)

      4.
      “இது பொழுதி லெனக்கின்றி யமையாத தின்னதென
              இயல்பா லோர்ந்த
      மதுவிரவுந் தொடப்புயத்து வள்ளலே வெளிப்படையா
              வழங்க வென்னெஞ்
      சதுதுணிவுற் றிலதானின் றிருமுகமாற் றங்கேட்கும்
              ஆசை யேற்குக்
      கதுமெனவே மகிழ்வுமிக நினதுதிரு முகமாற்றம்
              காணச் செய்யே.”

      (தொடை - மாலை திருமுக மாற்றம் - வாய்ச் சொல், கடித வாக்கியம் கதுமென - விரைவில்)

    கடிதம் எழுதி இரண்டு நாளுக்குப் பின் நான் எதிர்பார்த்தபடியே அரங்கநாத முதலியார் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஏழு பாடல்களும் ஒரு குறிப்பும் ஐம்பது ரூபாய்க்கு ஓர் உண்டியலும் இருந்தன. குறிப்பில் சேலம் இராமசுவாமி முதலியாரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டதாகவும் எழுதியிருந்தார். அவர் பாடல்களில் உண்மையன்பு ததும்பியது.

      “அன்றெனைக் காண நயந்தனை யைய
              அமயமொவ் வாமையா லமைவாய்ச்
      சென்றனை நின்னைக் கண்டிலாக் குறைய
              தென்னதே சிற்றறி வுடையேன்
      ஒன்றல பலவாம் பிழைசெயத் தகுமே
              உத்தம குணமொருங் குடையாய்
      கன்றினைக் காராக் களியுறக் காக்கும்
              கனிவொடு கமித்தனின் கடனே.”

      (நயந்தனை - விரும்பினை. அமயம் - சமயம் காரா – கார் காலத்திற்குரிய பசு; ஒருவகைப் பசு, கமித்தல் - பொறுத்தல்)

    என்னும் செய்யுளால் என்னைப் பார்க்க முடியாமற் போனது பற்றிய வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

      “மருந்தனசீ வகசிந்தா மணிக்குரையை மாண்புலவர்
      விருந்தெனக்கொள் வகையளித்தாய் வேறியம்பல் வேண்டும்
      பெருந்திமிரம் போக்குவித்தாய் பேரறிவி னாதவனைப் [தோ
      பொருந்தீரம் பெற்றனையே புத்தகமும் பெற்றேனே.”

      [மருந்து - அமிர்தம். திமிரம் - இருள், அறியாமை, ஆதவனைப் பொரும் - சூரியனை ஒக்கும். புஸ்தகம் கடிதம் எழுதுகையில் பெறாவிடினும் துணிவு பற்றிப் பெற்றேனென்று எழுதினார்.]

    அந்தக் கடிதங் கண்டு என் உள்ளம் உவகையால் பொங்கியது. உடனே என் நன்றியறிவைத் தெரிவித்து எட்டுப் பாடல்கள் அமைந்த விடைக் கடிதத்தை எழுதியனுப்பினேன். முதலியார் தாம் எழுதிய பாடல்கள் பொருளில்லாப் பாடல்களென்று தம் கடிதத்தில் குறித்திருந்தார். அதற்கு விடையாக, ‘தங்கள் பாடலோடு பணம் வந்தமையால் அவையே பொருளமைந்த பாடல்கள்; என்னுடையனவே பொருளிலாப் பாடல்கள் என்னும் கருத்தமைய,

      “பொருளிலாப் பாட்டென்று புகன்றனைநீ நவின்றசுவை
              பொழியும் பாவைப்
      பொருளிலாப் பாடல்களென் பாடல்பொரு ளுளபாடல்
              புகழ்நின் பாடல்
      பொருளுடனே விரவியஞ்சல் வழிவந்த செயலொன்றே
              பொருந்து சான்றாம்
      பொருளிலா வெனையுமொரு பொருளாக்கொள் நயசுகுணப்
              புகழ்க்கோ மானே”

      [பொருள் - நல்ல கருத்து, பணம். அஞ்சல் - தபால். சான்று - சாட்சி] என்னும் பாடலை எழுதினேன்.

    -------
    இவற்றை நான் வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற்பாகத்தில் விரிவாக எழுதியுள்ள அரங்கநாத முதலியார் சரித்திரத்திற் காணலாம்.
    -------
    ஒரு வாரத்துக்கெல்லாம் சென்னையிலிருந்து பைண்டர் நூறு பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சாத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்.

    அன்று மழை நன்றாகப் பெய்தது. ஆயினும், கும்பகோணத்திற் கையொப்பம் செய்தவர்களுக்குப் புஸ்தகங்களைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு வண்டியில் சில பிரதிகளை ஏற்றிக் கொண்டு முதலில் சாது சேஷையரிடம் சென்று கொடுத்தேன். அவர் வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்தார். பிறகு மற்ற அன்பர்களை ஒவ்வொருவராகக் கண்டு புத்தகத்தை கொடுத்து விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

    இராமலிங்க தேசிகர் வரவு

    அன்று மாலை ஆறு மணிக்கு இராமலிங்க தேசிகர் என்பவர் வந்தார். அவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்தவர்; கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சைவப் பிரசங்கங்கள் செய்து பொருளீட்டிக் கொண்டு வந்தார். அங்கிருந்து கொணர்ந்த சில பொருள்களை எனக்கு அளித்ததோடு கருங்காலியாற் செய்த யானையொன்றையும் வழங்கினார். அவர் கொடுத்த மற்றப் பொருள்களை விட அந்த யானையினிடத்து அதிக விருப்பம் எனக்கு உண்டாயிற்று. என்னை உடனிருந்து பாதுகாக்கும் யானைமுகக் கடவுளே அந்த அடையாளத்தில் வந்ததாக நான் எண்ணிக் கொண்டேன்.

    அவர் தமது பிரயாணத்தைப் பற்றியும் இலங்கையிலுள்ள கனவான்களைப் பற்றியும் சொல்லி, “ஸ்ரீ பொ. குமாரசுவாமி முதலியார் தமக்குச் சிந்தாமணிப் பிரதிகள் 15 அனுப்பினால் விற்றுப் பணம் அனுப்புவதாகச் சொன்னார். அவர் பெரிய செல்வர்; தமிழன்பிற் சிறந்தவர்” என்றார். நான் அவ்வாறே குமாரசாமி முதலியாருக்குப் பிரதிகளை அனுப்பிக் கடிதமும் எழுதினேன்.

    சுப்பிரமணிய தேசிகர் மகிழ்ச்சி

    மறு நாள் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் சேர்ப்பித்தேன். அவர் புஸ்தகங்களை மிக்க விருப்பத்தோடு பெற்று முகப்புப் பக்கத்தையும், முகவுரையையும், நூலாசிரியர் வரலாறு முதலியவற்றையும், நூலையும், உரையையும் பார்த்து மகிழ்ந்தார்.

    அப்போது அவ்வூரிலுள்ளவர்களாகிய பொன்னோதுவார், மகாலிங்கம் பிள்ளை என்னும் இருவர் வந்து தேசிகரை வணங்கினர். அவ்விருவரும் யாழ்ப்பாணம் சென்று ஸ்ரீ ஆறுமுக நாவலர் மருகராகிய பொன்னையா பிள்ளையிடம் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் முதலியவற்றைப் பாடங் கேட்டு விட்டு வந்தவர்கள். அவர்களைப் பார்த்துத் தேசிகர், “பொன்னையா பிள்ளை சிந்தாமணி பதிப்பிப்பதாக எழுதியிருந்தாரே; எந்த அளவில் இருக்கிறது? முற்றுப் பெற்றதா?” என்று கேட்டார்.

    “அந்த பிரஸ்தாவமே அங்கில்லை. இரகுவம்சம் மாத்திரம் அவரால் அச்சிடப்பட்டு முடிந்தது. சந்நிதானத்தினிடம் ஒரு பிரதியையும் இவர்களிடம் ஒரு பிரதியையும் ஒரு கடிதத்தையும் சேர்ப்பிக்கும்படி கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி விட்டு இரகுவம்சத்தையும் கடிதத்தையும் என்னிடம் கொடுத்தார்கள். அக்கடிதத்தில் பொன்னையா பிள்ளை, சிந்தாமணியைப் பார்ப்பதில் மிக்க ஆவலுடையவராக இருப்பதாகவும் ஒரு பிரதி அனுப்ப வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

    நான் தேசிகரோடு பேசியிருந்து விடை பெற்றுக் கும்பகோணம் வந்து பொன்னையா பிள்ளைக்குச் சிந்தாமணிப் பிரதி ஒன்றும் ஒரு கடிதமும் அனுப்பினேன். அக்கடிதத்தில், “பாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத் தெரியுமே யன்றி வேறு எந்த மலைக்கும் தெரியாது. அது போலச் சீவகசிந்தாமணியின் ஆழம் உங்களுக்குத்தான் தெரியும். ஏதோ ஒருவாறு நான் பதிப்பித்திருக்கிறேன். தாங்கள் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்” என்று எழுதினேன்.

    பிறகு வெளியூரிலுள்ள கையொப்பக்காரர்களுக்குப் பிரதிகளை அனுப்பிக் கடிதங்களும் எழுதினேன். பலர் என்னைப் பாராட்டி விடை எழுதினர். பலர் பாடல்கள் அனுப்பினர். பலர் தாம் அளிப்பதாகச் சொன்ன பணத்தை அனுப்பினர். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டு ஊர்களுக்கும் நானே நேரில் சென்று கையொப்பமிட்ட அன்பர்களுக்குப் புத்தகம் கொடுக்க எண்ணினேன்.

    ஸ்ரீநிவாச பிள்ளை பாராட்டு

    முதலில் தஞ்சாவூருக்குப் போய் அங்குள்ள என் அன்பரும் வக்கீலுமாகிய ஸ்ரீநிவாச பிள்ளையையும், கல்யாண சுந்தர ஐயர் முதலியவர்களையும் கண்டு பிரதிகளைச் சேர்ப்பித்தேன். ஸ்ரீநிவாஸ பிள்ளை சிந்தாமணியைப் பார்த்தார். அதில் நச்சினார்க்கினியர் வரலாற்றில் எட்டுக் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு என்னும் மூன்று தொகுதிகளில் அடங்கிய நூல்கள் இன்னவையென்று புலப்படுத்தும் பாடல்களைப் பார்த்து அவர் பிரமித்துவிட்டார். “பெரிய வித்துவான்களெல்லாம் படித்த நூல்களுக்கு மேற்பட்டனவாக வல்லவோ இருக்கின்றன இவை? தமிழென்பது கரை காணாத அமுத சமுத்திரமோ!” என்று ஆனந்தம் அடுதத நூல்

    தாங்காமல் துள்ளினார். “உங்கள் பாக்கியமே பாக்கியம்!” என்று பாராட்டினார். “நான் செட்டியாரைப் போய்ப் பார்க்கப் போகிறேன்” என்றேன். ஸ்ரீநிவாச பிள்ளை, தியாகராச செட்டியாரிடம் பாடம் கேட்டவர்; தெய்வம் போல அவரை மதிப்பவர். ஆதலின் உடனே, “அவசியம் செய்ய வேண்டும்; இதன் அருமையையும், உங்கள் அருமையையும் அவரே பாராட்டவேண்டும்” என்று சொல்லி விடை கொடுத்தார். நான் திருச்சிராப்பள்ளியை நோக்கிப் புறப்பட்டேன்.
    -------------

    அத்தியாயம்- 102
    அடுத்த நூல்

    சிந்தாமணியை நான் அச்சிட்டு வந்த காலத்தில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று அந்தப் பள்ளிக்கூடத்து அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். என்னிடம் பாடம் கேட்டவரும் சில காலம் திருவாவடுதுறையில் இருந்தவருமான சிதம்பரம் மு. சாமிநாதையரென்பவரை அனுப்பினேன்.

    ம. வீ. ராமானுஜாசாரியார் [%]

    அவர் அவ்வேலையை ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளிக்கூட சம்பந்தமான அதிகாரிகளுக்கும் மாணாக்கர்களுக்கும் திருப்தியுண்டாகும்படி நடந்து வந்தார். அவர் சிந்தாமணிப் பதிப்புக்குச் சிலரிடம் கையொப்பம் வாங்கித் தந்தார். கௌரவமாக எல்லாரோடும் பழகிவந்த அவர் சில அசௌகரியங்களால் வேலையை விட்டு விட்டு ஒருவருக்கும் தெரியாமல் வேறு ஊருக்குப் போய் விட்டார். அப்பொழுது அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமித்தல் அவசியமாக இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து வேறொரு தக்க பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று சொன்னார். திருமானூர் அ. கிருஷ்ணையரை அவ்வேலையில் நியமிக்கச் செய்யலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் அப்போது சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாகச் சென்னையில் இருந்து வந்தமையால் சில காலம் வேறு ஒருவரைப் பார்த்துவரச் செய்யலாமென்று நிச்சயித்தேன்.

    அக்காலத்தில் திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த ம. வீ. ராமானுஜாசாரியரைக் கண்டு, கிருஷ்ணையர் சென்னையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீரங்கம் வேலையை ஒப்புக் கொள்ளச் சில மாத காலமாவது ஆகுமென்றும், அதுவரையில் அவ்வேலையைப் பார்த்துவர வேண்டுமென்றும் கூறினேன். அவர் அவ்வாறே செய்வதாக உடம்பட்டு வேலையைப் பார்த்து வந்தார். சிந்தாமணி பூர்த்தியானவுடன் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்துக்குப் போய் ராமானுஜாசாரியரிடமிருந்து அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். நான் தியாகராச செட்டியாரைப் பார்க்கச் சென்ற காலத்தில் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்தில் வேலை பார்த்து வந்தார்.
    ---------------
    [%] மகா பாரதத் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டவரும் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராயிருந்தவருமான காலஞ் சென்ற மகா மகோபாத்தியாய ம. வீ. ராமானுஜாசாரியார் இவரே.

    தியாகராச செட்டியாரது ஆனந்தம்

    தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட நான் திருச்சிராப்பள்ளி சென்று, இரவு இரண்டு மணிக்கு உறையூரை அடைந்து, செட்டியாரிருந்த வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினேன். என் குரலைக் கேட்டவுடன் செட்டியார் வேகமாக வந்து கதவைத் திறந்து, “உன்னையே நினைத்துப் படுத்திருக்கிறேன்” என்று சொல்லி என்னைக் கட்டிக் கொண்டார். வழக்கமாக ‘நீங்க’ ளென்று அழைத்து வந்த அவர், அப்போது ‘உன்னை’ என்று சொன்னதும், அவ்வளவு வேகமாக வந்து கட்டிக் கொண்டதும் அவருடைய அன்பு கரை கடந்து பொங்கியதற்கு அடையாளங்களாக இருந்தன. சம்பிரதாயம், மரியாதை, கௌரவம் எல்லாம் அன்பும் அன்பும் சந்திக்குமிடத்தில் மறைந்து விடுகின்றன.

    “சாயங்காலம் திருவாவடுதுறை வித்துவான் [*]ஆறுமுகச்சாமியும் கிருஷ்ண ஐயரும் வந்தார்கள். சிந்தாமணிப் புஸ்தகத்தைக் காட்டினார்கள். கண் தெரியாமையால் கையில் எடுத்துப் பார்த்தேன். கனமாக இருந்தது. பிரித்து முதலிலிருந்து படிக்கச் சொல்லிக் கேட்டேன்.
    --------
    [*] இவர் திருவானைக்கா மடத்தில் இருந்தார். பிறகு குன்றக்குடி ஆதீனத் தலைவராக இருந்து விளங்கினார்.


    “என்ன வேலை செய்திருக்கிறீர்கள்! முகவுரை முதலியவை மிக அழகாக அமைந்திருக்கின்றன. நான் முன்பு நாமகளிலம்பகத்தோடு போராடினவனாதலால் புஸ்தகத்தின் அருமை எனக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு சக்தி உங்களுக்கு எங்கிருந்து வந்ததென்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே இருக்கிறேன். ஐயா அவர்கள் இருந்தால் எவ்வளவு சந்தோஷ மடைவார்கள் தெரியுமா? அவர்களுக்கும்
    உங்களைப் போஷித்த திருவாவடுதுறை மடத்தாருக்கும், உங்களுக்கு வேலை செய்வித்த எனக்கும், உங்களுக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து வைத்து விட்டீர்கள்.”

    இவ்வாறு செட்டியார் பாராட்டிக் கொண்டே போனார். அந்த இரவு முழுவதும் ஆனந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். காலையில் திருச்சிராப்பள்ளியிலும் அதைச் சார்ந்த இடங்களிலும் கையொப்பமிட்ட கனவான்களிடம் சென்று சிந்தாமணிப் பிரதிகளைச் சேர்ப்பித்து வரலாமென்று புறப்பட்டேன். செட்டியார் என்னைத் தடுத்து, “நான் தக்கவர்களை அனுப்பி, உரியவர்களிடம் சேர்ப்பித்து விடச் சொல்லுகிறேன். என்னுடன் இருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்” என்று சொல்லிச் சிலரை அழைத்து அவர்கள் மூலமாகப் பிரதிகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.

    நான் அவருடன் இருந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டே யிருந்தேன். சிந்தாமணியிலுள்ள சுவை மிக்க சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன். சில இடங்களில் அவர் மன முருகிக் கண்ணீர் விடுத்தார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க நான் அடைந்த கஷ்டத்தையும், பல காலமாகச் சந்தேகமாக விருந்த சில விஷயங்கள் தெளிவாகிய செய்தியையும் எடுத்துச் சொன்னேன். கேட்டுக் கேட்டு விம்மிதமடைந்தார்.

    ஒரு தவறு

    இப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச் சொன்னார். “இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீ்ர்களே. எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர் பார்த்தேன். நீங்கள் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தந்தான்” என்று சொன்னார். தம் கருத்தை மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லும் இயல்புடையரல்லவா அவர்? அந்த வருத்தத்தால் அவருக்கு என்னிடமிருந்த அன்போ, சீவகசிந்தாமணிப் பதிப்பிலுள்ள மதிப்போ குறையவில்லை. அது வேறு விஷயம், ஒரு விஷயத்தில் குறைபாடு கண்டால் அது பற்றி எல்லா விஷயங்களையும் குறைபாடுகளாகவே காண்பதும், ஒன்றிற் சிறப்புக் கண்டால் மற்றவற்றிலுள்ள குறைகளைக் காணாமற் போவதும் அவர்பால் இல்லை. குணமும் குற்றமும் தனித் தனியாக அவர் கண்களுக்குப்படும். அவற்றை வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லி விடுவார்.

    அவர் பெயரை எழுதாமைக்கு ஒரு சிறிய காரணம் உண்டு. ஆனால் அது பற்றி எழுதாமல் விட்டது பிழைதானென்பதை என் மனம் அப்போது உணர்ந்து வருந்தியது. “நான் செய்தது தவறு தான்” என்று ஒப்புக் கொண்டேன்.

    கம்பர் தம் வீட்டில் நிகழ்ந்த விசேஷத்திற்கு வந்த சடையப்ப வள்ளலை, இடமில்லாமையால் எங்கே ஒரு மூலையில் அமரச் செய்தாராம். இதைக் கண்ட ஓர் அன்பர், “என்ன! இவர்களை இந்த இடத்தில் இருக்கச் செய்தீர்களே?” என்று கம்பரைக் கேட்டாராம். உடனே அப்புலவர் பெருமான், “இவர்களை வைக்குமிடத்தில் வைப்பேன்” என்று சொல்லித் தாம் பாடிய இராமாயணத்தில் பத்து இடத்தில் அவ்வள்ளலைப் பாராட்டி அவர் புகழை வைத்தாராம். இந்தக் கதை அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. ‘தவறியதற்குத் தக்க ஈடு செய்து விட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன். அந்தச் சங்கற்பத்தை நான் பிற்காலத்தில் மூன்று வகையில் நிறைவேற்றினேன். ஐங்குறு நூற்றுப்பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினேன். “கும்பகோணம் காலேஜில் பி. ஏ. வகுப்பில் தமிழெடுத்துக் கொண்டு படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு வருஷந்தோறும் செட்டியார் பெயரால் நாற்பத்தெட்டு ரூபாய் வீதம் பல வருஷங்களாகக் கொடுத்து வருகிறேன். சென்னைக்கு வந்தபிறகு எப்போதும் அவர் ஞாபகம் எனக்கிருப்பதற்காக என் வீட்டிற்கு, “தியாக ராஜ விலாஸம்” என்ற பெயரை வைத்தேன். இவ்வளவும் அவர் உயிரோடிருந்த காலத்தில் செய்யும் பாக்கியம் எனக்கு இல்லை. என்னுடைய நிலையான துரதிருஷ்டங்களில் இந்தக் குறையும் ஒன்று என்று இன்றும் கருதி வருந்துகிறேன்.

    செட்டியாரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அன்று இரவே புறப்பட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். சேலம் இராமசுவாமி முதலியார் சென்னையிலுள்ள கையொப்பக்காரர்களிடமிருந்து பணம் தொகுத்துத் திருவல்லிக்கேணி விசுவநாத சாஸ்திரியாரிடம் நான் வாங்கியிருந்த கடனைத் தீர்த்து விட்டார். அவருக்குப் பணம் கொடுத்து விட்ட விஷயத்தை முதலியார் எனக்கு எழுதியபோது என் தலையிற் சுமந்திருந்த பெரும் பாரம் நீங்கியது போன்ற ஆறுதலை அடைந்தேன்.

    சின்னசாமி பிள்ளையின் பாடல்

    சிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற அன்பர்கள் அதைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதினார்கள். கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சின்னசாமிபிள்ளை பின்வரும் செய்யுளை 1887-ம் டு நவம்பர் மீ 17-ம்தேதி எழுதியனுப்பினார்:

      ''பனிமதிச் சடிலத் திறைகழல் மறவாப்
              பான்மையோய் பாருளா ரேத்தும்
      நனிபெரும் புலவர் குலமணி சாமி
              நாதவேந் தாலெனைப் பொருளாத்
      தனியுளங் கொடுதொல் காப்பிய நன்னூல்
              தந்தகத் தியமிது நோக்கென்
      றினிதளித் தளைநிற் கியற்றுமா றுளதோ
              எண்ணிலென் வந்தன மல்லால்.”

    இந்தப் பாடலில் ‘தொல்காப்பியம் நன்னூல் தந்து அகத்தியம் இது நோக்கென்றினி தளித்தனை’ என்பதற்கு, “பழைய காப்பியமாகிய நல்ல நூலைத் தந்து அவசியம் இதைப் பார் என்று கொடுத்தாய்” என்பது பொருள். இப்பகுதியில் தொல்காப்பியம், நன்னூல், அகத்தியம் என்னும் மூன்று இலக்கணநூற் பெயர்கள் தொனிக்கும்படி பாடியிருப்பது ஒரு நயம். நான் செய்யுளைப் பார்த்து மகிழ்ந்து உடனே வேறொரு செய்யுளால் விடையளித்தேன்.

      “வன்புள பிரதி யுதவி நீ புரிந்தும்
      மாறுள தோவென்ற தென்னே”

    என்பது அதன் இறுதி அடி: முழுச்செய்யுள் இப்போது ஞாபக மில்லை.

    குமாரசாமி முதலியார் கடிதம்

    ராமலிங்க தேசிகர் சொன்னபடி நான் அனுப்பிய சிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற பொ. குமாரசாமி முதலியார் 21-12-1887 ஆம் தேதி பிரதிகளின் கிரயத்தையும் ஒரு கடிதத்தையும் அனுப்பினார். ‘தங்கள் கீர்த்திகளைக் குறித்து ஸ்ரீமத் ராமலிங்க தேசிகரவர்கள் இங்கே பலமுறை என்னோடு கலந்து பேசியபொழுது மகிழ்ச்சியும், அப்படிப்பட்ட வித்வ சிரோமணிகள் இங்கே இருந்தால் கலந்து சம்பாஷித்துக்கொள்ளலாம்; அவ்வாறு கிடைக்கப் பெறவில்லையே என்பதனால் துக்கமுமடைந்தேன். தாங்கள் என்பேரில் வைத்த அன்பினாலனுப்பிய சீவக சிந்தாமணிப் புத்தகத்துக்காகத் துதி கூறுகின்றேன். மேற்படி புத்தகத்தைப் பார்த்தவளவில் என் மனத்தில் எழுந்த மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்லத் தக்கதன்று. இப்படிப் பட்ட அரிய நூலினது அருமை அறியத் தக்கவர்க்கு, ஏட்டுப் பிரதிகளிலிருந்தமையால், அறிதற்கரிதாயிருந்த குறையை நீக்கிய பரோபகார சிந்தைக்காகவும் முயற்சிக்காகவும் நாமெல்லாம் மிகக் கடமை பூண்டிருக்கின்றோம். இன்னும் இப்படிப்பட்ட அரிய பெரிய நூல்களைத் திருத்தி அச்சிட்டு வெளிப்படுத்திவரக் கடவுள் துணை செய்வாராக.,,,,,’என்று அவர் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

    வளையாபதி

    இவ்வாறு பல அன்பர்கள் எழுத எழுதப் பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியை மேலும் செய்து வரவேண்டுமென்ற எண்ணம் வலியுறத் தொடங்கியது. சீவகசிந்தாமணியோடு சேர்த்து ஐம்பெருங் காப்பியங்களென்று வழங்குபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுப் பிரதிகள் என்னிடம் இருந்தன. வளையாபதி, குண்டலகேசி என்னும் இரண்டும் கிடைக்கவில்லை. பிள்ளையவர்கள் இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்துப் புஸ்தகசாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயினவென்று தெரிந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. ‘கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே!’ என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. “கண்ணிலான் பெற்றிழந்தானெனவுழந்தான் கடுந் துயரம்” என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத்தான் அதனை ஒப்பிட வேண்டும்.

    ‘எதைப் பதிப்பிப்பது?’

    சீவகசிந்தாமணியோடு சேர்த்து எண்ணப் பெறும் நூல்களில் ஒன்றினது ஆராய்ச்சியை அடுத்த வேலையாக மேற்கொள்ளலாமென்று எண்ணினேன். உரையுள்ள நூலாக இருந்தால் ஆராயும் சிரமம் சிறிது குறையுமென்ற நினைவினால் அடியார்க்கு நல்லாருரையோடுள்ள சிலப்பதிகாரத்தை வெளியிடலாமென்ற கருத்து உண்டாயிற்று.

    அந்தச் சமயத்தில் சி. வை. தாமோதரம் பிள்ளை, பொ. குமாரசாமி முதலியார் முதலிய கனவான்கள் சிலப்பதிகாரத்ைதைப் பதிப்பிக்க வேண்டுமென்று அடிக்கடி எழுதினார்கள். அதனால் சிலப்பதிகாரத்தையே பதிப்பிக்கலாமென்று எண்ணி நான் சிலரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது ஜைன நண்பர்களிற் சிலர் என்னை அணுகி, “பல காலமாக அச்சேறாமல் இருந்த சீவகசிந்தாமணியை அச்சிட்டு எங்களுக்கு உபகாரம் செய்தீர்கள். இப்படியே சூளாமணியையும் பதிப்பித்துத் தந்தால் எங்களாலான உபகாரம் செய்கிறோம்” என்றார்கள். சந்திரநாத செட்டியார், “சீவகசிந்தாமணி விஷயத்தில் நீங்கள் அரும்பாடு பட்டீர்கள். ஜைன சம்பிரதாயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் சூளாமணியைப் பதிப்பிப்பது மிகவும் சுலபமான காரியம்” என்றார். அவர்கள் சொல்வது எனக்கு நியாயமகவே தோற்றியது. சூளாமணியைப் படித்துப் பார்த்த நான், அதுவும் சிந்தாமணியைப் போலவே சிறப்புள்ள காவியமென்று உணர்ந்திருந்தேன். ஆகவே சூளாமணியிலே சிறிது கருத்தைச் செலுத்தலானேன். குறிப்புக்களையும் எழுதி வைத்துக் கொண்டேன். இந்த நிலையில் தாமோதரம்பிள்ளை சூளாமணியைப் பதிப்பிப்பதாகத் தெரிந்தது. அதனால் சூளாமணியை அச்சிடும் முயற்சியை நிறுத்திக்கொண்டேன். சிலப்பதிகாரப் பகுதிகள் என் மனத்துக்குத் திருப்தி அளிக்கும் முறையில் அச்சமயம் இராமையாலும், சில பகுதிகளுக்கு உரை கிடைக்காமையாலும் பின்னும் பல பிரதிகளைத் தேடித் தொகுத்தே ஆராய வேண்டுமென்ற நினைவினாலும் அந்த நூற்பதிப்பை உடனே மேற்கொள்வதையும் விடுத்தேன்.

    பத்துப்பாட்டு

    சீவகசிந்தாமணி முற்றுப்பெற்ற சமயத்தில் தமிழ்த்தாயின் கட்டளையைப் போல, என் கையில் பத்துப் பாட்டுப் பிரதி கிடைத்தது நினைவுக்கு வந்தது. சங்க நூலாகிய அதனையே அச்சிட வேண்டுமென்று முடிவு செய்துகொண்டேன். என்னுடைய குடும்பத்தார் வழிபடும் குலதெய்வமாகிய திருவேரகப்பெருமானைத் தியானம் செய்து கொண்டு தனியாக இருந்த திருமுருகாற்றுப் படையை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
    ------------------

    அத்தியாயம்- 103
    சுப்பிரமணிய தேசிகர் வியோகம்

    பத்துப்பாட்டை வெளியிடலாமென்று முடிவு செய்த போது என் கையில் அந்நூலின் ஏட்டுப் பிரதிகள் இரண்டே இருந்தன. அவற்றுள் ஒன்று அபூர்த்தியானது. வேலூர்க் குமாரசாமி ஐயர் கொடுத்த பிரதி பூர்த்தியாக இருந்தாலும் வழுக்கள் மிகுதியாகக் காணப்பட்டன. நச்சினார்கினியர் உரையும், சிறுசிறு பகுதிகளாக அமைத்துள்ள மூலமும் பிறவும் ஒன்றாகச் சேர்ந்து கலந்திருந்தன. அவர் செய்யும் அன்வயத்தினால் பாட்டின் உருவம் இன்னது தானென்று நிச்சயிப்பது கஷ்டமாக இருந்தது. பின்னும் சில பிரதிகள் கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாமென்று எண்ணினேன்.

    சென்னைப் பிரயாணம்

    அச்சமயத்தில் தியாகராச செட்டியார் தாம் இயற்றிய மருந்து வெண்பா மாலை, திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி, திருவொற்றியூர்பாதி திருவாரூர்பாதி அந்தாதி என்னும் மூன்று பிரபந்தங்களை அனுப்பி அச்சிட வேண்டுமென்று எழுதியிருந்தார். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு அப்போது கண்ணின் நோய் அதிகரித்து மிக்க துன்பம் உண்டாக்கியது. சென்னையிலிருந்து ‘பிராக்மன்’ என்ற ஆங்கிலக் கண் வைத்தியர் வந்து கண்ணைப் பரிசோதித்தார். தேசிகருடைய தேகத்தில் வன்மை குறைந்து விட்டதென்று அவர் சொல்லியதோடு, ஆதீன சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்வதாயின் முன்னாடியே செய்து விடுவது நலமென்றும் பெரிய காறுபாறு தம்பிரானிடம் தனித்துக் கூறினார். சின்னப் பட்டத்தின் பொருட்டுச் சென்னையிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்த அருணாசலத் தம்பிரானென்பவரை யாவரும் பட்டத்துக்குட்டியென்று வழங்கி வந்தனர். அவருக்கு உடனே சின்னப் பட்டம் கட்டி விடலாமென்றெண்ணிச் சுப்பிரமணிய தேசிகர் நல்ல நாள் பார்த்துப் பத்திரிகையும் எழுதச் செய்தார். சென்னைக்குச் சென்று அப்பத்திரிகையை அச்சிட்டு வர வேண்டு மென்று எனக்குக் கட்டளையிட்டார். அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறையாக இருந்தமையால் அங்ஙனமே செய்வதாக ஒப்புக் கொண்டேன். தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்களை அச்சிடுவதற்கும் பத்துப்பாட்டை அச்சிடும் முயற்சிக்கும் சென்னைப் பிரயாணம் அனுகூலமாக இருக்குமென்று நினைத்தேன்.

    நல்ல வேளை பார்த்து என்னைத் திருவாவடுதுறையிலிருந்து தேசிகர் அனுப்பினார். எனக்கு மாத்திரம் ஏதோ உள்ளுக்குள்ளே ஒரு பயங்கரமான குறிப்புத் தோற்றியது. அவருடைய பலஹீனத்தைக் கண்டு வருந்தினேன். ஒரு முறை விடை பெற்றுக்கொண்டு போனவன் மறுபடியும் வந்து அவரைப் பார்த்துவிட்டுச் சென்றேன்.

    இராசகோபாலாசாரியர் செய்த உதவி

    சென்னையில் இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கித் தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்களையும் திருவாவடுதுறைச் சின்னப் பட்டப் பத்திரிகையையும் அச்சுக்குக் கொடுத்தேன்.

    பத்துப் பாட்டுக் கையெழுத்துப் பிரதிகளைக் கையிலே கொண்டு போயிருந்தேன். மூலம் தனியேயில்லாத அந்தப் பிரதியை என் நண்பர் தேரழுந்தூர் இராசகோபாலாசாரியரிடம் காட்டி, “பிரதியில் தனியே மூலம் இல்லை, உரையுடன் சிறு சிறு பகுதிகள் மாத்திரம் உள்ளன. அந்தப் பகுதிகளும் அன்வயத்தால் முன்பின் மாறி இருக்கின்றன” என்று கூறினேன். அவர், “அந்தச் சிறு பகுதிகளான மூலங்களையெல்லாம் தனியே எழுதி வைத்துக்கொண்டால் பிறகு பொருளைக் கொண்டும் வேறு ஆதாரங்களைக் கொண்டும் ஒழுங்கு படுத்திக் கொள்ளலாமே” என்றார். அவருக்குச் சட்டென்று தோற்றிய அந்த யோசனை அதுகாறும் எனக்குத் தோற்றவில்லை. முல்லைப் பாட்டை அவர் கையிலே கொடுத்தேன். அவர் சில பகுதிகளை எழுதிக் காட்டினார். அவ்வாறே செய்வதாகச் சொல்லி அவருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன். பிற்காலத்தில் எவ்வளவோ சிரமமான ஏட்டுப் பிரதிகளோடு போராட்டிக் கஷ்டப்பட்டு நல்ல அனுபவம் அடைந்தாலும் அச் சமயம் அவர் தெரிவித்தது எனக்குப் பரம உபகாரமாக இருந்தது.

    சேலம் இராமசுவாமி முதலியாரோடு பொழுது போக்குவது எனக்கு இன்பமாக இருந்தது. பூண்டி அரங்கநாத முதலியாரையும் கண்டு பத்துப்பாட்டை ஆராயத் தொடங்கியிருக்கிறேனென்று தெரிவித்தேன். அவர் கேட்டு மகிழ்ந்தார்.

    சின்னப் பட்டப் பத்திரிகை அச்சிட்டானவுடன் தபாலில் திருவாவடுதுறைக்கு அனுப்பி விட்டேன். தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்கள் அச்சிட்டு நிறைவேறும் நிலையில் இருந்தன.

    துக்கச் செய்தி

    ஒரு நாள் காலையில் எட்டு மணிக்கு இராமசுவாமி முதலியார் பங்களாவில் இருந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு கடிதம் வந்தது. பார்த்தேன்; கண்களில் நீர் வழிய அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டேன். திருவாவடுதுறை ராயசம் பொன்னுசாமி செட்டியார், “இன்று (7-1-1888) மாலை நான்கு மணிக்கு மகா ஸந்நிதானம் பரிபூரணமாயிற்று. குறிப்பிட்டிருந்தவர்களுக்கே சின்னப் பட்டம் இன்று பன்னிரண்டு மணிக்கு ஆகிவிட்டது” என்று அதில் எழுதியிருந்தார்.

    என் உள்ளத்துள் பெருந் துக்கம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்த உலகத்தில் பிள்ளையவர்களுக்குப் பின்பு பற்றுக்கோடாக யார் உள்ளார்களென்று ஏங்கியிருந்த எனக்கு நல்ல கொள்கொம்பாக உதவிக் கற்பகம் போல் வேண்டுவனவெல்லாம் வழங்கி ஆதரித்த பெருவள்ளலை இறுதிக் காலத்தில் உடனிருந்து பார்க்க முடியாமல் ஊழ்வினை தடுத்துவிட்டதே என்ற ஏக்கம் தலைக் கொண்டது. உடனே ஒரு கார்டை எடுத்து அன்றிரவே புறப்பட்டு வருவதாக எழுதினேன். கீழே “இரவலரும் நல்லறமும் யானுமினி யென்பட நீத்து”ச் சென்றாயே என்ற கம்ப ராமாயண (ஆரண்ய காண்டம், சடாயு காண்படலம், 21) அடியை எழுதித் திருவாவடுதுறைக்கு அனுப்பினேன்.

    அப்போது இந்த உலகத்தையே நான் மறந்தேன். அந்த நிமிஷத்திலேயே திருவாவடுதுறைக்குப் போக வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று.

    இராமசுவாமி முதலியார் இந்தச் செய்தியை அறிந்து மிக்க வருத்தமடைந்தார். எனக்கு ஆறுதல் கூறினார். தேசிகருடைய உயர்ந்த குணங்களை எடுத்துச் சொன்னார். எனக்கோ துக்கம் பொங்கியது. அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.

    இரங்கற் பாடல்கள்

    நின்ற இடத்திலே நின்றேன்; ஒன்றும் ஓடவில்லை; புஸ்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்று விட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி, எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்த மகோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன். என் துக்கத்தை ஆற்றிக் கொள்ள வழியில்லை. சில செய்யுட்கள் இயற்ற எண்ணினேன். என் உள்ளத்துயரமே செய்யுளாக வந்தது. அவர் திருவுருவத்தை இனிப் பார்க்க இயலாதென்ற நினைவு வரவே நான் மனத்திற் பதித்து வைத்திருந்த அவ்வுருவம் எதிர் நின்றது.

      “கருணையெனுங் கடல்பெருகு மடையாய நினதுவிழிக்
              கடையுஞ் சீதத்
      தருணமதி யனையமுக மண்டலமுந் தெளியமுத
              தாரை போல
      வருமினிய மொழிவாக்கும் வருவோர்க்கு வரையாது
              வழங்கு கையும்
      திருவருட்சுப் பிரமணிய குருமணியே காண்பதென்று
              சிறியேன் மன்னோ.”
      [வரையாது-கணக்கின்றி.]


    நான் சென்னைக்குப் புறப்படும் போது “நல்ல வேனையில் புறப் படவேண்டும்” என்று அவர் சொல்லியனுப்பியது ஞாபகத்திற்கு வந்தது. நல்ல வேளையிற் புறப்பட்டதாகத்தான் முன்பு எண்ணினேன். ஆனால் அந்தச் சமயத்திலோ அந்த வேளை மிகப் பொல்லாத வேளையென்று எண்ணும்படி ஆகிவிட்டது.

      “நல்வேளை தனிற்சென்னை நகர்க்கேகப் புறப்படென
              நவின்றே யென்னை
      ஒல்வேளை தனில்விடுத்தாய் அவ்வேளை நினைப்பிரிய
              உஞற்றும் தீய
      அல்வேளை யென்பதனை அறியாது பிரிந்து துய
              ரடைந்தே னந்தோ
      வில்வேளை வென்றபெரு விறலுடைச்சுப் பிரமணிய
              விமல வாழ்வே.”

      [உஞற்றும்-செய்யும். வேளை வென்ற பெருவிறல்-மன்மதனைத்துறவொழுக்கத்தால் வென்ற வீரம்.]

    இவ்வாறு வேறு சில விருத்தங்களைப் பாடினேன்; சில வெண் பாக்களையும் சில கண்ணிகளையும் இயற்றினேன். அவற்றுள் இரண்டு கண்ணிகள் வருமாறு:-

      “தெய்வத் தமிழின் செழுஞ்சுவையைப் பாராட்டும்
      சைவக் கொழுந்தின் சபைகாண்ப தெந்நாளோ?”
      “இன்றிரப்பார் வந்தா ரிலரென் றியம்புகுணக்
      குன்றின்மொழி கேட்டுவகை கூருநாள் எந்நாளோ?”

    அந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு தனிமையிலே வருந்தினேன். என் துரதிருஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டேன். அன்று இரவே புறப்பட்டு உடன்வந்த சிலருடன் நேரே திருவாவடுதுறையை அடைந்தேன்.

    அங்கே நான் விரும்பிய பொருளைக் காண முடியுமா? தேசிகர் நிற்கும் இடம், இருக்குமிடம், பாடம் சொல்லும் இடம் முதலிய இடங்களையெல்லாம் போய்ப் பார்த்தேன். அங்கே அவருடைய உருவம் இருப்பதாகப் பிரமை கொண்டேன். காணாமல் மயங்கினேன்.

    புதிய தலைவர்

    புதிய தலைவர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் என்னும் திருநாமத்தோடு பதினேழாம் பட்டத்து ஆதீனத் தலைவராக விளங்கினார். அவர் என்பால் அன்போடு பேசி ஆறுதல் கூறினார். என்னுடைய துயரம் ஆற்றுவிப்பார் முயற்சிக்கு அப்பாலதாக இருந்தது. திருவாவடுதுறையில் எல்லாம் இருந்தன. ஒரு தலைவர் போனார்; ஆனால் வேறொரு தலைவர் வந்துவிட்டார். சமாதியடைந்த தலைவருக்குக் குரு பூஜையும் புதிய தலைவருக்குச் சிறப்பும் நடைபெற்றன. அப்போது அந்த ஊர் திருவிழாக் கோலத்திலே இருந்தது.

    ஆனாலும் சுப்பிரமணிய தேசிகருடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள் உள்ளத்தில் துக்கந்தான் நிரம்பியிருந்தது. அவர்கள் சம்பிரதாயத்திற்காக உடம்பைச் சுமந்துகொண்டு அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தனர்.

    குரு பூஜை

    முறைப்படி சுப்பிரமணிய தேசிகருடைய சமாதிக்கு ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெற்றது. இறுதி நாளன்று விசேஷமான பூஜை நிகழ்ந்தது. அதன் பொருட்டுப் பல ஊர்களிலிருந்து மடத்தைச் சேர்ந்த அடியார்கள் வந்திருந்தனர். திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான பிரபுக்களும் வித்துவான்களும் வந்தார்கள். அவர்களோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தேன்.

    திருநெல்வேலியில் திருவாவடுதுறை மடத்துச் சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களுள் மிகமுக்கியமானவராகிய அம்பலவாண கவிராயரென்பவரது பரம்பரையிற் பிறந்தவர்களாகிய கவிராச நெல்லையப்பப் பிள்ளை, கவிராச ஈசுவர மூர்த்தியா பிள்ளை என்று இரண்டு கனவான்கள் உண்டு. இளையவராகிய கவிராச ஈசுவர மூர்த்தியா பிள்ளையென்பவர் அப்போது குரு பூஜைக்கு வந்திருந்தார். சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாக அவர் வீட்டு ஏட்டுப் பிரதி எனக்குக் கிடைத்தது. பத்துப் பாட்டு பிரதியும் கிடைக்கலாமென்ற நோக்கத்தால், அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “சிந்தாமணிப் பதிப்புக்குத் தங்கள் பிரதி உபயோகமாக இருந்தது. இப்போது பத்துப் பாட்டைப் பதிப்பிக்க உத்தேசித்திருக்கிறேன். ஸந்நிதானம் இருந்தால் எவ்வளவோ அனுகூலமாக இருக்கும். துரதிருஷ்டவசத்தால் அவர்களை இழந்து விட்டோம். உங்களைப் போன்ற அன்பர்கள் ஆதரவு எனக்கு அதிகமாக வேண்டும். பழைய தமிழ் நூலாராய்ச்சி மிகவும் சிரமத்தைத் தருகிறது. பத்துப் பாட்டு ஏட்டுப் புஸ்தகங்கள் இன்னும் சில கிடைத்தால் நலமாக இருக்கும். திருநெல்வேலிக்கு வந்து தங்கள் வீட்டு ஏடுகளைப் பார்க்க எண்ணி யிருக்கிறேன். அதற்கு அனுமதி அளிப்பதோடு தங்களைச் சேர்ந்த மற்ற வித்துவான்கள் வீட்டிலுள்ள ஏடுகளையும் பார்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். எந்தச் சமயத்தில் வந்தாலும் உதவி புரிவதாக அவர் வாக்களித்தார்.

    ஒரு கண்டனம்

    குரு பூஜையின் இறுதி நாள் இரவு மடத்தில் ஒரு சபை கூடியது. புதிய தலைவராகிய அம்பலவாண தேசிகரது முன்னிலையில் பலர் சுப்பிரமணிய தேசிகர் பரிபூரணமானதற்கு இரங்கியும், புதிய தலைவரை வாழ்த்தியும் தாம் இயற்றிய செய்யுட்களைச் சொல்லிப் பொருள் கூறினார்கள். நான் அப்போது அங்கே இல்லை.

    ஆதீனத்து அடியாராகிய பழனிக் குமாரத் தம்பிரானென்பவர் தாம் இயற்றிய இரங்கற் பாக்களை வாசித்து வந்தார். அவற்றுள் ஒரு பாட்டின் பகுதியாகிய, “குருமணி சுப்பிரமணிய குலமணியா வடுதுறைப்பாற் கொழித்துக் கொண்ட ஒரு மணி சிந்தாமணியை யுதவுமணி” என்பதற்குப் பொருள் சொல்லும் போது, “சிந்தாமணியை உதவுமணி” என்ற பகுதிக்கு, ‘இந்த மடத்தில் தமிழ்க் கல்வி கற்று இப்போது கும்பகோணம் காலேஜிலிருக்கும் சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பிப்பதற்கு ஊக்கமளித்துப் பிரதி முதலியன கொடுத்த மகாஸந்நிதானத்தின் அருஞ் செயலை நினைத்தும் சொன்னேன்’ என்று ஒரு காரணம் கூறினாராம். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர், “சைவ மடமாகிய இந்த இடத்தில் ஜைன நூலுக்குச் சிறப்புத் தருவது நியாயமன்று. சாமிநாதையர் இந்தமடத்திற்கு வேண்டியவராக இருந்தும் உமாபதி சிவாசாரியார் ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ என்று சொல்லியிருக்கும் ஜைன நூலை அச்சிட்டது தவறு. அதை நாம் கண்டிப்பதோடு அந்த நூல் பரவாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்” என்றாராம். அவர் அயலூரிலிருந்து வந்து மடத்திற் சில காலம் தங்கியிருந்தவர். எனக்கும் பழக்கமானவரே.

    அதைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும் திடுக்கிட்டனர். அவர் பால் அவர்களுக்குக் கோபமும் உண்டாயிற்று. அவரை உடனே எதிர்த்துத் தக்க நியாயங்கள் கூறி அடக்கி விட்டார்கள். என் நண்பராகிய புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் அவர்மீது சில வசை கவிகளைப் பாடிப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர் காதிற் படும்படி சொல்லிக் காட்டச் செய்தார்.

    இந்தச் செய்திகளைக் கேட்டு நான் வருத்தமடைந்தேன். என் அன்பர்கள், “தூஷணை செய்வதே தம் தொழிலாகக் கொண்ட பொறாமைக்காரர்கள் சிலர் உலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறு காரணம் கிடைத்தாலும் போதும்; அதைப் பற்றுக்கோடாக வைத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இதற்கெல்லாம் வருந்திப் பயனில்லை. உங்கள் உண்மை மதிப்பையும் உழைப்பையும் தெரிந்துகொண்டவர்கள் அவர்கள் செயலைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

    குரு பூஜை நிறைவேறியது. வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்கள் தங்கள் ஊருக்குச் சென்றனர். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அன்புச் செயல்களை நினைந்து நினைந்து பொழுது போக்கும் அளவோடு நான் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டேன்.
    --------------

    அத்தியாயம்-104
    திருநெல்வேலிப் பிரயாணம்

    1888-ஆம் வருஷ ஆரம்பத்திலே சுப்பிரமணிய தேசிகரை இழந்த வருத்தம் ஆறுவதற்குள் மற்றொரு பெரிய நஷ்டம் நேர்ந்தது. எனது நன்மையைக் கருதிய மகோபகாரிகளுள் சுப்பிரமணிய தேசிகருக்கு அடுத்த படியாகச் சொல்லக் கூடிய ஸ்ரீ தியாகராச செட்டியார் சிவபதமடைந்தார்.

    தியாகராச செட்டியார் பிரிவு

    செட்டியாரிடமிருந்து எனக்கு அடிக்கடி கடிதம் வரும். அவர் கண் பார்வை குறைந்தது முதல் வேறு யாரேனும் அவருக்காக எழுதுவார். அக் கடிதங்களிலிருந்து செட்டியாருடைய தேகம் மிகவும் மெலிந்து விட்டதென்று தெரிய வந்தது. ஆனால் அவ்வளவு விரைவில் அவர் வாழ்நாள் முடிவுபெறுமென்று நான் எண்ணவில்லை.

    1888-ஆம் வருஷம் ஜனவரி மாதம் பத்தொன்பதாம் தேதி செட்டியார் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தாரென்ற செய்தி மறுநாளே எனக்குக் கிடைத்தது. அவரைப் போய்ப் பாராமற் போனோமே யென்ற வருத்தம் என் மனத்தில் உண்டாயிற்று. பத்துப் பாட்டு ஆராய்ச்சியின் ஆரம்பம் இவ்வாறு இருந்ததில் என் மனம் சிறிது குழப்பமுற்றது. அதற்கு ஏற்றபடி இருந்தது அதன் ஏட்டுச் சுவடியின் நிலையும்.

    செட்டியாரது பிரிவு வருத்தவே சில செய்யுட்கள் எழுதினேன்.
    அவற்றுள்,

      “மடியென்றுந் தவிர்தியறி வினைவளர்க்கும் நூல்கள்மிக
              மகிழ்ந்தே மெல்லப்
      படியென்றுஞ் சுவையொழுகப் பாடென்று மெனக்கன்பிற்
              பகர்வோர் யாரே
      மிடியென்று மெனையகலச் செயுந்தியாக ராசனெனும்
              மேன்மையோனே
      துடியொன்று மொருகரத்தா னடியென்று மறவாத
              தூய்மை யோனே”

    என்பது ஒன்று.

    செட்டியாரிடம் படித்தவர்களும் அவருடைய பெருமையை உணர்ந்தவர்களும் மிக வருந்தினார்கள். பலர் எனக்குக் கடிதம் எழுதித் தங்கள் துயரத்தைத் தெரிவித்தனர். செட்டியாருடைய மாணாக்கரும் கோயம்புத்தூர்க் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமான சபாபதி பிள்ளை என்பவர் பல பாடல்கள் பாடினார். அவற்றுள்,

      “பொய்யடையாத சிராமலைத் தியாக புரவலன்சீர்
      மெய்யடை நாவலர் முன்புவி நாட்டி விரும்பெமரைப்
      பையடை காக்குடந் தைச்சாமி நாதையன் பக்கலிலே
      கையடை யாக்கி யகன்றா னிதுநல்ல காரியமே.”

      [எமரை - எம்மவர்களை. பையடைகா - பசுமையைப்பெற்ற சோலை. கையடை - அடைக்கலம்.]


    என்ற பாட்டில் அவர் என்னையும் குறிப்பித்திருக்கிறார்.

    சுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். இன்னும் ஏட்டுப் பிரதிகள் இருந்தால் நல்ல பாடம் கிடைக்குமென்ற எண்ணம் உண்டாகும். அச்சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர் இருந்தால் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுப்பாரென்ற நினைவும் கூடவே வரும். நல்ல பகுதிகளைக் காணும் போதெல்லாம் தியாகராச செட்டியார் கேட்டால் அளவில்லாத மகிழ்ச்சி கொள்வாரே என்ற ஞாபகம்
    உண்டாகும்.

    புறப்பாடு

    பத்துப் பாட்டில் விஷயம் தெரியாமல் பொருள் தெரியாமல் முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாமென்ற சலிப்புத் தோற்றும். ஆனால் அடுத்த கணமே ஓர் அருமையான விஷயம் புதிதாகக் கண்ணிற் படும்போது, அத்தகைய விஷயங்கள் சிலவாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாமே என்ற எண்ணம் உண்டாகும்.

    இந்த நிலையில் திருத்தமில்லாதனவும் மூலமில்லாதனவுமாகிய பிரதிகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதைவிட இன்னும் சில நல்ல பிரதிகளைத் தேடித் தொகுத்து ஆராயலாமென்ற கருத்தினால் அவ்வருஷம் மே மாதம் திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட எண்ணினேன்

    திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகரிடம் சொல்லி விடை பெற்றேன். அவர் என்னிடம் மிக்க அன்பு பாராட்டி உடனே திருநெல்வேலியில் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்ததாக உள்ள ஈசான மடத்திலிருந்த ஸ்ரீ சாமிநாதத் தம்பிரானுக்கு, நான் வந்தால் வேண்டியவற்றைக் கவனித்து உதவும்படி உத்தரவு அனுப்பினார். என் வரவைக் குறித்துக் கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளைக்கு முன்பு நேரிற் சொல்லியபடி நான் கடிதம் எழுதினேன்.

    ஒரு நல்ல நாளிற் புறப்பட்டுத் திருநெல்வேலிக்குச் சென்று ஈசான மடத்தில் ஜாகை வைத்துக் கொண்டேன். அங்கிருந்த தம்பிரான் எனக்கு வேண்டியவற்றைக் கவனித்துக் கொண்டார். பிறகு கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளையிடம் போனேன். அவரும் அவர் தமையனாரும் என் வரவை எதிர்பார்த்திருந்தனர். அவர்களோடு சில நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வேறு சில கனவான்களும் அப்பொழுது உடனிருந்தார்கள். திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும் சுப்பிரமணிய தேசிகருடைய குணங்களைப் பற்றியும் பிள்ளையவர்கள் புலமையைப் பற்றியும் தமிழ் நூல்களைப் பற்றியும் எங்கள் சம்பாஷணை நடந்தது.

    தமிழ்க் கோயில்

    அந்த இரண்டு சகோதரர்களும் நல்ல செல்வவான்கள். அவர்கள் செல்வத்தை அவர்கள் குணம் அழகுபடுத்தியது. மூத்தவராகிய கவிராஜ நெல்லையப்ப பிள்ளையின் வீடு தெற்குப் புதுத் தெருவில் உள்ளது. அவ்வீட்டின் முன்புறத்தும் பின்புறத்தும் வாய்க்கால் உண்டு. எப்போதும் ஜலம் ஓடிக்கொண்டேயிருக்கும். வீட்டுக்குப் பின்புறத்தில் பெரிய தோட்டமும் அதில் ஒரு சௌகண்டியும் இருந்தன. அவர் கொடையும் செல்வாக்கும் உடையவர். எப்போதும் அவரைப் பார்க்கப் பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள், சிவபக்தியும் தமிழறிவும் ஒருங்கே பொருந்தி விளங்கிய அக்குடும்பத்தில் திருமகள் விலாசம் நன்றாகப் பொருந்தியிருந்தது.

    நெல்லையப்பப் பிள்ளையவர்கள் தம் வீட்டில் பூஜை மடத்தை மிகப் பெரியதாகக் கட்டி வைத்திருந்தார். ஒரு வில்வ விருக்ஷத்தை வளர்த்து அதைத் தினந்தோறும் பூஜித்து வந்தார்.

    மறு நாட் காலையில் அவ்விரு சகோதரர்கள் வீட்டிலும் உள்ள சுவடிகளைப் பார்க்கத் தொடங்கினேன். மேலை வீதியில் உள்ள கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை வீட்டில் புத்தக அறை இருந்தது. அதுதான் அவர்கள் பரம்பரை வீடு. புத்தக அறையைத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் என் உடம்பு சிலிர்த்தது. ‘தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ?’ என்று விம்மித மடைந்தேன். ஏட்டுச் சுவடிகளை அடுக்கடுக்காகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள். சுவடிகளைக் கட்டி வைத்திருந்த முறையே திருத்தமாக இருந்தது. புழுதி இல்லை; பூச்சி இல்லை; ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை. தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று சொல்லும்படி இருந்தது அவ்விடம்.

    அங்கே இருந்த ஏடுகளைச் சோதித்துப் பார்த்தேன். பல வகையான நூல்கள் இருந்தன. அச்சிட்ட புத்தகங்களின் ஏட்டுப் பிரதிகள் பல இருந்தன. எல்லாவற்றையும் உடனே பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை முதலில் எழுந்தது.

    எனது ஏக்கம்

    பத்துப் பாட்டுப் பிரதிகள் உள்ளனவா என்று முதலில் கவனிக்க லானேன். ஒரு சுவடி கிடைத்தது. பொருநராற்றுப் படை முதல் நான்கு பாட்டுக்களே உள்ளது அது. அதிலும் மூலம் தனியே காணப்படவில்லை. ‘இவ்வளவு சிறப்புள்ள இடத்திலேகூடப் பத்துப் பாட்டுக் கிடைக்கவில்லையே! வேறு எங்கே கிடைக்கப் போகிறது!’ என்ற கவலை என்னைப் பற்றிக்கொண்டது.

    “என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று நெல்லையப்பக் கவிராஜர் கேட்டார்.

    “ஒன்றும் இல்லை. சங்கப் புலவருடைய வீட்டைப்போல விளங்கும் இவ்விடத்தில் தமிழ்ச் செல்வம் முழுவதும் கிடைக்குமென்று முதலில் எண்ணினேன். நான் எதைத் தேடி வந்தேனோ அது முற்றும் கிடைக்கவில்லையே! தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த இடம் எங்கே இருக்கப் போகிறது! இங்கே அகப்படாதது வேறு எங்கே அகப்படும்! சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி ஆதரவின்றிப் போக்கி விட்டதே!” என்று வருத்தத்தோடு கூறினேன்.

    “இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பல வகையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. அங்கேயும் பார்க்கலாம்.

    ஸ்ரீ வைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம். ஆகையால் தாங்கள் சிறிதும் அதைரியம் அடையவேண்டாம்” என்று கவிராஜர் சொன்னார். அந்த இடத்திற் கோவில் கொண்டிருந்த தமிழ்த் தெய்வமே எனக்கு அபயங் கொடுப்பதாக எண்ணிப் பின்னும் சுவடிகளை ஆராயலானேன்.

    கொங்குவேள் மாக்கதை

    அப்போது, ‘கொங்குவேள் மாக்கதை’ என்ற மேற் சீட்டையுடைய ஒரு பழஞ் சுவடியைக் கண்டேன். அந்நூல் இன்னதென்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தப் பெயரை இலக்கணக் கொத்து உரையினால் நான் அறிந்திருந்தேன். அந்நூலாசிரியராகிய ஸ்ரீ சாமிநாத தேசிகர், சிலர் நல்ல நூல்களைப் படியாமல் வீணாகப் பொழுது போக்குவாரென்று கூறும் ஓரிடத்தில், திருவைக் கோவைக்குங் கூட்டுக; மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே என்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பல முடையார் அவர் வாக்கிற்கு அலந்து இரந்து அருமைத் திருக்கையால் எழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து அச்செய்யுட்களோடு ஒன்றாக்குவர்;,,,,, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினென் கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணிவாணாள் வீணாள் கழிப்பர்’ என்று எழுதியிருக்கிறார். சைவராகிய அவர் வெறுத்து ஒதுக்கும் நூல்களுள் ஒன்று கொங்குவேள் மாக்கதையென்பது அப்போது ஞாபகத்துக்கு வந்தது. ‘கொங்குவேள் என்பவருடைய கதையாக இருக்கலாம்’ என்றெண்ணி அச்சுவடியை எடுத்து வைத்துக்கொண்டேன். எட்டுத் தொகையில் கலியும் பரிபாடலும் நீங்கலான மற்ற ஆறு நூல்கள் மாத்திரம் உள்ள பிரதி ஒன்று அங்கு இருந்தது. அதையும் வேறு சில நூல்களையும் கவி ராஜருடைய அனுமதி பெற்று எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் அவ்வீட்டில் உள்ள ஏட்டுப் பிரதிகளைப் பார்ப்பதில் சென்றன. பிறகு ஒரு நாட்காலையில் அவர்கள் என்னையும் உடனழைத்துக் கொண்டு தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் உள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்க்கலாமென்று புறப்பட்டார்கள்.

    முதலில் அவர்கள் பந்துவும் மகா வித்துவானுமாகிய சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டிற்குச் சென்று பார்த்தோம். அப்பால் வேறு சில இடங்களுக்கும் சென்று பார்த்தோம். அவ்விடங்களில் பல

    சுவடிகளும் அச்சிட்ட நூல்களும் இருந்தனவேயன்றிச் சங்கச் செய்யுளாக ஒன்றும் கிடைக்கவில்லை.

    தகடூர் யாத்திரை

    பிறகு தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியாரென்பவர் வீட்டிற்குப், போனோம். அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், “நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்” என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகின்றது. ஆதலால் அது பழைய நூலென்று உணர்ந்திருந்தேன். அது நாங்குனேரியிலே உள்ளதென்ற செய்தியைக் கண்டதும் அதனை எப்படியாவது கண்டு பிடிக்கலாமென்று எண்ணி, “நாங்குனேரியில் கவிராயர்கள் வீடுகள் இருக்கின்றனவா?” என்று உடனிருந்த அன்பர்களைக் கேட்டேன்.

    “இருக்கின்றன. வைஷ்ணவர்களே அதிகமாகையால் வைஷ்ணவ நூல்கள் கிடைக்கும்” என்று அவர்கள் சொன்னார்கள். “இந்தப் பிரதியில் தகடூர் யாத்திரைச் சுவடியை அவ்வூரிலுள்ள ஒருவரிடம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்கிறது. அங்கே சென்று தேடிப் பார்த்தால் கிடைக்குமோ?” என்று வினவினேன்.

    “கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரியான புத்தகங்களை இப்போது யார் படிக்கிறார்கள்? நீங்கள் தேடும் பத்துப் பாட்டே முழுவதும் கிடைக்கவில்லையே. இது போல அந்த நூலும் கிடைக்காமல் போனாலும் போகலாம். இந்தத் தொல்காப்பியப் பிரதி இங்கே இருப்பதுபோல இதற்குப் பரிவர்த்தனையாக அனுப்பிய தகடூர் யாத்திரை அங்கே இருக்கவும் நியாயம் உண்டு.”

    “கிடைத்தால் நல்லது” என்றேன் நான். ஆனால் பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை செய்து விட்டதைப்போல அந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்.
    -----------

    அத்தியாயம்-105
    பத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்


    வேறு வீடுகள்

    பல வீடுகளில் தேடியும் வந்த காரியம் கைகூடாமற்போகவே நான் உள்ளம் தளர்ந்து, “இன்னும் தேடக்கூடிய இடம் இருக்கிறதா?” என்று கவிராச நெல்லையப்பப் பிள்ளையைக் கேட்டேன்.

    “உங்களுக்கு வேண்டிய சுவடி கிடைக்கவில்லையென்ற குறையைப் போக்க ஸ்ரீ நெல்லையப்பரே அருள் புரிய வேண்டும். ஒன்றும் தோற்றவில்லை. இன்னும் ஒரு வீடு இருக்கிறது. அங்கே கிடைக்கா விட்டால் பிறகு இந்த ஊரில் வேறு எங்கும் இல்லையென்றே நிச்சயம் செய்து விடலாம்.”

    திருப்பாற்கடனாதன் கவிராயர்

    “அது யார் வீடு?” என்று ஆவலோடு கேட்டேன். “எங்கள் முன்னோராகிய அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுட் சிறந்தவராகத் திருப்பாற்கடனாதன் கவிராயரென்று ஒருவர் இங்கே வண்ணார் பேட்டையில் இருந்தார். அவர் மகா வித்துவான். அவர் வீட்டில் பல ஏட்டுச் சுவடிகள் உண்டு. போய்ப் பார்க்கலாம். இப்போது அவருடைய பேரர் அதே பெயரோடு இருக்கிறார்” என்றார்.

    “இப்போதே புறப்படலாமே” என்று நான் துரிதப் படுத்தினேன்.

    “வாருங்கள், போகலாம்” என்று சொல்லி அவ்வீட்டை நோக்கி என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் அவ்வீட்டிலிருந்த திருப்பாற்கடனாதன் கவிராயர் மிகவும் பிரியமாக வரவேற்றார். அவர் சிறந்த குணசாலியாகத் தோற்றினார். கவிராஜ நெல்லையப்ப பிள்ளை முதலில் அவரை மிகவும் பாராட்டி விட்டு என்னை அறிமுகப்படுத்தி, பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களைத் தேடிப் பார்க்கும் பொருட்டு நான் வந்திருப்பதைத் தெரிவித்தார். உடனே அவர்,”அப்படியா, முன்னமே தெரியாமற் போயிற்றே. நேற்றுத்தான் இவ்விடம் ஸப் ஜட்ஜ் கனகசபை முதலியாரவர்கள் தம் நண்பர் ஒருவருக்காக எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு இம்மூன்றையும் வாங்கி யனுப்பினார். இவை மிகவும் திருத்தமான பிரதிகள். இவர்கள் முன்னமே வந்திருந்தால் கொடுத்திருப்பேன்” என்று சொன்னார். சில தினங்களுக்கு முன்பு வராமற் போனோமே என்ற வருத்தம் அப்போது எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் இந்த மூன்றுமுள்ள வீட்டில் வேறு நல்ல நூல்களும் இருக்கலாமென்று எண்ணி அந்த வீட்டிலுள்ள மற்ற ஏடுகளைப் பார்க்கலாமாவென்று கேட்டேன். அப்போது இரவு 8-மணியானமையால் மறு நாட் காலையில் வந்து பார்க்கலாமென்று திருப்பாற்கடனாதன் கவிராயர் சொன்னார். அப்படியே மறுநாள் நெல்லையப்பக் கவிராயரும் நானும் அங்கே போனோம். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் அப்போது தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயரென்பவரும் எங்களுடன் வந்தார். தம் வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் நாங்கள் பார்க்கும்படி திருப்பாற்கடனாதன் கவிராயர் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருக்கலாம். முக்கால் வாசி ஏடுகள் அவருடைய பாட்டனார் எழுதியவை. அவற்றை நாங்கள் மூவரும் பகுத்துக் கொண்டு தனித்தனியே பார்க்க ஆரம்பித்தோம் பெரிய சுவடி யொன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்துப் பார்த்தார். நான் ஒன்றை எடுத்தேன்.

    அந்தச் சுவடியின் தலைப்பு என்னவென்று அனந்த கிருஷ்ண கவிராயரை நான் கேட்டபோது அவர், ‘திருமுருகாற்றுப்படை’ என்றார். எனக்குச் சிறிது ஆறுதலுண்டாயிற்று. மறுபடி சில ஏடுகளைத் தள்ளிப் பார்த்து, ‘பொருநராற்றுப்படை’ என்று சொன்னார். இதுவே பத்துப் பாட்டாக இருக்கலாமென்று பரமேசுவரனுடைய கருணையை நினைந்து நினைந்து உருகினேன் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. கவிராயரையே அந்த ஏட்டை ஒவ்வொன்றாகப் பார்க்கச் சொன்னேன். பத்துப் பாட்டு முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக உரையுடன் வரிசையாக இருந்தது. மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. [அப்பெயரும் வருஷமும் ஞாபகமில்லை.]

    அப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது.

    இராமன் கதை முதலியன

    திருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டு ஏட்டுப் பிரதியிலும் பத்துப் பாட்டின் மூலம் தனியே இல்லாதது கண்டு, திருநெல்வேலியில் இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் இருந்தால் பார்க்கலாமென்று என் நண்பர்களிடம் சொன்னேன். பழைய காலத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்த சம்பிரதி திருப்பாற்கடனாத பிள்ளை யென்பவர் வீட்டில் பல ஏடுகள் உள்ளனவென்று அவர்கள் சொல்ல அங்கே போய்ப் பார்த்தேன். அவையெல்லாம் பிற்காலத்து நூல்களாகவே இருந்தன. புலவர்கள் பழங் காலத்துத் தமிழ்ச் செல்வத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தார்கள். பிரபுக்கள் தாங்கள் படித்து இன்புறுவதற்கு ஏற்ற நூல்களை மாத்திரம் சேமித்து வைத்துக் கொண்டார்கள் போலும். அங்கே கண்ட புத்தகங்களில் கம்ப ராமாயணத்தின் தலைப்பில் இராமன் கதை யென்றும் அரிச் சந்திர புராணத்தின் தலைப்பில் அரிச்சந்திரன் கதை யென்றும், நைடதத்தின் மேல் நளன் கதை யென்றும் எழுதியிருந்தன. இப்படியே வேறு நூற்பெயர்களிலும் இருக்கக்கண்டேன். அப்போது இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, நளன் கதை யென்று நூற்பெயர்களைக் குறிப்பிடுதல் என் ஞாபகத்துக்கு வரவே, தென்பாண்டி நாட்டில் அவ்வாறு வழங்கும் வழக்கம் இருந்ததென்பதை அறிந்துகொண்டேன்.

    மயிலேறும் பெருமாள் பிள்ளை

    அத்தேசிகர் மிகச் சிறப்பித்துப் பாராட்டியிருக்கும் அவர் ஆசிரியராகிய மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்னும் வித்துவானுடைய ஞாபகம் அப்போது எழுந்தது. துறவியாகிய சாமிநாத தேசிகரே,

      “திருநெல்வேலி யெனுஞ்சிவ புரத்தின் தாண்டவ
      மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல், வாழ்மயி
      லேறும் பெருமாள் மகிபதி”

    என்று புகழ்கிறார். அந்த வித்துவான் கல்லாடத்துக்கு உரை எழுதியவர். சங்க நூல்களும் நச்சினார்க்கினியர் உரை முதலியனவும் தமிழ்நாட்டில் வழங்காத காலத்தில் கல்லாடமும் மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையும் மிகவும் மதிப்புப் பெற்றிருந்தன. அப்

    பத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்

    புலவர் பெருமான் திருநெல்வேலியில் வசித்தவராதலால், அவர் வீட்டில் ஏடுகள் இருந்தால் கவனிக்க வேண்டுமென்று எனக்கு ஆசை உண்டாயிற்று.

    “மயிலேறும் பெருமாள் பிள்ளையின் சந்ததியார் யாரேனும் இங்கே இருக்கிறார்களோ?” என்று நெல்லையப்பக் கவிராயரைக் கேட்டேன். “அவர் பரம்பரையில் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்றே ஒருவர் இருக்கிறார் அவர் பெரிய லௌகிகர். தமிழ் சம்பந்தமான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. ஆனாலும் உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி, உடனே அவருக்குச் சொல்லியனுப்பினார்.

    அவர் வந்தார். நெல்லையப்பக் கவிராயர் அவருக்கு என்னைப் பழக்கம் செய்வித்தது “இவர்கள் ஏடு பார்க்க வந்திருக்கிறார்கள். நீங்கள் பெரிய வித்துவான்கள் பரம்பரையானமையால் உங்கள் வீட்டிலும் பார்க்க விரும்புகிறார்கள்” என்றார். அவர் “நான் பெரிய வித்துவான் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். என் தகப்பனார் வரையில் அந்தப் படிப்பு இருந்து வந்தது. எனக்கு இலக்கண இலக்கியப் பயிற்சியை அவர் செய்விக்காமையால் இங்கிலீஷ் படித்தேன். இப்போது நான் நல்ல வக்கீல் குமாஸ்தாவாக இருக்கிறேன். சட்டத்தில் பழக்கம் உண்டு. என் வீட்டில் சட்ட புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. பழைய ஏடுகள் எங்கள் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதேன் என்றெண்ணிக் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன். இப்போது ஒன்றுகூட இல்லை. இதோ கையிலிருக்கிற கட்டு நம்பர்க் கட்டு” என்று சொன்னார். “அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன். “நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச் சென்று விட்டார்.

    “கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே? அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே? இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்!” என்று நான் வருந்தினேன்.

    நெல்லையப்பக் கவிராயர் உதவி

    பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் இருந்து சில வீடுகளைப் பார்த்து விட்டு நெல்லையப்பக் கவிராயர் அவர் தம்பி முதலியவர்களிடம் விடை பெற்றுக் கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன். அப்போது எனக்குப் பல வகையில் உதவி செய்த நெல்லையப்பக் கவிராயருடைய அன்பு என் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! புறப்படுகையில்,

      “சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே
      அங்கங் குடன்வந் தளித்திட்டோன்-பொங்குபுகழ்
      இன்போடு மீசனடி யெண்ணுநெல்லை யப்பனைப்போல்
      அன்போ டுதவி செய்வா ரார்”

    என்ற வெண்பாவை அவரிடம் சொன்னேன்.

    மீட்டும் அதிருப்தி

    கும்பகோணம் வந்த பின் என் பிரயாண விவரத்தை அம்பலவாண தேசிகருக்குத் தெரிவித்தேன். பிறகு வண்ணார் பேட்டைப் பிரதியோடு வேறு பிரதிகளையும் வைத்துக்கொண்டு ஆராயத் தொடங்கினேன். அப்பிரதியிலும் உரையில் சில பகுதிகள் குறைந்திருந்தன. திருநெல்வேலிக்குப் போயிருந்தபோது, ஆழ்வார் திருநகரியில் பல வித்துவான்கள் வீடுகள் உண்டென்று சொன்னார்களே. அங்கே போய்ப் பார்க்கலாமென்ற சபலம் அப்போது உண்டாயிற்று. ஆவணியவிட்டத்தைச் சார்ந்து சில நாட்கள் காலேஜில் விடுமுறை இருந்தது. அச்சமயம் போகலாமென்று நிச்சயித்து என் வரவை அந்தப் பிரதேசத்திலிருந்த சில நண்பர்களுக்கும், ஜவந்திபுரத்தில் திருவாவடுதுறை மடம் பெரிய காறுபாறாக இருந்த பன்னிருகைத் தம்பிரானுக்கும், அந்தப் பக்கத்தில் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராக இருந்த சிவராம ஐயருக்கும் கடிதங்கள் எழுதினேன்.

    கனகசபை முதலியார்

    திருநெல்வேலியில் அக்காலத்தில் சப் ஜட்ஜாக இருந்த கனகசபை முதலியாரென்பவர் நான் சீவகசிந்தாமணியை வெளிப்படுத்திய காலத்தில் எனக்குப் பழக்கமானார்; உதவியும் செய்தார்; அப்போது தஞ்சாவூரில் இருந்தார். நல்ல குணமும் தமிழில் அன்பும் உடையவர்.

    அவர் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகு எனக்கு, “நான் இவ்வூருக்கு வந்திருக்கிறேன். இந்தப் பக்கங்களில் தமிழ் வித்துவான்கள் இடங்கள் பல இருக்கின்றன. அங்கே ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும். உங்கள் ஆராய்ச்சிக்கு அவை வேண்டுமானால் என்னாலான உபகாரம் செய்வேன்” என்று எழுதியதோடு அங்கிருந்து வந்த கனவானிடமும் சொல்லியனுப்பினார். நான் முதலில் திருநெல்வேலிக்குச் சென்றபோது அவர் வெளியூருக்குப் போயிருந்த மையால் அவரைப் பார்க்கவில்லை. ஆதலால் இரண்டாமுறை புறப்பட எண்ணிய போது என் வரவைப் பற்றி அவருக்கும் ஒரு கடிதம் எழுதினேன்.

    என் கடிதங்களைப் பெற்ற நண்பர்கள் யாவரும் மகிழ்ச்சியோடு விடை எழுதினர். கனகசபை முதலியார் மாத்திரம் எழுதவில்லை. அவர் வெளியூருக்குப் போயிருப்பாரென்றும் போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்றும் எண்ணினேன்.

    ஆவணியவிட்ட விடுமுறை தொடங்கியவுடன் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு மறுநாட் காலையில் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். முதலில் கனகசபை முதலியாரைப் பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி இராமல் அவர், “நான் வேறொருவருக்கு ஏடு தேடிக் கொடுக்கும் விஷயத்தில் சகாயம் செய்வதாகச் சொல்லி விட்டேன். அதனால் தங்களுக்கு இவ்விஷயத்தில் இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லையே யென்று வருத்தமடைகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

    ஆழ்வார் திருநகரி

    அப்பால் கைலாசபுரத்தில் வக்கீலாக இருந்த என் நண்பர் ஸ்ரீமான் ஏ. கிருஷ்ணசாமி ஐயரவர்களைப் பார்த்து நான் வந்த காரியத்தைத் தெரிவித்தேன். அவர், “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று அபயமளித்தார். பிறகு ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் ஈ. சுப்பையா முதலியாரவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றேன். முதலியாரவர்கள் மிக்க அன்புடன் ஆழ்வார் திருநகரிக்கு அழைத்துச் சென்றார்கள். போகும்போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள ஏடுகளைப் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்படவில்லை. ஆழ்வார் திருநகரியில் என் நண்பர்களையும் பார்த்தேன். அவர்கள் யாவரும் முயன்று கவிராயர்கள் வீடுகளிலுள்ள ஏடுகளையெல்லாம் நான் பார்க்கும்படியான நிலையில் செய்வித்திருந்தார்கள். முதலில் லக்ஷூமண கவிராயர் என்பவர் வீட்டிற்குப் போனேன். அவர் சிறந்த வித்துவானாகிய தீராதவினை தீர்த்த திருமேனி கவிராயரென்பவருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. மூன்று நாட்கள் இருந்து தேடியும் நான் தேடிவந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை. பிறகு பல கவிராயர்கள் வீடுகளில் தேடினேன். ஒரு வீட்டிலும் அது கிடைக்கவில்லை. அதனால் என் மனம் மிக்க சோர்வையடைந்தது. அப்போது லட்சுமண கவிராயர் என் நிலைமையைக் கண்டு, “ஒரு விஷயம் மறந்துவிட்டேன். இங்கே என் மாமனார் இருக்கிறார். என் வேலைக்காரன் என் வீட்டிலிருந்த சில சுவடிகளை அவரிடம் கொடுத்துவிட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புத்தகம் இருக்கிறதா? என்று பார்க்கலாம்” என்றார். எங்ஙனமாவது முயன்று கிடைக்கும்படிசெய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் ஒருநாள் இரவு ஆலயத்தில் விசேஷமாதலால் நான் இருந்த வீதிவழியே பெருமாளும் சடகோபாழ்வாரும் எழுந்தருளினார்கள். அப்போது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்து நான் வந்த காரியத்தை நிறைவேற்றுவிக்க வேண்டுமென்று மிகவும் பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு என் நண்பர்களுடன் நான் ஆகாரம் செய்துகொண்ட வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்போது லக்ஷூமண கவிராயர் மிகவும் வேகமாக நாங்கள் இருந்த இடம் வந்து, “இந்தப் புத்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்று தான் என் மாமனாரிடம் உள்ளது. பார்த்துவிட்டுத் திருப்பியனுப்பிவிடுவதாக வாங்கி வந்திருக்கிறேன்” என்று ஒரு சுவடியை என்னிடம் கொடுத்தார். எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தன். சட்டென்று ”முல்லைப் பாட்டு” என்ற பெயர் என் கண்ணிற் பட்டது. அப்போது எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையில்லை. மிக விரைவாக முதலிலிருந்து திருப்பித் திருப்பித் பார்த்தேன். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக இருந்தன. ஆழ்வாரைப் பிரார்த்தித்தது வீண்போகவில்லையென்று பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னேன். அன்றிரவு முழுவதும் சந்தோஷத்தால் தூக்கம் வரவில்லை. மறுநாள் அந்த ஏட்டுப் பிரதியையும், ஐங்குறுனூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை இவற்றின் பிரதிகளையும் லக்ஷு மண கவிராயரிடம் வாங்கிக் கொண்டு நண்பர்களிடம் விடைபெற்றுத் திருநெல்வேலி வந்து அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.
    ----------
    இந்த முறை ஏடுதேடும் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பங்களையும் கவலையையும் ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற தலைப்புடன் கலைமகள் பத்திரிகையில் விரிவாக எழுதியிருக்கிறேன். நான் வெளியிட்டிருக்கும் நல்லுரைக் கோவை இரண்டாம் பாகத்திலும் பதிப்பித்திருக்கிறேன். அந்த விவரங்களை விரிவஞ்சி இங்கே சுருக்கமாக எழுதியுள்ளேன்.
    --------

    அத்தியாயம்-106
    நல்ல சகுனம்

    வெள்ளூர்க் கவிராயர் வீடு

    ஆழ்வார் திருநகரிப் பிரயாணத்தில் வெள்ளூரென்னும் ஊரில் புகழ்பெற்ற கவிராயர் வீடொன்றில் ஏடு தேடியபோது ஒரு கம்பராமாயணப் பிரதியில் ‘இராமாவதாரம்’ என்ற பெயர் எழுதப் பெற்றிருந்ததைக் கண்டேன்.

      “நடையி னின்றுயர் நாயகன் றோற்றத்தின்
      இடைநி கழ்ந்த இராமாவ தாரப் பேர்த்
      தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை”

    என்னும் கம்ப ராமாயணச் செய்யுளில் அந்நூற் பெயர் இராமாவதாரமென்றே கூறப்பட்டுள்ளது. ஆதலின் அதன் இயல்பான பெயர் இராமாவதாரமென்பதாக இருக்கலாமென்று தோற்றியது. பிற்காலத்திற் புறத்திரட்டு என்னும் நூலை ஆராய்ந்தபோது அதில் கம்பராமாயணச் செய்யுட்களின்கீழ் இராமாவதாரமென்ற பெயரே எழுதப் பெற்றிருத்தலைக் கண்ட பிறகு அந்தக் கருத்து உறுதியாயிற்று.

    திருச்சிற்றம்பலக் கோவையாரின் உரையாசிரியர் இன்னாரென்று அக்காலத்தில் தெரியவில்லை. நச்சினார்க்கினியருரையென்றே பலர் அதனைக் கருதி வந்தனர். நானும் அப்படியே எண்ணினேன். சீவக சிந்தாமணியின் முதற் பதிப்பில் நச்சினார்க்கினியர் வரலாறு எழுதிய போது அவர் உரை இயற்றிய நூல்களில் திருக்கோவையாரையும் சேர்த்திருந்தேன். வெள்ளூர்க் கவிராயர் வீட்டிற் கண்ட அந்நூற் சுவடி ஒன்றின்மேல், அவ்வுரை பேராசிரியருடையதென்ற குறிப்பு இருந்தது. நச்சினார்க்கினியர் கோவையாருக்கு உரை எழுதினாரென்ற கருத்தை உடனே மாற்றிக் கொண்டேன். பிரயோக விவேக உரையினாலும் இக்கருத்து வலியுற்றது. நான் சென்றிருந்த காலத்தில் அவ்வீட்டுத் தலைவராகிய கவிராயர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால் நான் ஒரு புத்தகமும் எடுத்துக்கொள்ளாமல் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

    கிடைத்த பிரதிகளையெல்லாம் வைத்துக்கொண்டு பத்துப் பாட்டை ஆராயத் தொடங்கினேன். சிலவற்றில் பத்துப் பாட்டுக்களும் இல்லை. சிலவற்றில் இடையிடையே சில பகுதிகள் இல்லை. சிலவற்றில் பிழைகள் மலிந்திருந்தன. ஒன்றிலேனும் தனியே மூலம் இல்லை. திருத்தமான பிரதி எங்கே கிடைக்குமென்ற கவலையில் மூழ்கியிருந்தேன்.

    வீரபாண்டியக் கவிராயர் பிரதி

    எப்பொழுதும்போல் ஒரு முறை திருவாவடுதுறைக்குச் சென்றிருந்த போது ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகரிடம் பத்துப் பாட்டுக்காக நான் செய்த யாத்திரைகளைப் பற்றி விரிவாகச் சொல்லிவிட்டு, “இவ்வளவு சிரமப்பட்டும் முற்றும் உள்ள திருத்தமான பிரதி கிடைக்கவில்லை. ஆதீனத்தைச் சார்ந்த இடங்களில் எங்கேனும் கிடைத்தால் வாங்கி அனுப்பும்படி காரியஸ்தர்களுக்கு ஸந்நிதானம் உத்தரவிட்டால் அனுகூலமாக இருக்கும்” என்று தெரிவித்துக் கொண்டேன். என்னுடைய மன நலிவைக் கண்ட தேசிகர், “சிறிதும் கவலைப்பட வேண்டாம். ஆதீனத்தைச் சார்ந்த இடங்கள் பல இருக்கின்றன. எல்லோருக்கும் எழுதச் சொல்லி எப்படியாவது பத்துப் பாட்டுப் பிரதியை வருவித்துக் கொடுப் போம்” என்று தைரியம் கூறினார்,

    “கிடைத்தால் நல்லது” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றேன்.

    இரண்டு வாரங்களுக்குப் பின் திருவாவடுதுறையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. “தென்னாட்டுக் காரியஸ்தர்களுக்கெல்லாம் ஸந்நிதானத்தில் எழுதியிருக்கிறது. அனுகூலமான செய்தி கிடைக்கும்; கவலைப்படவேண்டாம்” என்று மடத்து ராயஸம் பொன்னுசாமி செட்டியார் அதில் எழுதியிருந்தார். அடுத்த வாரமே நான் என்னவாயிற்றென்று விசாரிப்பதற்காகத் திருவாவடுதுறை சென்றேன். மடத்திற்குள் புகுந்து ஒடுக்கத்தின் வாயிலில் கால் வைக்கும்போதே ஆதீனத் தலைவர் என் காதில் படும்படி, “பொன்னுசாமி செட்டியார்! பத்துப் பாட்டைக் கொண்டுவந்து ஐயரவர்களிடம் கொடும்” என்று உத்தரவிட்டார். அந்த வார்த்தைகள் என் காதில் விழுந்த போது என் உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறிந்தது. மிக்க வேகமாக ஆதீனத் தலைவரை அணுகி உட்கார்ந்தேன். உடனே பொன்னுசாமி செட்டியார் ஏட்டுச் சுவடியைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பத்துப் பாட்டுக்களும் இருந்தன. மூலமும் உரையும் கலந்ததாகவே இருந்தது அப்பிரதி. பத்துப் பாட்டு முழுவதும் இருந்தமையால் எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாயிற்று. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தேன். ஒவ்வொரு பாட்டாகத் திருப்புகையில் என் உள்ளம் குதூகலித்தது. அதில், தூத்துக்குடிக் கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமிப் பிள்ளையால், வீரபாண்டிய கவிராயர் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டதென்று எழுதியிருந்தது.

    “இந்தப் பிரதி எங்கிருந்து கிடைத்தது?” என்ற வியப்போடு ஆதீனத் தலைவரை வினவினேன்.

    “திருச்செந்தூர் மடத்தில் வீரபாகு பிள்ளையென்பவர் காரியஸ்தராக இருக்கிறார்; நல்ல திறமையுள்ளவர். அவர் வாங்கி அனுப்பினார்” என்று அவர் சொன்னார். அந்தப் பிரதியைப் பெற்றுக்கொண்டு கும்பகோணம் வந்து என் கைப் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல பிழைகள் திருந்தின. மூலமில்லையே என்ற குறை ஒருபால் இருப்பினும் பத்துப் பாட்டுக்களுமுள்ள திருத்தமான பிரதி கிடைத்ததே போதுமென்ற திருப்தியோடு மேற்கொண்டு பதிப்புக்குப் பிரதியைச் சித்தம் செய்யலானேன்.

    குறிஞ்சியில் குறை

    இடையில் வேறொரு தடை நேர்ந்தது. குறிஞ்சிப் பாட்டில் ஒரிடத்தில் ஒரு பகுதி விட்டுப் போயிருந்தது. எல்லாப் பிரதிகளிலும் அதே குறை காணப்பட்டது. எவ்வளவு அடிகள் அங்கே இருக்க வேண்டுமென்பதை நிச்சயம் செய்து கொள்ள முடியவில்லை பொருளின் தொடர்ச்சியைப் பார்க்கையில் சிறுபகுதியாக இருக்கலாமென்றே தோற்றியது பல மலர்களின் பெயர்கள் வரிசையாகச் சொல்லப் பெறும் இடம் இது. முன்னும் பின்னும் மலர்களுடைய பெயர்கள் வருகின்றன. இடையில் சில மலர்களின் பெயர்கள் அமைந்த பகுதியே காணப்படவில்லை. வீரபாண்டியக் கவிராயர் ஏடு கிடைத்ததனால் உண்டான மகிழ்ச்சி இந்தக் குறையால் ஓரளவு குறைந்தது.

    தொடங்கியது முதல் இடைஞ்சல்களையே அனுபவித்துத் துயருற்றதனால் நான் ஓய்ந்து ஒன்றும் தோன்றாமல் இருந்தேன். அப்போது சைவ ஆதீனங்களில் திருவாவடுதுறையைப் போன்ற பழமையும் பெருமையும் உடைய தருமபுர ஆதீனத்தின் ஞாபகம் வந்தது. அதுகாறும் தருமபுர மடத்திலுள்ள ஏடுகளைத் தேடிப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு நேரவில்லை. அப்போது இரண்டு இடங்களுக்கும் இடையே இருந்த சிறிது மனஸ்தாபத்தால் திருவாவடுதுறை மடத்தின் சார்புடைய நான் தருமபுர மடத்திற்குச் செல்வதைச் சிலர் தவறாக நினைத்தல் கூடுமென்று முதலில் எண்ணினேன்.

    பல வித்துவான்கள் இருந்து விளங்கிய தருமபுர ஆதீனத்து ஏடுகளை ஆராய்ந்தால் பத்துப் பாட்டுப் பிரதி கிடைக்கலாமென்ற ஆசை எனக்குத் தோற்றியது. தமிழாராய்ச்சி விஷயத்தில் இந்தச் சம்பிராதயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எடுத்த காரியம் நிறைவேறாமற் போகுமென்ற கருத்தால், திருவாவடுதுறைக்குச் சென்று ஆதீனத் தலைவரிடம் தருமபுர மடத்திற்குப் போய் ஏடு தேடவேண்டுமென்ற என் விருப்பத்தை வெளியிட்டேன். அம்பலவாண தேசிகர் அப்படியே செய்யலாமென்று அனுமதி அளித்ததோடு வண்டியையும், உடன் செல்லும்படி பொன்னுசாமி செட்டியாரையும் அனுப்பினார்.

    குறை நிரம்பியது

    அதிருஷ்டம் என் பங்கில் இருந்தது. நான் தருமபுர மடாலயத்திற்குச் சென்று ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகதேசிகரைக் கண்டு அவர் அனுமதி பெற்று அங்கிருந்த ஏடுகளைத் தேடினேன். நான் தேடிய பொருள் கிடைத்தது. அங்கே மிகப்பழையதாகிய பத்துப்பாட்டின் ஒற்றை ஏடுகள் சில அகப்பட்டன. அவற்றால் குறிஞ்சிப் பாட்டிற் குறையாக இருந்த பகுதி பூர்த்தியாயிற்று. நான்கு மலர்களின் பெயர்கள் விடுபட்டுப் போயினவென்று தெரியவந்தது. குறை நிரம்பப் பெற்ற சந்தோஷத்தோடு என் நன்றியறிவைத் தெரிவித்து அவ்வேடுகளைப் பெற்றுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். தருமபுரத்தில் பல நூல்களைக் கண்டேன். ஒட்டக்கூட்டர் இயற்றிய தக்கயாகப்பரணி மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்று இருந்தது. அப்போது அதில் என் கவனம் செல்லாமையால் அதனை எடுத்துக் கொள்ளவில்லை.

    பத்துப்பாட்டு மூலம் இல்லாத குறை மாத்திரம் நிரம்பாமலே இருந்தது. சென்னையில் உள்ள அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலையில் ஒரு பத்துப் பாட்டுப் பிரதி இருந்தது அதனைப் பிரதி பண்ணச் செய்து வருவித்தேன். அதில் இரண்டு பாட்டுக்களின்

    கலைமகளில் வெளிவந்த ‘உதிர்ந்த மலர்கள்’ என்ற கட்டுரையில் இவ்வரலாற்றின் விரிவைக் காணலாம். (நல்லுரைக் கோவை-IV) மூலம் இருந்தன. ‘இனிமேல் பத்துப் பாட்டுப் பிரதிகள் வேண்டுமென்று கவலைப்படுவதில் பிரயோசனமில்லை’ என்ற தீர்மானத்தோடு அந்நூலை அச்சுக்குச் சித்தம் செய்யத் தொடங்கினேன்.

    திருமானூர்க் கிருஷ்ணையர் உடனிருந்து மிக்க உதவி புரிந்தார் என்னிடம் பாடங் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரானும், ஸ்ரீ ம.வீ. இராமனுஜாசாரியரும் வேறு சில அன்பர்களும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியில் உடனிருந்து ஒப்பு நோக்குதல் முதலிய பல வகை உதவிகளைச் செய்து வந்தார்கள்.

    மற்றொரு பதிப்பு

    நான் திருநெல்வேலிப் பக்கத்தில் ஏடு தேடியபோது அங்கங்கே சென்று சுவடிகள் பார்த்த செய்திகளைச் சுதேசமித்திரன் பத்திரிகை வாயிலாக அறிவித்து வந்தேன். சென்னைக் கல்வி இலாகாத் தலைவர் காரியாலயத்தில் வேலை பார்த்து வந்தவரும் தமிழறிஞருமான தி த. கனகசுந்தரம் பிள்ளை என்பவர் அவற்றைக் கண்ணுற்று 18-9-88 ஆம் தேதியில் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “......... யான் சில காலமாகப் பத்துப் பாட்டுப் பிரதி தேடி இயன்ற வரையும் பிழைதிருத்தி எழுதிக்கொண்டு வருகிறேன். எட்டுத் தொகை நும்போலியரே அச்சிட வேண்டும். எம்மாலியன்ற பத்துப் பட்டையாதல் யாமச்சிடுவோம்” என்று எழுதினார். அது கண்டவுடன். நான் பாத்துப்பாட்டை அச்சிட ஏற்பாடு செய்திருப்பதைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு மறுமொழியாக அவரிடமிருந்து 30-9-88ஆம் தேதி வந்த கடிதத்தில், “தாங்கள் கையிட்ட வேலையிலேயே யானும் கையிட்டிருக்க வேண்டுமா வென்று விசனமடைகிறேன். இதுகாறும் தாங்கள் சிலப்பதிகாரம் அச்சிடுவதாகக் கேள்வியுற்றேன். யான் பத்துப் பாட்டை யச்சிட்டால் மாறு கொண்டேனென்று கொள்ளற்க. யானுமச்சிட்டே முடிப்பேன்!” என்று எழுதியிருந்தார்.

    “நீங்கள் உங்கள் முறையிலே அச்சிடுங்கள். நான் என் முறையில் அச்சிடுகிறேன். இருவர் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கத் தமிழ்நாட்டில் இடம் உண்டு” என்று அவருக்கு எழுதி விட்டுப் பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் முனைந்து நின்றேன்.

    பாற்காவடி

    ஒரு முறை நன்றாக முற்றும் பார்த்துவிட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டிய பிரதியைப் பார்த்து ஒழுங்கு படுத்தலானேன். திருமானூர்க் கிருஷ்ணையர் உடனிருந்து எழுதி வந்தார். மற்றப் பாட்டுக்களை முதலில் முடித்து விட்டுக் கடைசியில் திருமுருகாற்றுப் படையைப் பார்த்து வந்தேன். மூலத்தையும் உரையையும் பிரித்து எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதச் செய்தேன். ஒரு நாள் காலையில் ஒன்பது மணிக்குத் திருமுருகாற்றுப்படை பூர்த்தியாயிற்று. ஒரு விதமான திருப்தி எனக்கு உண்டாயிற்று. அப்போது வீதியில் நாகசுர சத்தம் கேட்டது. கவனித்தோம். சுப்பிரமணிய பக்தராகிய நாயுடு ஒருவர் காவிரியில் ஸ்நானம் செய்து விபூதியை உடம்பெல்லாம் பூசிப் பாற்காவடி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார். உடம்பெல்லாம் அலகுடன் முருகன் துதியான சில பாடல்களைச் சொல்லிக் கொண்டும் ஆடியபடியே வந்தார். நாகசுரக்காரன் அவருடைய பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் ஏற்ப வாசித்து வந்தான்.

    திருமுருகாற்றுப்படை எழுதி முடிவதற்கும் அந்த முருகனடியார் காலடி எடுத்து வாயிலில் வந்து நின்றதற்கும் சரியாக இருந்தது. பலவகைத் தடைகளால் புண்பட்ட எனக்கு அக்காட்சி மிக்க ஆறுதலளித்தது. “திருமுருகாற்றுப் படையை முடித்தோம். ஆண்டவன் திருவருள் இந்த வேலையை முற்றுவிக்குமென்பதற்கும் அடையாளமாக இக்காட்சியைக் காண்கிறோம்” என்று நான் உள்ளுணர்ச்சி பொங்கிவரக் கிருஷ்ணையரைப் பார்த்துச் சொன்னேன்.

    “நல்ல சகுனந்தான்” என்று அவரும் ஆமோதித்தார்.
    --------------

    அத்தியாயம்- 107
    கண்டனப் புயல்

    சீவகசிந்தாமணிப் புத்தகம் தமிழ் நாட்டாருடைய அன்புக்கு உரியதாயிற்று அதிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட அறிஞர்கள் என்னைப் பாராட்டியதோடு பத்துப் பாட்டுப் பதிப்பையும் விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்தார்கள். சீவகசிந்தாமணியின் முகவுரையிலும் நூலின் அடிக்குறிப்புக்களிலும் புறநானூறு முதலிய பல பழைய நூற் பெயர்களைக் கண்டவர்கள் அவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பதிப்பிக்க வேண்டுமென்று எனக்கு ஊக்கமளித்து வந்தார்கள்.

    சிலர் விஷமச் செயல்

    இப்படி அபிமானிகளுடைய ஆதரவு எங்கும் வளர்ந்து வந்த போதுஒரு பால் சில பொறாமைக்காரர்களின் விஷமச் செயல்களும்

    தலைதூக்கத் தொடங்கின. பிறரைக் கண்டிப்பதிலே இன்பங்காணும் சிலர் சீவக சிந்தாமணிப் பதிப்பைப்பற்றிப் பல வகையான கண்டனங்களைக் கூறியும் எழுதியும் அச்சிட்டும் வெளிப்படுத்தலாயினர். அவர் கூறிய பிழைகளில் உண்மையில் பிழைகளாகக் கருதப்படுவனவும் சில உண்டு. ஆனாலும் அவர்களுடைய நோக்கம் பிழை திருந்தவேண்டுமென்பதன்று; எப்படியாவது கண்டனம் செய்து என் மதிப்பைக் குறைக்க வேண்டுமென்பதே, கண்டனத்தின் முறையும் நடையும் அவர்களுடைய உள்ளக் கொதிப்பைக் காட்டினவேயன்றித் தமிழன்பை வெளிப்படுத்தவில்லை. இத்தகைய கூட்டத்தார் உலகத்தில் எந்தக் காலத்திலும் உண்டு.

    பிழையும் திருத்தமும்

    சிந்தாமணியை வெளியிட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அத்தகைய நூற்பயிற்சி எவ்வளவு மங்கியிருந்ததென்பதைத் தமிழுலகு நன்கு அறியும். அப்போது மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஒரு காரியத்தில் பிழைகள் இருப்பது இயல்பே. நூற்பதிப்பு விஷயத்தில் வரவரப் பாடங்கள் திருந்துவதும், உண்மைப் பொருள் தெளிவாவதும், புதிய புதிய செய்திகள் புலப்படுவதும் புதியனவல்ல. எடுத்த எடுப்பிலே முற்றத் திருந்திய பதிப்பை வெளியிடுவதென்பது இயலாத காரியம். என் முதற் பதிப்புக்களில் அமைந்திருந்த பல பிழைகளைப் பிற்காலத்தில் நானே திருத்திப் பதிப்பித்திருக்கிறேன். புதிய புதிய ஆராய்ச்சி செய்யும்போது கிடைக்கும் அறிவால் பல காலமாகத் திருந்தாத செய்திகள் திருந்தியதுமுண்டு.

    “அறிதோ றறியாமை கண்டற்றால்”

    என்று திருவள்ளுவர் கூறியது பொய்யாகுமா?

    சிந்தாமணிப் பதிப்பில் என் அறியாமையால் சில பிழைகள் அமைந்ததுண்டு. திருத்தக்கதேவர் மதுரைக்குச் சென்று சங்கவித்துவான்களைக் கண்டனரென்று முதற் பதிப்பில் எழுதியிருக்கிறேன். இது தவறென்று பிறகு தெரிய வந்தது. ஜைன சங்கத்தைச் சார்ந்தவர்களை அவர் கண்டாரென்ற உண்மையைப் பிற்கால ஆராய்ச்சியால் அறிந்து கொண்டேன். இப்படியே நூற்பெயர்கள், புலவர் பெயர்கள் முதலிய பலவற்றில் பிழையான உருவங்களைச் சிந்தாமணி முதற் பதிப்பிற் காணலாம். அவற்றை நாளடைவில் திருத்திக் கொண்டேன். இன்று இருக்கும் ஒரு பாடம் நாளைக் கிடைக்கும் புதிய பாடத்தால் பிழையாக நேர்வதும் உண்டு. மனிதன் சிற்றறிவால் ஆராய்ந்து அமைக்கும் ஒன்றை எப்படி முடிந்த முடிபென்று கொள்ள முடியும்?

    இதனை யாவரும் உணர்வர். ஆனால் பொறாமையால் தூண்டப் பெற்றவர்களுக்கு இத்தகைய விஷயங்களெல்லாம் புலப்படுவதில்லை. கும்பகோணத்தில் பள்ளிக்கூடத் தமிழாசிரியராக இருந்த மூவர் சிந்தாமணிக் கண்டனத்தில் ஊக்கங் கொண்டனர். அவர்கள் என்னாற் சில உபகாரங்களைப் பெற்றவர்களே. ஜைன நூலை நான் அச்சிட்டது பிழையென்றும், சைவ மடாதிபதி சகாயம் செய்தது தவறென்றும், சிந்தாமணியில் பிழைகள் மலிந்துள்ளன வென்றும், அதிலுள்ள பிழைகள் கடல் மணலினும் விண்மீனினும் பல என்றும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். முதலில் அயலார் பெயரால் வெளியிட்டனர்: அப்பால் தங்கள் பெயராலேயே வெளியிட்டனர். கும்பகோணத்தில், வீதிதோறும் இந்தப் பிரசுரங்களைப் பரப்பினர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மாயூரம், திருப்பாதிரிப் புலியூர், சென்னை முதலிய இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே பரவும்படி செய்தனர். சென்னையில் யார் யார் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் கட்டுக் கட்டாகக் கண்டனப் பிரசுரங்களை அனுப்பினர். பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசுவாமி முதலியார், ஆர்.வி.ஸ்ரீநிவாச ஐயர் முதலியவர்கள் அவற்றைக் கண்டு எனக்குச் செய்தி தெரிவித்தனர்.

    இந்தக் கண்டன அலைகளுக்கிடையே நான் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை நடத்தி வந்தேன். குடந்தை மித்திரனென்னும் ஒரு பத்திரிகை கும்பகோணத்தில் சில நாள் நடந்து வந்தது. அதில் ஒரு சமயம் என்னைப் புகழ்ந்தும் அடுத்த இதழில் இகழ்ந்தும் கட்டுரைகள் வரும். என் அன்பர்கள் இத்தகைய கண்டனங்களைக் கண்டு என்பாற் சிறிதும் அவமதிப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. கண்டனம் செய்தவர்களுக்கு யாரையேனும் கண்டிப்பதே நெடுங்காலப் பழக்கமென்பதையும், கண்டனத்தில் வழங்கிய பாஷையின் போக்கையும் அறிந்தவர்களுக்கு அக்கண்டனத்தில் உண்மை இருந்தாலும் மதிப்பளிக்க மனம் வராது.

    முருகனைப் பிரார்த்தித்தல்

    ஒரு நாள் பத்துப் பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தேன். என்னோடு திருமானூர்க் கிருஷ்ணையரும், குடவாயில் சண்முகம் பிள்ளையென்பவரும், வேறு சில மாணாக்கர்களும் இருந்தனர். கண்டனக் கூட்டத்தாருடைய செயல்களைப் பற்றிய பேச்சு வந்தது. நூலை ஆராய்வதில் உண்டாகும் சிரமத்தால் அலைவு பெற்ற என் உள்ளத்துக்கு இக்கண்டனக் கூட்டத்தாருடைய செயல் அதிக வருத்தத்தை உண்டாக்கிற்று. ‘இக்கண்டனத்துக்கு விடைகூற ஆரம்பித்தால் என் ஆராய்ச்சி வேலை நின்று விடுமே. நியாயமான கண்டனத்திற்குப் பதில் சொல்லலாம். அநியாயமான பொறாமைக் கூற்றுக்குப் பரிகாரம் ஏது?’ என்று எண்ணினேன். என் மனம் முருகக் கடவுளை நினைத்து உருகியது. உடனே அவ்வுள்ள உணர்ச்சி சில செய்யுட்களாக வெளிவந்தது. அவற்றிற் சில வருமாறு:

      அகமே யொருசொல் அறைவன் னிகரில் .
      மகமே ருவளைத் தருள்வள்ளலருள் .
      குகனே முருகா குமரா திருவே.
      ரகவே லவவென் றழைநீ தினமே.

      (அகமே - மனமே.)

      மலர்கொண் டுனையே வழிபட் டிடுவேன்
      அலர்கொண் டுவிளங் கலைவா விகள்சூழ்
      கலர்கண் டறியாக் கவினே ரகவெற் .
      பலர்கண் டிகழும் படிவைத் ததெனே.

      (அலர்-மலர். கலர் - கீழ் மக்கள். கவின் ஏரக என் பலர் கண்டு இகழும்படி வைத்தது எனே - அழகிய சுவாமி மலையை யுடையாய்! அடியேனைப் பலர் கண்டு இகழும்படி வைத்தது ஏன்?)
      ததைதீஞ் சுவைநற் றமிழ்பா டியுளம் பதையா துறையும் படிவைத் தருள்வாய் உதையா திபனே ரொளியா யளியாய் சிதையா துறையுந் திருவே ரகனே. (ததை-செறிந்த,
      உதையாதிபன்-சூரியன், அளி-அருள்.)

    நான் எழுதிய சமாதானம்

    நான் விடையொன்றும் வெளியிடாமல் இருந்தது கண்டு கண்டனக்காரர்களுக்குப் பின்னும் அதிகக் கோபமே உண்டாயிற்று. “சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்” என்று ஒரு பிரசுரம் வெளி வந்தது. பிழையல்லாதனவற்றையும் பிழையாக அதில் சொல்லியிருந்தனர். அவற்றிற்குச் சமாதானம் சொல்லத்தான் வேண்டுமென்ற கருத்து எனக்கு உண்டாயிற்று. ஒரு நாள் இரவில் நாலாம் ஜாமத்தில் எழுந்து சமாதானம் எழுதிக்கொண்டிருந்தேன். மனம் மிக வருந்தியது. அப்போது கம்பளத்தான் ஒருவன் வீதியில் “ஐயா, உங்களுக்கு க்ஷேமம் உண்டாகும்; கவலைப்பட வேண்டாம்” என்று தன் வழக்கப்படியே சொல்லி விட்டுப் போனான். அவன் வழக்கமாகச் சொன்னாலும் எனக்கு அது விசேஷமாகத்தோற்றியது. ஒருவாறு சமாதானத்தை எழுதி முடித்தேன். விடிந்தது.

    காலைக் கடன்களை முடித்த பிறகு நான் எழுதிய சமாதானப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு, சாது சேஷையரிடம் சென்றேன். கண்டனத்துக்கு நான் எழுதிய சமாதானத்தை வேறொருவர் படித்துப் பார்த்தால்தான் அதன் பொருத்தம் தெரியுமென்ற எண்ணத்தாலும், என்பால் பேரன்புடைய அவர் ஏதேனும் யோசனை கூறக் கூடுமென்ற கருத்தாலுமே அவரிடம் போனேன்.

    சாது சேஷையர் உபதேசம்

    நான் எழுதிக் கொண்டு சென்ற கடிதங்களை அவர் கையிற் கொடுத்து, “சிந்தாமணியைப் பற்றிய கண்டனங்கள் எங்கும் உலாவி வருவது உங்களுக்குத் தெரியுமே. தூஷணைகளுக்குச் சமாதானம் சொல்லுவது சாத்தியமன்று. பிழையென்று சொல்லப்பட்டவற்றிற்கு எனக்குத் தெரிந்த அளவில் சமாதானம் எழுதியிருக்கிறேன். பார்வையிட வேண்டும்” என்றேன். அவர் வாங்கிப் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ வென்று நான் ஆவலோடு எதிர்பார்த்து நின்றேன்.

    அவர் உடனே அதை அப்படியே கிழித்துப் பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கலக்கமுற்றேன். அவர் என்னைப் பார்த்து மிகவும் நயமான குரலில் சொல்லத் தொடங்கினார்: “நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திருவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா? இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும். உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவரகள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறினார்.
    --
    முதலில் கண்டனத்துக்குச் சமாதானம் எழுதாமல் இருந்த நான் மிக்க யோசனை செய்தே அதனை எழுதினேன். தீர்மானத்தோடு செய்த ஒரு காரியம் வீணாவதென்றால் சிறிது மனத் தளர்ச்சி ஏற்படுவது இயல்புதானே? ‘சிறிதும் யோசியாமல் கிழித்து விட்டாரே’ என்று எண்ணினேன்.

    “என்னை யோசிக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்விஷயங்களெல்லாம் தடைகளாக இருக்கும். இக்கண்டனம் இன்றைக்கு நிற்கும்; நாளைக்குப் போய்விடும். உங்களை எதிர்ப்பவர்கள் மனம் திருந்தி உங்கள்பால் அன்பு பூணும் காலமும் வரும். அவர்கள் தங்கள் செயலை நினைந்து தாமே வருந்தினாலும் வருந்துவர்; ஆதலால் இந்தக் கண்டனப் போரில் நீங்கள் இறங்க வேண்டாம். நீங்கள் உங்கள் தமிழ்த் தொண்டைச் செய்து கொண்டே யிருங்கள். தெய்வம் உங்களைப் பாதுகாக்கும்” என்று அவர் மீட்டும் வற்புறுத்திச் சொன்னார்.

    இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலை அளித்தன. “நான் இனித் தூஷணைகளைக் கவனிப்பதும் இல்லை. அவற்றிற்குச் சமாதானம் எழுதப் புகுவதும் இல்லை” என்ற உறுதி மொழியை அன்று அவரிடம் சொன்னேன். இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன். இதற்கு மூல காரணம் சாது சேஷையரென்பதை என்றும் மறவேன்.

    சிலர் கடிதங்கள்

    ஒரு வகையாகக் கண்டனப் புயலினின்றும் ஒதுங்கிக் கொண்டேன். பத்துப்பாட்டில் மனம் தீவிரமாகச் செல்லலாயிற்று. ஆனாலும் அங்கங்கே இருந்த நண்பர்கள் கண்டனக்காரர்களுடைய இயல்பைக் கண்டித்து எனக்குக் கடிதம் எழுதினர். சிலர் தாங்கள் அவற்றைக் கண்டித்துப் பத்திரிகையில் எழுதுவதாகத் தெரிவித்தனர். பூவை கலியாணசுந்தர முதலியார் முதலியவர்கள் இவ்வாறு எனக்கு எழுதினர். நான் “கண்டனங்களுக்குச் சமாதானம் எழுத வேண்டாம்” என்று தெரிவித்தேன்.

    சென்னையிலிருந்த தி.த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து 12-11-1888ஆம் தேதி யன்று ஒரு கடிதம் வந்தது. பத்துப்பாட்டு விஷயத்தில் அவருக்கும் எனக்கும் போட்டியிருந்தும் அவர் எழுதிய கடிதத்திற் கண்ட விஷயங்கள் எனக்கு ஆறுதலையும் வியப்பையும் அளித்தன.

    “. . . . .சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப்பிரகரணம் என்னுமொரு துண்டுப் புத்தகமுங் கைக்கெட்டியது. அதை வாசித்த போதே எழுதியோருடைய கருத்து நன்கு புலப்பட்டதாயினும், அவர் கூற்றினுஞ் சிறிதுண்மையிருக்கலாமென்ற ஐயப்பாட்டோடு என்னுடைய சிந்தாமணி எழுத்துப் பிரதியை எடுத்து ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். பார்த்தபோது அம்ம! ஒன்றும் அவர் கூறியபடியின்றித் தங்கள் பாடம் போன்றே யிருக்கக் கண்டேன். அது நான் செய்த, பாவந்தான்போலும். . . அவர் முறைமையோடு கூடாமையாலும், மனப் புழுக்கத்தோடு தெழித்துரைக்கின்றமையானும் அறிவுடையாரைத் தமக்குப் புறம்பாக்கிக் கொண்டன ரென்பதே என்னுடைய துணிபு. . . “ என்பது அக்கடிதத்தின் ஒரு பகுதி.

    அவர்கள் அனைவரும் சேர்ந்து செய்த கண்டனத்தால் விளைந்த மனவருத்தம் இந்த ஒரு கடிதத்தாலே நீங்கி விட்டதென்றே சொல்லலாம்.

    புயல் வேறு திக்கில் திரும்பியது

    கண்டனக்காரர்கள் என் மௌனத்தைக் கண்டு சலித்துப் போயினர். என்னுடன் இருந்து உதவி செய்து வந்த குடவாயில் சண்முகம்பிள்ளை நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கண்டனக் கூட்டத்தாரைக் கண்டிக்கப் புகுந்தார். அவர் பாஷைக்கு இவர் பாஷை தாழவில்லை. கண்டனம் பல பல துறையிலே சென்றது. ஒருவருக்கொருவர் அவரவர் பதிப்பித்த பாட புத்தகத்திலும் உரையிலும் உள்ளவற்றைப் பற்றிய கண்டனத்திலே புகுந்தனர். வசனமெழுதினர்; வசை பரப்பினர்; செய்யுளாகவும் இந்தச் சண்டை பரிணமித்தது. நேருக்கு நேரே சொல்லவும் நாணும் வார்த்தைகள் அச்சில் செய்யுளில் வந்து புகுந்தன. கடைசியில் மிஞ்சியது ஒன்றும் இல்லை.

    இந்தச் சண்டையில் ஈடுபடத் தொடங்கியது முதல், என்பால் வருவதை நிறுத்திக்கொள்ளும்படி சண்முகம்பிள்ளையிடம் சொல்லி விட்டேன்.
    ------------

    அத்தியாயம்- 108
    பத்துப் பாட்டுப் பதிப்பு

    பத்துப்பாட்டைப் பதிப்பிக்கும் விஷயத்தில் பொருள் முட்டுப்பாடு நேர்ந்தால் என்ன செய்வதென்ற யோசனை எனக்கு உண்டாயிற்று. சிந்தாமணிக்குச் செய்தது போலவே இதற்கும் அன்பர்களிடம் கையொப்பம் வாங்கலாமென்று எண்ணி ஒரு பத்திரிகை அச்சிட்டுப் பலருக்கு அனுப்பினேன்.

    கையொப்பம் வாங்கியது

    மதுரையில் டெபுடி கலெக்டராக இருந்த ம.தில்லை நாயகம் பிள்ளை, ஸாது சேஷையர், சோழன் மாளிகை ரத்தினம்பிள்ளை, ஆர்.வி.ஸ்ரீநிவாசையர், தஞ்சாவூர் வக்கீல் கீ.சி.ஸ்ரீநிவாச பிள்ளை முதலிய அன்பர்கள் பொருளுதவி செய்தனர். சிறுவயல் ஜமீன்தாராக இருந்த ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவர் என்னை முன்பு அறியாதவராக இருந்தும் தக்க பொருளுதவி செய்வதாகக் கடிதம் எழுதினர். இருநூறு ரூபாய் வரையில் சேர்ந்தது, அப்போது கும்பகோணத்தில் இருந்த ஒரு கனவான், “காலேஜ் பண்டிதர் சாமிநாதையர் பத்துப்பாட்டை அச்சிடுவதாகச் சொல்லிக் கையொப்பம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இது பணம் சம்பாதிக்கும் வழியென்று தோற்றுகிறது” என்று சொன்னதாக என் காதில் விழுந்தது. அதுமுதல் கையொப்பம் வாங்குவதை நிறுத்திக் கொண்டேன்.


    பத்துப்பாட்டுப் பிரதி ஏதேனும் இருக்கிறதா என்று பொள்ளாச்சி வித்துவான் சிவன்பிள்ளை என்பவருக்கு எழுதியிருந்தேன். அவர் தம்மிடமிருந்த பிரதி ஒன்றை அனுப்பினார். ஒரு வகையாக ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு திருமானூர்க் கிருஷ்ணையருடன் சென்னைக்குப் புறப்படச் சித்தமானேன்.

    ஆறுமுகத் தம்பிரான்

    1888 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி நல்ல நாளாக இருந்தது. அன்று காலையில் குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனமடத்துக் காறுபாறாகிய தாண்டவராயத் தம்பிரானும் அவ்வாதீன வித்துவானாகிய தில்லைநாத பிள்ளையும் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தனர். “தங்களுடைய சகபாடியாகிய திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஆறுமுகத் தம்பிரானவர்களை எங்கள் ஆதீனத்துக்குச் சின்னப் பட்டமாக அபிஷேகம் செய்ய உத்தேசித்து அனுமதி கேட்பதற்காகத் திருவாவடுதுறைக்குப் போயிருந்தோம். ஸந்நிதானம் ஒப்புக் கொண்டது. தங்களிடத்திலும் இந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்துப் போக வந்தோம்” என்றார்கள். “எனக்கு அளவற்ற சந்தோஷம். படித்தவர்களை ஆதீனத் தலைவர்களாக நியமிப்பது நல்ல காரியம். ஆறுமுகத் தம்பிரான் நன்றாகப் படித்தவரே. நான் இன்று பத்துப் பாட்டை அச்சிடுவதற்காகச் சென்னைக்குப் புறப்படப் போகிறேன். இன்று இந்த நல்ல செய்தியைக் கேட்டது எனக்கு ஊக்கத்தை உண்டாக்குகிறது. உங்கள் முயற்சியும் என் முயற்சியும் அனுகூலமாக நிறைவேறுமென்று தோற்றுகிறது” என்று சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினேன்.

    அம்பலவாண தேசிகர் செய்த உதவி

    பிறகு என் தந்தையாரிடமும் பிறரிடமும் விடை பெற்றுக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்தேன். அங்கே ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகர் என் முயற்சியை அறிந்து மகிழ்ச்சியோடு எனக்கு உத்ஸாகமுண்டாக்கும் வார்த்தைகளைச் சொல்லி அறுபது ரூபாய் பணமும் வழங்கிச் சென்னைக்கு அனுப்பினார்.

    மறுநாள் நானும் கிருஷ்ணையரும் சென்னையை அடைந்து சேலம் இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கினோம். அவர் அப்போது அலகபாத்துக்குப் போயிருந்தார். கொண்டு சென்ற சாமான்களையெல்லாம் அவர் பங்களாவில் வைத்து விட்டு என் நண்பர்களைப் பார்க்கச் சென்றேன். தேரழுந்தூர் இராஜகோபாலாசாரியரைப் பார்த்து நான் வந்த விஷயத்தைச் சொல்லி அச்சுக்கூடமொன்றைத் திட்டம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தேன். அவர் சிந்தாமணியை அச்சிட்ட திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்திலேயே கொடுத்து விடலாமென்று சொல்லவே அங்கேயே பதிப்பிக்க ஏற்பாடு செய்தேன்.

    அச்சுக்கூடத் தலைவர் கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு, “சிந்தாமணியை விட இதில் வேலை அதிகம் இருக்கிறது. இதற்கு அதிகக் கூலி கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். பழகின இடமென்ற எண்ணத்தால் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன்.

    விடுதி

    இராமசுவாமி முதலியார் பங்களாவில் ஜாகையும் புரசைப்பாக்கத்தில் ஒரு விடுதியில் உணவும் வைத்துக் கொண்டு அவதானம் பாப்பையர் வீதியிலிருந்த அச்சுக்கூடத்தில் அச்சு வேலையைக் கவனித்து வந்தேன். இது சிரமமாக இருந்தமையால் நான் உணவு கொள்ளும் விடுதியிலேயே ஓர் அறையில் தங்கி இரவு நேரங்களில் புரூப் முதலியன பார்த்து வந்தேன். அந்த அறையை வாடகைக்கு வைத்துக்கொண்டு படித்து வந்தவராகிய கதிராமங்கலம் சுப்பிரமணிய ஐயரென்னும் மாணாக்கரே இவ்வாறு செய்யலாமென்று சொல்லி எனக்காக ஏற்பாடு செய்தார்.

    பத்துப்பாட்டு மூலப் பிரதியையே பாராத நான் சென்னையில் பின்னும் எங்கேனும் வித்துவான்கள் வீடுகளில் ஏடுகள் கிடைக்குமோ என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு பெரிய வித்துவானுடைய ஞாபகம் வந்தது.

    அண்ணாசாமி உபாத்தியாயர் வீடு

    பல வருஷங்களுக்கு முன் மயிலாப்பூரில் திருவம்பலத்தின்ன முதம்பிள்ளையென்ற ஒரு பெரிய வித்துவான் இருந்தார். அவர் திருநெல்வேலி அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்; பழைய தமிழ் நூல்களில் தேர்ந்த அறிவினர்; பிள்ளையவர்கள் இளமைக் காலத்தில் சென்னைக்குச் சென்றிருந்தபோது அந்த வித்துவானிடம் சில நூல்களைப் பாடங் கேட்டார். திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையிடம் ஏட்டுச் சுவடிகள் இருந்தனவென்று என் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

    இந்தச் செய்திகள் என் நினைவுக்கு வந்தவுடனே, ‘மயிலாப்பூரில் அவர் வசித்த வீடு எங்கே இருக்கிறது? அவருடைய சந்ததியார் யார் இருக்கிறார்கள்?’ என்று விசாரிக்கத் தொடங்கினேன். அவர் எங்கிருந்தாரென்று சொல்வார் ஒருவரும் இல்லை. அக்காலத்தில் மயிலாப்பூரிலுள்ள திருவண்ணாமலை மடத்தில் சரவணச் சாமியார் என்ற ஒரு துறவி இருந்தார். யாழ்ப்பாணத்தாராகிய அவரை ஸ்ரீ ஆறுமுக நாலவர், ‘சபாப்பிரசங்க சிங்கமாகிய சரவணச் சாமியார்’ என்று பாராட்டியிருக்கிறார். அவர் தமிழ் வித்துவான்; வைத்தியத்தில் இணையற்ற திறமையுடையவர். பிராயத்தில் முதிர்ந்தவராகிய அவரைக் கேட்டால் ஏதேனும் விவரம் தெரியக் கூடுமென்று சிலர் கூறவே திருவண்ணாமலை மடத்துக்குச் சென்று அப்பெரியாரைப் பார்த்தேன். நான் பார்த்த காலத்தில் அவருக்கு எழுபது பிராயம் இருக்கும், ஆனாலும் கட்டுத் தளராத உடம்பும் எடுப்பான பார்வையும் உடையவராக இருந்தார். அவருடன் சில மாணாக்கர் இருந்து பணிவிடை செய்து வந்தனர். சித்த வைத்தியராகிய அவர் தம்மைத் தேடி வந்தவர்களுக்கு மருந்து கொடுத்து நோய்களை நீக்கி வந்தார்.

    நான் அவரிடம் திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையைப் பற்றி விசாரித்தேன். நல்ல வேளையாக அந்த வித்துவானைத் தமக்குத் தெரியுமென்றும், அவருக்குப் பிள்ளைகள் இல்லையென்றும், அவருடைய ஏட்டுப் பிரதிகளெல்லாம் மந்தைவெளியிலுள்ள அண்ணாசாமி உபாத்தியாயர் வீட்டில் ஒருகால் கிடைக்கலாமென்றும் அந்தப் பெரியார் கூறினார். மந்தைவெளி சென்று அண்ணாசாமி உபாத்தியார் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். அண்ணாசாமி உபாத்தியாயர் காலமாகிவிட்டமையால் அவர் மாப்பிள்ளையையே நான் பார்க்க முடிந்தது. அவருடைய சமயம் அறிந்து தக்க மனிதர்களுடன் போய்க் கேட்டபொழுது தம் வீட்டிலிருந்த சுவடிகளையெல்லாம் எடுத்துப் போட்டார். அவற்றில் அபூர்த்தியாக இருந்த பத்துப்பாட்டு உரைப் பிரதி கிடைத்தது. திருமுருகாற்றுப்படை உரைப் பிரதி ஒன்றும் இருந்தது. அவற்றையும் வேறு சில சிறு நூல்களையும் எடுத்துக் கொண்டேன். பதினெண் கீழ்க்கணக்கு முழுவதும் உள்ள சிதிலமான பிரதி ஒன்று கிடைத்தது அதில்தான் கைந்நிலை என்ற நூல் இருந்தது.

    பிறகு தபால் இலாகா ஸூபரிண்டெண்டாக இருந்த வி. கனகசபைப் பிள்ளையிடமிருந்து பத்துப்பாட்டு உரைப் பிரதியொன்று கிடைத்தது. இவற்றையெல்லாம் உபயோகப்படுத்திக் கொண்டேன்.

    பதிப்பு ஆரம்பம்

    பத்துப் பாட்டு அச்சிட ஆரம்பித்தேன். மிக விரைவாக வேலை நடைபெற்று வந்தது. திருமானூர்க் கிருஷ்ணையர் இடை விடாமல் உடனிருந்து உதவி புரிந்தார். ஓய்ந்த நேரங்களில் எல்லாம் தேரழுந்தூர் இராஜகோபாலாசாரியரும் வந்து துணை செய்வார்.

    பூண்டி அரங்கநாத முதலியார் சல்லாபம்

    பூண்டி அரங்கநாத முதலியாரிடம் அடிக்கடி சென்று பேசிப் பழகினேன். இந்த முறை அவரது பழக்கம் பின்னும் அதிகமாயிற்று. அவரிடம் போனால் தமிழ்ப் பாட்டுச் சொல்லுவதும் தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பேசுவதுமாகவே பொழுது போகும். நேரம் போவது தெரியாமல் உணவையும் மறந்து பேசிக்கொண்டிருப்போம்.

    அக்காலத்தில் முதலியார் ‘கச்சிக் கலம்பகம்’ என்ற ஒரு பிரபந்தத்தை இயற்றிக் கொண்டிருந்தார். ஆதலின் கலம்பகங்களின் இலக்கணத்தைப் பற்றி நாங்கள் அதிகமாகப் பேசுவோம். நான் பிள்ளையவர்கள் இயற்றிய கலம்பகங்களிலிருந்தும் அவரிடம் பாடம் கேட்ட கலம்பகங்களிலிருந்தும் பல செய்யுட்களைச் சொல்வேன். பாட்டில் இன்னது சாரமான பாகமென்று விரைவில் அறிந்து சந்தோஷிக்கும் சக்தி அரங்கநாத முதலியாரிடம் மிக அதிகமாக இருந்தது. அவர் ஏகசந்தக் கிராகி. அவர் பாடல்களை முக மலர்ச்சியோடு கேட்பதும், கேட்கும்போது தம் மனம் முழுவதையும் அந்தப் பாடற் பொருளிலே செலுத்துவதும், அங்கங்கே நயம் காணும்போது மகிழ்வதும். அந்த மகிழ்ச்சியை வெளிப்படையாகப் புலப்படுத்துவதும் அவரோடு பழகும் நேரத்தை இன்பமயமாக்கின. “உங்களைப் போன்றவர்கள் இந்த ஊரில் இருந்தால் நன்றாகப் பொழுது போகும்” என்று அவர் அடிக்கடி சொல்வார்.

    காலேஜ் விடுமுறை முற்றும் முடிந்தமையால் ஜனவரி மாதம் கும்பகோணம் புறப்பட வேண்டியவனாக இருந்தேன். ஆகவே அச்சுக்கூடத்தில் வேலை தடைப்படாமல் நடைபெறும்படி ஏற்பாடு செய்து திருமானூர்க் கிருஷ்ணையரைச் சென்னையிலேயே வைத்து விட்டு நான் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று நாள் விடுமுறை கிடைத்தாலும் சென்னைக்குப் போய்த் தங்கிப் பத்துப் பாட்டுப் பதிப்பைக் கவனித்து விட்டு வருவேன். அக்காலத்தில் புரசைப்பாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும், பிறகு தொழுவூர் வேலாயுத முதலியாரும் காலமாயினமை தெரிந்து மிக வருந்தினேன்.

    சென்னை உத்தியோகத்தை மறுத்தது

    பூண்டி அரங்கநாத முதலியார் அடிக்கடி எனக்குக்கடிதம் எழுதலாயினர். வசனமாகவும் செய்யுளாகவும் கடிதங்கள் வந்து சென்றன. ஒரு சமயம் அவர் எனக்கு, “தாங்கள் சென்னையிலுள்ள பிரஸிடென்ஸி காலேஜு க்கு வந்தால் உங்கள் பதிப்பு வேலைகள் நன்றாக நடைபெறும். நல்ல சௌகரியங்களும் கிடைக்கும். எனக்கும் திருப்தியாக இருக்கும். உங்கள் சம்மதத்தைத் தெரிவித்தால் அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்வேன்” என்று எழுதியிருந்தார். முதலியாருக்குச் சென்னையிலிருந்த செல்வாக்கை நான் நன்றாக அறிந்தவன். அவர் மனம் வைத்தால் மிக எளிதில் என்னைப் பிரஸிடென்ஸி காலேஜு க்கு மாற்றும்படி செய்து விடுவார். எனக்கும் சென்னைக்குச் செல்வதில் விருப்பம் இருந்து வந்தது. நான் மேற் கொண்டிருக்கும் தமிழ் நூற்பதிப்புக்குச் சென்னை வாசம் எவ்வளவோ உதவியாக இருக்கும். கும்பகோணத்தில் இருந்தபடியே சென்னையில் பதிப்பை விரைவில் நடத்த முடியவில்லை. ஆதலின், “இறைவன் திருவருள் அரங்கநாத முதலியார் மூலம் தூண்டுகிறது” என்றுதான் முதலில் எண்ணினேன். திருவாவடுதுறைப் பழக்கம் விட்டுப் போகுமே என்ற நினைவு வந்து அந்த எண்ணத்தை மாற்றியது. சுப்பிரமணிய தேசிகர் என்னைக் கும்பகோணத்துக்கு அனுப்பியபோது, “இப்படியே பட்டணத்துக்கும் போய் மகாலிங்கையர், விசாகப் பெருமாளையர் ஆகியவர்கள் இருந்த இடத்திலும் இருந்து விளங்கவேண்டும்” என்று அன்போடு வாழ்த்தியது என் உள்ளத்தில அப்போது தோற்றியது. ‘பெரியார் அன்போடு கூறியது பலிக்கலாம். அது பலிக்கும் காலமும் இதுவாக இருக்கலாம்’ என்று நினைத்தேன். அரங்கநாத முதலியார் எழுதிய கடிதத்தை என் தந்தையாருக்குப் படித்துக் காட்டினேன். அவர், “நல்லதுதான். ஆனால் இங்கே கிடைக்கும் காவேரி ஸ்நானம் அங்கே ஏது? நான் ரெயில் வண்டியில் ஏறுவது இல்லையே. விருத்தாப்பிய காலத்தில் காவேரி தீரத்தை விட்டுப் போக மனம் இடம் கொடுக்கவில்லையே!” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் பல விதமாகத் தோற்றிய என் யோசனைகளை மாற்றின. நான் ஒரு முடிவுக்கு வந்தேன். “என் தந்தையாரது முதுமைப் பிராயத்தைக் கருதி இங்கே இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது” என்று முதலியாருக்கு எழுதி விட்டேன். இது 1889 ஆம் வருஷம் மார்ச்சு மாத ஆரம்பத்தில் நிகழ்ந்தது.

    ஏப்ரல் மாத விடுமுறையில் நான் சென்னை சென்றபோது என் தந்தையார் கருத்தை முதலியாருக்கு விளக்கமாகச் சொன்னேன். அவர் ஒப்புக் கொண்டார். அந்த முறை அரங்கநாத முதலியார் தாம் இயற்றிய கச்சிக்கலம்பகச் செய்யுட்களை எனக்குக் காட்டினார். நான் பார்த்து எனக்குத் தோற்றிய அபிப்பிராயங்களை சொன்னேன். அவர் மிக்க திருப்தியோடு ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் திருவனந்தபுரம் காலேஜ் புரொபஸர் சுந்தரம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினேன். அவர் தாம் இயற்றிய மனோன்மணீயமென்னும் நாடகத்திற் பல பகுதிகளைக் காஸ்மொபாலிடன் கிளப்பில் அரங்கநாத முதலியாரிடமும் என்னிடமும் படித்துக் காட்டினார்.

    பதிப்பு நிறைவேறியது

    பத்துப் பாட்டின் பெருமையை உணர்ந்த இராஜகோபாலாசாரியார் அதிலுள்ள அரும் பதங்களையும், அருந் தொடர்களையும் தொகுத்து அகராதியாக வெளியிடலாமென்று சொல்லி அகராதி செய்யக் கருவியாகவுள்ள பெட்டி ஒன்றைக் கொணர்ந்து அகராதி செய்யும் முறையைக் காட்டினார். மிகவும் சுலபமாக அகராதி முடிந்ததைப் பார்த்து அந்தப் பெட்டியைப்போல இரண்டு செய்து வைத்துக்கொண்டேன். அது முதல் அகராதி செய்வதென்பது சிறிதும் சிரமமில்லாத காரியமாகி விட்டது.

    இறைவன் திருவருளால் 1889-ஆம் வருஷம் ஜூன் மாதத்தில் பத்துப் பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. ஆறே மாதத்தில் அந்த நூல் பூர்த்தியானது பற்றி எனக்கு உண்டான திருப்திக்கு அளவில்லை.
    ----------

    அத்தியாயம்-109
    சிலப்பதிகார ஆராய்ச்சி

    பத்துப் பாட்டின் பதிப்பில் ஆரம்பத்தில் முகவுரையும் அப்பால் நூலின் மூலமும் நச்சினார்க்கினியருரையும் உரைச்சிறப்புப் பாயிரமும் அரும்பத விளக்கம் அருந்தொடர் விளக்கம் பிழை திருத்தம் என்பனவும் இருந்தன.

    பத்துப் பாட்டு முகவுரை

    முகவுரையில் பத்துப் பாட்டின் பொதுச் சிறப்பையும், ஒவ்வொரு பாட்டின் வரலாற்றையும், ஏடுதேடிய விவரத்தையும், உதவி செய்தோர் பெயர்களையும் எழுதினேன். அடுத்தபடியாகச் சிலப்பதிகாரம் வெளியிட எண்ணியதை, “இக்காலத்தே மிக அருகி வழங்குகிற பழைய நூல் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வெளியிட மிக்க விருப்பமுடையனேனும் சீவகசிந்தாமணி அச்சிட்டுநிறைவேறிய காலமுதல் கொழும்பு நகரத்துப் பிரபு சிகாமணியும், செந்தமிழ்ப் பாஷாபிமானியுமாகிய ம-¥ -¥-ஸ்ரீ பொ. குமாரசுவாமி முதலியாரவர்கள், ஐந்து காப்பியங்களுள் இரண்டாவதாகிய சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லாருரையுடன் பதிப்பித்துப் பிரகடனம் செய்ய வேண்டுமென்றும். அந்தச் செலவைத் தாம் கொடுப்பதாகவும் அடிக்கடி அன்போடு எழுதியனுப்புதலால், முந்தி அந்நூலை அவ்வுரையுடன் பதிப்பிக்க நிச்சயித்திருக்கிறேன்’ என்று புலப்படுத்தினேன்.

    சிந்தாமணி, பத்துப்பாட்டு என்னும் நூல்களின் உரையினால் நச்சினார்க்கினியரது பரந்த நூற் பயிற்சி எனக்குத் தெரிய வந்தது. அவருடைய உரை இல்லாவிடின் பல அரிய செய்திகள் புலப்பட வழியே இல்லை. கலித்தொகை உரையும், தொல்காப்பிய உரைகளும் அவ்வுரையாசிரியரின் பெருமையைப் பின்னும் நன்றாக விளக்கின.

    நூலின்பெருமையை யாவரும் உணரும்படி செய்யும் உபகாரிகள் உரையாசிரியர்கள். நச்சினார்க்கினியர் உரையினால் அவருக்குப் பழைய நூலாசிரியர்களிடத்தும் நூல்களிடத்தும் உள்ள பேரன்பும் பிற்காலத்தார் செய்யும் மாற்றங்களில் உள்ள வெறுப்பும் தெரிய வந்தன. தமிழ் வளர்த்த மகோபகாரிகளில் அவர் ஒருவரென்பதே என் கருத்து. பத்துப்பாட்டுப் பதிப்பில் அவர் வரலாற்றைத் தனியே எழுதவில்லை. ஆயினும் அவர் மீது ஒரு துதி கவி பாடி முகவுரையின் ஈற்றில் அதை்தேன். அது வருமாறு:-

      “எவனால வாயினிடை யமுதவா புடையனென
            இயம்பப் பெற்றோன்
      எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை
            எழுதி யீந்தோன்
      எவன்பரம வுபகாரியெவனச்சி னார்க்கினியன்
            எனும்பே ராளன்
      அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென
            தகத்து மன்னோ”

    ஒருவாறு இறைவன் திருவருளால் நிறைவேறிய பத்துப் பாட்டோ தமிழ் நாட்டினருடைய பாராட்டைப் பெற்றது. பல அரிய சரித்திரச் செய்திகளும் பண்டைக்காலத் தமிழ் மக்களின் நாகரிக நிலையும் அதனால் தெரிய வந்தன. “பத்துப் பாட்டினைக் கொண்டு பலவகை ஆராய்ச்சிகளைச் செய்யலாம்” என்று அறிஞர்கள் கொண்டாடினர்.

    சிறு நூல்கள்

    அந்நூல் அச்சாகி வந்தபோது ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது என்னும் பிரபந்தத்தின் மூலத்தையும், மாயூரம் ராமையார் இயற்றிய மயிலை யந்தாதி என்பதன் மூலத்தையும் பதிப்பித்து வெளியிட்டேன்.

    பத்துப்பாட்டைப் பெற்ற அன்பர்கள் மிக்க மகிழ்ச்சியை அடைந்து பாராட்டுக் கடிதங்கள் எழுதி எனக்கு ஊக்கத்தை அளித்தனர். அது முதல் சிலப்பதிகார ஆராய்ச்சியில் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தேன்.

    கச்சிக் கலம்பக அரங்கேற்றம்

    அப்போது பூண்டி அரங்கநாத முதலியார் தாம்இயற்றிய கச்சிக் கலம்பகத்தை அச்சிட்டு முடித்துச் சில பண்டிதர்களைக் கொண்டு சென்னைத் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் கலாசாலையில் அரங்கேற்றச் செய்தனர். நானும் வந்து சில பாடல்களை அரங்கேற்ற வேண்டு மென்று அவர் எனக்கு எழுதியமையால் 1889 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஒரு முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் சென்னை சென்று சில நாள் தங்கி அக்கலம்பகத்தின் சில செய்யுட்களை அரங்கேற்றி வந்தேன். அந்த அரங்கேற்றம் நடை பெற்ற காலத்தில் அதைக் கேட்க நூற்றுக் கணக்கான ஜனங்கள் கூடினர். நான் படித்திருந்த பிரபந்தங்களும் வேறு நூல்களும் அப்போது மிகவும் பயன்பட்டன. அரங்கநாத முதலியாருடைய பழக்கம் பின்னும் வன்மையடைந்ததோடு தமிழபிமானிகள் பலருடைய பழக்கம் புதிதாக ஏற்பட்டது. அரங்கநாத முதலியாருடைய செல்வாக்கும் அரங்கேற்றப் பிரசங்கமும் சேர்ந்து எனக்குப் பல வகை நன்மைகளை உண்டாக்கின.

    பத்துப் பாட்டுப் பதிப்புக்குச் சென்னையிலிருந்து உதவி செய்து வந்த கிருஷ்ணையர் அப்பதிப்பு முடிந்தவுடன் வேலூருக்குச் சென்று சிலகாலம் இருந்தார். பிறகு சிறுவயல் சென்று அவ்விடத்து ஜமீன்தாராகிய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவருடைய ஆதரவில் அவருக்கு நல்ல தமிழ் நூல்களைப் படித்துக் காட்டிக் கொண்டு அரண்மனை வித்துவானாக இருந்து வந்தார். அங்கே இருந்தபோதும் எனக்காகப் புறநானூறு முதலிய நூல்களைப் பிரதி செய்து அனுப்பினார்.

    தண்டபாணி விருத்தம் முதலியன

    கொழும்புத் துறையிலிருந்த அன்பராகிய தி. குமாரசாமி செட்டியாரென்பவர் அடிக்கடி எனக்குத் தம் அன்பு புலப்படக் கடிதம் எழுதி வந்தார். விநாயக புராணத்தை அச்சிட வேண்டுமென்று பல முறை எழுதினார். திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகரும் அதனை அச்சிட வேண்டுமென்று என்னிடம் அடிக்கடி சொன்னதுண்டு. அந்நூலைச் சில முறை ஆராய்ந்தேன் பதிப்பிக்கலாமென்று எண்ணியும் அதனை நிறைவேற்றும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

    கொழும்புத் துறையைச் சார்ந்த இலந்தை நகரென்னுமிடத்தில் ஓராலயம் நிறுவி அதன் கண் தண்டபாணியைப் பிரதிஷ்டை செய்து உத்ஸவ விக்கிரகம் முதலியவற்றையும் குமாரசாமி செட்டியார் அமைத்தார். அவ்விரு மூர்த்திகளின் விஷயமாகச் சில செய்யுட்களை இயற்றித்தர வேண்டுமென்று விரும்பி எனக்கு எழுதினார். அவர் விருப்பப்படியே தண்டபாணி விஷயமாகப் பத்து விருத்தங்களும் உத்ஸவ மூர்த்தியாகிய ஸ்ரீ முத்துக்குமாரர் விஷயமாக ஓர் ஊசலும் எச்சரிக்கையும் ஐந்து கீர்த்தனங்களும் இயற்றினேன்.

      “சேதிப் பரிய தவவொழுக்கச் செல்வம் வாய்ந்த குறுமுனிக்குச்
            செவ்வே தமிழி னிலக்கணத்தைச் செப்பி யருளி யொப்பில்லா
      ஆதிச் சங்கத் திடைமேய வதனா லெம்மான் றமிழ்ப்பரம
            ஆசா னென்ப தறிந்தடைந்தே னகற்றா தளித்த னின்கடனே
      சாதிப் பைம்பொற் றருவாதி தழைப்ப வொருமாப் பெருமுதலைத் தோய்
            தடிந்தே யரிமுன் னோர்துயரந் தணப்ப வரிமா முகற்றொலைத்
      தாதிற் பொலிபூஞ் சோலைகளுஞ் சலச மலர்நீர் வாவிகளுந்
            தழைக்கும் வளமா ரிலந்தைநகர்த் தண்டபாணிப் பெருமானே”

    என்ற செய்யுளால் தமிழ் நினைவு என் உள்ளத்தில் மீதூர்ந்து நின்றமை வெளிப்பட்டது.

    கீர்த்தனங்களை இயற்றுவதற்குச் சங்கீதப் போக்கு நன்றாகத் தெரிய வேண்டுமென்று கோபால கிருஷ்ண பாரதியாரும் வையை இராமசாமி ஐயரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல்லவிக்கும் அநுபல்லவிக்கும் உள்ள இயைபு, சரணங்களின் பொருளும் பல்லவியின் பொருளும் தொடர்ந்து நிற்றல், சரணங்களில் முடுக்கு அமைய வேண்டிய முறை முதலிய செய்திகளை அவர்கள் மூலமாகவும் அனுபவத்தினாலும் அறிந்திருந்த எனக்கு அனுபவத்தினாலும் அறிந்திருந்த எனக்கு அவற்றை அமைத்துக் கீர்த்தனங்கள் இயற்றும் சந்தர்ப்பம் அப்போது வாய்த்தது. சுருட்டி, சகானா, செஞ்சுருட்டி, துஜாவந்தி என்னும் ராகங்களில் கீர்த்தனங்களை இயற்றினேன்.

    துஜாவந்தியில் அமைந்த கீர்த்தனத்தில் ஒரு பகுதி வருமாறு:-

      பல்லவி

      உனைமற வாத ஒருவரம்அடியேனுக்
      குவந்தருள் புரிந்திடு வாயே

      அநுபல்லவி

      நனைமலர்ப் பொழிற்செந்தில் நகரி லெழுந்தருளி
      நம்பு மடியவர்க் கின்ப மருள்புரி
      நாத பரசுக போத வனுதினம் (உனை)

      சரணம்

      உலவும் பசுமயிலு முனது திருவுருவும்
            ஒழிவின்றி நினைப்பதெந் நாளோ-துன்பம்
      பலவும் புரியுமைந்து புலனுக்கு யான்றொண்டு
            பண்ணிச் செலுமடிமை யாளோ-வளம்
      குலவும் பரங்கிரித் தேனே-சுர
            குலங்களைக் காத்தருள் வோனே-எங்கும்
      நிலவும் பரம்பொருள் நீயென் றறிந்ததொண்டர்
            நிறைந்த பழனியில் உறைந்த குருபர
            நீப மணிந்தப்ர தாப சுரவர (உனை)

    கீர்த்தனங்களை எல்லாம் என் தகப்பனாரிடம் படித்துக் காட்டி அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றேன். குமாரசாமி செட்டியார், செய்யுட்களையும், கீர்த்தனங்களையும் பெற்று மிக்க ஆனந்தமடைந்தார். பிறகு அவை 1891-ஆம் வருஷத்தில் கும்பகோணத்திலேயே என்னால் அச்சிடப்பட்டன.

    மதிப்புரைகள்

    பத்துப்பாட்டைப்பெற்ற பாலைக்காட்டு முனிஸிபல் சேர்மன் ராவ்பகதூர் பா. ஐ. சின்னசாமி பிள்ளை அந் நூலைப்பற்றி மிக விரிவாக, ‘ஹிஸ்டாரிக்ஸ்’ என்னும் புனைபெயரோடு சென்னை ‘ஹிந்து’ பத்திரிகையில் ஒரு மதிப்புரை எழுதினார். அது 13-3-1890 ல் வெளி வந்தது. திருவனந்தபுரம் புரொபஸர் பி. சுந்தரம் பிள்ளை சென்னைக் கிறிஸ்டின் காலேஜ் பத்திரிகையில் ஒரு மதிப்புரை எழுதினார். இவற்றால் தமிழன்பர்களுக்குப் பத்துப் பாட்டினிடம் மதிப்பு உண்டாயிற்று. பலர் மேலும்மேலும் அத்தகைய பண்டைத் தமிழ் நூல்களை வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தி எழுதலாயினர். அன்பர்களுடைய பாராட்டினால் உண்டான சந்தோஷத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சியைத் தொடங்கியமையால் மனம் மிக வேகமாகச் சென்றது. ஆனால் ஏட்டுப்பிரதிகள் அவ்வூக்கத்துக்கு அனுகூலமாக இல்லை முதல் முதலாக எனக்குச் சேலம் இராமசுவாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையுமடங்கிய கடிதப் பிரதி ஒன்று கொடுத்தார். அதன் பின்பு பிள்ளையவர்களுடைய மூலப் பிரதி ஒன்றும் உரைப் பிரதி ஒன்றும் கிடைத்தன. தியாகராச செட்டியார் வைத்திருந்த பிரதி ஒன்று என்னிடம் இருந்தது. இவற்றோடு வேறு சில பிரதிகளும் வைத்திருந்தேன். இவ்வளவு இருந்தும் என் ஆராய்ச்சி தடைப்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன.

    சிலப்பதிகார உரைகள்

    கிடைத்த ஏடுகள் அவ்வளவையும் சோதித்துப் பார்த்தேன். அடியார்க்கு நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது. இயலிசை நாடகம் என்னும் முத்தமிழிலுமுள்ள பல நூல்களையும் மணியிலக்கணம், யோகம் முதலிய கலை நூல்களையும் அவர் அங்கங்கே மேற்கோள் காட்டுகிறார். நச்சினார்க்கினியரிடம் காணப்படாத ஒரு நல்ல குணத்தை அடியார்க்கு நல்லாரிடம் கண்டேன். மேற்கோள் காட்டும் நூலின் பெயரையும், சில இடங்களில் அதைப் பற்றிய வரலாற்றையும் அவர் எடுத்துச் சொல்லுகிறார். சீவகசிந்தாமணி உரையிலும் பத்துப் பாட்டு உரையிலும் ‘என்றார் பிறரும்’ என் பதைக் கண்டு அந்தப் பிறர் யாரென்று தேடித் தேடி ஆராய்ந்து கிடைத்தவற்றைத் தெரிந்து கொள்வதற்காக நான் பட்ட சிரமம் இவ்வளவென்று சொல்ல முடியாது. அந்தச்சிரமத்தை அடியார்க்கு நல்லார் வைக்கவில்லை. இந்தப் பெரிய உபகாரத்தின் அருமையை ஆராய்ச்சி செய்வோர் நன்கு அறிவர்.

    சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகள் உள்ளன. அவற்றுள் ஏழாவதாகிய கானல் வரிக்கும், இருபதாவது பிரிவாகிய வழக்குரை காதை முதலிய பதினொன்றுக்கும் அடியார்க்கு நல்லார் உரை கிடைக்க வில்லை. சிலப்பதிகாரம் முழுவதற்கும் அரும்பதவுரை ஒன்று உண்டு. அதன் பிரதி ஒன்றை என் நண்பர் தேரழுந்தூர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியர் கொடுத்தார். அது மிகவும் பழுதுபட்டிருந்தது. அடியார்க்கு நல்லாருரைக்கு அது முற்பட்ட தென்று எனக்குச் சில குறிப்புக்களால் தெரிய வந்தது. ஆனாலும் என்பாலிருந்த அப்பிரதியைக் கொண்டு நூற்பொருளைத் தெரிந்து கொள்வது மிகவும் அரிய செயலாக இருந்தது. அடியார்க்கு நல்லார் உரையில் சில இடங்கள் நன்கு விளங்குவதற்கு அரும்பதவுரைக் குறிப்புக்கள் நன்கு உதவின.

    உரையிற் குறை

    அடியார்க்கு நல்லார் தம்உரையில் ஓரிடத்தில், ‘கானல் வரியில் விரியக் கூறுவம்’ என்றும், கானல் வரியின் பின் ஓரிடத்தில் ‘முன்னர் ஆணி யென்பதனுட் கூறினாம்’ என்றும் எழுதியிருக்கிறார். இவற்றைப் பார்த்த போது அவர் கானல்வரிக்கு உரை எழுதியிருக்கிறாரென்பது நிச்சயமாயிற்று. வேறிடங்களில் அழற்படுகாதைக் கண்ணே விரித்துக் கூறுதும், ‘கட்டுரை காதையுள் விரியக் கூறுவாம்’ என்றும் எழுதியிருத்தலால் பின்னுள்ள காதைகளுக்கும் உரை எழுதியிருக்கக் கூடுமென்று தோற்றியது. ஆகவே மீண்டும் தமிழ்ச் சுவடிகள் தேடும் யாத்திரையை மேற்கொண்டு சிலப்பதிகாரப் பிரதிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.

    உரையிலுள்ள குறை ஒரு பால் இருப்ப, அதன் கண் வரும் இசை நாடகப் பகுதிகள் இக்காலத்தில் வழங்காதனவாக இருந்தன. அவற்றைச் செப்பஞ் செய்வதற்கு நெடுங் காலம் ஆகுமென்றஞ்சினேன். ‘எதைத் தொட்டாலும் சிரமத்தின் மேற் சிரமமாக இருக்கிறதே’ என்ற எண்ணம் உண்டாயிற்று.

    அன்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்

    அது காறும் தேடாத இடங்களுக்குப் போய்ப் பார்க்கலாமென்ற நினைவு உண்டாகவே, “சேலத்தைச் சார்ந்த இடங்களில் தமிழ்ச் சுவடிகள் கிடைக்கலாம். சிலப்பதிகாரத்தின் பிற்பகுதிக்கு உரை கிடைக்க வில்லை. தஞ்சை வாணன் கோவைக்கு உரைஎழுதிய சொக்கப்ப நாவலர் முதலிய புலவர்கள் சேலத்தில் இருந்ததாகக் கேள்வி. அவர்கள் பரம்பரையினர் இருந்தால் தெரிவிக்க வேண்டு கிறேன். அங்கே தேடிப் பார்த்தால் எவையேனும் கிடைக்கலாம். தங்கள் உதவி வேண்டும்” என்று சேலம் இராம சுவாமி முதலியாருக்கு எழுதினேன்.

    குன்றக்குடி மடத்தில் முக்கியமான காரியஸ்தராக இருந்த அப்பாப் பிள்ளை என்பவருக்குச் சிவகங்கையைச் சார்ந்த இடங்களில் தமிழ் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கக் கூடுமென்றும், இருக்கும் இடம் தெரிந்தால் நான் வந்து பார்ப்பேனென்றும் எழுதினேன்.

    அக்காலத்தில் பொ. குமாரசாமி முதலியார் தம்முடைய குமாரரைப் படிப்பிக்கும் பொருட்டு லண்டனுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் எனக்குக் கடிதம் எழுதினார். அங்கே சில காலம் இருந்து பிரான்சு, ஜெர்மனி முதலிய தேசங்களைப் பார்த்துக் கொண்ட வர உத்தேசித்திருப்பதாகவும் அங்கே பல சிறந்த புத்தக சாலைகள் உண்டென்றும் இந்தியாவிலிருந்த சென்ற பல ஏட்டுச் சுவடிகள் அவற்றிலுள்ளனவென்று தெரிவதாகவும் அவர் அதில் தெரிவித்தார் நான் உடனே சிலப்பதிகாரம் இருக்கிறதா என்று ஆராயவேண்டு மென்று பதில் எழுதினேன்.

    சேலம் இராமசுவாமி முதலியாரிடமிருந்து அனுகூலமானவிடை வந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலப்பதிகார நூல் சம்பந்தமான யாத்திரையைத் தொடங்கிச் சேலத்துக்குப் புறப்பட்டேன்.
    --------------

    அத்தியாயம்-110
    பயனற்ற பிரயாணம்

    சேலத்துக்குப் புறப்பட்டுச் செல்லுகையில் திருச்சிராப் பள்ளியில் இறங்கி அங்கே சில இடங்களில் ஏடு தேடலானேன். திரு. பட்டாபிராம பிள்ளையின் உதவியால் சிலவித்துவான்களுடைய வீடுகளுக்குச் சென்று பார்த்தேன். எஸ். பி. ஜி . காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த அண்ணாசாமிபிள்ளை என்பவரிடத்தில் புறத்திரட்டும் வீர சோழிய உரைப் பிரதியும் இருந்தன. வீர சோழியச் சுவடியில் அச்சுப் புத்தகத்தில் இல்லாத சில பகுதிகள் காணப் பட்டன.

    புறத்திரட்டு

    முதலில் ஏடு தேடுகையில் அச்சிட்ட புத்தகங்களின் ஏடுகளாக இருந்தால் அவற்றை அதிகமாகக் கவனிப்பதில்லை. நாளடைவில் செய்து வந்த ஆராய்ச்சியால் அச்சிட்ட புத்தகங்களிலுள்ள பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கும், நல்ல பாடங்களைத் தெரிந்து கொள்ளுவதற்கும் ஏட்டுப் பிரதிகள் மிக்க உதவியாக இருப்பதை உணர்ந்தேன். ஆதலின் அது முதல் அச்சிட்டவற்றின் ஏட்டுப் பிரதிகள் கிடைக்குமேல் அவற்றையும் பொன்னேபோலப் போற்றி ஆராய்ச்சி செய்யும் வழக்கத்தை மேற்கொண்டேன். அண்ணாசாமி பிள்ளையிடமிருந்து அப்போது புறத்திரட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டேன்.

    வரகனேரி

    அப்பால் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த வரகனேரியில் பிள்ளை யவர்களுடைய மாணாக்கராகிய சவரிமுத்தாபிள்ளை யென்னும் கனவானது வீட்டுக்குப் போனேன். கிறிஸ்தவராக இருந்தாலும் அவர் பல சைவப் பிரபந்தங்களையும் புராணங்களையும் சாஸ்திரங்களையும் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையும் சேகரித்து வைத்திருந்தார். அவற்றில் எனக்கு வேண்டிய சிலவற்றைப் பெற்றுக் கொண்டேன். நேஷனல் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஆறுமுக நயினாரென்பவரிடம் சில ஏடுகள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிற் சிலவற்றைக் கண்டேன். இன்னும் சில இடங்களையும் பார்த்தேன். ஓரிடத்திலும் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கவே இல்லை. திரிசிரபுரத்துக்கருகேயுள்ள ஒரு பேட்டையில் இருந்த வித்துவான் சுப்பிரமணிய ஐயரிடமிருந்த சில அருமையான பிரபந்தங்கள் முதலியவை கிடைத்தன.

    திருச்சிராப்பள்ளியிலிருந்து குழித்தலை சென்று அதன் அருகிலுள்ள ஊர்களில் ஏடுகளைத் தேடினேன். எனக்கு உதவியாக ஒன்றும் கிடைக்கவில்லை. அப்படியே சேலத்தை அடைந்தேன்.

    சேலம்

    சேலம் இராமசுவாமி முதலியாருடைய உதவியால் என் முயற்சி எளிதில் நிறைவேறுமென்று மகிழ்ந்தேன். சொக்கப்ப நாவலருடைய பரம்பரையினர் யார் இருக்கிறார்களென்று விசாரித்தபோது சபாபதி முதலியாரென்று ஒருவர் இருந்தது தெரிந்தது. அவர் வீடு தேடிச் சென்றேன். நான் எதிர்பார்த்தபடியே அங்கே பல பழைய ஏட்டுப் பிரதிகள் இருந்தன. மிக்க வேகத்தோடு அவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். பெரும்பாலான ஏட்டுச் சுவடிகள் பழுது பட்டும், குறைந்தும், ஒடிந்தும், இடையிடையே முறிந்தும், மிகவும் சிதிலமுற்றும் காணப்பட்டன. அவற்றில் எனக்கு வேண்டியதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கம்ப ராமாயணம் ஏழு காண்டமும் தனித் தனியே உள்ள ஏழு பிரதிகள் கிடைத்தன. சேலத்தைச் சார்ந்த சூரமங்கலத்தில் ஆறுமுகம் பிள்ளை என்ற சித்த வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் கணக்கில்லாத ஏட்டுச் சுவடிகள் உள்ளன என்று கேள்வியுற்று அங்கே போய்ப் பார்த்தேன். ஆறுமுகம் பிள்ளை சுறுசுறுப்பாக இருந்தார். முகத்தில் நல்ல தெளிவு இருந்தது. “உங்கள் பிராயம் என்ன?” என்று நான் கேட்டேன். 97 என்றார். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். அதிகமாகப் போனால் அறுபது பிராயம் இருக்கலாமென்றுதான் மதிப்பிடும்படி இருந்தது அவர் தோற்றம், “இவர் மற்றவர் உடம்பை மாத்திரம் பாதுகாப்பவரல்லர்; தம் உடம்பையும் பாதுகாத்துக் கொள்பவர்” என்று எண்ணிக் கொண்டேன்.

    அகத்தியர் நூல்

    அவர் தம் வீட்டில் தனியே ஓர் அறையில் ஏட்டுச் சுவடிகளை ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தார். உள்ளே புகுந்த போது ஐந்நூறுக்குக் குறையாத ஏடுகள் இருக்கலாமென்று தெரிந்தது. “இவற்றில் பழைய சுவடிகள் என்ன என்ன இருக்கின்றன?” என்று கேட்டேன்.

    “எல்லாம் பழைய சுவடிகளே; அகஸ்தியர் இயற்றிய நூல்கள் முதற் கொண்டு எல்லாம் இருக்கின்றன” என்றார்.

    அகஸ்தியரென்றவுடன் அவர் இயற்றிய அகத்தியமென்ற பெரிய இலக்கண நூல்தான் ஞாபகம் வந்தது. “எங்கே, அந்தச் சுவடியை எடுங்கள்” என்று சொல்லி உட்கார்ந்தேன். அவர் ஏதோ ஒன்றை எடுத்துக் கொடுத்து, “எங்கள் குடும்பம் பரம்பரையாக இந்தச் சுவடிகளைக் காப்பாற்றி வருகிறது. மிகவும் அருமையான சுவடிகள் இவை. இங்கே உள்ளவற்றை வேறிடங்களிற் பார்ப்பது அரிது” என்றார்.

    நான் ஏட்டைப் பிரித்துப் பார்த்தேன். எழுத்துக்கள் மிகவும் விளக்கமாக இருந்தன. ஏட்டின் தலைப்பில் ‘அகஸ்தியர் பூரணம்’ என்பது போன்ற ஏதோ ஒரு பெயர் இருந்தது. உள்ளே புரட்டினேன். அது வைத்திய நூலாக இருந்தது. அகஸ்திகர் இயற்றியனவாக வழங்கும் பல நூல்கள் அங்கே இருந்தன எல்லாம் வைத்திய நூல்களே. சில சுவடிகளைப் பார்த்துச் சலித்தேன்.

    “இலக்கண இலக்கிய ஏடு ஒன்றும் இல்லையா?” என்று ஆறுமுகம் பிள்ளையைக் கேட்டேன்.

    அவர் இல்லையென்று சொல்லி விட்டார். நான் பேசாமல் வந்த வழியே திரும்பினேன்.

    பாகற்பட்டி

    பிறகு பாகற்பட்டி என்னும் ஊருக்குப் போய் அவ்வூர் மிட்டாதாராகிய ஸ்ரீநிவாஸ நாயகரென்பவருடைய புஸ்தகசாலையைப் பார்த்தேன். அவர் தமிழன்பு மிக்கவர். கம்ப ராமாயணத்தில் பற்றுடையவர். அவர்பால் நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டனவான கம்ப ராமாயணப் பிரதிகள் பத்து இருந்தன. போகும் இடங்களிலெல்லாம் எங்கெங்கே ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்பதை விசாரித்துக் கொண்டே இருந்தேன்.

    சிற்பச் செல்வம்

    தாரமங்கலமென்னும் ஊரில் உள்ள ஆலயத்தில் மிகவும் சிறந்த சிற்பங்கள் உள்ளனவென்றும், அங்குள்ள ஆதி சைவர்கள் வீடுகளில் பழஞ் சுவடிகள் இருக்குமென்றும் கேள்வியுற்று அங்கே போனேன். முதலில் ஆதி சைவர்களை அணுகி அவர்களிடமுள்ள ஏடுகளைக் கவனித்தேன். பெரும்பாலும் ஆகமங்களும் பத்ததிகளுமாகவே இருந்தன.

    ஆலயத்திற்குச் சென்றேன். நான் கண்ட சிற்பக் காட்சியை எழுதித் தெரிவிப்பதென்பது இயலாத காரியம். ஒவ்வொரு தூணிலும் மிகப் பெரிய சிற்ப உருவங்களைக் கண்டேன். ஒன்றைப் பார்த்து அனுபவிக்க ஒரு நாள் வேண்டும். இராமர் வாலியை எய்யும் கோலத்தை விளக்கும் சிற்பம் ஒன்று உண்டு. இராமர் உருவத்தின் அருகிற் சென்று பார்த்தால் வாலியின் உருவம் தெரிகிறது. வாலியின் உருவத்துக்கருகிலிருந்து பார்த்தால் இராமபிரான் உருவம் தெரியவில்லை. இராமர் மறைந்திருந்து வாலியை எய்தாரென்ற வரலாற்றைச் சிற்பி எவ்வளவு நன்றாக அமைத்துக் காட்டியுள்ளானென்றெண்ணி வியந்தேன். அந்த ஆலயத்துக் கெதிரில் வேறு ஒரு சிவாலயம் உண்டு. அதனுள்ளே பல லக்ஷம் பொருட் செலவு செய்தாலும் அமைப்பதற்கரிய சிற்ப உருக்கள் பல இருந்தன. எல்லாம் சிறிய அளவில் சிற்பியின் வித்தகத்தைத் திறனை நன்றாக விளக்கும் அற்புத வடிவங்களாக உள்ளன. அந்தக் கோவிலுக்கு மூங்கிற் பிளாச்சினால் செய்யப்பட்ட ஒரு கதவை அமைத்திருந்தார்கள். உள்ளே கலையழகு பொழியும் சிற்ப உருவக் களஞ்சியம் நம் முன்னோர்களின் உயர்ந்த கலைத் திறமைக்கு அடையாளமாக நிலவியது; புறத்திலோ நம் காலத்தினரது அசட்டைக்கும் வறுமைக்கும் அடையாளமாக அவலக்ஷணமான மூங்கிற் பிளாச்சுக் கதவு நின்றது. “இதற்குள்ளே என்ன இருக்கப் போகிறது?” என்ற நினைவை அந்தக் கதவு உண்டாக்கும். ஆனாலும் உண்மை தேர்பவர்கள் அதன் விகார ரூபத்ைதைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றால் அரும்பெறற் சிற்ப விலாஸத்தைக் கண்டு மகிழலாம். மூங்கிற் பிளாச்சுக் கதவைத் திறந்தபோது என் கையை அது குத்தியது; உள்ளே போய்ப் பார்த்து விட்டு வந்தபோது அது கண்ணையும் கருத்தையும் குத்தியது. இந்த நாட்டின் நிலைக்கு நான் இரங்கி வருந்தினேன்.

    அச்சிறுகோயிலுக்கருகே வட்டமான குளமொன்றைக் கண்டேன். அங்கும் பல சிற்ப வேலைகள் என் கண்ணுக்கு விருந்தாயின. என்னுடன் வந்த ஒருவர், “இதோ ஒரு வேடிக்கை காட்டுகிறேன், பாருங்கள்” என்றார். நான் கவனித்தேன். ஒரு கல்லை எடுத்து அக்குளத்தில் நேரே ஓங்கி அடித்தார். அந்த கல் உடனே எதிர்ப் பக்கத்திலடித்து அங்கிருந்து மீட்டும் எதிர்த்தடித்து இப்படியே மூன்று பக்கங்களிலும் பந்து போலடித்து மீட்டும் பழைய இடத் துக்கே திரும்பி வந்தது. “இவை யாருடைய திருப்பணி?” என்று கேட்டேன். “பழைய காலத்தில் அரசாங்க அதிகாரியாக இருந்த கட்டியப்ப முதலியாருடைய திருப்பணி” என்று அவர் கூறினார்.

    தாரமங்கலம் சென்றதில் சிலப்பதிகாரம் கிடைக்காவிட்டாலும் சிற்பச் செல்வத்தைக் கண்டு களித்த திருப்தி உண்டாயிற்று. அங்கிருந்து வேறு சில ஊர்களுக்குச் சென்று தேடியும் சிலப்பதிகாரம் கிடைக்கவில்லை. சில வீர சைவர்கள் வீட்டில் பெஸ்கி பாதிரியார் தொகுத்த சதுரகராதி என்ற நூல் ஏட்டில் எழுதப்பெற்ற பகுதிகளைக் கண்டேன். ‘வண்டி ஓரிடத்திலே; ஓடம் வண்டியிலே’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். ஏட்டுச்சுவடியிலுள்ள பழைய நூல்களை அச்சிடுவதைக் கண்டவன் நான். அச்சிலிருந்த சதுரகராதியை ஏட்டில் எழுதி வைத்திருப்பதை அன்று கண்டு நான் தமிழ் மகக்ளிடத்தில் பழைய வழக்கம் எவ்வளவு ஊறியுள்ள தென்பதை உணர்ந்தேன்.

    கரிவலம் வந்த நல்லூர்

    இந்தப் பிரயாணத்தில் ஒன்றும் அகப்படாமற் போகவே கும்பகோணம் வந்து சேர்ந்தேன். எப்படியாவது நல்ல சிலப்பதிகாரப் பிரதிகள் கிடைத்தாலொழிய எனக்குத் தூக்கமே வராதென்று தோன்றியது. மீண்டும் பாண்டி நாட்டுக்குப் போய்ச் சுவடிகளைத் தேட வேண்டுமென்று முடிவு செய்தேன். காலேஜ் வேலையோடு ஏடுதேடும் வேலையையும் வைத்துக்கொள்வது சிரமமாக இருந்தது. திருநெல்வேலிப் பக்கம் போனால் சில நாட்கள் அவகாசத்தோடு தேட வேண்டும். காலேஜ் வேலை அதற்கு இடங் கொடாமையால் ஒவ்வோரிடமாகத் தேடலாமென்றெண்ணி ஒரு முறை கரிவலம் வந்த நல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றேன். சுப்பிரமணிய தேசிகர் இருந்த காலத்தில் அவ்வூருக்கு முன்பு ஒரு முறை போயிருந்தேன். வரகுண பாண்டியருடைய ஏட்டுச் சுவடிகளெல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாகக் கேள்வியுற்றேன். அந்த நினைவினால்தான் அத்தலத்திற்கு இரண்டாமுறை போகலானேன்.

    நேரே கோயிலை அடைந்து பால்வண்ண நாதர் சந்நிதிக்குச் சென்றேன். வரகுண பாண்டியர் மிக எளிய நடையில் மனத்தை உருக்கும் வண்ணம் பாடிய பாடல்கள் தமிழன்பர்களுக்கு அப்பெருமானது நினைவை உண்டாக்கும். சந்நிதியில் நின்று,

    “முன்னைப் பிறப்பின் தவப்பயனோ முழுது மறியா மூடனிவன்
    என்னக் கருத்தில் இரங்கியோ யாதோ அறியேன் இரவு பகல்
    கன்னற் பாகிற் கோற்றேனிற் கனியிற் கனிந்த கவிபாட
    அன்னப் பழன வயற்கருவை ஆண்டா னென்னை ஆண்டதுவே”

    என்ற பாடலைச் சொல்லி, “உன்னுடைய திருவருளைத் துணையென நம்பித் தமிழ்த் தொண்டை மேற்கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கும்படி செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு சுவடிகள் எங்கே உள்ளன வென்று விசாரிக்கலானேன். தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன். வரதுங்கராம பாண்டியருக்கு வருஷந்தோறும் ஆலயச் செலவில் சிராத்தம் நடந்து வருவதாகக் கேள்வியுற்றிருந்தேன். அது நடந்து வருகிறதா என்று கேட்டேன்.

    நடந்து வருவதாக அவர் சொன்னார்.

    நான்:- வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் ஆலயத்திலே இருக்கின்றனவாமே?

    அவர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற்கூளம் மாதிரி கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

    நான்: அப்படியா! அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த இடத்திற்கு அழைத்துப் போவீர்களா?

    அவர்: அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுணபாண்டியர் இறந்த பிறகு அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் அப்போது தான் கோவிலுக்கு வந்தனவாம்.

    நான்: அது தெரியும். இப்போது அவை எங்கே இருக்கின்றன?

    அவர்: குப்பை கூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். எந்தக் காலத்துக் கணக்குச் சுருணைகளோ!

    நான்: வேறே ஏடுகள் இல்லையா?

    அவர்: எல்லாம் கலந்துதான் கிடந்தன.

    எனக்கு அவர் தாமதப்படுத்துவதனாற் கோபம் வந்தது.

    நான்: வாருங்கள் போகலாம்.

    அவர்: ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களையெல்லாம் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள்.

    எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன செய்து விட்டார்கள்?” என்று பதற்றத்துடன் கேட்டேன்.

    “பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே அப்படித்தான் செய்தார்கள்.”

    “ஹா!” என்று என்னையும் மறந்துவிட்டேன்.

    “குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று அவர் வருணித்தார். இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!’ என்று கோபம் கோபமாக வந்தது. பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!

    வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று. ‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன். நான் இரண்டு நாட்கள் தங்கிப் பார்க்கலா மென்ற விருப்பத்தோடு வந்தேன். எனக்குச் சிரமம் கொடுக்காத நிலையில் அவர்கள் செய்து விட்டார்கள். மறுபடியும் ஆலயத்துள் சென்றேன். “இந்த அக்கிரமம் இனியாகிலும் நடவாதபடி திருவுள்ளம் இரங்க வேண்டும்” என்று இறைவனிடம் முறையிட்டேன்.

      “சிந்தனை யுனக்குத் தந்தேன் திருவருளெனக்குத் தந்தாய்
      வந்தனை யுனக்குத் தந்தேன் மலரடி யெனக்குத் தந்தாய்
      பைந்துண ருனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய்
      கந்தனைப் பயந்தநாதா கருவையில் வாழுந்தேவே”

    என்று துதித்து விட்டு வெறுங்கையோடு கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

    இந்த இரண்டு பிரயாணங்களும் பயனற்ற பிரயாணமாக முடிந்தன. ‘இறைவன் திருவருள் என்று சிலப்பதிகாரத்தின் நல்ல பிரதியை நமக்குக் கிடைக்கச் செய்யுமோ’ என எண்ணியபடியே ஆராய்ச்சியை நடத்தி வந்தேன்.
    ----------------

    அத்தியாயம்-111
    பல ஊர்ப் பிரயாணங்கள்

    1890-ஆம் வருஷம் கோடை விடுமுறையில் சிலப்பதிகாரப் பிரதிகளைத் தேடுவதற்காகத் தென்பாண்டி நாட்டை நோக்கிப் புறப்பட்டேன். அங்கங்கே உள்ள கிளை மடங்களில் அதிகாரிகளுக்கு என் வரவைத் தெரிவித்து வேண்டிய உதவி புரியும்படி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் உத்தரவு அனுப்பினார்.

    திருநெல்வேலி

    முதலில் திருநெல்வேலியை அடைந்து அங்கே முன்பு பாராத இடங்களில் ஏட்டுச் சுவடிகளைத்தேட எண்ணியபோது கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை மிக்க உதவியாக இருந்தார். முந்திய தடவை தேடிய இடங்களிலேயே மீண்டும் தேடலானேன். பத்துப் பாட்டைத் தேடும்போது அந்த நூலில் மாத்திரம் கவனம் இருந்தது. இப்போது சிலப்பதிகாரத்தின் மேற் கருத்துச் சென்றது. சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டில் சிலப்பதிகார மூலப் பிரதி ஒன்றும் மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்றும் கிடைத்தன. அந்த உரைப் பிரதியில் உரை குறையாகவே இருந்தது. அப்பால் திருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டுக்கும் பிறகு பாளையங்கோட்டையில் சில இடங்களுக்கும் போய்ப் பார்த்தேன். சிலப்பதிகாரம் கிடைக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் முதலிய இடங்களுக்குச் செல்ல எண்ணினேன். பெருங்குளமென்னும் ஊரில் செங்கோல் மடம் என்ற ஆதீனமொன்று இருக்கிறதென்றும் அதன் தலைவர் தமிழ்ப் பயிற்சியுள்ளவரென்றும் தெரிந்தது. அங்கே போய்ப் பார்க்கவும் கருதினேன். என் கருத்தை யறிந்த என் நண்பராகிய வக்கீல் ஏ. கிருஷ்ணசாமி ஐயர் அந்த மடாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார்.

    ஸ்ரீவைகுண்டம்

    முதலில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கவிராயர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே எண்பது பிராயமுள்ள வைகுந்தநாதன் கவிராயரென்பவர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பல பழைய தமிழ்ப் பாடல்களைச் சொன்னார். பிறகு நான் ஏடு தேட வந்திருப்பதை அவரிடம் சொல்லி அவர் வீட்டில் உள்ள ஏடுகளைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அந்த முதியவர் சிரித்தபடியே, “இந்தக் காலத்தில் ஏட்டுச் சுவடிகளைத் தேடுபவர்களும் இருக்கிறார்களா? இங்கிலீஷ் படிப்பு வந்த பிறகு தமிழை யார் கவனிக்கிறார்கள்? தமிழ் ஏடுகளை யார் பாதுகாக்கிறார்கள்? எல்லாம் அச்சுப் புத்தகங்களாக வந்து விட்டனவே” என்றார்.

    “அச்சுப் புத்தகங்கள் எப்படி வந்தன? ஏட்டுச் சுவடிகளை உங்களைப் போன்றவர்கள் பாதுகாத்து வைத்திருந்தமையால் அவற்றைப் பார்த்து அச்சிடுகிறார்கள். உங்கள் வீட்டிலுள்ள ஏடுகளைப் பார்க்கும்படி அனுமதி செய்யவேண்டும்” என்று கேட்டேன்.

    “என்னிடம் பழைய ஏட்டுச் சுவடிகள் பல இருந்தன. என் பிள்ளைகள் இங்கிலீஷ் படித்து உத்தியோகத்துக்குப் போய் விட்டார்கள். இனிமேல் இந்த ஏடுகளை யார் காப்பாற்றப் போகிறார்களென்ற எண்ணத்தால் யார் யார் எது எதைக் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன்.”

    “நாம் அப்பொழுதே வராமற் போனோமே” என்று இரங்கினேன். கிழவர் தாம் படிப்பதற்காக வைத்திருந்த சில ஏட்டு சுவடிகளை எடுத்துக் காட்டினார். எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை.

    பெருங்குளம்

    அவரிடம் விடை பெற்றுக்கொண்டு பெருங்குளத்தை அடைந்து அங்குள்ள செங்கோல் மடத்துக்குப் போய் மடாதிபதியைக் கண்டேன். நான் போனபொழுது அவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். மிக்க அன்போடு பேசி என்னை உபசரித்தார். “தங்களுக்கு யமகந்திரிபுகளில் நல்ல தேர்ச்சியுண்டு என்று கேட்டிருக்கிறோம். சிலவற்றைச் சொல்ல வேண்டும்” என்றார். எல்லாவரையும் வசப்படுத்தும் கலையாகிய சங்கீதத்திலே இன்பம் காணும் அவர் மிகவும் சிரமப்பட்டுப் பொருள் தெரிதற்குரிய யமகந்திரிபுகளிலும் இன்பங் காணும் இயல்பினராக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அவர் விரும்பிய பொருள் என்னிடம் நிரம்ப இருந்தது. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திரிபுயமக அந்தாதிகளிலிருந்து பல பாடல்களைச் சொன்னேன். 3 எழுத்து முதல் 13 எழுத்துக்கள் வரையில் யமகமாக அமைந்த செய்யுட்களையும் அவற்றின் பொருளையும் சொன்னேன். கேட்டுக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். நான் வந்த காரியத்தை அறிந்து தம்மிடமுள்ள ஏடுகளெல்லாவற்றையும் நான் பார்க்கும்படி செய்தார். பல பிரபந்தங்களும் புராணங்களும் அச்சிட்ட நூல்களும் இருந்தன. குறுந்தொகை மூலம் ஒரு பிரதி இருந்தது.

    அன்று முழுவதும் அங்கே தங்கி அவருடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். அவ்வூரிலுள்ள ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அதன் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்தாரென்றும், அவராற் பூசிக்கப் பெற்றமையின் அவ்வூர்ச் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்னும் திருநாமம் வழங்குகிறதென்றும் அறிந்தேன். அந்தப் பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப் புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றதென்றும் அங்ஙனம் நடந்த இடம் அதுவேயென்றும் கூறி, அதற்கு அடையாளமாகச் சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும் உக்கிர பாண்டியர் வடிவமும் அமைந்துள்ள இடத்தை அவர் காட்டினார். ‘இங்கே அவர்கள் இருந்தார்களோ இல்லையோ, தமிழ்ப் புலவர்களைத் தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப் போற்றும் வழக்கம் இந்த நாட்டில் இருப்பதை நாம் பாராட்டவேண்டும’ என்று நான்
    எண்ணினேன்.

    ஆறுமுக மங்கலம்

    பெருங்குளத்துக்குக் கிழக்கேயுள்ள ஆறுமுக மங்கலவாசியும் தூத்துக்குடி கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதருமான குமாரசாமி பிள்ளையென்பவர் வைத்திருந்த சிந்தாமணி, பத்துப் பாட்டு என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுச் சுவடிகள் எனக்கு முன்பு கிடைத்தன. அவை திருத்தமான பிரதிகளாக இருந்தன. அவர் வீட்டுக்குச் சென்று தேடினால் வேறு நூல்கள் கிடைக்கலாமென்ற நினைவினால் பெருங்குளத்திலிருந்து ஆறுமுக மங்கலம் சென்றேன். குமாரசாமி பிள்ளையின் மருகராகிய சுந்தரமூர்த்திப்பிள்ளை என்பவர் அங்கே இருந்தார். அவர் தம் வீட்டிலுள்ள சுவடிகளையெல்லாம் காட்டினார். பல பழைய ஏடுகள் இருந்தன. அகநானூறு, புறநானூற்றின் குறைப்பிரதி ஒன்று, சிலப்பதிகார உரை, தமிழ் நாவலர் சரித்திரம் என்பவை எனக்குக் கிடைத்தன.

    சுந்தரமூர்த்திப் பிள்ளை அவ்வூர் அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் என் ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்தார். அங்கே அன்று பகற்போசனம் செய்து கொண்டேன். எனக்கு அந்த வீட்டுக்காரர் பெரிய விருந்து நடத்தினாரென்றுதான் சொல்ல வேண்டும். அந்த விருந்துணவை உண்டபோது அவ்வூர் சம்பந்தமான வரலாறு ஒன்று எனது நினைவுக்கு வந்தது.

    ஆண்டான் கவிராயரென்ற பிராமண வித்துவான் ஒருவர் ஆறுமுக மங்கலத்துக்கு வந்தார். ஆறுமுக மங்கலம் பெரிய ஊர். ஆயிரத்தெட்டுப் பிராமணர் வீடுகள் முன்பு அங்கே உண்டென்றும், அவருள் விநாயகர் ஒருவரென்றும் சொல்வார்கள். அங்குள்ள விநாயகருக்கு ஆயிரத்தெண் விநாயக ரென்பது திருநாமம்.

    அவ்வளவு பெரிய ஊரில் ஆண்டான் கவிராயருக்கு என்ன காரணத்தாலோ பசிக்கு உணவு கிடைக்கவில்லை. அவர் வசை பாடுவதில் வல்லவர். பிற்காலத்துக் காளமேகமென்று சிலர் அவரைச் சொல்வதுண்டு. பசி மிகுதியால் அவர் வருந்தியபோது கோபத்தால், “ஆறுமுகமங்கலத்துக்கு யார் போனாலும், சோறு கொண்டு போங்கள், சொன்னேன், சொன்னேன்” என்று சொல்லிச் சில வசை கவிகளும் பாடினாராம்.

    இந்த வரலாற்றுக்கும் எனக்குக் கிடைத்த விருந்துக்கும் நேர்மாறாக இருந்தது. “ஆண்டான் கவிராயர் இந்த ஊரைப் பற்றி இழிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் எங்கும் சாப்பிடாத புதிய புதிய உணவுகள் எனக்கு இங்கே கிடைக்கின்றனவே!” என்று உடன் உண்ட ஒருவரிடம் நான் சொன்னேன்.

    “ஆம், அந்த இழிவைப் போக்குவதற்காகவே யார் வந்தாலும் இவ்வூரார் விசேஷமான விருந்து செய்வித்து அனுப்புவது வழக்கம்” என்று அவர் விடை பகர்ந்தார்.

    வெள்ளத்தில் விட்ட தமிழ்

    ஆறுமுக மங்கலத்திலிருந்து திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனைத் தரிசித்து ஆழ்வார் திருநகரிக்குப் போய்ச் சில இடங்களில் ஏடு தேடிவிட்டு மீட்டும் திருநெல்வேலிக்கு வந்தேன். தெற்குப் புதுத்தெருவிலிருந்த வக்கீல் சுப்பையா பிள்ளை யென்பவரிடம் சில ஏடுகளுண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். அவ்வீட்டிற்கு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய சகோதரரும் என் நண்பருமாகிய திருகூட ராசப்பக் கவிராயர் வந்திருந்தார். சுப்பையா பிள்ளைக்கு அவர் உறவினர். நான் வந்த காரியத்தைச் சொன்னபோது கவிராயரும் சுப்பையா பிள்ளையிடம் என் கருத்தை எடுத்துச் சொன்னார்.

    “எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்
    கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமற் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன். அவற்றில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகான அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் இந்தக் குப்பையைச் சுமந்து கொண்டிருப்பதில் என்ன பயனென்று எண்ணினேன். ஆற்றிலே போட்டுவிடலாமென்றும், ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டிவிடுவது சம்பிரதாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிமாதம் பதினெட்டாந்தேதி வாய்க்காலில் விட்டு விட்டேன்” என்றார். அவர் அதைச் சொல்லும்போது சிறிதும் வருத்தமுற்றவராகக் காணப்படவில்லை. எனக்குத்தான் மனம் மறுகியது. கரிவலம் வந்த நல்லூரில் ஏடுகளைத் தீக்கு இரையாக்கிய செய்தியைக் கேட்டபோது என் உள்ளம் எப்படியிருந்ததோ அப்படியே இங்கும் இருந்தது. தமிழின் பெருமையைச் சொல்லிய பெரியோர் சிலர் அது நெருப்பிலே எரியாமல் நின்றதென்றும், நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும் பாராட்டியிருக்கிறார்கள். அதே தமிழ் இன்று நெருப்பில் எரிந்தும், நீரில் மறைந்தும் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் பாராமலே போய் விட்டார்கள். பார்த்து இரங்குவதற்கு நாம் இருக்கிறோம்.

    “உங்கள் வீட்டு ஏடுகளெல்லாம் வெள்ளத்திலே போய் விட்டனவென்று சொல்லுகிறீர்களே. இப்படிச் செய்வது நியாயமா?” என்று வருத்தந் தொனிக்கும் குரலில் கேட்டேன்.

    அப்போது திரிகூட ராசப்பக் கவிராயர், “நான் வந்திருந்த சமயத்தில் கடைசித் தடவையாக ஏட்டுச் சுவடிகளை வாய்க்காலில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில ஏடுகளைக் கொண்டு போன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே பீரோவின் மேல் வைத்திருக்கிறேன். அதை எடுத்து வாருங்கள்” என்று வீட்டுக்காரரை நோக்கிச் சொன்னார்.

    அந்தக் கட்டைக் கொணர்ந்து என் முன் போட்டார்கள். எனக்கு முன்பே எலி அந்தச் சுவடியை ஆராய்ச்சி செய்திருந்தமையால் பல ஏடுகள் துண்டு துண்டுகளாகக் கிடந்தன. அவை திருப்பூவண நாதருலா முதலிய சில பிரபந்தங்களின் பகுதிகளாக இருந்தன. சிலப்பதிகாரத் துணுக்குகளும் கிடைத்தன. அவற்றைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டேன். எழுத்துக்கள் தெளிவாகவும் பிழையின்றியும் இருந்தன. அவற்றைக் காணக் காண அகப்படாமற் போன ஏடுகளின் சிறப்பை நான் உணர்ந்து உணர்ந்து உள்ளழிந்தேன்.

    ‘சிறப்பதிகாரம்’

    திருநெல்வேலியிலிருந்து திரிகூட ராசப்பக் கவிராயரையும் அழைத்துக்கொண்டு அம்பா சமுத்திரம் சென்றேன். இடையே ஓர் ஊரில் ஓர் அபிஷிக்தர் (சைவர்களின் குரு) வீட்டுக்குப் போனோம். எங்களை நெடுந்தூரத்தில் கண்டதும் அவ் வீட்டுக்காரராகிய அபிஷிக்தர் உள்ளே எழுந்து சென்றார். அவருக்கு எழுபது பிராயம் இருக்கும், அவருடைய குமாரன் ஒருவன் எங்களை வரவேற்றான். பிறகு உள்ளே சென்று ஒரு பலகை எடுத்து வந்து திண்ணையில் போட்டான். மற்றொரு பலகையைச் சுவரோரமாகச் சார்த்தினான். அவ்வாறு ஆசனம் அமைத்தவுடன் உள்ளிருந்து பெரியவர் வந்தார். காதில் ஆறு கட்டி சுந்தர வேடமும், தலையில் ருத்திராட்ச மாலையும், கழுத்தில் ருத்திராட்ச கண்டியும் அணிந்து கொண்டு அவர் வந்து பலகையின் மேலமர்ந்து, “வாருங்கள்” என்று எங்களை வரவேற்றார். அந்த அலங்காரமில்லாமல் சாதாரண மனிதராக மற்றவர் கண்களில் படக்கூடாது என்பது அவர் எண்ணம் போலும்! அவர் என்னுடன் வந்த திரிகூட ராசப்பக் கவிராயருக்குப் பழக்கமானவர்; அவருடைய உதவியைப் பெறுபவர்.

    நாங்கள் திண்ணையில் அமர்ந்தோம், “எங்கே வந்தீர்கள்? அடிக்கடி உங்களைப் போன்ற கனவான்கள் இங்கே விஜயம் செய்கிறார்கள். நான் அவ்வளவு மரியாதைக்கு ஏற்றவனல்ல. என்ன விசேஷம்?” என்றார்.

    “உங்களிடம் ஏட்டுச் சுவடிகள் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அவற்றைப் பார்க்கலாமென்று வந்தேன்” என்றேன்.

    “அப்படியா? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

    நான், “சிலப்பதிகாரம் வேண்டும்” என்றேன்.

    “சிறப்பதிகாரமா? இருக்கும்” என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.

    “சிறப்பதிகார மல்ல; சிலப்பதிகாரம்” என்று நான் இடை மறித்துச்
    சொன்னேன்.

    “சிறப்பதிகார மென்றுதான் சொல்ல வேண்டும்; நீங்கள் சிறு பிள்ளை; உங்களுக்குத் தெரியாது” என்று கூறியபோது கவிராயர், “அது கிடக்கட்டும். புத்தகத்தைக் காட்டச் சொல்ல வேண்டும்” என்றார்.

    “அவ்வளவு சுலபமாகக் காட்ட முடியுமா? இப்போதெல்லாம் அவற்றைத் தொடலாமோ? ஸரஸ்வதி பூஜையில்தான் அர்ச்சனை பண்ணிப் பூஜை செய்து எடுக்க வேண்டும்” என்றார்.

    அவர் பேச்சிலிருந்து அவரிடம் பண்டம் ஒன்றும் இராதென்றே எனக்குத் தோன்றியது. ஆனாலும் கவிராயர் விடவில்லை. அந்தப் பெரியவருக்கு உதவி செய்பவராகையால், அவர்குமாரனை அழைத்து உள்ளே சென்று, “அந்தப் புத்தகத்தைக் காட்டு” என்று அதிகார தோரணையில் கூறினார். அவன் எடுத்துக் காட்டினான். பத்துப் பதினைந்து சுவடிகள் இருந்தன; அவை ஆகம ஏடுகளும் அந்திமக் கிரியையைப் பற்றிய சுவடிகளுமாக இருந்தன. நாங்கள் பேசாமல் விடை பெற்றுக் கொண்டோம்.

    நாங்குனேரி

    அப்படியே நாங்குனேரி போய் அங்குள்ள வானமாமலை மடத்தில் ஏடு தேடினேன். அங்கே எல்லாம் ஸம்ஸ்கிருதச் சுவடிகளாக இருந்தன. ஒரே ஒரு தமிழ்ச் சுவடி மாத்திரம் இருந்தது; அதுவும் நைடதம். தகடூர் யாத்திரைப் பிரதி கிடைக்குமோ என்ற கருத்தால் பல வீடுகளில் தேடினேன். கிடைக்கவில்லை. கணக்குத் தாதர் என்ற ஒருவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். ஏட்டுச் சுவடிகளின் கயிறுகளையெல்லாம் உருவி எடுத்துக் கொண்டு ஒரு கயிற்றில் பல சுவடிகளைக் கட்டியிருந்தார்கள். சுவடிகளைக் காட்டிலும் கயிறுதான் அவர்களுக்குப் பெரிதாகப் பட்டது கணக்குச் சுருணைகளும் கம்பராமாயண ஏடுகளும் கலந்திருந்தன. அவற்றில் என் கண்ணிற்பட்ட கம்ப ராமாயண ஒற்றை ஏடுகளை மாத்திரம் பெற்றுக் கொண்டேன்.

    களக்காடு

    நாங்குனேரியிலிருந்து களக்காட்டை அடைந்தேன். அங்கே இரண்டு சைவ மடங்கள் உண்டு. அவற்றுள் தெற்கு மடத்திற்குப் போய்ப் பார்த்தேன். அதன் தலைவராகிய சாமிநாத தேசிகரென்பவர் கல்வியிலும் குணத்திலும் சிறந்தவராக இருந்தார். நான் வந்த காரியத்தைத் தெரிந்து கொண்ட அவர் உடனே தாம் சுவடிகள் வைத்திருந்த மரப் பத்தாயத்தில் ஏணி வைத்து ஏறி அங்கிருந்த சுவடிகளையெல்லாம் எடுத்துப் போட்டார். இரண்டு நாட்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்தேன். பல பிரபந்தங்களும், புராணங்களும், ஸம்ஸ்கிருத புத்தகங்களும் இருந்தன. சிலவற்றிற்குப் பெயர் இல்லாமல் இருந்தது. நான் பெயர் எழுதி வைத்தேன்.

    பத்துப் பாட்டு மூலம் முழுவதும் அடங்கிய பழைய பிரதி அங்கே கிடைத்தது. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். “இதற்காக நான் எவ்வளவு அலைந்திருக்கிறேன்! முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கும்! இரண்டாவது பதிப்புக்கு இதை உபயோகித்துக் கொள்வேன்” என்று கூறி அதைப் பெற்றுக் கொண்டேன்.

    அதைப் பெற்ற சந்தோஷத்தால் மூன்றாவது நாளும் அங்கே இருந்தேன். அன்று அங்கே உள்ள ஆலயத்துக்குச் சென்று சத்தியவாகீச ரென்னும் திருநாமத்தையுடைய மூர்த்தியைத் தரிசித்தேன். மகா மண்டபத்தில் 21 கதிர்கள் உள்ள தூண்கள் இருந்தன. அந்த 21 கதிர்களையும் ஒருவர் தட்டினார். மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாவதைக் கேட்டு வியந்தேன். ‘கல்லை மென் கனியாக்கும் விச்சை’ என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். அங்கே கல்லை மென்னரம்பாக்கும் விச்சைத் திறத்தைக் கண்டு மிக்க உவகை கொண்டேன். வீரமார்த்தாண்ட பாண்டியரென்பவர் திருப்பணி செய்த ஆலயம் அது என்று சொன்னார்கள்.

    பிறகு, கிடைத்த சுவடிகளை எடுத்துக் கொண்டு திருநெல்வேலி வழியாகக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.
    ---------

    அத்தியாயம்-112
    தமிழ்க் கோயில்

    கும்பகோணத்திற்கு வந்தவுடன் எனக்குக் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதிகளையெல்லாம் வைத்துக் கொண்டு ஆராய்ந்தேன். அதன் மூலம், அடியார்க்கு நல்லார் உரை, அரும்பதவுரை என்னும் மூன்றையும் தனித்தனியே ஊன்றிப் படித்து ஒழுங்கு படுத்தலானேன். அந்த மூன்றினுள் அரும்பதவுரை மிகவும் சிதைந்த உருவத்தில் இருந்தமையால் அதனை உருவாக்கிப் படிப்ப தென்பது சாத்தியமாக இல்லை. அடியார்க்கு நல்லார் அவ்வுரையைச் சில இடங்களில் எடுத்துக் காட்டுவதனால் அதில் மதிப்பு உண்டாயிற்றேயன்றி எனக்குக் கிடைத்த பிரதியினால் உண்டாகவில்லை. ஆயினும் பொறுமையோடு கவனித்த பொழுது சில சில இடங்களில் அடியார்க்கு நல்லாருரையிற் காணப்படாத சில அரிய விஷயங்கள் இருந்தன. அவற்றைக் கண்ட பிறகு அரும்பதவுரையைப் பின்னும் ஊன்றிப் படிக்கத் தொடங்கினேன்.

    இசை நாடகச் செய்திகள்

    சிலப்பதிகாரத்தில் இசை நாடக சம்பந்தமான பல செய்திகள் வருகின்றன. அவற்றை ஒழுங்கு படுத்த முயலும்போது அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டும் செய்யுட்களும் சூத்திரங்களும் மிக்க வியப்பை உண்டாக்கின. சச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், சுத்தாநந்தப் பிரசாதம் என்னும் நூல்கள் எனக்குக் கிடைத்தன. அவற்றையும் ஆராய்ந்தேன். மகா வைத்திய நாதையரையும் அவர் தமையனாராகிய வையை இராமசுவாமி ஐயரையும் சந்தித்த காலங்களில் சிலப்பதிகாரத்திலும் மேலே சொன்ன மூன்று நூல்களிலும் வரும் சங்கீத விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் காட்டுவேன். அவர்களால் சில ஐயங்கள் நீங்கின. “தமிழில் இவ்வளவு சங்கீத சாஸ்திரங்கள் உள்ளனவா!” என்று அவர்கள் விம்மிதமடைந்தார்கள். கும்பகோணத்தில் பரத நாட்டியக் கலைப் பயிற்சியையுடைய நடேச தீக்ஷிதரென்று ஒருவர் இருந்தார். அபிநயம், கை வகைகள் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவ்வூரிலேயே பரத சாஸ்திரத்திற் கரைகண்டவராக இருந்த ராயர் ஒருவரிடமிருந்து பல செய்திகளை அறிந்தேன். சில நட்டுவர்களை அணுகி அவர்கள் முகமாகப் பல விஷயங்களை உணர்ந்தேன். அவர்கள் விஷயங்களை எடுத்துச் சொல்லும் போது, “இந்தக் கலைகளையும் இவற்றின் இலக்கணத்தைப் புலப்படுத்தும் நூல்களையும் தமிழ் நாட்டினர் போற்றிப் பாதுகாவாமற் போனார்களே!” என்று இரங்குவேன். நான் இவ்வளவு முயன்றும் சிலப்பதிகார உரையில் வரும் செய்திகள் ஓரளவு விளங்கினவே யன்றி முற்றும் தெளிவாக விளங்கவில்லை. யோக சம்பந்தமான விஷயங்கள் முதலியவற்றைக் கும்பகோணம் தாசில்தாராக இருந்த ஐயாசாமி சாஸ்திரிகளென்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

    புரொபஸர் ஜூலியன் வின்ஸோன்

    சிலப்பதிகார ஆராய்ச்சி நடக்கையில் 1891-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பாரிஸிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. நான் பதிப்பித்த சீவகசிந்தாமணியைக் கண்டு அநத் நகரத்தில் தமிழாசிரியராக இருந்த ஜூலியன் வின்ஸோன் என்னும் பிரஞ்சு அறிஞரே அதனை எழுதியிருந்தார். சிந்தாமணிப் பதிப்பைக் கண்டு அவர் மிகவும் இன்புற்றதாகவும், சிலப்பதிகாரம் முதலிய மற்ற நான்கு காப்பியங்களையும் நான் பதிப்பிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். அந்தக் கடிதத்திலிருந்து அவருடைய தமிழன்பும் வணக்கமும் புலப்பட்டன. ‘எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக்கொண்டால் ஒரு காகிதம் எமக்கு மறுபடி யனுப்பினால் மிகவும் சந்தோடமா யிருப்போம். சுவாமியுடைய கிருபையெல்லாமும் வருகவென்று உங்கள் Colleague and servant ஆயிருக்கிறோம்’ என்று அக்கடிதத்தை முடித்திருந்தார். அவர் கடல் கடந்த நாட்டில் இருந்தாலும் ‘உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்’ என்றபடி எங்கள் உணர்ச்சியினால் நாங்கள் அன்பர்களானோம். பாரிஸ் நகரத்தில் உள்ள புத்தகசாலையில் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்குமோ என்று அவருக்குக் கடிதம் எழுதினேன். உடனே அவர் விடை எழுதினார். 1891-ஆம் வருஷம் மே மாதம் 7-ஆம் தேதி அவர் எழுதிய அக்கடிதத்தில், ‘Bibliothique Nationale’ என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரம் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் List or Catalogue பண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை. பழைய புத்தகங்களோவென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதி உண்டு, ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையும் எழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திரமுரையின்றி வருகிறது. அது ஓலைப் பிரதி யாகும். நாம் அதைக் கடுதாசியி லெழுதினோம், நங்கட்சிறு புத்தக சாலையிலே வைக்க ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதி அனுப்புவோம். நீரதைக் கண்டுமில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பியனுப்பலாம்” என்று எழுதினார்.

    தமிழ் நாட்டில் தங்கள் பரம்பரைச் செல்வமாகக் கருதற்குரிய ஏடுகளை நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கி விட்டவர்களைப் பார்த்து வருந்திய எனக்குப் பல்லாயிர மைல்களுக்கப்பால் ஓரிடத்தில் தமிழன்னையின் ஆபரணங்கள் மிகவும் சிரத்தையோடு பாதுகாக்கப் பெறும் செய்தி மேலும் மேலும் வியப்பை உண்டாக்கி வந்தது. ஆயிரம் தமிழ்ச்சுவடிகள் பாரிஸ் நகரத்துப் புஸ்தகசாலையில் உள்ளனவென்பதைக் கண்டு, ‘இங்கே உள்ளவர்கள் எல்லாச் சுவடிகளையும் போக்கி விட்டாலும் அந்த ஆயிரம் சுவடிகளேனும் பாதுகாப்பில் இருக்கும்’ என்று எண்ணினேன். மணிமேகலையையும் நான் இடை யிடையே ஆராய்ந்து வந்தேனாதலால் அதன் பிரதி பாரிஸிலிருப்பதறிந்து அந்நண்பருக்குச் சில பகுதிகளைப் பிரதி செய்து அனுப்பும்படி எழுதினேன். அவர் அவ்வாறே அனுப்பினார். அது மிக்க பிழையுடையதாக இருந்தமையால் மேற்கொண்டு அவருக்குச் சிரமம் கொடாமல் நிறுத்திக் கொண்டேன்.

    திருப்பெருந்துறை

    1891-ஆம் வருஷம் மே மாதம் என் குமாரன் சிரஞ்சீவி கலியாண சுந்தரத்துக்கு உபநயனம் நடைபெற்றது. அதே காலத்தில் திருப் பெருந்துறையில் மடபதியாக இருந்த கண்ணப்பத் தம்பிரானுடைய முயற்சியால் அவ்வாலய கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் அதற்காக எனக்கு அழைப்பு அனுப்பியும் உபநயன ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியிருந்தமையால் அப்போது அங்கே போக முடியவில்லை. ஆயினும் உபநயனம் நிறைவேறிய பிறகு திருப்பெருந்துறை சென்று தரிசனம் செய்தேன். அங்கேயுள்ள ஆலயத்தைச் சார்ந்த புத்தகசாலையில் சில ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைப் பார்த்தபோது எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை.

    குன்றக்குடி

    திருப்பெருந்துறையிலிருந்து குன்றக்குடி சென்று ஆதீன கர்த்தரையும் அங்கே சின்னப் பட்டத்தில் இருந்த என் நண்பர் ஆறுமுக தேசிகரையும் கண்டு பேசினேன். மடத்தின் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப்பிள்ளையைக் கண்டு, தமிழ் ஏட்டுச் சுவடிகள் இருக்குமிடத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்ததை ஞாபகப்படுத்தினேன். அவர் “இருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்று ஒரு சுவடியைக் கொணர்ந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன். சிலப்பதிகார மூலமும் மணிமேகலை மூலமும் அதில் இருந்தன. சிலப்பதிகாரத்தைப் புரட்டிப் பார்த்தேன். மூலம் முற்றும் இருந்தது. பிரதி மிகவும் திருத்தமாகக் காணப்பட்டது.

    “இந்தச் சுவடி எங்கே கிடைத்தது?” என்று கேட்டேன்.

    “இங்கே அருகில் முதலைப்பட்டி என்ற ஊரில் ஒரு கவிராயர் வீடு இருக்கிறது. அங்கே நூற்றுக் கணக்கான ஏடுகள் உள்ளன. அங்கிருந்து எடுத்து வந்தேன்” என்றார் அவர்.

    “முதலைப்பட்டியா? விசித்திரமான பெயராக இருக்கிறதே!” என்று நான் கேட்டபோது அவர், “இப்போது முதலைப்பட்டி என்று வழங்குகிறார்கள்; மிதிலைப்பட்டி என்ற பெயர்தான் அப்படிப் பேச்சு வழக்கில் மாறிவிட்டது” என்றார்.

    எனக்கு உடனே அந்த ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று.

    “இங்கிருந்து அவ்வூர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்று கேட்டேன்.

    அவர் என் குறிப்பை அறிந்து கொண்டு, “அருகில்தான் இருக்கிறது. போகலாம்” என்றார்.

    மிதிலைப்பட்டி

    அன்று பிற்பகலே ஆதீனகர்த்தர் உத்தரவு பெற்று அப்பாப் பிள்ளையுடன் மிதிலைப்பட்டி சென்று அந்தக் கவிராயர் வீட்டை அடைந்தேன். அப்போது அங்கே இருந்த கவிராயரின் பெயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பது. அவரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டிலுள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தேன். அவர் வீடு தமிழ் மகள் ஆலயமாகத் தோற்றியது. அவர் தம்முடைய முன்னோர்கள் பெருமையை எடுத்துரைத்ததோடு அவர்கள் இயற்றிய பாடல்கள் பலவற்றையும் சொல்லிக் காட்டினார்.

    அவர்களுடைய முன்னோர்கள் முன்பு சேலத்தைச் சார்ந்த ஓரூரில் வாழ்ந்திருந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் தாரமங்கலம் கோயிலில் திருப்பணி செய்த கட்டியப்ப முதலியாருடைய ஆதரவில் இருந்தார்கள். அந்தக் கவிராயர்கள் பரம்பரையில் அழகிய சிற்றம்பலக் கவிராயரென்பவருக்கு மிதிலைப்பட்டியை வெங்களப்ப நாயக்கரென்ற ஜமீன்தார் கொடுத்தார். அது முதல் அவ்வூரில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் வாழ்ந்து வரலாயினர்.

    இராமநாதபுரம் சேதுபதிகளிடமிருந்தும், மருங்காபுரி ஜமீன்தார்களிடமிருந்தும் சிவகங்கை ஜமீன்தார்களிடமிருந்தும், புதுக்கோட்டை அரசர்களிடமிருந்தும் அப்பரம்பரையினர் பல பல பரிசுகளைப் பெற்றார்கள்.

    “எங்கள் முன்னோர்கள் யானைப்பரிசில் பெற்றார்கள். இதோ பாருங்கள்; இதுதான் யானைகட்டும் கல். அவர்களுக்குச் சிவிகையிற் செல்லும் கௌரவம் இருந்தது. இப்போது அந்தச் சிவிகை அந்தப் பழங்காலத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு இதோ இருக்கிறது பாருங்கள்” என்று கவிராயர் அவ்விரண்டையும் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

    “எங்கள் பெரியவர்கள் எவ்வளவோ பிரபந்தங்கள் இயற்றியிருக்கிறார்கள். எவ்வளவோ மானியங்களைப் பெற்றார்கள். அவர்கள் ஈட்டிய செல்வத்தை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம். ஆனால் அவர்களைப் போன்ற தமிழறிவோ வாக்கோ எனக்கு இல்லை. இங்கே மேலை வீட்டில் குமாரசாமிக் கவிராயர் என்ற என் தாயாதி ஒருவர் இருக்கிறார். அவர் நான்றாகப் படித்தவர்” என்று சொன்னார். அவர் அப்படி அடக்கமாகச் சொல்லிக் கொண்டாலும் அவருக்குத் தமிழன்பு இருந்தது; பரம்பரை வித்தையாதலால் செய்யுள் இயற்றும் பழக்கமும் சிறிது உண்டு. இந்தக் குடும்பத்தைச் சார்ந்த சில முதியவர்களுக்கு அந்தப் பழக்கம் நன்றாக இருந்தது.

    அவர் வீட்டிலிருந்த சுவடிகளெல்லாம் மிகவும் திருத்தமாக இருந்தன. ஓர் ஏட்டின்மேல் புறநானூறு உரை, சிலப்பதிகார உரை என்ற குறிப்பு இருந்தது. குருடனுக்குக் கண் கிடைத்தது போல எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டாயிற்று பிரித்துப் பார்த்தேன் புறநானூறு மட்டுந்தான் இருந்தது; சிலப்பதிகார உரை இல்லை. வேறு சுவடிகளோடு கலந்து இருக்குமோ என்று தேடித்தேடிப் பார்த்தேன். கிடைக்கவே இல்லை. ‘என்னுடைய துரதிருஷ்டம்’ என்றெண்ணி மனம் நைந்தேன்.

    ‘திருவிளையாடற் பயகர மாலை’ என்ற ஒரு பிரபந்தம் உரையோடு கிடைத்தது. ‘திருவிளையாடற் பயங்கரமாலை’ என்ற பெயரோடு ஒரு சிறிய நூல் மிகப்பிழையாக அச்சிலிருப்பதை நான் படித்திருக்கிறேன். அதற்குப் பயங்கரமாலை என்று ஏன் பெயர் வந்ததென்பது விளங்காமலே இருந்தது. மிதிலைப்பட்டியில் கிடைத்த பிரதியிற் பயகரமாலை என்ற பெயர் இருந்தது கண்டு உண்மை விளங்கியது. பயத்தை நீக்கும் மாலை என்னும் பொருளைத் தரும் பயஹரமாலை, பயங்கர மாலையாகி அச்சேறியதை நினைந்து சிரித்தேன். அந்நூலை இயற்றியவர் வீரபத்திரக் கம்பரென்ற புலவரென்று அப்பிரதியால் தெரிய வந்தது. எனக்கு அந்த வீட்டை விட்டு வர மனமில்லை அழகிய சிற்றம்பலக் கவிராயரை, “இன்னும் இந்தப் பக்கங்களில் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும் இடம் இருந்தால் சொல்லவேண்டும்” என்றேன், அவர், “இங்கே அருகில் செவ்வூரில் உறவினர் இருக்கின்றனர். எங்கள் பரம்பரையிலிருந்து ஒரு கிளை அங்கே போயிருக்கின்றது. அங்கும் இவற்றைப் போன்ற ஏடுகளைக் காணலாம். மற்றொரு கிளை காரைச்சூரான்பட்டியில் இருக்கிறது. இப்போது கடுங்கோடையாக இருப்பதால் அங்கே உங்களால் போவது சிரமம்” என்றார். புதையல் இருக்குமிடத்தை ஒருவர் எனக்குச் சொல்லியிருந்தால் அவ்வளவு சந்தோஷம் உண்டாகியிராது; அவ்வளவு மகிழ்ச்சியில் மூழ்கினேன்.

    கவிராயரிடம் புறநானூற்றையும் பயகர மாலையையும் மூவருலாவையும் வேறு சில நூல்களையும் பெற்றுக்கொண்டு செவ்வூருக்குப் போனேன். அங்கே சென்று தங்கியவர்களில் முன்னோர் சிற்றம்பலக் கவிராயர் என்பவர். சேதுபதியின் மீது தளசிங்கமாலை என்னும் பிரபந்தம் செய்தவர் அவர். அவர் வீட்டிலும் பல சுவடிகள் இருந்தன. ஆனால் சிலப்பதிகாரப் பிரதியைக் காணவில்லை. ஏதோ ஒரு சுவடியில் மூன்று சங்கங்களையும் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கும் ஒரு பெரிய அகவல் இருந்தது. அதனைப் பார்த்துப் பிரதி செய்து கொண்டேன். இந்தப் பிரயாணத்தில் அப்பாப் பிள்ளையின் சல்லாபத்தை மிகுதியாகப் பெற்றேன். அவர் சிலேடையாகப் பேசுவது மிக அருமையாகவும் அழகாகவும் இருக்கும். அதனால் பொழுது போனதே தெரியவில்லை.

    மருதபாண்டியர் புகழ்

    செவ்வூரிலிருந்து குன்றக்குடிக்கு வந்து ஆதீன கர்த்தரிடம் மிதிலைப்பட்டியின் சிறப்பைப் பற்றித் தெரிவித்தேன். அப்படியே சிறுவயல் சென்று அவ்விடத்து ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவரைப் பார்க்க எண்ணிப் புறப்பட்டேன். வரவேண்டுமென்று பல முறை அவர் தெரிவித்ததுண்டு, அவர் சங்கீதத்திலும், தமிழிலும் வடமொழியிலும் விசேஷமான அபிமானமுடையவர். தெலுங்கில் நல்ல பழக்கமுள்ளவர். இராமலிங்கம்பிள்ளை என்ற தமிழ் வித்துவானும் திருக்கோஷ்டியூர் சாமிநாத சாஸ்திரிகள் என்ற ஸம்ஸ்கிருத பண்டிதரும் அவருடைய ஆஸ்தான வித்துவான்களாக இருந்தனர்.

    என்னுடைய வரவினால் மிக்க மகிழ்ச்சி கொண்டு ஜமீன்தார் பலவாறு உபசரித்தனர். குன்றக் குடியைச்சார்ந்த இடங்களிலெல்லாம் ஜனங்கள் மருதபாண்டியரைப் பற்றிய வரலாறுகளையும் கொடையையும் பாராட்டியும் அவரைப்பற்றிய தனிப்பாடல்களைச் சொல்லியும் இன்புற்றனர்.

    சிறுவயல் ஜமீன்தாரும் பல வரலாறுகளைச் சொன்னார். “நான் வசித்துவரும் இந்த மாளிகை மருதபாண்டியர் இருந்த அரண்மனையாகும். அதனால் இவ்வூருக்கு அரண்மனைச் சிறுவயலென்னும் பெயர் உண்டாயிற்று. சிவகங்கை ஸமஸ்தானத்துத் தலைவர்களுள் அவரைப் போலப் புகழ் பெற்றவர் சிலரே. தம்முடைய வீரத்தால் ஸமஸ்தானத் தலைமையை அவர் பெற்றார். அவர் மிக்க தெய்வ பக்தியை உடையவர். பல ஸ்தலங்களில் அவர் திருப்பணி செய்திருக்கிறார். முக்கியமாகக் குன்றக்குடியில் சில மண்டபங்களைக் கட்டியிருக்கிறார். அவரால் செப்பம் செய்யப்பட்ட திருக்குளம் மருதாபுரி என்ற பெயரோடு இப்போதும் விளங்குகிறது. அவருடைய ஆஸ்தானத்தில் இருபத்தொரு தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள். அவரைப் பாராட்டி அவர்கள் பாடிய செய்யுட்கள் பல உண்டு.” ஜமீன்தார் மருத பாண்டியருடைய கல்வியிலும் கொடையிலும் வீரத்திலும் ஈடுபட்டவராதலின் மணிக்கணக்காக அவர் புகழை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார். நான் சிலப்பதிகாரம் பதிப்பிக்க எண்ணியிருப்பது தெரிந்து, தம்மாலான பொருளுதவி செய்வதாகச் சொன்னதோடு என்னால் அனுப்பப் பெற்றவரும் தம் ஆஸ்தான வித்துவானுமாகிய திருமானூர்க் கிருஷ்ணையரை எந்தச் சமயத்தில் வேண்டுமானலும் வருவித்து உபயோகித்துக் கொள்ளலாமென்றும் சொன்னார்.

    நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு மிதிலைப்பட்டி, செவ்வூரென்னும் இரண்டிடங்களிலும் கிடைத்த சுவடிகளோடு கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

    மிதிலைப்பட்டிப் பிரதியை வைத்துக்கொண்டு பார்த்ததில் சிலப்பதிகாரம் பல இடங்களில் திருத்தமடைந்தது. பல இடங்களில் பாடல்களுக்குத் தலைப்புகள் இருந்தன. அந்தப் பிரதியை ஆராய ஆராய மிதிலைப்பட்டியின் சிறப்பு மேலும் மேலும் புலப்பட்டது. மணிமேகலையையும் இடையிடையே ஆராய்ந்தமையால் அதிலும் பல திருத்தங்கள் கிடைக்குமென்று தெரிந்தது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று சிலப்பதிகாரத்தைச் செப்பஞ் செய்யத் தொடங்கினேன். மிதிலைப்பட்டிப் பிரயாணம் நேர்ந்திராவிட்டால், கலங்கியிருந்த என் மனத்தில் அமைதி தேன்றியிராது. அந்த நினைவினாலேதான் மிதிலைப்பட்டியைப் பற்றிப் பிற்காலத்தில், “தமிழ் நாட்டில் எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன. சிவ ஸ்தலங்களும் விஷ்ணு ஸ்தலங்களும் சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன. அவற்றைப் போலத் தமிழ்த் தெய்வம் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன்” என்று எழுதினேன்.
    ------------

    அத்தியாயம்- 113
    ஹிருதயாலய மருதப்பத் தேவர்

    வேறு வீடு

    என் பிரயாணங்களும் ஆராய்ச்சியும் விரிய விரிய என் தமிழ்க் குடும்பமும் தமிழ்நூற் செல்வமும் அதிகமாயின. அவற்றைப் பாதுகாப்பதற்குப் போதிய வசதி அவசியமாயிற்று. நான் இருந்த வீட்டில், மேலும் மேலும் நான் கொணர்ந்து சேர்க்கும் ஏட்டுச் சுவடிகளை வைப்பதற்கும், அன்பர்களுடன் இருந்து ஆராய்ச்சி செய்வதற்கும் இடம் போதவில்லை. ஆதலால் 1891-ஆம் வருஷம் ஜு ன் மாதம் முதல் முன்பிருந்த பக்தபுரி அக்கிரகாரத்திலேயே வடவண்டைக் கோடியிலுள்ள ஒரு மெத்தை வீட்டை மாதம் ரூ.6 வாடகைக்குப் பேசி அதிலே இருந்து வரலானேன்.

    புதிய வீட்டுக்கு வந்தவுடன் நல்ல சுவடிகளை மேலும் தேடித் தொகுக்கலாமென்றும் பல மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லலாமென்றும் பலரை வைத்துக் கொண்டு தமிழாராய்ச்சி செய்யலாமென்றும் என் யோசனை விரிந்தது.

    என் குமாரனுக்கு உபநயனம் நடைபெற்றபோது பல கனவான்கள் பலவகையான உதவிகள் செய்தனர். அவர்களுள் ஊற்றுமலை ஜமீன்தாராகிய ஹிருதயாலய மருதப்பத் தேவரும் ஒருவர். அவ ரைப் பார்த்துப் பேசிப் பழகவேண்டுமென்ற விருப்பம் எனக்கு நெடுநாளாக இருந்தது. திருநெல்வேலிப் பக்கங்களில் பிரயாணம் செய்த போதெல்லாம் அப்படியே ஊற்றுமலை போய்ப் பார்க்க எண்ணியிருந்தும் முடியவில்லை. ஊற்றுமலைக்குப் போவதையே முக்கிய நோக்கமாக வைத்துக் கொண்டு புறப்பட்டாலொழிய அந்தக் கருத்து நிறைவேறாதென்று தோன்றிற்று. ஆதலால் மிதிலைப்பட்டியிலிருந்து வந்த சில நாட்களுக்குப் பிறகு ஊற்றுமலையை நோக்கிப் புறப்பட்டேன்.
    ------------
    ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்னும் புஸ்தகத்திலுள்ள ‘பரம்பரைக் குணம்’ என்னும் 8-வது கட்டுரையைப் பார்க்க.
    ----------
    விக்கிரமசிங்கபுரம்

    அச்சமயம் நான் ஏடு தேடாத இடங்களுக்கும் சென்று பார்த்து வரலாமென்று எண்ணியே புறப்பட்டேன். ஆகையால் நேரே விக்கிரமசிங்கபுரம் சென்றேன். சிவஞான போதத்திற்குத் திராவிட மகாபாஷ்யம் இயற்றிய திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான முனிவர் உதித்த அவ்வூரில் அவர் பிறந்த வீடு இருக்கிறது. அங்கே எனக்கு உபயோகப்படும் நூல்கள் எவையேனும் கிடைக்கலாமென்று நினைத்தேன். போய்ப் பார்த்தபோது ஒன்றும் கிடைக்கவில்லை.

    அவ்வீட்டில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் அவ்வூர்ப் பள்ளிக் கூடத்து உபாத்தியாயர். அவரை எந்த ஊரென்று விசாரித்தபோது, “கடையநல்லூர்” என்று சொன்னார்.

    “அப்படியா? சந்தோஷம். உங்கள் வீட்டிலே பழைய தமிழ் ஏட்டுச் சுவடிகள் உண்டா?” என்று கேட்டேன்.

    வீண் அபவாதம்

    “மிகுதியாக இருந்தன. எல்லாவற்றையும் ஒருவர் கொண்டு போய் விட்டார்” என்று அவர் சொன்னார்.

    “யார் அவர்?” என்று மிக்க ஆவலோடு கேட்டேன்.

    “கும்பகோணம் சாமிநாதையர் கொண்டு போய் விட்டார்” என்றார் அவர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

    “அவர் என்ன சுவடிகளைக் கொண்டு போனார்?”

    “எவ்வளவோ சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் அவர் கொண்டு போய் விட்டார்.”

    அவருக்கு என்னை இன்னாரென்று தெரியாது. அங்கே என்னுடனிருந்த அன்பர்கள் ஒன்றும் விளங்காமல் விழித்தார்கள். இந்த அபவாதம் இன்னும் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகவே நான் மேலும் மேலும் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் தம் வீட்டில் பல அருமையான ஏடுகள் இருந்தனவென்றும் அவற்றை நான் கொண்டு போய்விட்டதாகவும் உறுதியாகச் சொன்னார். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மற்ற அன்பர்களுக்கு விஷயம் விளங்க வேண்டுமென்றெண்ணிச் சொல்லத் தொடங்கினேன்.

    ‘இவர் என்னைத் தெரிந்து கொள்ளாமல் வீணான அபவாதம் சுமத்துகிறார். நான் கடையநல்லூருக்குப் போனதுண்டு. இவர் வீட்டில் ஏடு தேடியதும் உண்டு. ஆனால் இவர் சொல்லுவதுபோல அங்கே கணக்கில்லாத ஏட்டுச் சுவடிகளை நான் காணவில்லை. அவ்வூருக்குப் போனவுடன் இவர் வீடு ஒரு வித்துவான் வீடென்று தெரிந்து போய் விசாரித்தேன். வீட்டில் இருந்தவர், ‘ஏடுகளெல்லாம் மச்சில் இருக்கின்றன’ என்றார். மேலே ஏறிப் பார்த்தேன். இரண்டு மூன்று பெட்டிகள் இருந்தன. பல காலமாகக் கவனிக்கப்படாமல் இருந்தவையென்று அவற்றைப் பார்த்தவுடனே தெரிந்தது. ஒரு பெட்டியைத் திறந்து கை வைத்தேன். எலிப் புழுக்கை மயமாக இருந்தது. எலி தமிழ் நூலை உண்டு ஜீரணித்தது போக, விட்டு வைத்த துண்டுகளே அப்புழுக்கையோடு இருந்தன. அந்தப் பெட்டிகளிலுள்ள சிதைந்த சுவடிகளையும் துண்டுகளையும் எடுத்துத் தட்டிக் கொட்டிப் பார்த்தபோது அபூர்த்தியான சிந்தாமணி ஏடு மாத்திரம் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டேன். அந்தப் பெட்டிக்குள் இருந்த வேறு பதார்த்தங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். உண்மை இதுதான்!”

    இவ்வாறு சொல்லி விட்டு, “நீங்கள் அப்போது அங்கே இருந்தீர்களா?” என்று அந்த உபாத்தியாயரைக் கேட்டேன். சோர்ந்த முகத்தோடு அவர், “நான் தெரியாமல் சொல்லி விட்டேன். நான் அப்பொழுது அங்கே இல்லை. விடுமுறைக்கு ஊர் போயிருந்தபோது என் வீட்டில் இருந்தவர்கள் அப்படிச் சொன்னார்கள்” என்றார்.

    “நல்ல வேளை. இந்த அபவாதத்தை என்னிடம் சொன்னதால் உண்மை எல்லோருக்கும் விளங்கியது. வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால் நீங்கள் சொல்லுவதை உண்மையாகவே எண்ணியிருப்பார்கள். நான் பிழைத்தேன்” என்றேன்.

    பிறகு விக்கிரமசிங்கபுரத்திலிருந்து ஒரு வண்டி வைத்துக் கொண்டு ஊற்றுமலைக்குப் போனேன்.

    தோற்றம்

    வண்டி ஊற்றுமலையை அணுகியபோது எதிரே சாலையில் ஒரு சிறு படை வந்தது. அதைக் கண்டவுடன் என்னுடன் வந்த ஒருவர், “அதோ, ஜமீன்தார் வருகிறார்” என்றார். நான் உடனே வண்டியை நிறுத்தச் செய்து கீழிறங்கினேன்.

    நான் இறங்கியவுடன், “மிகவும் சந்தோஷம். தங்களை வரவேற்கத்தான் இந்த வழியாக வருகிறேன்” என்று ஒரு கம்பீரமான தொனி கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் வேட்டைக் கோலத்தில் ஒரு வீரர் நின்றார் சுற்றிலும் பார்த்தேன். அவரைச் சூழ்ந்து ஆயுதபாணிகளாகிப் பல மறவர்கள் மிக்க வணக்கத்தோடு நின்றார்கள். பல நாய்கள் உடன் வந்தன. ‘நம்மை வரவேற்கவா இந்த வேட்டைக் கோலத்தோடு வந்திருக்கிறார். இவர் பழங்காலத்து வீரரைப் போலவல்லவோ இருக்கிறார்?” என்று எண்ணினேன். என் கண்கள் அவருடைய தோற்றத்தில் ஈடுபட்டு அடி முதல் முடி வரையில் நோக்கின. அவருக்கு அப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் இருக்கும்.

    “அவ்விடத்தில் சிரமம் வைத்துக் கொள்வானேன்? நான் அரண்மனையிலே வந்து கண்டிருப்பேனே” என்று புன்னகையுடன் சொன்னேன்.

    “நீங்கள் வருவதாக எழுதியது முதல் ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நேரே அரண்மனைக்குச் செல்லுங்கள். சிறிது தூரம் போய் வந்து விடுகிறேன்” என்று சொல்லி அவர் புறப்பட்டார்.

    நான் அரண்மனையை அடைந்தேன். எனக்கு மிகவும் வசதியுள்ள ஜாகை ஹஜார வாசலின் மெத்தையில் அமைத்திருந்தார்கள். போனவுடன் ஸ்நானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. பிறகு சிற்றுண்டிகளுடன் காபியும் கிடைத்தது. எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு எட்டு மணிக்கு ஆஸ்தானத்துக்குப் போனேன். அங்கிருந்த ஜமீன்தார் என்னைக் கண்டவுடன் எழுந்து, “இருக்க வேண்டும்” என்று உபசரித்தார். அவ்விடத்தில் நான்கு புலவர்கள் உடன் இருந்தனர். முத்துவீரப் புலவர், அண்ணாமலைப் புலவரென்று இருவர் பெயர்கள் மாத்திரம் ஞாபகம் இருக்கின்றன. நான் அமர்ந்தேன்.

    தமிழ்ப் பயிற்சி

    ஜமீன்தார் அந்த நான்கு புலவர்களுடன் திருவானைக்காப் புராணம் படித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவர் சில சமயங்களில் சில தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் தெரிவிக்கும்படி கடிதங்கள் எழுதியதுண்டு. அந்தச் செய்யுட்கள் கடினமானவையாகவும் பாடம் கேட்டவர்களுக்கல்லாமல் ஏனையோருக்கு எளிதில் விளங்காதனவாகவும் இருக்கும் “ஒரு ஜமீன்தார் இப்படிக் கடினமான செய்யுட்களைத் தேர்ந்தெடுத்துச் சந்தேகம் கேட்கிறாரே. மற்றச் செய்யுட்களெல்லாம் விளங்கி விட்டனவா? அவற்றைப் படிக்கிறாரா?” என்று சிந்தனை செய்வேன். நேரிலே ஜமீன்தார் புலவர்களோடு இருந்து தமிழ் நூல்களைப் படித்து இன்புறுவதைக் கண்டபோது அவருடைய தமிழ்ப் பயிற்சியின் அளவை ஊகித்துக் கொண்டேன்.
    ஒரு புலவர் ஒரு பாடலைப் படித்தார். உடனே மருதப்பத் தேவர், “உத்தரவாக வேணும்” என்று என்னை நோக்கிக் கூறினார். நான் ஸ்தம்பித்துவிட்டேன். அவருடைய பேச்சிலே காணப்பட்ட விநயந்தான் அதற்குக் காரணம்.

      “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
      செல்வர்க்கே செல்வந் தகைத்து”

    என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதற்கு இலக்கியமாக இருந்தார் ஜமீன்தார் நான் என்ன ஆசாரியனா? வயசில் முதிர்ந்தவனா? ‘உத்தரவாகவேணும்’ என்று சொன்ன வார்த்தையிலே அவருடைய பெருந்தன்மையும், தமிழிலுள்ள கரை கடந்த அன்பும் தொனித்தன ‘பழங்காலத்தில் வீரமும் கொடையும் கல்வியுமுடையவராக இருந்த சிற்றரசர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ!’ என்று நான் நினைத்து உள்ளத்துள் அவரைப் பாராட்டினேன். அந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லத் தொடங்கினேன். அத்தகைய ரஸிகர்களும் இடமும் காலமும் கிடைக்கும்போது எனக்கு உண்டாகும் உத்ஸாகத்துக்கு அளவு ஏது? கருத்து, பதப் பொருள், விசேஷ உரை எல்லாம் சொல்லி எழுத்து முதலிய ஐந்து இலக்கணச் செய்திகளையும் அமைத்துச் சொன்னேன். எழுதுசித்திரம் போலிருந்து ஜமீன்தார் கேட்டார். மேலே இரண்டு பாடல்கள் நடந்தன. மணி பத்து அடித்தது. புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு ஜமீன்தார் எழுந்தார். “இதுவரையிலும் அனுபவிக்காத பேரானந்தத்தை இன்று அனுபவித்தேன். நேரமாயிற்று போய்ப் போஜனம் செய்து கொள்ள வேண்டும்” என்று உபசரித்தார்.

    மத்தியான்னம் எனக்குக் கிடைத்த விருந்தமுதத்தை தமிழ் நினைவோடு உண்டு மகிழ்ந்தேன். நான் கண்ட காட்சிகளெல்லாம் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. அங்கே பழகிய மனிதர்களும், வேலை பார்க்கும் உத்தியோகஸ்தர்களும் மிகவும் திருத்தமாக இருந்தார்கள். மணிக் கணக்குப் பிசகாமல் ஒவ்வொரு காரியமும் நடந்து வந்தது. ஹஜார வாசலில் காலத்தைத் தெரிந்து கொள்வதற்கு மணற் கடிகாரம் வைத்திருந்தார்கள். இடங்களெல்லாம் திருத்தமாகவும் சுத்தமாகவும் இருந்தன. உத்தியோகஸ்தர்களிற் பெரும்பாலோர் தமிழை நன்றாகப் படித்தவர்கள்.

    காலப் போக்கு

    ஹிருதயாலய மருதப்பத் தேவருடைய காலப் போக்கை உணர்ந்து நான் வியப்படைந்தேன். விடியற்காலை நான்கு மணிக்கே அவர் எழுந்து விடுவார். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு பால் சாப்பிட்டு விட்டு 6 மணிக்குப் புறத்தே உலாவுவதற்குப் பரிவாரங்களுடன் புறப்படுவார். யானைக்கூடம், குதிரைப்பந்தி, காளைகள் கட்டுமிடம் எல்லாவற்றையும் பார்வையிட்டுக் கொண்டே செல்வார். ஊரைச் சுற்றியுள்ள சாலைகளில் ஒவ்வொரு சாலை வழியாகச் சென்று உலாவி வருவார். அந்தச் சாலைகளெல்லாம் அவராலேயே அமைக்கப்பட்டவை; இருபுறமும் மரங்களைப் பயிராக்கிச் சாலைகளை ஒருங்காக வைத்திருந்தார். தோட்டங்கள் நல்ல முறையில் வளர்க்கப்பெற்று வந்தன. உலாவிவிட்டு வந்து எட்டு மணி முதல் பத்துமணி வரையில் தமிழ்ப் புலவர்களுடன் இருந்து தமிழ் நூல்களைப் படிப்பார். புதிய நூல்களைப் படிப்பதோடு பழைய நூல்களையும் பன்முறை படித்து இன்புறுவார். அவருடன் இருந்த வித்துவான்கள் நல்ல வித்துவப் பரம்பரையினர்; சில பிரபந்தங்களை இயற்றியிருக்கிறார்கள்; பல வருஷ காலமாக அவருடைய ஆஸ்தான வித்துவான்களாகவே இருந்தார்கள். பத்து மணிக்குமேல் கச்சேரிக் கட்டுக்குச் சென்று ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பார். பிறகு ஸ்நானம், ஆகாரம் முதலியவற்றை முடித்துக் கொண்டு மீட்டும் பிற்பகல் இரண்டு மணிக்குத் தமிழ் நூல் படிக்க உட்காருவார். நான்கு மணி வரையில் படித்துவிட்டு ஆறு மணி வரையில் ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைப் பார்வையிடுவார். ஆறு மணிக்குமேல் தம்மைப் பார்க்க வந்தவர்களுக்குப் பேட்டி அளிப்பார். தம் குடிகளுடைய குறைகளை விசாரிப்பார். அவர்கள் அவற்றை ஓலையில் எழுதிய நீட்டுவார்கள். அவற்றையெல்லாம் பிறகு பார்த்து மறுநாள் தம் கருத்தைச் சொல்லுவார். வேற்றூரிலிருந்து வந்தவர்களுக்குச் சிறிதும் குறைவின்றி உபசாரம் நடைபெறும்.

    ஆலயம்

    மாலையில் ஆலயத்துக்குச் செல்வார். அங்கே நவநீத கிருஷ்ணசுவாமியின் ஆலயம் இருக்கிறது. ஹிருதயாலய மருதப்பத் தேவருடைய ஆட்சியில் நித்திய நைமித்திகங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஜமீன்தாருக்கு நவநீத கிருஷ்ணரே குலதெய்வம். ஆலயம் சிறிதாக இருந்தாலும் பெரிய கோயில்களுக்கு நடைபெறுவன போன்ற சிறப்புக்களை அங்கே பார்க்கலாம். பல வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங்குழல் முதலிய பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும். எல்லாம் புத்துருக்கு நெய்யாற் செய்வார்கள். ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். தேங்குழல் பெரிய சந்தக்கல் அளவு இருக்கும். அந்தப் பிரசாதங்களை வெளியூரிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு எடுத்தனுப்பச் செய்வது ஜமீன்தார் வழக்கம்.

    மாலையில் மருதப்பத் தேவர் சுவாமி தரிசனம் செய்வார் அங்கே நல்ல பாட்டுக்களைச் சில சங்கீத வித்துவான்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள்.

    இவ்வளவு ஒழுங்காகவும் திறமையாகவும் அவர் நடத்தி வந்த ஆட்சியை வேறிடங்களில் நான் பார்த்ததில்லை. சிறிய ஜமீனாக இருந்தாலும் அவர் அதற்குத் தம் ஆட்சி முறையால் பெருமையை உண்டாக்கினார். அவர் ஒரு பெரிய தேசத்தின் அதிபதியாக இருந்தால் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்திருப்பாரென்று நான் எண்ணிப் பார்ப்பேன்.

    உபசாரம்

    மாலை நாலு மணிக்கு ஜமீன்தாரைக் கண்டேன். தமிழ்நூலின்பத்தை இருவரும் நுகர்ந்தோம். பழைய நூல்களைப் பற்றியும் பிற்காலத்து நூல்களைப் பற்றியும் நான் ஊக்கத்தோடு பேசினேன். ஜமீன்தாருடைய கூரிய தமிழறிவை உணர்ந்து மகிழ்ந்தேன். அவர் யாரைப் பற்றியும் குற்றம் கூறுவதே இல்லை. ஜமீன்தாருடைய மாமாவாகிய பெரியசாமித் தேவரென்பவருடைய தமிழ்ச்சுவடிகள் அரண்மனையில் இருந்தன அவற்றைப் பார்த்தேன். எனக்குப் பயன்படுவதாக ஒன்றும் இல்லை. சித்திரா நதி ஸ்நானமும், இனிய விருந்துணவும், அன்பில் ஊறி வெளிவரும் ஜமீன்தார் பேச்சும், தமிழின்பமும் சேர்ந்து அங்கே தங்கியிருந்த சிலநாள் வாழ்க்கையைத் தெய்வலோக வாசம் போலாக்கிவிட்டன. நான் ராஜோபசாரத்தைப் பெற்று இன்புற்றேன்; ராஜோபசாரமென்றது உபசாரவார்த்தையன்று; உண்மையிலேயே அது ராஜோபசாரந்தான். நான் அரசனல்லனென்ற ஒன்றுதான் குறை.

    பிரியா விடை

    என் வாழ்நாள் முழுவதும் அங்கே இருந்தாலும் எனக்குச் சலிப்பு வராது; ஜமீன்தாரும் உபசரிப்பதில் குறைவு செய்யமாட்டார். அது சாத்தியமா? நான் உத்தியோகம் பார்ப்பதோடு தமிழ்ச் சுவடிக்காக ஊரெல்லாம் அலைய வேண்டிய சொந்த உத்தியோகம் வேறு உள்ளதே. ஒரு நாள், பிரிய வேண்டுமே என்ற வருத்தத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ஜமீன்தாரிடம் பத்துப் பாடல்கள் கூறி விடை கேட்டேன்.

    “. . . . . .ஒருவஞ்சிக் காண்டந், தேடத், தாரளவு புய வீர கேரளபூ பால விடை தருவாய் மன்னோ” என்பது மட்டும் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. அவர் பின்னும் சிலநாள் இருந்து போக வேண்டுமென்று சொன்னார். நான வற்புறுத்தவே வேறு வழியின்றி விடை அளித்தார். ஒரு சால்வையும் சில உயர்ந்த வஸ்திரங்களும் வழிச்செலவுக்குப் பணமும் வழங்கினார்.

    ஒரு நாள் மாலையில் விடை பெற்றுக் கொண்டேன். அப்போது அவர், “இங்கிருந்து வண்டியையும் சமையற்காரனையும் திட்டம் செய்து பாத்திரங்களும், சாமான்களும் அனுப்புகிறேன். நீங்கள் எங்கெங்கே போக வேண்டுமோ அவ்விடங்ளுக்கெல்லாம் செல்லலாம்” என்றார். “நான் போகிற இடங்களிலெல்லாம் சமையற்காரனை வைத்துக் கொண்டு விருந்து சாப்பிடுவது முடியாத காரியம். அதற்கேற்ற வசதி இராது. பல இடங்களில் கிடைத்ததைக் கிடைத்த நேரத்தில் உண்டு விட்டு ஏடு தேடுவேன். பட்டினி கிடக்க நேர்ந்தாலும் நேரும். எனக்கே இப்படி இருக்கும்போது வண்டி மாடு, வண்டியாள், சமையற்காரன் இவ்வளவு பரிவாரங்களையும் வைத்துக்கொண்டால் என் காரியம் நிறைவேறாது, திருக்குற்றலாம் வரையில் செல்ல வண்டி அனுப்ப ஏற்பாடு செய்தாற் போதும்” என்று கேட்டுக் கொண்டேன். அப்படியே ஏற்பாடு செய்தார். மறுநாள் விடியற்காலையில் புறப்படவேண்டும்.

    விடை பெற்ற பிறகு ஜாகைக்குச் சென்றேன். அன்றிரவு பத்து மணிக்கு வழக்கம்போல் எனக்கு ஒருவர் நன்றாகக் காய்ச்சிய பால் கொணர்ந்து தந்தார். தேன்பாகும், குங்குமப்பூவும் சேர்த்துக் குழம்பு போலக் காய்ச்சிய அதைப் பருகும்போது, “இவ்வளவு உபசாரத்தை நாம் எங்கே அடையப் போகிறோம்! இவ்வளவு அன்புடையவர்களை எப்படிப் பிரிவது!” என்ற நினைவு எழவே என் கண்களிலிருந்து பல பலவென்று நீர்த்துளிகள் உதிர்ந்தன.

    --------
    வீர கேரளம் புதூரென்பது ஜமீன்தார் இருந்த ஊரின் பெயர்.
    -------

    மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன். வண்டி சித்தமாக இருந்தது. மறுபடியும் ஒருமுறை ஜமீன்தாரைப் பார்க்க வேண்டுமென்று தோற்றியது, போய்ப் பார்த்தேன். என்னைக் கண்டவுடன் அவர் திடுக்கிட்டு, “என்ன விசேஷம்? வண்டி வரவில்லையா?” என்றார்.

    “எல்லாம் வந்து விட்டன. சமுகத்தைப் பிரிவதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. தமிழ்த் தொண்டு முன்னே இழுக்கிறது. ராத்திரி நான் பால் அருந்தியபோது சமுகத்தின் அன்பை நினைந்து மனங்கசிந்தேன். மறுபடியும் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்ற ஆசையால் வந்தேன். விடைபெற்றுக் கொள்ளுகிறேன்” என்று சொல்லி நின்றேன்.

    “நமக்கும் வருத்தமாகவே இருக்கிறது. எந்தச் சமயத்தில் ஓய்வு நேருமோ அப்போதெல்லாம் வந்து இங்கே தங்கி எங்களுக்குத் தமிழமுதை ஊட்டலாம்” என்று அவர் அன்பு கனியச் சொன்னார்.

    விடை பெற்றுப் பிரிந்தேன். அன்று அவரைக் கண்டதுதான்; பிறகு அவரைக் காணமுடியாமல் விதி செய்து விட்டது.

    என் உள்ளத்தை ஹிருதயாலய மருதப்பத் தேவரிடம் வைத்து விட்டுத் திருக்குற்றாலத்தை அடைந்தேன்.
    ----------------

    அத்தியாயம்- 114
    சிலப்பதிகாரப் பதிப்பு

    திருக்குற்றாலத்திற்குப் போன போது மேலகரத்திலிருந்து திரிகூடராசப்பக் கவிராயர் அங்கே வந்திருந்தார். அவரைக் கண்டவுடன் அந்தப் பக்கங்களில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று ஏடு தேடலாமென்ற ஊக்கம் ஏற்பட்டது. “நான் ஊற்றுமலை போய் வந்தேன். கும்பகோணம் போனவுடன் சிலப்பதிகாரத்தை அச்சிட ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் சுவடிகள் கிடைக்கக் கூடிய இடங்களுக்கு உங்கள் துணையைக் கொண்டு சென்று பார்த்து வர எண்ணுகிறேன்” என்றேன்.

    அவர், “அப்படியே செய்யலாம்” என்றார்.

    பிரபந்தச் சுவடிகள்

    அவருடன் சொக்கம்பட்டி முதலிய பல ஊர்களுக்குப் போனேன். அங்கங்கே பல வித்துவான்கள் வீடுகளைப் பார்த்தேன். வித்துவான்கள் பலர் வறுமையால் வருந்துவதைக் கண்டு மிக வருந்தினேன். பழைய காலத்தில் இருந்த ஜமீன்தார்கள் நிறுவிய தர்மஸ்தாபனங்களைப் பார்த்தேன். ஸம்ஸ்தானாதிபதிகளைப் பற்றியும் வித்துவான்களைப் பற்றியும் பழங்கதைகளைச் சொல்லுவோர் அங்கங்கே இருந்தனர். சொக்கம்பட்டி ஜமீனில் மந்திரியாக இருந்த பொன்னம்பலம்பிள்ளை என்பவருடைய திறமையை விளக்கும் பல வரலாறுகளைக் கேட்டறிந்தேன்.

    அப்பால் வாசுதேவநல்லூர், புளியங்குடி முதலிய ஊர்களுக்குப் போய்ப் பழைய நூல்கள் உள்ளனவா என்று தேடினேன். புளியங்குடியில் புலவர் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த ஊரின் பழம் பெயர் பூழியன்குடி என்று சொன்னார்கள். நான் அப்புலவர்களோடு பேசினேன். பல பழைய பாடல்களைச் சொன்னார்கள். தங்களிடமுள்ள ஏட்டுச் சுவடிகளைக் காட்டினார்கள். பள்ளு, குறவஞ்சி, குளுவ நாடகம், காதல், முளைப்பாட்டு, விதைப்பாட்டு, திருமுக விலாசம் முதலிய பிரபந்தவகைகளே இருந்தன. அவற்றில் அப்போது என் புத்தி செல்லவில்லை. ஆழ்ந்த தமிழ்ப் பயிற்சியும் சிறந்த கவித்துவமும் மங்கியிருந்த காலத்தில் ஜமீன்தார்கள் மனத்துக்கு உவப்பு உண்டாக்கவேண்டி இத்தகைய பிரபந்தங்களைப் புலவர்கள் இயற்றிப் பரிசு பெற்றார்கள். காப்பி யகதியும் பழைய நூல் மரபும் புலவர்கள் ஆராய்ச்சிக்கு உட்படவில்லை. சொல்லடுக்குகளும், சிருங்காரமுமே அந்தப் பிரபந்தங்களில் மீதூர்ந்து நின்றன.

    தென்காசி நிகழ்ச்சி

    பிறகு தென்காசிக்கு வந்தேன் நைடதம் முதலியவற்றை இயற்றிய அதிவீரராமபாண்டியருடைய ஆசிரியர் வாழ்ந்து வந்த மடமொன்று அங்கே உண்டு. அவ்விடத்திற் போய்ப் பார்த்தேன். எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு வீட்டில் சுப்பையா பிள்ளை என்ற கனவான் ஒருவரைச் சந்தித்தேன். அவர் தமக்குச் சில பழம் பாடல்கள் பாட முண்டென்று சொல்லி,

      “உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப்
      பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை யரவம்
      காதறு கவண தேய்க்கும்
      தீதுறு கள்ளியங் காடிறந் தோரே”

    என்னும் செய்யுளைச் சொன்னார். நடையிலிருந்து அது சங்கச் செய்யுளாக இருக்குமென்று தோன்றியது.

    “இவற்றை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்?”

    “என்னிடம் உள்ள ஏட்டுச் சுவடியில் இத்தகைய பல பாடல்கள் இருந்தன.”

    “அப்படியா! அந்தச் சுவடிகளை நான் பார்க்கலாமா?”

    “என் வீடு என் ஸ்வாதீனத்தில் இல்லை. என்னிடம் இருந்த சுவடிகள் என் சொத்தோடு பிறர் கையிற் போய் விட்டன.”

    நான் ஒன்றை ஆவலோடு எதிர்பார்க்கும்போது அது நிறை வேறாமல் ஏமாற்றத்தை அடைதல் எனக்கு வழக்கமாகி விட்டது. சுப்பையா பிள்ளை சொன்ன பாடல்களும் அவர் முதலிற் கூறிய செய்திகளும், “இதுகாறும் பாராத ஒரு நூலை இன்று பார்க்கப் போகிறோம்” என்ற ஆவலை உண்டாக்கின. அவர் கடன் தொல்லை யால் எல்லாவற்றையும் இழந்து விட்டுத் தலைமறைவாக இருந்தா ரென்பதைப் பிறகு அறிந்து மிகவும் வருந்தினேன். அவர் தம் சொத்தை இழந்தாரென்பதற்காக நான் வருந்தாமல், தமிழ்ச் செல்வம் அவர் கையை விட்டுப் போயிற்றே என்பதற்காக வருந்தினேன்.

    “அப்படியானால் உங்களிடம் இப்போது ஒரு சுவடியும் இல்லையா? என்று மெலிந்த குரலோடு கேட்டேன்.

    “சில ஒற்றை ஏடுகளும் இரண்டொரு புத்தகமும் உள்ளன” என்றார்.

    அவற்றைக் காட்டும்படி கேட்டபோது அவர், “ஒரு வீட்டின் மச்சில் வைத்திருக்கிறேன். பகல் நேரத்தில் வந்து எடுத்துக் கொடுக்க முடியாது; ராத்திரி எடுத்து வருகிறேன்” என்று கூறினார்.

    அன்று இரவு அந்த ஒற்றை ஏடுகள் அவரிடமிருந்து கிடைத்தன. அவற்றில் ஆறு செய்யுட்கள் இருந்தன.

    சிற்றட்டகம் என்ற பழைய நூலைச் சேர்ந்தனவாக இருக்கு மென்று கருதினேன். இன்றளவும் அந்நூல் கிடைக்கவில்லை.

    ஒற்றை ஏடுகளைப் பெற்றாலும் ஒரு பெருநூலையே பெற்றது போன்ற மகிழ்ச்சியை நான் அடைந்து சுப்பையா பிள்ளையைப் பாராட்டி விடைபெற்றுக் கொண்டேன். தென்காசியிலிருந்து வேறு சில ஊர்களுக்குப் போய்ப் பார்த்தும் சிலப்பதிகாரப் பதிப்புக்குப் பயன்படும் சுவடிகள் கிடைக்கவில்லை. ஆதலால் திரிகூடராசப்பக் கவிராயரிடம் விடைபெற்றுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

    அடியார்க்கு நல்லாருரையிலுள்ள குறையைப் போக்கிக் கொள்ளுவதற்கு நான் அலைந்த அலைச்சலும் பட்ட சிரமமும் கொஞ்சமல்ல, ஐம்பது ஊர்களுக்கு மேல் பிரயாணம் செய்தேன். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. இனிமேல் பிரயாணத்தை நிறுத்திக் கொண்டு சிலப்பதிகாரத்தை அச்சிடற்குரிய முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். உடனே சிறுவயல் ஜமீன்தாருக்கெழுதித் திருமானூர்க் கிருஷ்ணையரைக் கும்பகோணத்திற்கு வருவித்தேன். அவரையும் வேறு அன்பர்களையும் வைத்துக்கொண்டு முடிந்தது முடித்தலாகப் பதிப்புக்கு வேண்டிய அங்கங்களைச் செப்பஞ் செய்யலானேன்.

    அச்சுப் பிரதிகள்

    சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தின் மூலத்தை மாத்திரம் பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீநிவாச ராகவாசாரியரென்பவர் முன்பு பதிப்பித்திருந்தார். ‘சேரமான் பெருமாணயனார் இயற்றிய சிலப்பதிகாரம்’ என்று அவர் பதிப்பித்தார். 1880-ஆம் வருஷத்தில் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அக்காண்டத்தின் மூலத்தை அடியார்க்கு நல்லார் உரையோடு அச்சிட்டார். இரண்டு பதிப்புக்களும், அக்காலத்தில் சிலப்பதிகாரம் பாடமாக வந்தமையால் வெளியானவை. அவற்றிற் பல வகையான பிழைகள் இருந்தன. செட்டியார், கடின நடையாயுள்ளனவற்றை எளிய நடைகளாகச் செய்தும், வேண்டிய இடங்களில் விரித்துஞ் சுருக்கியும், கானல்வரிக்கு உரையின்மையால் உரையெழுதியும், அரங்கேற்று காதையுள் வரம்பின்றிப் பரந்த இசை நாடக இலக்கணங்கள் பல விடங்களிலும் வருதலால் ஆங்காங்குணர இங்குச் சுருக்கியும், அக்சிட்டதாக முகவுரையில் தெரிவித்திருக்கிறார். அதனால் அடியார்க்கு நல்லாருரை முழுதும் அப்படியே அப்பதிப்பில் அமைந் திருக்கவில்லை யென்பது தெரியவரும். அவர் மதுரைக் காண்டத் தையும் அச்சிட முயன்றும் அது நிறைவேறவில்லை.

    ஏட்டுப் பிரதிகள்

    இந்த இரண்டு அச்சுப் பிரதிகளால் எனக்கு ஒரு நன்மையும் உண்டாகவில்லை. நான் தேடித் தொகுத்தவற்றில் உரைப் பிரதிகள் பதினான்கும் மூலப் பிரதிகள் எட்டும் இருந்தன. அவற்றை நன்கு பரிசோதித்துத் தீர்மானமான பாடத்தைக் கைப்பிரதியில் அமைத்துக் கொண்டேன். பிறகு நூலுக்கு அங்கமான பகுதிகளைத் தொகுக்கத் தொடங்கினேன். தமிழ் நூற்பதிப்பில் நாளாக ஆக உண்டான ஆராய்ச்சிப் பழக்கமும் பண்டைத் தமிழ் நூலறிவும் புதிய புதிய முறைகளைத் தோற்றுவித்தன. சிந்தாமணிப் பதிப்பைக் காட்டிலும் பத்துப் பாட்டிற் சில புதிய பகுதிகளைச் சேர்த்தேன். அதைக் காட்டிலும் சிலப்பதிகாரத்தில் இன்னும் சில பகுதிகளை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவியாகச் சேர்க்க வேண்டுமென்று தோற்றியது. அவற்றிற்குரிய விஷயங்கள் சிலப்பதிகார மூலத்திலும் உரையிலும் பல இருந்தன. அடியார்க்கு நல்லார் உரையினால் தெரியவரும் நூல்களைப் பற்றிய குறிப்புக்களை அவசியம் எழுத வேண்டுமென்ற ஆசை எனக்கு மிகுதியாக எழுந்தது. நூலாலும் உரையாலும் அறியப்படும் அரசர் முதலியோர் பெயர்களை வகைப் படுத்தி அகராதி வரிசையில் அமைக்க வேண்டுமென்பது மற்றொரு விருப்பம். இப்படி என்னுடைய ஆராய்ச்சி வகை விரிந்து கொண்டே சென்றது. தனித்தனியே விஷயங்களைப் பிரித்து வகைப் படுத்தி ஒவ்வொரு தலைப்பிட்டுத் தொகுத்து அகராதி வரிசையாக எழுதச் செய்தேன். என்னுடன் இருந்து உழைத்த மாணாக்கர்களும் அன்பர்களும் இந்த வேலையில் துணையாக இருந்தார்கள். காங்கேயம் ஜே. வி. சுப்பிரமணிய ஐயர் என்ற மாணாக்கர் மிகுதியான உதவியைச் செய்தார்.

    பதிப்புக்குரிய ஆராய்ச்சி

    அரும்பதங்களையெல்லாம் தொகுத்து அகராதியாக எழுதிக் கொண்டேன். அரிய விஷயங்களையெல்லாம் ஒன்றாக்கி விஷய சூசிகை என்ற தலைப்பிட்டுத் தனியே ஓர் அகராதி சித்தம்செய்தேன். இப்படியே நூலாலும் உரையாலுந் தெரிந்த அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள் பெயர்களுக்குத் தனித்தனியே அகராதியும் அடியார்க்கு நல்லாரு ரையிற் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதி முடித்தேன்.

    சிலப்பதிகாரக் கதைச் சுருக்கமும், இளங்கோவடிகள் வரலாறும், அடியார்க்கு நல்லார் வரலாறும், மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புக்களும் எழுதப் பெற்றன.

    எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு முகவுரையை எழுதத் தொடங்கினேன். முந்தின நூற்பதிப்புக்களில் நூல் அச்சாகும் காலத்தில் முகவுரையை எழுதினேன். இதற்கு முதலிலே எழுதி விட்டால் பிறகு வேண்டியவற்றைச் சேர்த்துக் கொள்ளலா மென்றெண்ணினேன்.

    ஏட்டுச் சுவடிகளின் நிலையைப் புலப்படுத்த வேண்டுமென்பது என் விருப்பம். ஆகவே முகவுரையில், “மேற்கூறிய பழைய பிரதிகள் பல, இனி வழுப்பட வேண்டுமென்பதற்கு இடமில்லாமற் பிழை பொதிந்து, அநேக வருடங்களாகத் தம்மைப் படிப்போரும், படிப் பிப்போரும் இல்லை என்பதையும், நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே விரதமாகக் கொண்ட சில புண்ணியசாலி களாலேயே தாம் உருக் கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின. ஒன்றோடொன்றொவ்வாது பிறழ்ந்து குறைவுற்றுப் பழுதுபட்டுப் பொருட்டொடர்பின்றிக் கிடந்த இப்பிரதிகளைப் பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ள முருகும்” என்று எழுதினேன்.

    இவ்வாறு சிலப்பதிகாரத்தை அச்சிடுவதற்கு ஏற்ற நிலையில் அமைத்து நிறைவேறும் தருணத்தில் கொழும்பு பொ. குமாரசுவாமி முதலியாருக்கு அச்செய்தியைத் தெரிவித்தேன். சிலப்பதிகாரப் பதிப்புச் செலவை அவர் ஏற்றுக் கொள்வதாக முன்னர் எழுதியிருந்ததோடு அடிக்கடி அந்நூலைப்பற்றி விசாரித்து வந்தனர். அவர் தாம் ரூ. 300 அனுப்புவதாகத் தெரிவித்தார். சிலப்பதிகாரப் பதிப்பை நிறைவேற்றுவதற்கு அத்தொகை போதா விட்டாலும் ஏற்றுக்கொண்டேன்.

    பதிப்பு ஆரம்பம்

    1891-ம் டு ஜூன் மீ கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்று சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினேன். திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்தார் கேட்ட அச்சுக்கூலி அதிகமாகத் தோன்றியமையால் வெள்ளைய நாடார் ஜூபிலி அச்சுக் கூடத்தில் அச்சிட ஏற்பாடு செய்தேன். பூந்தமல்லி ஹைரோடில் உள்ள அச்சுக்கூடத் தலைவராகிய தவசி முத்துநாடார் பங்களாவில் முதலில் தங்கினேன். பிறகு திவான் ராமையங்கார் தோட்டத்தில் ஜாகை வைத்துக்கொண்டேன். ராமையங்கார் மாப்பிள்ளையும் என் மாணாக்கருமாகிய வக்கீல் கே. ராஜகோபாலாசாரியரென்பவர் எனக்கு இடம் கொடுத்து வேண்டிய சௌகரியங்களையும் செய்வித்தார். திருமானூர்க் கிருஷ்ணையர் உடனிருந்து வேலைகளைக் கவனித்து வந்தார்.

    சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரை மிகவும் சிதைந்திருந்தமை யால் அதனைப் பதிப்பிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ‘சிலப்பதிகாரம் நிறைவேறட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒரு முடிவு செய்யாமல் நிறுத்தினேன்.

    சென்னையில் தங்கிய அக்காலத்தில் அந்நகரத்திலுள்ள பல வித்துவான்கள் வீட்டுக்குச் சென்று ஏட்டுச்சுவடிகளைத் தேடினேன். சரவணப் பெருமாளையருடைய கொள் பேரராகிய குருசாமி ஐயரென்பவர் வீட்டில் சிலப்பதிகார அரும்பத உரையில் பத்து ஒற்றையேடுகள் கிடைத்தன. அவற்றைப் பெற்று என்னிடமுள்ள ஏட்டோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தங்களைச் செய்து கொண்டேன். மற்றப் பகுதிகள் எங்கே போயினவென்று குருசாமி ஐயரைக் கேட்டபோது அவை போனவிடம் தமக்குத் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்.

    இரு விருந்து

    சிலப்பதிகாரப் பதிப்பு வேகமாகவே நடைபெற்று வந்தது. அச்சுக்கூடத்துக்கும் சாப்பாட்டு விடுதிக்கும் இடையே இரண்டு மைல் தூரம் இருக்கும், காலையில் 10 மணிக்கு ஆகாரம் செய்து விட்டுச் சென்றால் இரவு வந்து தான் உணவு கொள்வேன். ஒருநாள் இரவு 8 மணிக்கு உணவு கொள்ளும் விடுதியில் வந்து சாப்பிடும் போது ஆகாரம் நன்றாயிராமையால் தடுமாறினேன். நாற்றமுள்ள நெய்யும் உப்புக்காரம் இல்லாத குழம்பும் வேகாத அன்னமும் குடலைக் குமட்டிக் கொண்டு வந்தன. அப்போது அவ்விடுதிக்கு வடக்கேயுள்ள ஹநுமார் கோயிலில் இராமர் சந்நிதியில் சிலர் திவ்யப் பிரபந்த ஸேவை செய்து கொண்டிருந்தனர். அது காதில் விழுந்தது. உற்றுக் கவனிக்கையில் பெருமாள் திருமொழியென்று தெரிந்தது. உடனே எழுந்து கை கழுவிக்கொண்டு அங்கே சென்றேன்.

    அன்று புனர்வசு நக்ஷத்திரம். ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் பலர் குலசேகரப் பெருமாள் வாக்கிலிருந்து தசரதன் புலம்பலென்னும் பகுதியிலுள்ள பாசுரங்களை நிறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தனர். சிலர் எனக்குப் பழக்கமானவர்கள். நான் போனவுடன் எனக்கு இடம் கொடுத்துப் பின்னும் மெல்லச் சொல்லலாயினர். அந்தப் பாசுரங் களைக் காது குளிரக் கேட்டேன்; பசியை மறந்தேன். உடலிளைப்புக் கூடத்தீர்ந்தது போலத் தோற்றியது. இந்தச் செவி விருந்தோடு நிற்கவில்லை. அதன் பிறகு, நிவேதனமான சித்திரான்னங்களும் கிடைத்தன. இரட்டை விருந்து பெற்று மகிழ்ந்தேன்.

    விடுமுறை நாட்கள் தீர்ந்து விட்டமையால் பதிப்பு வேலையைத் திருமானூர்க் கிருஷ்ணையரைக் கவனித்துக் கொள்ளும்படியும் புரூபை எனக்கு அனுப்பும்படியும் ஏற்பாடு செய்துவிட்டுக் கும்பகோணத்திற்கு வந்தேன்.
    ----

    அத்தியாயம்-115
    சிலப்பதிகார வெளியீடு

    கும்பகோணத்திற்கு வந்து வழக்கம் போலக் காலேஜ் வேலையோடு சிலப்பதிகாரப் பதிப்பு வேலையையும் கவனித்து வந்தேன். அந்நூற்பதிப்பு விஷயத்தில் காகித விலை, அச்சுக்கூலி முதலியவற்றிற்குப் போதுமான பொருள் என் கையில் இல்லை. புத்தகத்துக்கு வேண்டிய விஷயங்களை விளக்கமாக அமைக்கும் முயற்சியில் மாத்திரம் என் திறமை வளர்ந்ததே யன்றி, பிரசுரம் செய்வதற்குரிய பொருள் வசதியை அமைத்துக்கொள்ளும் விஷயத்தில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை. சிலப்பதிகாரத்தில் ஏழு காதைகள் அச்சிட்டு நிறைவேறியிருந்தன; மேலே 23 காதைகள் நிறைவேற வேண்டியிருந்தன.

    பொருளுதவி செய்த அன்பர்கள்

    எனது நிலையைத் தமிழ் அபிமானிகளுக்கும் நண்பர்களுக்கும் கனவான்களுக்கும் தெரிவித்தேன். திருவாவடுதுறை, குன்றக்குடி, திருப்பனந்தாளென்னும் மடங்களிலுள்ள தலைவர்களும், கொழும்பு பொ. குமாரசாமி முதலியாரவர்களும், கும்பகோணம் சாது சேஷையரவர்களும் வேறு பல கனவான்களும் தக்க சமயத்தில் பொருளுதவி புரிந்தனர். அதனால் மேலே பதிப்பை நடத்திச் செல்வதற்குரிய தைரியம் எனக்கு உண்டாயிற்று.

    இராமசுவாமி முதலியார் பிரிவு

    சிலப்பதிகாரப் பதிப்பு வேகமாகவே நடைபெற்று வந்தது. விரைவில் அதனை முடித்து விட்டு அப்பால் வேறு நூல்களை அச்சிடத் தொடங்கவேண்டுமென்று எண்ணினேன். இடையிடையே புறநானூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை முதலிய பழைய நூல்களின் ஆராய்ச்சியும் நடைபெற்று வந்தது. அக்காலத்தில் என் அரிய நண்பரும் பேருபகாரியுமாகிய சேலம் இராமசுவாமி முதலியாரை இழக்கும் துர்ப்பாக்கியம் இத்தமிழ் நாட்டிற்கு நேர்ந்தது. 1892-ஆம் வருஷம் மார்ச்சு மீ இரண்டாம் தேதி அவர் உலக வாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு நான் துடிதுடித்துப் போனேன். அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இராவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? துக்க உணர்ச்சியோடு சில பாடல்களை எழுதினேன். அவற்றுட் சில வருமாறு:-

      “என்புடையா ரன்புடைய இராமசா மிக்குரிசில்
      உன்புடையார் நயசுகுணம் ஒவ்வொன்றை யுன்னியுன்னி
      அன்புடையார் பல்லோரும் ஆற்றும்வழி காணாராய்த்
      துன்புடையா ராகிமனஞ் சோர்ந்திடவெங் ககன்றனையே!”

    [என்புடை-என்னிடத்தில்]

      “இன்றேனும் பாலுமெனும் இன்சொலுடை யாய்வைரக்
      குன்றேனும் ஒவ்வாக் குணனுடையாய் குற்றத்துள்
      ஒன்றேனும் உனையணுக ஒண்ணாதோ சார்ந்திருப்பின்
      என்றேனும் நிற்பிரிதல் எம்மை வருத்திடுமோ!”

    [இன் தேனும், நிற்பிரிதல் - உன்னைப்பிரிதல்.]

      “ஊர்க்குழைப்பான் போனானென் றுலைவாரும் போனானிப்
      பார்க்குழைப்பா னென்று பதைப்பாருந் தமிழெனுமுந்
      நீர்க்குழைப்பா னென்றுருகி நிற்பாரு மாய்க்கலங்க
      ஆர்க்குழைப்பான் சென்றாய் அளியுடைய அண்ணலே!”

    [உலைவார் - வருந்துவார். தமிழெனும் முந்நீர் - தமிழென்னும் கடல். அளி - அன்பு.]

    சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டையும் புத்தக வடிவத்திற் பார்க்க வேண்டுமென்று முதலியார் எவ்வளவோ ஆவலோடிருந்தார். அவர் இருந்த காலத்தில் அவ்விரண்டையும் நிறைவேற்றும் பேறு எனக்கு இல்லாமற் போயிற்று.

    இடையில் ஓய்வு கிடைத்த காலத்தில் சென்னைக்குச் சென்று வருவேன். 1892-ம் வருஷம் கோடை விடுமுறையில் அங்கே போயிருந்தபோது, திருமானூர்க் கிருஷ்ணையர் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தமையால் அவருக்கு விடை கொடுத்தனுப்பி விட்டேன். திருவழுந்தூர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியரும் தில்லைவிடங்கன் வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளையும், மில்லர் காலேஜிலிருந்த சுப்பராயலு நாயடு என்பவரும் தங்களாலான உதவிகளைச் செய்தார்கள். சுறுசுறுப்பும் கூர்மையான அறிவும் உள்ள வை. மு. சடகோப ராமானுஜாசாரியர் பெரும்பாலும் என்னுடன் இருந்து ஒப்பிட்டுப் பார்த்தல் முதலிய உதவிகளையெல்லாம் செய்து வந்தார்.

    சிலப்பதிகாரம் மூலமும் உரையும் முற்றுப்பெறும் நிலையில் இருந்தன. நண்பர்கள் பலர் அரும்பதவுரையையும் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தினமையால் அதனைச் செப்பஞ் செய்து சிலப்பதிகாரத்தின் பின் அச்சிடும்படி கொடுத்து விட்டேன். அரும்பதவுரையின் முகவுரை

    சிலப்பதிகாரத்திற்குரிய முகவுரையை முதலில் எழுதி விட்டேன். அதில் அரும்பதவுரையைப் பற்றி அதிகமாக எழுதாமல் ஓரிடத்தில் அடிக் குறிப்பில், இவ்வரும்பதவுரை, தனியே அச்சிட்டு இப்புத்தகத்தினிறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கிறது’ என்று மாத்திரம் எழுதினேன்.

    அரும்பதவுரை முழுவதும் அச்சான பிறகு அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டியவற்றைத் தனியே எழுத வேண்டுமென்று தோற்றியது. அதை எழுதி விட்டால் சிலப்பதிகாரப் புத்தகம் நிறைவேறிவிடும்.

    இந்த நிலையில், அச்சுக்கூடத்திற்குக் கொடுக்க வேண்டிய பணம் என் கையில் இல்லாமையால், திருவல்லிக்கேணியிலிருந்த நார்ட்டன் துரை குமாஸ்தாவாகிய விசுவநாத சாஸ்திரியாரிடம் போய் வேண்டிய தொகையைப் பெற்றுக் கொண்டேன்.

    அன்று வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை சிலப்பதிகார வேலையைப் பூர்த்தி செய்து ஒரு புத்தகத்தைப் பைண்டு செய்வித்துக் கண்ணால் பார்த்துவிட்டுக் கும்பகோணம் செல்ல வேண்டுமென்ற விருப்பம் பலமாக இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை விசுவநாத சாஸ்திரியாரை அணுகியபோது அவர் அன்றிரவு தம் வீட்டிலேயே உணவு கொள்ளச் செய்தார். இரவில் அங்கே தங்கினேன்.

    அரும்பதவுரைக்கு முகவுரை எழுத எண்ணிக் காகிதமும் பேனாவும் சாஸ்திரியாரிடம் வாங்கிக்கொண்டு எழுத உட்கார்ந்தேன். எனக்கிருந்த சோர்வினாலும் பசியோடு ஆகாரம் செய்தமையாலும் உடனே தூக்கம் வந்து விட்டது. ஒன்றும் செய்ய இயலாமல் படுத்துக் கொண்டேன். படுத்துக் கொள்ளும் போது, ‘இப்பொழுதும் முகவுரை எழுதவில்லையே! நாளை எட்டு மணிக்கு அச்சுக் கூடத்திற் கொடுத்தால் தானே நாளைக்கே புத்தகத்தை முடித்துக் கண்ணாற் பார்க்கலாம்?’ என்ற கவலை மாத்திரம் இருந்தது.

    ‘விடியற் காலையில் எழுந்து எழுதிவிட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு ஒரு மெழுகுவர்த்தியும் நெருப்புப் பெட்டியும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

    நன்றாகத் தூங்கினேன். இரவில் இடையே விழிப்பு ஏற்பட்டது. பூர்த்தியாகாத சிலப்பதிகாரப் புத்தகம் என் அகக் கண்முன் நின்றது. எழுந்து விளக்கேற்றிப் பார்க்கையில் இரண்டு மணிதான் ஆகியிருந்தது. அரைத் தூக்கத்தில் எழுந்தமையால் மீட்டும் படுத்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியே மேலோங்கி நின்றது.

    ‘படுத்துக் கொண்டால் நான்கு மணிக்கு எழுந்திருக்க முடியுமா? அயர்ச்சியால் நெடுநேரம் தூங்கி விட்டால் காரியம் அரைகுறையாக நின்று விடுமே!’ என்று பலவிதமான சிந்தனைகள் எழுந்தனவே யொழிய எழுத வேண்டுமென்ற வேகம் உண்டாகவில்லை. உலகமெல்லாம் குறட்டை விட்டுத் தூங்கும் அச்சமயத்தில் ஓய்ந்து போன நிலையில் எனக்கு ஊக்கம் ஏற்படுவதற்கு அனுகூலமான பொருள் யாதும் இல்லை.

    கண்கள் சுழன்றன. கொட்டாவி விட்டேன்; அண்ணாந்த போது எதிரே சுவரில் இருந்த ஒரு படம் என் கண்ணிற் பட்டது. இன்னாருடைய படமென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. படத்திலுள்ளவர் மிக்க் சுறுசுறுப்பும் முயற்சியும் உடையவரென்பது தோற்றத்திலிருந்தே தெரிந்தது. அத்தோற்றம் என் உள்ளத்துள்ளே ஊக்கத்தை எழுப்பியது. ‘இவர் யாரோ தெரியவில்லை; என்ன துடியாய் இருக்கிறார்! நாம் சோர்விலே மூழ்கியிருக்கிறோமே!’ என்று எண்ணினேனோ இல்லையோ, உடனே பேனாவை எடுத்தேன்; எழுதத் தொடங்கி விட்டேன்.

    அரும்பதவுரையைப் பற்றி என் ஞாபகத்துக்கு வந்தவற்றை வைத்துக்கொண்டு சுருக்கமாக ஒரு முகவுரை எழுதி முடித்தேன். அப்படி எழுதியதை மீட்டும் படித்துச் செப்பஞ் செய்து கொண்டேன். பிறகு எனக்குத் தூக்கம் வர நியாயம் ஏது? > காலையில் விசுவநாத சாஸ்திரியாரிடம் அந்தப் படம் யாருடையதென்று விசாரித்தேன். அவருடைய தலைவராகிய நார்ட்டன் துரையினதென்று தெரிந்து கொண்டேன். அப்படத்தைக் கண்டு எனக்கு உண்டான ஊக்கத்தையும் அதனால் விளைந்த நன்மையையும் அவரிடம் சொன்னேன்.

    சனிக்கிழமையன்று சிலப்பதிகாரத்தில் எஞ்சியிருந்த பகுதி களெல்லாம் அச்சாயின. ஞாயிறன்று இரவு பைண்டு பண்ணின பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு கும்பகோணத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

    சிலப்பதிகாரப் புத்தகங்கள் பைண்டாகிச் சென்னையிலிருந்து வந்தவுடன் அனுப்ப வேண்டியவர்களுக்கெல்லாம் அனுப்பினேன். அதனைக் கண்ட அன்பர்கள் மிகவும் பாராட்டிக் கடிதம் எழுதி னார்கள் இராமநாதபுரம் ராஜா மு. பாஸ்கர சேதுபதியவர்களுக்கும் பிரதிகள் அனுப்பினேன். அவர் புத்தகம் கிடைத்த விவரத்தைத் தெரிவித்ததோடு தக்க சந்தர்ப்ப மொன்றில் என்னை இராமநாதபுரத்துக்கு அழைக்க நேருமென்றும், அப்போது தவறாமல் வர வேண்டுமென்றும் எழுதினார்.
    சரித்திரச் செய்திகள்

    சீவகசிந்தாமணியும் பத்துப் பாட்டும் தமிழ் நாட்டில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே, பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும், தமிழில் இருந்த கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. ‘கண்டறியாதன கண்டோம்’ என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்.

    சிலப்பதிகாரம் மிக அரிய சரித்திரச் செய்திகளை உடையது. தமிழ் நாட்டு அரசனாகிய செங்குட்டுவன் வட நாடு சென்று வடவேந்தர்களை வென்று கண்ணகியின் படிமச்சிலை கொணர்ந்த செய்தி மிக்க விம்மிதத்தை உண்டாக்கியது. அன்றியும், சங்க காலத்தை நிர்ணயிப்பதற்குச் சிலப்பதிகாரம் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியில் வல்ல பலருடைய கவனத்தை அந்நூல் கவர்ந்தது.

    அடியார்க்கு நல்லார் உரையினால் அறிந்த வேறு நூல்கள் தமிழன்பர்களுடைய அறிவுக்கு விருந்தாயின. இதனை எதிர்பார்த்தே அவருரையிற் கண்ட நூல்களைப் பற்றிய குறிப்புக்களைத் தனியே தொகுத்து வெளியிட்டிருந்தேன்.

    பெருங்கதை

    அவ்வுரையினால் நான் அறிந்த பல செய்திகளுள் முக்கியமானது பெருங்கதை என்னும் நூலின் சிறப்பாகும். நான் தேடித் தொகுத்த நூல்களுள் ‘கொங்குவேள் மாக்கதை’ என்பது ஒன்று. அது யாரோ கொங்குவேள் என்ற ஒருவரைப் பற்றிய கதையாக இருக்கலா மென்றுதான் எண்ணியிருந்தேன். முன்னும் பின்னும் இல்லாத அந்த நூற்சுவடி என் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது.

    அடியார்க்கு நல்லாருரையை ஆராய்ச்சி செய்தபோது ஓரிடத்தில், “கூத்தியரிருக்கையுஞ் சுற்றிய தாகக், காப்பிய வாசனை கலந்தவை சொல்லி” என்ற அடிகளை அவர் எடுத்துக் காட்டி யிருப்பதைக் கண்டேன்; இடைச்சங்க காலத்து நூல்களை ஆராய்ந்து செய்த உதயணன் கதையில் அவ்வடிகள் உள்ளன வென்று அவர் அறிவித்திருந்தார்.

    ஒரு நாள் என்னிடமிருந்த கொங்குவேள் மாக்கதையென்னும் சுவடியைப் புரட்டிய போது அந்த இரண்டு அடிகளை அதிற் கண்டேன் ஊன்றிக் கவனித்தேன். முன்னும் பின்னும் பார்த்தேன். உதயணனென்ற பெயர் பலவிடங்களில் வந்தது கொங்குவேள் மாக்கதையே உதயணன் கதையென்று தெரிய வந்தது. பின்னும் அடியார்க்கு நல்லாருரையினால் அதற்குப் பெருங்கதை, கதையென்ற பெயர்களும் உண்டென்பதை உணர்ந்தேன். அதுகாறும் அந்நூலைக் கவனியாதிருந்த நான் அதனை ஆவலோடு படித்துப் பார்க்க ஆரம்பித்தேன்.

    நான் எழுதிய நூற்குறிப்புக்களில் என்னிடமுள்ள சுவடிகளி லிருந்து தெரிந்த செய்திகளையெல்லாம் புலப்படுத்தினேன். உதயணன் கதையைப்பற்றி எழுதுகையில், “இப்பொழுது கிடைத்த கையெழுத்துப் பிரதியில் முதலும் கடையும் பழுதுபட்டுப் போய் விட்டமையால் முதலாவது உஞ்சைக் காண்டத்தில் 32 சிற்றுறுப்புக்கள் காணப்படவில்லை; ஐந்தாவது நரவாண காண்டதின் மேலுள்ள காண்டங்கள் இவை யென்பதும், அவற்றின் சிற்றுறுப்புக்கள் இத்தனை யென்பதும் தெரியவில்லை. இவ்வடியார்க்கு நல்லாருரைப் பரிசோதனையாலேயே இந்நூல் இக்காலத்து வெளிப்பட்டதென்று சொல்லலாம்” என்று குறித்தேன். அந்நூற் பிரதி என்னிடத்தில் இருப்பதை இதனால் ஒருவாறு குறிப்பாக வெளிப் படுத்த வேண்டுமென்பதும் என் நோக்கம்.

    பிற நூல்கள்

    இப்படியே முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய குறிப்பில், “முத்தொள்ளாயிர” மென்னும் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை; ஆயினும், ‘வாரிய பெண்ணை’ என்னும் இவ்வெண்பா, தான் எடுத்துக் காட்டும் செய்யுட்களின் தலைப்பில் அவ்வந்நூற் பெயரை எழுதி விளக்கும் ‘புறத்திட்டு’ என்னும் புத்தகத்திலெழுதப் பட்டிருத்தலால், முத்தொள்ளாயிரத்தி லுள்ளதென்றறியப் பட்டது” என்று புறத்திரட்டைப் பற்றிய செய்தியை எழுதினேன்.

    இவ்வாறே அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, மணிமேகலை என்னும் பழைய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை விரிவாக எழுதினேன். திருக்கோவையாருரை பேராசிரியர் இயற்றியதென்பதை ஒரு குறிப்பிற் பின்வருமாறு வெளிப்படுத்தினேன். “அவ்வுரையாசிரியர் நச்சினார்க்கினியரென்பது பலருடைய கொள்கை; யான் எண்ணியிருந்ததும் அதுவே. ஆயினும் தமிழ்ப் பிரயோக விவேக நூலாசிரியராகிய சுப்பிரமணிய பண்டிதர் தாமியற்றிய அப்பிரயோக விவேக நூலுரையில் இந்நூலுக்கு உரை செய்தோர் பேராசிரியரென்று பலவிடத்தும் புலப்படுத்தினமையானும், தென்னாட்டில் ஆழ்வார் திருநகரி முதலியவற்றிலிருந்த பரம்பரைத் தமிழ் வித்துவான்கள் வீடுகளில் இருக்கும் ஏட்டுப் பிரதிகளில் திருச்சிற்றம்பலக் கோவையாருரை என்றுள்ளவைகளுட் பலவற்றின் தலைப்பிலும் பேராசிரியருரையென்றே எழுதப்பட்டிருத்தலானும், உன்றிப் பார்த்தவிடத்துச் சிறிதும் அவைகள் வேறுபாடின்றி அச்சிடப்பட்ட உரையாகவே இருத்தலானும் இந்நூலுரையாசிரியர் நச்சினார்க்கினியரென்று ஒரு தலையாகச் சொல்லக் கூடவில்லை.”

    நான் எழுதிய இத்தகைய குறிப்புக்கள் தமிழன்பர்களுடைய ஆவலை அதிகமாக்கின. முகவுரையின் இறுதியில், “இச்சிலப்பதி காரத்தைப் போலவே நான் பதிப்பிக்க விரும்பிய நூல் ஒவ்வொன் றையும் கருதிய வண்ணம் நிறைவேற்றுதற் பொருட்டும், பிரதியுதவி பொருளுதவி முதலியன புரிந்தோர் பெரு வாழ்வடையும் பொருட்டும் திருவருள் சுரக்கும்படி எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய இறைவனுடைய திருவடித் தாமரைக்களைப் பிரார்த்திக்கின்றேன்” என்று எழுதியிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்து தமிழ் நாட்டில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. அங்கங்கே உள்ளவர்கள் கூடி என்னை வாழ்த்தி மேலும் நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று அறிவித்தனர். என்னுடைய அன்பர்கள் தனித்தனியே கடிதம் எழுதி, இன்ன இன்ன நூலைத் தொடங்க வேண்டுமென்று வற்புறுத்தினர்.

    சிலப்பதிகாரம் நிறைவேறியவுடன், இவ்வாறு வேறு அணிகலன் களையும் துலக்கித் தமிழ் மகளுக்கு அணியவேண்டுமென்ற அன்புக் கட்டளை தமிழ் நாட்டாரிடமிருந்து எனக்குக் கிடைத்தமையின், மீண்டும் எந்த நூலைத் தொடங்கலாமென்ற எண்ணத்தில் நான் ஆழ்ந்தேன்.
    ------

    அத்தியாயம்-116
    கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும்

    பல வருஷங்களுக்கு முன் ஒரு நாள் திருவாவடுதுறை மடத்தில் ஆதீனத் தலைவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் தேரழுந்தூரி லிருந்து ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவர் வந்தார். அவ்வூரின் விசேஷங்களைப் பற்றி நான் அவரிடம் விசாரிக்கலானேன். அவர் மூலமாகக் கம்பர் பிறந்த ஊர் அத்தேரழுந்தூரே என்று தெரிய வந்தது.

    அழுந்தூர் மடம்

    திருவழுந்தூரென்பதே அதன் இயற்பெயர். அதற்குத் திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகம் ஒன்றுண்டு. அதில் அழுந்தை என்று அதன் பெயர் சொல்லப் பெற்றுள்ளது. திருவாவடுதுறைக்கு வந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவ்வூர்ச் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் வேதபுரீசரென்று சொன்னார். “சிவாலயத்தில் தனியே மகா மடேசுவரர் என்ற மூர்த்தி இருக்கிறார். தீர்த்தத்தின் அதிஷ்டான தெய்வமென்று பெரியவர்கள் சொல்வார்கள்” என்றும் அவர் கூறினார் அப்போது,

      “அழுந்தை மாமறையோர்
      வழிபாடுசெய் மாமட மன்னினையே”

    என்ற தேவாரப் பகுதி என் நினைவுக்கு வந்தது. திருஞான சம்பந்தராற் பாடப் பெற்ற மூர்த்தி அந்த மகாமடேசுவரராகத் தான் இருக்க வேண்டுமென்று தோற்றியது. ‘மாமறையோர் வழிபாடு செய்’ என்பதனால் அங்கே முற்காலத்தில் வேதகோஷம் நிரம்பியிருந்ததென்றும், வேதபுரி என்ற பெயர் அவ்வூருக்கு அமைந்தது பொருத்தமென்றும் கருதினேன்.

    கம்பர் பிறந்த ஊர் தேவாரம் பெற்ற ஸ்தலமாக இருந்ததில் காரணமில்லாத திருப்தி ஒன்று எனக்கு ஏற்பட்டது. கம்பர் காலத்தில் பழமறையும் கன்னித் தமிழும் அவ்வூரில் சிறந்து விளங்கி யிருக்கலாம்.
    கம்பர் பிறந்த ஊர்

    கம்பரைப் பற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன. அவரைப் பற்றிய தனிப்பாடல்களும் பல உண்டு.

    அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் தாம் இயற்றிய விநோதரஸ மஞ்சரியில் தனிப் பாடல்களையும் கர்ண பரம்பரைச் செய்திகளையும் பிணைத்துப் படிப்பதற்கு இனிமையாக இருக்கும்படி கம்பர் வரலாற்றை எழுதி விட்டார். ஆனால் சரித்திர உண்மை எவ்வளவு என்பது வேறு விஷயம்.

    கம்பராமாயணச் சிறப்புப் பாயிரங்களிலிருந்தும் தனிப் பாடல் களிலிருந்தும், ‘கம்பர் திருவழுந்தூரிற் பிறந்த உவச்சர், அவரைப் போற்றிப் பாதுகாத்தவர் சடையப்ப வள்ளலென்ற வேளாளர், அவ்வள்ளல் வெண்ணெய் நல்லூரென்னும் ஊரினர்’ என்பன போன்ற செய்திகள் தெரிய வந்தன. மாயூரத்துக் கருகில் திருவழுந்தூரென்ற பெயருடைய ஊர் ஒன்று இருக்கிறது அது சிறந்த விஷ்ணு ஸ்தலம். கம்பர் அங்கே பிறந்திருப்பாரென்ற சந்தேகம் சிலருக்கு எழுந்தது. ஆனால் அவ்வூரின் இயல்பான பெயர் திரு இந்தளூர்.

    உவச்சரென்பார் கோயிற் பூசை புரியும் வகுப்பினர்; ஒச்ச ரென்றும் சொல்வதுண்டு. மிதிலைப் பட்டியில் எனக்குக் கிடைத்த திருவிளையாடற் பயகர மாலையில் அந்நூலின் ஆசிரியர் வீரபத்திரக் கம்பரென்று இருந்தது. அதிலிருந்து கம்பரென்பது குடிபற்றிய பெயரென்றும் கம்பருடைய இயற் பெயர் மறைந்து விடவே, அவர் குடிப் பெயரே நிலைத்ததென்றும் தோற்றியது. பழங்காலத்தில் கம்பத்தை வைத்துப் பூசித்த காரணத்தால் அவர்களுக்குக் கம்ப ரென்ற குடிப் பெயர் வந்ததிருக்கலாம்.

    கதிர் வேய் மங்கலம்

    தஞ்சாவூரில் பிரபல வக்கீலாக இருந்தவரும் என்னிடம் பேரன்பு பூண்டவருமான கே. கல்யாண சுந்தரையர் தம்முடைய ஊராகிய கதிராமங்கலத்தில் ஒரு புது வீடு கட்டி 1892-ஆம் வருஷம் ஜூன் மாதம் கிருகப் பிரவேசம் செய்தார். அவசியம் அந்த விசேஷத்திற்கு வரவேண்டுமென்று அவர் எனக்கு எழுதினார். அந்த அழைப்புக் கடிதம் கிடைத்தவுடன், அவ்வூருக்கருகில் உள்ள கம்பர் பிறந்தவூரையும் பார்த்து விட்டு வர வேண்டுமென்ற ஆவலையும் உடன் கொண்டு சென்றேன்.

    குத்தாலம் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி வடக்கே சில மைல் தூரம் சென்றால் கதிராமங்கலத்தை அடையலாம். நான் ஏறிய ரெயில் வண்டியில் கதிராமங்கல வாசியான கோபால கிருஷ்ண ஜோஸ்யரென்பவரைக் கண்டேன். அவர் கம்பரைப்பற்றிய சில விஷயங்கள் சொன்னார்.

    “கம்பர் பிறந்தது தேரழுந்தூர்தான். அதற்கு வடக்கே வெண்ணெய் நல்லூர் இருக்கிறது. சடையப்ப வள்ளல் இருந்த ஊர் அது எங்கள் ஊராகிய கதிராமங்கலமும் கம்பர் சரித்திர சம்பந்த முடையதே” என்றார் அவர்.

    “எப்படி?” என்று ஆவலோடு கேட்டேன்.

      “கதிர் வேய் மங்கலமென்பது அந்த ஊருக்கு முதலில் ஏற்பட்ட பெயர். அதுவே மாறிக் கதிராமங்கலமென்று ஆயிற்று.”

      “கதிர் வேய் மங்கல மென்ற பெயர் வரக் காரணம் என்ன?”

    “கம்பர் ஒரு தாசியிடம் அன்பு வைத்துப் பழகி வந்தார். அவள் அந்த ஊரில் இருந்தாள். ஒருநாள் தன்னுடைய வீட்டுக் கூரையை வேய வைக்கோல் இல்லையென்று அவள் கம்பரிடம் தெரிவித்தாள். அவர் சடையப்ப வள்ளலிடம் இதைத் தெரிவிக்கவே, அவ்வள்ளல் நெற்கதிர்களையே அறுத்து அவற்றால் வேயச் சொன்னாராம். அதனால்தான் கதிர் வேய் மங்கலமென்ற பெயர் அந்த ஊருக்கு உண்டாயிற்று.”

    இந்தக் கதை அப்போது எனக்குப் புதிதாக இருந்தது. கம்பருக்குத் தாசிகளின் தொடர்பு உண்டென்ற வரலாற்றை மட்டும் கேட்டிருந்தேன். இந்த வரலாறு சடையப்ப வள்ளலின் பெருந்தன்மையை விளக்குவதாக இருந்தது. ‘நாம் கதிரமங்கலம் போவதற்குப் பிரயோசனம் ஆரம்பத்திலேயே கிடைத்து விட்டது’ என்று மகிழ்ந்து அந்த ஜோஸ்யரைப் பாராட்டினேன்.

    கதிராமங்கலத்துக்குப் போய் இந்தக் கதையைப் பலர் வாயிலாகக் கேட்டு உறுதி செய்து கொண்டேன். கிருகப் பிரவேச மான பிறகு தேரழுந்தூருக்குப் போனேன். அங்கே கம்பர் மேடு என்ற ஓரிடத்தைக் காட்டினார்கள். கம்பர் வீடு அம்மேட்டில் இருந்ததென்று சொன்னார்கள். அவ்வூர்ப் பெருமாள் கோயிலில் கம்பர், அவர் மனைவி இவர்களுடைய பிம்பங்களையும் கண்டேன். வேதபுரீசர் ஆலயத்துக்குப் போய் மகாமடேசுவரர் சந்நிதியையும் பார்த்தேன்.

    பக்கத்தில் க்ஷேத்திரபாலபுரம் என்ற ஊர் இருக்கிறது. க்ஷேத்திர பாலரென்பது வயிரவரது திருநாமம். கம்பர் முதல் முதலாகப் பாடிய,

      “வாய்த்த வயிரபுர மாகாளி யம்மேகேள்”

    என்ற பாட்டில் வரும் வயிரவபுரம் அந்த ஊராகத்தான் இருக்க வேண்டும். அவர் குறிப்பித்த காளி கோயில் இன்னும் இருக்கிறது. அதை அங்காளியம்மன் கோயிலென்று வழங்குகிறார்கள்.

    வெண்ணெய் நல்லூர்

    அப்பால் வெண்ணெய் நல்லூருக்குப் போனேன். அதைச் சடையப்ப பிள்ளை கிராமமென்றும் வழங்குவார்கள்; அறுபது வேலி யுள்ளது. அங்கே ஒரு குளம் உண்டு அதன் கரையில் விஷ்ணுவின் விக்கிரகம் இருந்தது.

      “மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
      வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே”

    என்ற பாட்டில் கூறப் பெறும் வாவி அதுதானென்று சிலர் கூறினர்.

    கதிராமங்கலத்திலுள்ள சிவாலயத்திற்குப் போனேன். அங்கே உள்ள ஒரு விநாயகரைத் தரிசிக்கையில் பீடத்தில் ஏதோ எழுதி யிருப்பதைக் கண்டு கவனித்தேன். “வெண்ணெய் நல்லூர்ப் பிள்ளையார்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. மாயூரத்திலிருந்து தஞ்சைக்குச் செல்லும் சாலையில் அவ்விக்கிரகம் இருந்ததென்றும் பாதுகாப்பின் பொருட்டு அதனைக் கொணர்ந்து ஆலயத்தில் வைத் தார்களென்றும் கேள்வியுற்றேன்.

    எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் இன்புற்றுக் கம்பரது நினைவிலே ஊறியவனாய்க் கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தேன். கம்ப ராமாயணத்தைப் படித்துப் படித்து இன்புற்ற எனக்குக் கம்பர் வரலாற்றைப் பற்றிய புதிய செய்திகள் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

    எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளில் காணியாளர் அகவல் என்பது ஒன்று. அதனால் சோழ நாட்டு வேளாளர்களுடைய கோத்திரங்கள் 64 என்பது தெரிய வந்தது. அவற்றுள் சடையப்ப நயினார் கோத்திர மென்பது ஒன்று. சோழ நாட்டு வேளாளர்களுக்கு நயினாரென்ற பட்டம் உண்டு. சடையப்ப வள்ளலது பரம்பரை யினரது கோத்திரமென்றே அதைக் கருதுகிறேன்.

    கம்பரைப் பற்றியும் அவர் ஊரைப் பற்றியும் வேறிடங்களைப் பற்றியும் நான் தெரிந்து கொண்ட இச்செய்திகளைத் திருவாவடு துறை ஆதீன கர்த்தராகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்குச் சொன்னேன். அருங்கலை விநோதராகிய அவர் கேட்டு மிக்க சந்தோஷத்தை அடைந்தார்.

    பிற்காலத்தில் என் புத்தகப் பதிப்புக்கு உதவியாக இருந்த பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் கம்பர் சம்பந்தமான இவ்விஷயங்களை என்னிடம் தெரிந்து கொண்டு இவற்றையும் வேறு சில விஷயங்களையும் சேர்த்துத் தாம் பதிப்பித்த தமிழ்ப் பாட புத்தக உரையில் வெளியிட்டிருக்கிறார்.

    நவராத்திரி விழா

    அவ்வருஷம் நவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமென்று இராமநாதபுரம்
    ஸ்ரீ பாஸ்கர ஸேதுபதியிடமிருந்து எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் காலேஜில் பத்து நாட்கள் ரஜா பெற்றுக் கொண்டு புறப்பட்டு மதுரையில் இறங்கி மாட்டு வண்டியில் இராமநாதபுரம் சென்றேன். வழியில் பல வண்டிகள் தாங்க முடியாத பண்டங்களை ஏற்றிக்கொண்டு சென்றன. பார மிகுதியால் பல அச்சு முறிந்தன. எல்லாம் இராமநாதபுரத்தை நோக்கிச் செல்வதை அறிந்து நவராத்திரி விழாவின் சிறப்பை ஒருவாறு ஊகித்துக் கொண்டேன்.

    இத்தமிழ் நாட்டிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் நூற்றுக் கணக்கான வித்துவான்கள் வந்திருந்தார்கள். தமிழ்நாட்டுக் கனவான்களில் ஒருவர் பாக்கியில்லையென்று தான் சொல்ல வேண்டும். ஊர் தாங்காத கூட்டம் கூடியிருந்தது. பண்டங்களின் விலையெல்லாம் பன் மடங்கு ஏறி விட்டது.

    சேதுபதி மன்னர்களின் குல தெய்வமாகிய ராஜ ராஜேசுவரி அம்பிகைக்கு 1008 சங்கம் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பூஜை முதலியன மிக விரிவாக நிகழ்ந்தன. மேளக் கச்சேரி, சங்கீத வினிகைகள் முதலியவற்றிற்குக் கணக்கேயில்லை. ஸம்ஸ்கிருத வித்வான்களின் சபையும் தமிழ்ப் பண்டிதர்களின் சபையும் நடந்தன.

    மகா வைத்தியநாதையர் அப்போது தேக அசௌக்கியத் தோடிருந்தமையால் வரவில்லை; அவர் தமையனார் மாத்திரம் வந்திருந்தார். இரட்டையரைப்போல அவ்விருவர்களையும் ஒருங்கு பார்த்தே பழகிய எனக்கு இராமசுவாமி ஐயரைத் தனியே பார்த்த போது உயிரில்லா உடம்பைப் பார்ப்பதுபோல இருந்தது “தங்கள் சகோதரர் வரவில்லையே; தேக அசௌக்கியம் கடுமையாக இருக்கிறதோ?” என்று கேட்டேன்.

    “ஆம்; பிரணதார்த்தி ஹரர் திருவருள் என்ன செய்கிறதோ! நான் கூட வருவதாக இல்லை. வைத்தி தான் ‘போய்விட்டு வா’ என்றான். பல காலமாகப் பழகிய இடம்; அதனால் வந்தேன்” என்றார்.

    எனக்குத் தனியே ஜாகை திட்டம் செய்திருந்தார்கள். பல வித்துவான்களை ஒருங்கே சந்திக்கும் சந்தர்ப்பம் அந்த மாதிரி ஏற்படுவது மிகவும் அரிது. சிலப்பதிகாரம் முடிவு பெற்ற சந்தோஷத்தை வித்துவான்களும் அன்பர்களும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டினார்கள். “நீங்கள் கொடுத்திருக்கிற நூல் வரிசையைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறதே! அடுத்தபடி என்ன ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

    “மணிமேகலை இருக்கிறது; புறநானூறு இருக்கிறது; பதிற்றுப் பத்து, ஐங்குநூறு, அகநானூறு, நற்றிணை-இவைகளெல்லாம் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்” என்று சொன்னேன். இன்னதைத் தொடங்குவதென்ற நிச்சயம் அப்பொழுது எனக்கு ஏற்படவில்லை.

    சிறு வயல் ஜமீன்தாராகிய முத்து ராமலிங்கத் தேவருடனும், பாலவநத்தம் ஜமீன்தாரும் பொன்னுசாமித் தேவருடைய குமாரருமாகிய பாண்டித்துரைத் தேவருடனும் நெருங்கிப் பழகிச் சல்லாபம் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு அப்போது கிடைத்தது. முத்து ராமலிங்கத்தேவர் பாஸ்கர சேதுபதிக்குப் பாட்டனார் முறையினர். மேலே நான் வெளியிடும் நூல்களுக்குப் பொருளுதவி செய்வதாக அவர் வாக்களித்தார்.

    அங்கே இருந்த பத்து நாட்களும் பொழுது போனதே தெரியவில்லை. சேதுபதியினுடைய உபசாரமும் சாதுரிய வசனங்களும் கொடைப் பெருமையும் எனக்கு வியப்பை உண்டாக்கின. அந்த விழாவுக்கு இரண்டு லக்ஷ ரூபாய்களுக்கு மேல் செலவாயிற்றென்று தெரிந்தது.

    வித்துவான்கள் சேதுபதியைப் பல படியாக வாழ்த்திப் பாடல்களைக் கூறினர். நானும் சில செய்யுட்களைச் சொன்னேன்.

      “விண்ணிற் சிறந்திடு பாற்கரர் போல் விரும்புமிந்த
      மண்ணிற் சிறந்துயர் பாற்கர பூபதி வாழியவே”

    [பாற்கரர் - பாஸ்கரன் (சூரியன்), பால் போன்ற கிரணத்தை யுடைய சந்திரன்]

    என்ற இரண்டடிகளே இப்போது நினைவுக்கு வருகின்றன.

    சம்மானம்

    நான் சேதுபதி வேந்தரிடம் விடைபெற்றுக் கொண்ட போது அவர் எனக்கு இரண்டு உயர்ந்த சாதராக்களைப் போர்த்தி,

    “தஞ்சாவூர் ஜில்லாவிற்கு வருவேன். அப்போது அவகாசமாக உங்களோடு பேசி உங்கள் தமிழ்ப் பணிக்கு வேண்டிய உதவியைச் செய்வேன்” என்று சொன்னார். புறப்படும்போது தானாதிகாரி என் வழிச் செலவுக்கும் படிச் செலவுக்குமாக ரூபா நூறு அளித்தார். நான் கும்பகோணம் வந்து என் தாய் தந்தையருக்கும் அன்பர்களுக்கும் சாதராக்களைக் காண்பித்தேன். யாவரும் மகிழ்ந்தனர். திருவாவடுதுறைக்குப் போய் அம்பலவாண தேசிகரிடம் காட்டிய போது, “மிகவும் உயர்ந்த சம்மானம்; தங்கள் தகுதியை அறிந்து செய்த சிறப்பு இது” என்று பாராட்டினார்.

    “இந்த ஆதீன சம்பந்தம் இல்லாவிட்டால் எனக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது?” என்று சொல்லி விட்டு, “இவை இரண்டும் என்ன விலைபெறும்?” என்று கேட்டேன்.

    “முந்நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும்” என்றார் அம்பலவாண தேசிகர்.

    “இந்தந் துப்பட்டாவினால் எனக்கு என்ன பிரயோசனம்? இவற்றை இங்கேயே கொடுத்து விடலாமென்று நினைக்கிறேன்.”

    “என்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள்! ஒரு பெரிய சமஸ் தானத்தில் பெற்ற மரியாதை; பத்திரமாக நீங்களே பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.”

    “சிலப்பதிகாரம் அச்சிட்டதனால் ஏற்பட்ட சிரமம் இருக்கிறது. அதைத் தீர்க்க வழியில்லை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? தமிழ்த்தாயின் திருப்பணியினால் வந்த கௌவரம் இவை. ஆகையால் இவற்றை மீட்டும் அதற்கே உபயோகப் படுத்துவதுதான் நியாயம்” என்றேன்.

    அம்பலவாண தேசிகருக்கு, நான் அவற்றைக் கொடுத்து விடுவதில் மனமிராவிட்டாலும் என் குறிப்பை அறிந்து மடத்திலேயே அவற்றை எடுத்துக் கொண்டு அவற்றின் விலையாக ரூ. 300 எனக்கு அளிக்கச் செய்தார். நான் அத்தொகையைப் பெற்றுச் சிலப்பதிகாரப் பதிப்பினால் அப்போது இருந்த கடன் தொல்லையினின்றும் நீங்கினேன்.

    கடன் தீர்ந்த சந்தோஷத்தில் தமிழ் நூற்பதிப்பைப் பற்றி யோசிக்கலானேன். பல நூல்கள் என் கையில் இருந்தாலும் மணிமேகலையையும் புறநானூற்றையும் அதிகமாக ஆராய்ந்து வந்தேன். அவ்விரண்டினுள்ளும் புறநானூற்றில் பாதிக்கு மேல் பழைய உரை இருந்தது. மணிமேகலைக்கு உரையில்லை. அன்றியும் அது பௌத்த சமய சம்பந்தமுள்ளது. அச்சமய நூற் கருத்துக்களை தான் முற்றும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அந்த நிலையில் புறநானூற்றையே முதலில் அச்சிடலாமென்ற முடிவுக்கு வந்தேன்.

    இடையில், திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரான், பிள்ளையவர்கள் இயற்றிய அந்த ஸ்தல புராணத்தை வெளியிடவேண்டுமென்று விரும்பினமையால் 1892-ஆம் வருஷ இறுதியில் அதனை வெளியிட்டேன். குறிப்புரை முதலியவற்றை எழுதவேண்டுமென்று விருப்பம் இருந்தும், விரைவில் வெளிப்படுத்த வேண்டுமென்று தம்பிரான் வற்புறுத்தியமையால் மூலத்தை மாத்திரம் வெளியிட்டேன்.
    மேலே புறநானூற்றை ஆழ்ந்து ஆராயத் தொடங்கினேன்.
    ----------

    அத்தியாயம்-117
    புறநானூற்று ஆராய்ச்சி

    புறநானூற்றை அச்சிடுவதாக நிச்சயம் செய்தவுடனே, பதிப்பு முறையைப் பற்றி யோசிக்கலானேன். வர வரப் புதிய துறைகளிலும் புதிய முறைகளிலும் விஷயங்களைச் சேர்த்து நூல்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கிருந்தது. ஆங்கிலம் தெரியாத எனக்கு அப்பாஷையிலுள்ள சிறந்த பதிப்புக்களைப் பார்த்து மகிழவோ. அவற்றைப் போலச் செய்து பார்க்கவோ சக்தியில்லை. சங்கநூலைப் படிக்கவோ, படித்தபின் ஆராய்ச்சி செய்யவோ, அதன் பின் பதிப்பிக்கவோ இறைவன் திருவருள்தான் துணையாக இருந்தது முன் பழக்கம் அவற்றில் இல்லாத நான் எந்த எந்த விதத்தில் ஆராய்ந்தால் அழகாக இருக்குமென்று தோற்றுமோ அவ்வவ்விதத்தில் முயன்று வரலானேன்.

    புதிய முறை

    கும்பகோணம் காலேஜில் சரித்திர ஆசிரியராக இருந்த கே. ஆர். துரைசாமி ஐயரென்பவர் தம் கையில் பெரிய இங்கிலீஷ் புஸ்தக மொன்றை ஒரு நாள் வைத்திருந்தார்.

    “என்ன புத்தகம்?” என்று கேட்டேன்.

    “பைபிள்” என்றார்.

    “பைபிள் சிறியதாக அல்லவா இருக்கும்? இது மிகப் பெரியதாக இருக்கிறதே!” என்றேன்.

    “இது பைபிளில் ஒரு விசேஷப் பதிப்பு. பைபிளிலுள்ள விஷயங்களைத் தொகுத்து வகைப்படுத்தி ஒரே மாதிரியான சொல்லும் கருத்தும் உள்ள பகுதிகளை அங்கங்கே காட்டிப் பதிப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடுவிலே தனியே இந்த ஒப்புமைப் பகுதி இருக்கிறது. இதை, ‘கன்கார்டன்ஸ்’ (Concordance) என்று இங்கிலீஷில் சொல்வார்கள்” என்று சொல்லி அதைப் பிரித்துக்காட்டினார்.

    அந்த ஒப்புமைப் பகுதிகளில் பலவகை எண்கள் காணப்பட்டன. அப்புத்தகத்தில் அதைத் தொகுத்தவர் படமும் அவருக்கு உதவியாக இருந்தவர் படமும் இருந்தன.

    “இந்த ஒப்புமைப் பகுதியால் என்ன பிரயோசனம்?” என்று கேட்டேன்.

    “பைபிளில் ஒரே செய்தி பல இடங்களில் வருகிறது. ஒரே விதமான சொற்றொடர்களும் வருகின்றன. அவற்றைத் தொகுத்து வைத்து ஆராய்ந்தமையால் சில விஷயங்களின் உண்மையான பொருளும் சில சொற்களின் திருத்தமான உருவமும் புலப்பட்டன வாம். பைபிளில் ஏறியிருந்த பிழையான பாடங்கள் இந்தச் சோதனையினால் திருத்தமடைந்தனவாம்” என்று அவர் எனக்கு விளக்கினார்.

    அப்போது எனக்குப் புறநானூற்று ஆராய்ச்சியில் புது முறை ஒன்று தோற்றியது. புறநானூற்றிலுள்ள விஷயங்களையும் சொற்களையும் முதலிலே அகராதியாகச் செய்துகொண்டு ஆராய்ச்சி செய்தால் உண்மையுருவத்தைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருக்குமென்று அறிந்தேன். அங்ஙனமே செய்து வைத்துக் கொண்டேன்.

    ஆராய்ச்சிக்குரிய கருவிகள்

    ஒரு நூலைத் திருத்தமாகப் பதிப்பிக்க வேண்டுமென்றால் பல வகையான கருவிகளை முதலில் அமைத்துக் கொள்ளவேண்டும். ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது மட்டும் போதாது. ஏட்டில் இருப்பது அவ்வளவும் திருத்தமாக இராது. பல காலமாகப் பிழையாகவே வழங்கி வந்த பாடங்களை அவற்றிற் பார்க்கலாம்; அவற்றுள் இதுதான் சுத்த பாடம் என்று தெரிந்து கொள்வதற்குப் படும் சிரமந்தான் மிகவும் அதிகம். நூலில் உள்ள கருத்துக்களுக்கும் சொற்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொள்வது மட்டும் போதாது. புறநானூற்றில் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அப்புலவர்களுடைய பாடல்கள் வேறு நூல்களிலும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பார்த்தால் அப்புலவர் வாக்கின் போக்கையும், அவருக்கு விருப்பமான கருத்துக்களையும், நடையையும் உணர்ந்து கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியிலிருந்து சில திருத்தங்கள் கிடைக்கும் ஆகவே சங்கப் புலவர்கள் பெயர்களை வரிசையாக எழுதிக்கொண்டு அவர்கள் இயற்றிய பாடல்கள் எந்த எந்த நூல்களிலுள்ளனவென்று தெரிந்து தொகுத்துப் படித்தேன்.

    சங்க காலத்து நூல்களில் வழங்கிய மரபை அறிவதற்கு அவை அனைத்தையுமே ஆராயவேண்டும். சங்க நூல்களவ்வளவும் சேர்ந்து ஓர் உடம்பு போன்றவை. அவ்வுடம்பு முழுவதும் ஒரு வகையான நாடி ஓடும், ஆகையால் அவற்றை முற்றப் பயின்றால்தான் அந்த மரபு தெளிவாக விளங்கும். இதை உத்தேசித்து என்னிடமுள்ள எல்லாச் சங்க நூல்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொண்டேன்.

    புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பன் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று. பலபேருடைய உதவியை நாடவேண்டியது இன்றியமையாததாக இருந்தது.

    உதவி புரிந்தோர்

    என்னுடன் இருந்து திருமானூர் அ. கிருஷ்ணையரும். ம. வீ. இராமானுஜாசாரியரும் இந்த விரிந்த ஆராய்ச்சியில் உதவி செய்து வந்தார்கள். அக்காலத்தில் என்னிடம் தமிழ் நூல்களைப் பாடங்கேட்டு வந்த ஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரானும் இவ் வாராய்ச்சியில் துணை செய்தார். ஏம்பல் பொன்னுசாமி பிள்ளை என்பவரும் காலேஜ் மாணாக்கர்கள் சிலரும் தங்கள் தங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்து வந்தார்கள்.
    --------
    பிற்காலத்தில் (1919-1930) திருப்பனந்தாட் காசி மடத்தில் தலைமை வகித்து விளங்கினார்.
    ----------
    மேற்கோள் விளக்கம்

    புறநானூற்றுச் செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பகுதிகளையும் மேற்கோள் காட்டவேண்டிய காரணத்தையும் ஆராய்ந்தால் பாடம் திருந்துவதோடு பாட்டின் கருத்தும் விளங்கும். பிரயோகங்களைத் தொகுப்பதற்கு எல்லா உரைகளையும் முற்றும் படித்துப் புறநாநூற்றுப் பகுதி வருகின்றதா என்று பார்க்கவேண்டும். அச்சிட்ட புஸ்தகங்களில் பிரயோக விளக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏட்டுச் சுவடிகளிலோ மேற்கோட் செய்யுளைக் கண்டு பிடிப்பதே கஷ்டம். நூல்களைப் பாடங் கேட்பவர்கள் தம் ஆசிரியர் கூறும் விஷயங்களை அங்கங்கே சுவடிகளில் இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைப்பதுண்டு. ஏடுகளில் உள்ளவற்றை உள்ளவாறே பிரதி செய்து அதற்குரிய ஊதியம் பெற்று ஜீவனம் செய்பவர்கள் அந்தக் குறிப்புக்களையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதி விடுவார்கள். ஆராய்ச்சி செய்யும்போது அவற்றைத் தனியே பிரித்தறிவது சில சமயங்களில் மிகவும் சங்கடமாக இருக்கும்.

    உரைகளைப் படித்து வரும்போது அங்கங்கே வரும் மேற் கோள்களில் எனக்குத் தெரிந்தவற்றிற்கு ஆகரம் அங்கங்கே குறித்து வைப்பது எனது வழக்கம். அச்சிடப்பட்ட தொல்காப்பிய உரை களிலும், திருக்குறள் உரையிலும், வேறு உரைகளிலும், கண்ட மேற்கோள்கள் பலவற்றின் இடங்களை என் கைப்புத்தகங்களில் குறித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சியில் அந்தப் பதிப்புக்களிலுள்ள பிழையான பாடங்கள் எனக்குப் புலப்பட்டன. என் பதிப்புக்களில் அவற்றின் திருந்திய வடிவத்தை மட்டும் அமைப்பதையன்றி, “இது பிழை” என்று சுட்டிக் காட்டும் வழக்கத்தை நான் கொள்ளவில்லை.

    இப்படி மேற்கோளாராய்ச்சிலே சென்ற காலம் மிக அதிகம். பிரயோகங்களைத் தொகுத்து வகைப்படுத்துவதிலே உண்டான சிரமம் எவ்வளவோ மிகுதியாக இருந்தாலும் ஒரு முறை பட்ட கஷ்டம் பல நூற்பதிப்புக்கு உபயோகமாக இருந்தது. அக்காலத்தில் நான் செய்து வைத்துக்கொண்ட பலவகை அகாராதிகளே இன்றும் எனக்கு மூல நிதியாக உதவுகின்றன. அவற்றைக் காணும்போது ‘எவ்வளவு காலம், எவ்வளவு அன்பர்களுடைய உழைப்பு இவற்றில் சென்றிருக்கின்றன?’ என்று எண்ணி வியப்புறுவேன். அவற்றின் அருமை பெருமையை அச்சிட்ட புத்தகங்களைப் படிப்பவர்கள் சிறிதும் அறியார். மிக உயர்ந்த அலங்காரமான மாளிகையைக் கண்டு அதன் அழகில் ஈடுபடுபவர்கள் அம்மாளிகை எந்த அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்டதென்பதைக் கவனிப்பதில்லை. மிகவும் ஜாக்கிரதையாகப் போட்ட அந்த அஸ்திவாரம் பூமிக்குள் மறைந்து கிடக்கின்றது.

    தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பல இடங்களில் புறநானூற்றுச் செய்யுட்கள் மேற்கோளாக வந்துள்ளன. என் கையிலிருந்த புறத்திரட்டில் பல செய்யுட்கள் இருந்தன. இவற்றைக் கொண்டு என்னிடமிருந்த புறநானூற்றுப் பிரதிகளில் கிடைக்காத பல குறையான பகுதிகளை நிரப்பிக் கொண்டேன்.

    புறநானூறு 400 செய்யுட்களடங்கியது. நான் செய்த சோதனையின் முடிவில் 267, 268-ஆம் பாடல்கள் எங்கும் கிடைக்க வில்லை பல பாடல்களுக்கு முதல் இல்லை; பலவற்றிற்கு இறுதிப் பகுதி இல்லை; பலவற்றில் இடையிடையே சில பகுதிகள் காணப் படவில்லை.

    உரை

    என்னிடமுள்ள புறநானூற்றுப் பிரதிகளில் சிலவற்றில் பழைய உரை ஒன்று இருந்தது. அவ்வுரையாசிரியர் இன்னாரென்று புலப்பட வில்லை. அவ்வுரையும் முதல் 260 பாடல்களுக்கே இருந்தன. 242-ஆம் பாடலுக்கு மேல் உள்ள உரையோ இடையிடையே சிதைந்து மாறியிருக்கிறது. அவ்வுரையாசிரியர் பதப் பொருளை இனிது விளக்கி உரிய இடங்களில் சொற்களை முடித்துக் காட்டி இலக்கணக் குறிப்பையும் திணை துறைகளையும் ஆங்காங்குள்ள பழமொழிகளையும் அணியையும் சொல்நயம் பொருள் நயங்களையும் புலப்படுத்துகிறார். இடையிடையே சில வாக்கியங்கள் அவ்விடத் திற்குப் பொருத்தமில்லாதனவாகத் தோற்றின. அவர் சில இடங்களில் சில விஷயங்களை மறுத்திருக்கிறார். அதனால் புறநானூற்றுக்குப் பழைய உரை ஒன்று இருந்திருக்கலாமென்ற எண்ணம் உண்டாகிறது.

    திணையும் துறையும்

    ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் திணையும் துறையும், பாடினோர் பெயரும், பாடப் பட்டோர் பெயரும் உள்ளன. நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் ஓரிடத்தில், “தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றறிக” என்று எழுதியிருக் கிறார். அவர் கருத்து அவ்வாறு இருந்தாலும் பிரதிகளில் உள்ள திணை துறைகளையே கொள்ளுதல் நெடுங்காலமாக வந்த வழக்கமாகி விட்டது. அவை பெரும்பாலும் பன்னிரு படலமென்ற பழைய புறப்பொருள் இலக்கணத்தின் படி அமைந்திருத்தல் கூடுமென்று தோற்றியது. அப்பழைய நூல் அகப்படவில்லை. ஆனாலும் அதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலை மூலமும் உரையுமுள்ள ஏட்டுச் சுவடி அப்போது என்னிடமிருந்தது. அதனை ஆராய்ந்து திணை துறைகளின் இலக்கணங்களுக்குட் பெரும்பாலானவற்றைத் தெரிந்து கொண்டேன். ஆயினும் சில துறைகளுக்கு விளக்கம் அந் நூலினாலும் தெரிந்து கொள்ள இயலவில்லை.

    சரித்திரச் செய்திகள்

    பாடினோர் பாடப்பட்டோர் பெயரைக் குறிப்பிடும் வாக்கியங் களில் சரித்திரச் செய்திகள் இருந்தன. சங்க காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்கு அவை மிகவும் பயன்படுவன. அவ்விருவருடைய பெயர்களிலும் பலவகையான பாட பேதங்கள் இருந்தன. அவற்றைத் தனியே தொகுத்து வைத்துக் கொண்டு பிற நூல்களில் அப்பெயர்கள் வந்துள்ள இடங்களை ஆராயலானேன். இந்தச் சரித்திர ஆராய்ச்சி பெரிய சமுத்திரமாக இருந்தது. சமுத்திரத்திற்காவது ஒரு பக்கம் கரையுண்டு; இதற்கு எந்தப் பக்கத்திலும் கரையே இல்லை.

    சரித்திர ஆராய்ச்சியில் வல்லவர்களைக் கொண்டு அவ்விஷயங் களைத் தெரிந்து கொள்ளலாமென்றெண்ணி இராசாங்கத்துச் சிலாசாசனப் பரிசோதகராக இருந்த ராவ்பகதூர் வி. வெங்கை யருக்குச் சில அரசர் பெயர்கள், சில ஊர்ப்பெயர்கள் முதலியவற்றை எழுதி அவை சம்பந்தமாகத் தெரிந்த செய்திகளைத் தெரிவிக்கும்படி வேண்டினேன். அதியமான், கரிகால்வளவன் முதலியவர்களைப் பற்றியும் வெண்ணி, மிழலை முதலிய ஊர்களைப் பற்றியும் அவர் சில குறிப்புக்களை எழுதியனுப்பினார்.

    தபால் இலாகாவில் ஸூபரிண்டெண்டெண்டாக இருந்த ஸ்ரீ வி. கனகசபைப் பிள்ளை என்பவர் தமிழ் நூல்களிலும் தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் ஈடுபட்டவர். தமிழர் சரித்திரம் எழுத வேண்டுமென்ற கருத்தோடு அவர் ஆராய்ந்து பல செய்திகளைத் தொகுத்து வந்தார். அந்த முயற்சியின் விளைவாகப் பிறகு அவர் ஆங்கிலத்தில் “1800 வருஷங்களுக்கு முந்திய தமிழர்” என்ற அரிய புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

    அவர் எனக்கு நண்பர். தம்மிடமுள்ள சில ஏட்டுப் பிரதிகளை உதவியிருக்கிறார். என்னுடைய தமிழ்நூற் பதிப்பைப் பற்றி அடிக்கடி விசாரித்து ஊக்கமூட்டுபவர்களில் அவரும் ஒருவர்.

    ‘துஞ்சிய’ என்னும் சொல்

    அவருக்கும் சில விஷயங்களை விளக்க வேண்டுமென்று எழுதினேன். முக்கியமாகப் புறநானூற்றிலுள்ள அரசர் பெயர்களில் வரும் ‘துஞ்சிய’ என்னும் வழக்குக்குப் பொருள் கேட்டேன். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவன் எனவரும் பெயர்களில் துஞ்சிய என்பதற்கு இறந்த வென்று பொருள் கொள்ளலாமென்று தோற்றினாலும், ‘ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் பாடலுக்குக் கீழே அவன் இறந்த செய்தியைக் குறிப்பார்களா?’ என்ற சந்தேகம் எழுந்தது. ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

    புறநானூற்றில் 34-ஆம் பாட்டு, கிள்ளி வளவனென்ற சோழ அரசனை ஆலத்தூர் கிழாரென்ற புலவர் பாடியது. அதில் அவர்,

      “கொண்டன் மாமழை பொழிந்த
      நுண்பஃ றுளியினும் வாழிய பலவே”

    என்று வாழ்த்துகிறார். பாட்டின் இறுதியில் ‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது’ என்ற குறிப்பு உள்ளது. பாட்டு அரசனை வாழ்த்துகிறது; குறிப்பிலோ அவன் துஞ்சிய செய்தி விசேஷணமாக அமைந்திருக்கிறது. பிற்காலத்தில் செய்யுட்களைத் தொகுத்தவர்கள் எழுதிய குறிப்புக்கள் அவை. அரசர்களை இன்ன இடத்துத் துஞ்சினாரென்று குறித்தல் ஒரு சம்பிர தாயம். அதனை அக்காலத்தில் அறிந்து கொள்ளாமல் இருந்த எனக்கு, ‘துஞ்சிய’ என்பதற்கு ‘இறந்த’ என்ற பொருள் கொள்ளுவது உசிதமாகப்படவில்லை. இந்தவிஷயத்தை கனகசபைப் பிள்ளை தெரிவித்தார்.

    துஞ்சியவென்பதற்கு இறந்தவென்றே பொருள் கொள்ள வேண்டுமென்று அவர் எழுதினார். அதற்கு ஆதாரமாகச் சிலப்பதிகாரம், தேவாரம் என்பவற்றை எடுத்துக் காட்டினார். ‘இப்படியே அரசர்கள் இறந்த காலத்தை அவர்கள் பெயர்க்கு விசேடணமாக்கிக் கூறுதல், கோழிக் கோட்டு ஸாமூதிரி அரசரின் பரம்பரை வழக்கம்; திருவனந்தபுரத்தரசரின் வழக்கமும் இதுவே’ என்று பிறவிடங்களிலுள்ள வழக்கத்தையும் தெரிவித்தார். இறுதியில், ‘இந்த அருமையான புறநானூறு வெளிவந்தால் தமிழ் நாட்டார் பல ஆச்சரியமான செய்திகளை உணர்ந்து கொள்வார்கள்

    தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியைப் பலர் மேற்கொள்வார்கள். விரைவில் பதிப்பித்து நிறைவேற்ற வேண்டும்’ என்றும் எழுதினார்.

    இப்படிப் பல பல முறையிலே சேகரித்த பலவகைக் குறிப்புக்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து புறநானூற்றை ஒருவகையாகச் செப்பம் செய்து அச்சுக்குக் கொடுப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
    -----------

    அத்தியாயம்-118
    மூன்று துக்கச் செய்திகள்

    புறநானூறு 1893-ஆம் வருஷம் ஜனவரி மாதம் வெ நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் அச்சாகத் தொடங்கியது. வழக்கம்போல் நான் ராமையங்கார் தோட்டத்தில் தங்கி அச்சு வேலையைக் கவனித்து வந்தேன். இப்பதிப்புக்குத் திருமானூர்க் கிருஷ்ணையரது சகாயத்தைப் பெற முடியாமற் போயிற்று. வை. மு சடகோப ராமானுஜாசாரியர் என்னுடனிருந்து மிக்க உதவி செய்து வந்தார். பதிப்பிக்கும் விஷயத்தில் அவருக்குச் சிறந்த திறமை இருந்தது. அவர் ஒருவரே இரண்டு மூன்று பேர் செய்யக் கூடிய வேலைகளைச் செய்தார். ஆகையால் பதிப்பு விரைவாகவே நடை பெற்று வந்தது.

    சதாசிவ பிள்ளை பிரதி

    சென்னையில் ஆறுமுக நாவலருடைய அச்சுக்கூடத்தைக் கவனித்து வந்த சதாசிவ பிள்ளையிடம் ஒருநாள் போயிருந்தேன். அவர் தம்மிடம் புறநானூற்றுப் பிரதியென்று இருப்பதாகச் சொல்லிப் பிறகு ஒரு நண்பர் மூலம் எனக்கு அனுப்பினார். அதில் மூலம் மாத்திரம் இருந்தது; நூல் முழுவதும் இல்லை. 267-ஆம் செய்யுள் முதல் 369-ஆம் செய்யுள் வரையிலும் இருந்தன. ஒரு செய்யுள் கிடைத்தாலும் போற்றிப் பாதுகாக்கும் எனக்கு அந்தப் பிரதி பல வகையில் உபயோகமாக இருந்தது.

    அந்த முறை புறநானூற்றில் 18 பாரங்கள் நிறைவேறின. காலேஜ் திறக்கும் காலம் சமீபித்தமையால் மேலே ப்ரூபைக் கும்பகோணத்துக்கு அனுப்பும்படி ஏற்பாடு செய்து விட்டு நான் புறப்பட்டு விட்டேன். சேலத்து வழியாகச் சில ஊர்களைப் பார்த்துக் கொண்டு சென்றேன். புறநானூற்றிலே சொல்லப்பட்ட ஊர்களிற் சிலவற்றைக் கண்டு அவற்றின் வரலாற்றை விசாரிக்க வேண்டுமென்பது என் விருப்பம். கருவூருக்குப் போயிருந்தபோது அங்குள்ள வக்கீல்களிற் சிலர், “எங்கள் கட்சிக்காரர்களிற் சிலபேர் வள்ள லென்னும் பட்டப் பெயருடையவர்களாக இருக்கிறார்கள்” என்ற செய்தியைத் தெரிவித்தார்கள். பத்துப் பாட்டிலும் புறநானூற்றிலும் கடையெழு வள்ளல்களின் பெயர்களும் வரலாறுகளும் சொல்லப் பெற்றுள்ளன; ஒரு கால் அவர்கள் பரம்பரையினராக இருக்கக் கூடுமென்று எண்ணினேன்.

    வெ. ப. சுப்பிரமணிய முதலியார்.

    கும்பகோணத்திற்கு வந்து புறநானூற்று அகராதியை முடித்தேன். அக்காலத்தில் ஸ்ரீமான் ராவ்சாகிப் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் அப்பக்கத்தில் மிருக வைத்திய ஸூபரிண்டெண்டெண்டாக இருந்தார். அவருடைய பழக்கம் எனக்கு உண்டாயிற்று. அவருடைய தமிழன்பும் கம்பராமாயணப்பற்றும் எங்களுடைய நட்பை வன்மை பெறச் செய்தன கும்பகோணத்துக்கு அருகில் அவர் முகாம் போடும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு பேசிச் சல்லாபம் செய்து வருவேன். தாம் இயற்றும் செய்யுட்களை எனக்குச் சொல்லிக் காட்டி வருவார். ஆங்கிலம் படித்துத் தக்க உத்தியோகத்திலிருக்கும் ஒருவருக்குத் தமிழில் அவ்வளவு ஆழ்ந்த அன்பு இருந்தமை முதலில் எனக்கு வியப்பை உண்டாக்கியது.

    காலேஜில் என் கடமையை ஒழுங்காகக் கவனித்து வந்தேன். கோபாலராவுக்குப் பிறகு பிரின்ஸிபாலாக வந்தவர்களெல்லாம் அவரைப் போலவே என்பால் அன்பு காட்டி வந்தார்கள். சிந்தாமணி பதிப்பிக்கும் காலத்தில் பிரின்ஸிபாலாக இருந்த பில்டெர்பெக் துரை எனக்கு அதிக ஊக்கத்தை உண்டாக்கினார். கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலை முதலிய இடங்களுக்கு அந்நூலை அனுப்பி அவர்களை எனக்கு நன்றியறிவோடு கடிதம் எழுதும்படி அவர் செய்தார்.

    நடுவேனிற் கனவு

    புறநானூற்றுப் பதிப்பு நடந்து வந்த காலத்தில் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்தவர் ஜே.ஹெச். ஸ்டோன் என்பவர், அவர் காலத்தில் காலேஜில் பலவிதமான விசேஷங்கள் நடைபெறும். ஒரு முறை காலேஜ் மாணாக்கர்களைக் கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகமாகிய ‘நடுவேனிற் கனவு’ (Midsummer Night’s Dream) என்பதைத் தமிழில் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்தார். அந்நாடகத்தைக் காலேஜ் ஆசிரியராகிய நாராயணசுவாமி ஐயரென்பவர் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் விருப்பப்படி அதனை முற்றும் பார்த்துத் திருத்தம் செய்து கொடுத்ததோடு இடையிடையே சில பாடல்களையும் இயற்றிச் சேர்த்தேன். அந்நாடகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த மொழி பெயர்ப்பைப் பரிசோதித்த காலத்தில் ‘ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை ஆங்கிலந் தெரிந்த ஒருவர் துணையைக் கொண்டு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடலாம். காளிதாஸ மகா கவியின் நாடகங்களைத் தமிழில் வசனமாகவும் செய்யுளாகவும் எழுதி வெளியிடலாம்’ என்ற புதிய கருத்து எனக்கு ஏற்பட்டது. மடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சாகுந்தலச் சுலோகங்களிற் சிலவற்றை மொழி பெயர்த்ததுண்டு. ‘பழங் காலத்துத் தமிழ் நூல்களை மாசு கழுவி வெளியிடும் தொண்டில் அல்லவா ஈடுபட்டிருக்கிறோம்?’ என்ற எண்ணத்தால் அத்துறையிலே சென்ற உள்ளத்தை மீட்டுக் கொண்டேன். காலேஜ் ஆசிரியர்கள் பலர். “நீங்கள் புதிதாக வசன நூல்கள் எழுதுங்கள். பாடமாக வைக்கும்படி செய்யலாம். அதனால் உங்களுக்கு நல்ல பொருள் வருவாயுண்டாகும்” என்று அவ்வப்போது சொல்வார்கள் சில சமயங்களில் பொருள் முட்டுப்பாட்டினால் அவர்கள் சொல்லும் யோசனைப் படியே செய்யலாமென்ற சபலம் தோற்றினாலும் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே ஒன்றிப் போன என் உள்ளத்தில் அந்தச் சிறு விருப்பங்களெல்லாம் நிலை கொள்ளவில்லை.

    காவேரியாச்சிக்கு உபகாரம்

    அக்காலத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மனைவியாராகிய காவேரி யாச்சி மாயூரத்தில் இருந்து வந்தார். அவரைக் கவனித்துப் போஷிப்பவர் ஒருவரும் இல்லை. அவர் அடிக்கடி தமக்குப் பொருள் வேண்டுமென்று கடிதம் எழுதுவார். நான் அவ்வப்போது பொருளுதவி செய்து வருவேன். பழந்தமிழ் நூற்பதிப்பிலே ஈடுபட்ட அக்காலங்களில் இடையிடையே பிள்ளையவர்களுடைய நினைவு உண்டாகுவதற்குரிய சந்தர்ப்பங்கள் பல காவேரி யாச்சியின் கடிதங்களும் அந்நினைவுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

    திருப்புகழ்ப் பதிப்பு

    திருத்தருப்பூண்டியில் அப்போது ஜில்லா முன்ஸீபாக இருந்தவர் வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளையென்பவர். அவர் முருகக் கடவுளிடத்தில் அளவற்ற பக்தியுடையவர். அக்காலத்தில் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் அங்கங்கே வழங்கி வந்தது.

    திருப்புகழ்ச் சுவடிகளைச் சிலர் வைத்திருந்தனர். அருணகிரி நாதருடைய வாக்கிலே ஈடுபட்ட சுப்பிரமணிய பிள்ளை திருப்புகழ்ப் பாடல்களைத் திரட்டி வெளியிடவேண்டுமென்று தீவிரமாக முயற்சி செய்யத் தொடங்கினார். தாம் உத்தியோகம் பார்த்து வந்த இடங்களிலும் அவற்றைச் சார்ந்த இடங்களிலும் விசாரித்து விசாரித்துத் திருப்புகழ்ப் பாடல்களைச் சேகரித்தார். ஏடுகளைத் தொகுத்தார். பாடுபவர்களிடமிருந்து கேட்டு எழுதிக் கொண்டார். எனக்குக் கிடைத்த சில சுவடிகளை அவரிடம் கொடுத்தேன். அவர் மிகவும் சிரத்தையுடன் தொகுத்து வந்தைதை அறிந்து அவர்பால் எனக்குப் பற்றுதல் உண்டாயிற்று. அவர் அடிக்கடி கடிதம் எழுதுவார். திருப்புகழைப் பதிப்பிக்கத் தொடங்கிய பின்பு புரூபை எனக்கு அனுப்பி வந்தார். நான் பார்த்துத் திருத்தி அனுப்புவேன். புறநானூறு பதிப்பித்து வந்த காலத்தில் இந்தத் திருப்புகழ்க் கைங்கரியம் எனக்கு முருகப்பிரான் தியானத்தால் உண்டாகும் பயனையும் நெஞ்சத் திண்மையையும் கிடைக்கச் செய்தது.

    மகாவைத்தியநாதையர் நிரியாணம்

    1893-ஆம் வருஷத்தில் மூன்று துக்க நிகழ்ச்சிகள் நேர்ந்தன. நந்தன வருஷம் தை மாதம் 16-ஆம் தேதி (27-1-1893) மகா வைத்தியநாதையர் சங்கீத உலகத்திலே தம் புகழுடம்பை நிலை நிறுத்திப் பூதவுடம்பை நீத்தார். அந்தச் செய்தியை அறிந்தபோது என் தந்தையாரும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரும் நானும் பிறரும் அடைந்த வருத்தத்துக்கு முடிவில்லை. ‘இனி அந்த மாதிரி சங்கீதத்தை வேறு எங்கே கேட்கப் போகிறோம்’ என்ற பேச்சுத்தான் எல்லோரிடமும் எழுந்தது. சிவபக்தியும் பாஷா பயிற்சியும் ஒழுக்கமும் சங்கீதத் திறமையும் ஒருங்கே பொருந்தி விளங்கிய அவரைப் போன்ற ஒருவர் இந்நாட்டிற் பிறப்பது அரிது.

    தந்தையார் இழந்தது

    அவ்வருஷம் செப்டம்பர் மாதத்தில் என் தந்தையாருக்கும் தாயாருக்கும் தேக அசௌக்கியம் உண்டாயிற்று. இருவருக்கும் நோய் கடுமையாகவே இருந்தது. இருவருடைய நிலையும் நம்பிக்கை தருவதாக இல்லை. என் தாயார், தந்தையாருக்கு முன் காலமாய் விடலாமென்று தோற்றியது. ஆனால் விதி வேறு விதமாக இருந்தது. அக்டோபர் மாதம் 7-ம் தேதி டாக்டர் வழக்கம் போல் வந்து இருவரையும் பார்த்தார். “தந்தையார் நிலை அபாயகரமாக இருக்கிறது; அவரை மேல் மெத்தையிலிருந்து கீழே கொண்டு போவது நல்லது” என்று டாக்டர் சொல்லவே அப்படியே

    செய்தோம். அப்பொழுது அவருக்கு நல்ல ஞாபகம் இருந்தது. பஞ்சாட்சர மந்திரத்தின் தியான சுலோகத்தையும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் தியான சுலோகத்தையும் அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அருகிலிருந்து கவனித்து வந்தேன். நினைவு மறக்கும் தறுவாயில் என்னை அவர் அழைத்து மெல்ல, “சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்று சொன்னார். அதன் பிறகு என் தந்தையாருடைய வார்த்தையைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாமற் போயிற்று. அவர் கூறிய அந்த உபதேசத்தை நான் மறக்கவில்லை; என்னால் இயன்றவரையில் கடைப்பிடித்து வருகிறேன். சிவபெருமானுடைய பக்தர் கூட்டத்தில் சேருவதற்கு எனக்குச் சிறிதும் தகுதியில்லை. என் தந்தையார் உறுதியான சிவ பக்தியுடையவர். சிவபக்தி பண்ணுவதையே தம் வாழ்க்கையாக அவர் செய்து கொண்டார். அவரிடம் பெற்ற பரம்பரைச் செல்வம் அந்தச் சிவ பக்தி. ஆதலால் என்னை அறியாமலே அதில் ஒரு பங்கு எனக்கு அமைந்திருந்தது. ஆனாலும் நானெங்கே! என் தந்தையாரெங்கே!

    அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். அவருடைய மரண காலநிலையை என் தாயார் அறிந்து கொள்ளவில்லை; நோய்வாய்ப் பட்டு மயக்க நிலையிலிருந்தார். தந்தையார் காலமான துக்கச் செய்தி காதிற்பட்டவுடனே அந்த மயக்கம் இருந்த இடம் தெரியாமல் அகன்றது. உடனே எழுந்து உட்கார்ந்து புலம்பத் தொடங்கி விட்டார். நானும் அதுகாறும் அடையாத வருத்தத்தை அடைந்தேன்; அழுதேன்; அரற்றினேன். என் நண்பர்கள் ஆறுதல் கூறினர்; கடிதங்கள் எழுதினர். பலர் தங்கள் வருத்தத்தைச் சரம கவிகளால் தெரிவித்தனர்.

    என் தந்தையார் இயல்புகளை எண்ணி எண்ணி நைந்து சில பாடல்களை நான் இயற்றினேன். அவரை நினைக்கும்போதெல்லாம் முதலில் அவரது சிவ பக்தியும் சிவ பூஜையுமே முன் வந்து நின்றன. அவரது சங்கீதத் திறமையும் தொடர்ந்து ஞாபகத்துக்கு வந்தது. நான் முன்னுக்கு வரவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த கவலையையும், என் கல்வியின் பொருட்டு ஊர் ஊராகத் திரிந்து அங்கங்கே தங்கித் தங்கி என் தமிழ்க் கல்வி அபிவிருத்தியாகும்படி செய்த பெருமுயற்சிகளையும் எண்ணி எண்ணி உருகினேன். இந்த எண்ணங்களிற் சில அந்த இரங்கற் பாடல்களிலே அமைந்தன. அச்செய்யுட்களிற் சில வருமாறு:

      “மெய்யார நீறணிந்து விழிமணிமா லிகைபூண்டு
      கையார மலரேந்திக் கசிந்துருகித் தினந்தோறும்
      மையாரும் மணிமிடற்று மாதேவை அருச்சிக்கும்
      ஐயாவென் னையாவென் னையாவெங் ககன்றனையே!”

    [நீறு - விபூதி. விழிமணிமாலிகை - ருத்திராட்ச மாலை. மையாரும் மணிமிடறு - நீல நிறம் பொருந்திய மணி போன்ற திருக்கழுத்து]

      “பற்றலெங்கே செந்தமிழைப் பற்றிக்கற் றோர்பலர்பால்
      துற்றலெங்கே மீனாட்சி சுந்தரநல் லாரியன்பால்
      கற்றலெங்கே கற்றுக் கவலையொரீஇ யந்நிலையே
      நிற்றலெங்கே இன்றுவரை நீயருள்செய் யாவிடினே!”

    [துற்றல் - கல்வியை நுகர்தல். ஒரீஇ - நீங்கி]

      “அத்தா நினதுபிரி வல்லற் கடலழுத்திப்
      பித்தாக்கி யென்னைப் பெரிதும் வருத்துறுமால்
      எத்தானஞ் சென்றாய் இதுவோநின் தண்ணளியே
      சத்தான இன்பமுறு சங்கீத சாகரமே!”

    [அல்லற்கடல் - துக்க சாகரம். தானம் - இடம். சத்தான - நிலையான]

      “அன்போடு சிவபூசை யாற்று மிடத்தொடுநீ
      இன்போடு பாடி இருக்குமிட முந்தமியேன்
      துன்போடும் படிவார்த்தை சொல்லுமிடந் தானுமந்தோ
      என்போடு முள்ளுருக என்னை வருத்துறுமால்.”

    [ஆற்றும் - செய்யும். துன்பு ஓடும்படி]

    என் தந்தையாருக்குரிய ஈமக் கிரியைகளையெல்லாம் செய்து முடித்தேன். அதுகாறும் என் தலையிலேறாமலிருந்த குடும்பச் சுமையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. தந்தையார் காலமானதால் உண்டான துக்கமும், புதிய பொறுப்பும் என்னுடைய தமிழ்ப் பணிக்குச் சிறிதளவு தளர்ச்சியைக் கொடுத்தேன்.

    அரங்கநாத முதலியார் பிரிவு

    தந்தையார் காலமான செய்தி தெரிந்து வருத்தம் தெரிவித்த அன்பர்கள் பலர். பூண்டி அரங்கநாத முதலியார் அவர்களுள் ஒருவர். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த உபகாரியின் மரணத்தைக் குறித்தே வருந்தும் துர்ப்பாக்கியமும் எனக்கு உண்டாயிற்று. 10-12-1893 இல் அவர் காலமானார். அச் செய்தி கேட்டுத் தமிழ் நாட்டிலுள்ளார் திடுக்கிட்டனர். தமிழ்ப் புலவர்கள் மனங் கலங்கினர். பல வகையான ஸ்தாபனங்களில் அவர் தலைமை வகித்து ஊழியம் புரிந்து வந்தார். அவருடைய ஆதரவிலே பல நல்ல முயற்சிகள் ஓங்கி வந்தன. அவற்றோடு தொடர்புடைய யாவரும் இடி விழுந்தது போலச் செயலற்றுப் போயினர். ஆங்கிலத்தில் மிகவும் சிறந்த புலமை வாய்ந்து தமிழிலும் புலமை வாய்ந்தவர்களை அக்காலத்தில் பார்ப்பது அருமை. அவர் மரணத்தைக் குறித்துக் குறித்து தி. த. கனக சுந்தரம் பிள்ளை எனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் ‘இனி இங்கிலீஷ் படித்தவர்களில் தமிழறியவல்லார் இல்லை என்பதுவே போதும்’ என்று எழுதியிருக்கிறார்.

    அரங்கநாத முதலியார் எனக்குச் செய்த உதவிகள் பல. பணத்தினால் மட்டும் ஒருவன் சிறப்படைய மாட்டான். தக்க மனிதர்களுடைய பழக்கம் பல பெருங் காரியங்களைச் சாதித்துக் கொள்ள அனுகூலமாக இருக்கும். பணத்தால் முடியாத காரியத்தை இந்தப் பழக்கத்தால் நிறைவேற்றிக் கொள்ளலாம். அரங்கநாத முதலியாருடைய நட்பினால் இந்தப் பலம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய பழக்கம் எனக்கு இருந்ததனால் நான் பலருடைய மதிப்புக்குப் பாத்திரனானேன். அவர் எனக்குப் பழக்கம் பண்ணி வைத்த கனவான்களால் நான் பல நன்மைகளை அடைந்திருக்கிறேன்.

    அரங்கநாத முதலியார் மரணமடைந்தபோது நான் இரங்கற் பாட்டு ஒன்றும் உடனே எழுதவில்லை. “நான் செய்யும் பாடல்களைக் கேட்டுச் சந்தோஷிக்க அவர் இருக்கிறாரா?” என்று நினைத்துச் சும்மா இருந்து விட்டேன். அன்பர்கள் சிலர் வற்புறுத்தவே சில செய்யுட்களை எழுதினேன். அவற்றுள் பின்வருவனவும் சேர்ந்தவை.

      “பொன்னைப் பெறலாம் புகழ்பெறலாம் பூவலயம்
      தன்னைப் பெறலாந் தகமுயன்றால் யாவையுமே
      பின்னைப் பெறலாம் பிறழா மனவலிசேர்
      உன்னைப் பெறுமாறும் உண்டோ உரையாயே.”

    [பூவலயம் - பூ மண்டலம். பின்னை - பிறகு]

      “பனியார் சிலசொற் பகர்ந்தே யுளங்குழைப்போய்
      கனியார் இனிமை கலந்தே சுவைகள் பல
      நனியார் தமிழின் நயந்தெரிய வல்லார்தாம்
      இனியா ருனைப்போ லினியார் இனியாரே”

    [பனி - குளிர்ச்சி]

      “தரங்க வேலை யனைய தாய சபையி டைப்பு குந்துநின்
      றுரங்க லந்த வாங்கி லேய ரொருமொழிப் பிரசங்கமங்
      கரங்கநாத வள்ளல் போல வவர வர்வி யந்துதம்
      சிரங்க ரந்து ளக்கு மாறுசெப்ப வல்லர் யாவரே.”

    [தரங்கவேலை - அலைகளையுடைய கடல். உரம் - அறிவு. துளக்குமாறு - அசைக்கும்படி]

    என் தந்தையாரை இழந்த துக்கமும், குடும்பப் பொறுப்பை வகிக்க வேண்டுமே என்ற கவலையும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் சேர்ந்து என் மனவுறுதியைக் குலைத்தன. அதனால் தேகம் பலஹீனப்பட்டது. பித்த சுரம் என்னைப் பற்றிக் கொண்டது. சில வாரங்கள் அந்த நோயினால் துன்புற்றுத் தக்க மருந்துகளை உட்கொண்டு ஒருவாறு சௌக்கியமடைந்தேன்.
    -------

    அத்தியாயம்-119
    புறநானூற்றுப் பதிப்பு

    1894-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் புறநானூறு பதிப்பித்து நிறைவேறியது. நான் பதிப்பித்த எட்டுத் தொகை நூல்களுள் இதுவே முதலாவது. ஆதலால் முகவுரையில் எட்டுத் தொகைகளையும் பற்றிய வரலாற்றை எழுதினேன். அகம், புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கினேன்.

    முகவுரை

    புறநானூற்றால் தெரிய வந்த பலவகைச் செய்திகளையும் தொகுத்து ஓர் அகவலாக அமைத்தேன். உரையைப் பற்றிய செய்திகளையும் சுருக்கமாகத் தெரிவித்து விட்டு எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளின் நிலையை யாவரும் உணரும் பொருட்டுப் பின் வருமாறு புலப்படுத்தினேன்:

    “உரை யில்லாத மூலங்கள் எழுத்துஞ் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, இவற்றுள், சில பாடல்களின் பின் திணை எழுதப்படாமலும் சிலவற்றின் பின் துறை எழுதப்படாமலும் சிலவற்றின் பின் இரண்டு மெழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும் சிலவற்றின் பின் இருவர் பெயருமே சிதைந்தும் சில பாடல்கள் இரண்டிடத் தெழுதப்பட்டு இரண்டெண்களை யேற்றும் வேறு வேறிடத்தில் இருத்தற்குரிய இரண்டு பாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணை யேற்றும் சில முதற்பாகங் குறைந்தும் சில இடைப்பாகங் குறைந்தும் சில கடைப்பாகங் குறைந்தும் சில முற்றுமின்றியும் ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறு பாடல்களின் அடிகளோடு கலந்தும் ஓரடியே ஒரு பாட்டுட் சிலவிடத்து வரப் பெற்றும் பொருளண்மை காணாத வண்ணம் இன்னும் பலவகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. இவற்றைப் பரிசோதித்து வருகையில், இந்நூலிலிருந்து வேறு நூல்களினுடைய பழைய உரைகளின் இடையிடையே உரையாசிரியர்களால் பூர்த்தியாகவும் சிறிது சிறிதாகவும் எடுத்துக் காட்டப்பட் டிருந்த உதாரணங்கள், சிற்சில பாடல்களிலுள்ள வழுக்களை நீக்கிச் செவ்வை செய்து கொண்டு பொருளுண்மை காணுதற்கும், சிற்சில பாடல்களிற் குறைந்த பாகங்களை நிரப்பிக் கொள்வதற்கும் பிறழ்ந்து கிடக்கும் சில பாடல்களை ஒழுங்குபடுத்தி வரையறை செய்து கொள்ளுதற்கும் பெருந்துணையாக இருந்தன.”

    புறநானூற்றிலுள்ள செய்திகளைக் கொண்டு தமிழ் நாட்டுச் சரித்திரத்தை அறிந்து கொள்ளலாமென்பதையும், பல வகை ஆராய்ச்சிகளுக்கு அவை உபகாரமாகுமென்பதையும் உணர்ந்த போது, அத்துறையில் புகுந்து ஆராயலாமென்று தொடங்கினேன். எட்டுத் தொகை நூல்களுள் பதிப்பிக்கப் பெறாத நூல்களும் பிற பழைய நூல்களும் என்பால் இருத்தன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடும் பணியை மேற்கொண்ட நான் இடையே வேறு துறையுட் புகுவதற்கு இயலவில்லை. ‘ஆதார நூல்களை ஒரு வகையாக வெளிப்படுத்தி விட்டால் ஆராய்ச்சியாளர் அவற்றை ஆராய்ந்து சரித்திரங்களையும் பிற குறிப்புக்களையும் வெளியிடலாம்’ என்றெண்ணினேன். இக் கருத்தை முகவுரையில், “இத் தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்து கொள்ளுதலிலும் தெரிவித்தலிலுமே பெரும்பாலும் காலங்கழித்து உழைத்து வரும் உபகாரிகளாகிய விவேகிகள், இந் நூலை நன்கு ஆராய்ச்சி செய்வார்களாயின் இதனால் பலர் வரலாறுகள் முதலியன தெரிந்து கொள்ளுதல் கூடும்” என்று குறிப்பித்தேன்.

    அங்கங்கள்

    அவ்வகை ஆராய்ச்சிகளைச் செய்பவர்களுக்குக் கருவிகளாக உதவுமென்ற ஞாபகத்தால் புறநானூற்றிற் கண்ட நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் என்பவற்றின் பெயர்களை அகராதி வரிசையில் தொகுத்து அமைத்தேன். பாடினோர் பாடப்பட்டோர் வரலாறுகளைச் சுருக்கமாகத் தெரிவித்து அவர் பெயர்களிற் காணப்படும் பேதங்களையும் தனியே பதிப்பித்தேன். விஷய சூசிகை, துறை விளக்கம், துறைக் குறிப்பு, அரும்பத அகராதி, பிரயோக விளக்கம் என்பவற்றைப் பதிப்புக்கு அங்கமாகச் சேர்த்தேன். அரும்பத அகராதியில் பதமும் அதன் பொருளும், பிரயோகமும் அமைத்தேன். வி. வெங்கையரவர்களும், வி. கனக சபைப்பிள்ளை அவர்களும் எழுதி அனுப்பிய குறிப்புக்களைப் புத்தகத்தின் இறுதியில் இணைத்தேன்.

    புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’ என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன். புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர். சேலம் இராமசுவாமி முதலியாரும், பூண்டி அரங்கநாத முதலியாரும் பார்த்து இன்புறுவதற்கில்லையே என்ற வருத்தம் மாத்திரம் எனக்கு ஏற்பட்டது.

    நண்பர் தூண்டுதல்

    புத்தகம் வெளி வந்த பின்னர் எனக்குப் பல புதிய நண்பர்கள் பழக்கமாயினர். பலர் இன்ன இன்ன நூலைப் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று அன்புடன் தூண்டலாயினர். தி. த. கனகசுந்தரம் பிள்ளை மணிமேகலையையும், உதயணன் கதையையும் பதிப்பிக்க வேண்டுமென்று எழுதினார். பொ. குமாரசுவாமி முதலியார் பதிற்றுப்பத்தையும் அகநானூற்றையும் வெளியிட வேண்டுமென்றும் தக்க பொருளுதவி செய்வதாகவும் தெரிவித்தார்.

    நான் இந்நூல்களையும் வேறு சில நூல்களையும் ஆராய்ந்து கொண்டுதான் வந்தேன். ஒரு நூலைப்பார்த்து வருகையில் சலிப்பு ஏற்பட்டால் வேறு ஒன்றைப் பார்ப்பேன். ஒன்றற்குக் குறிப்பு எழுதும்போது தளர்ச்சி உண்டானால் மற்றொன்றைப் படித்து இன்புறுவேன். இப்படி மாறி மாறி நூல்களைப் பார்த்து வந்தமையால் பல நூல்கள் என் ஆராய்ச்சியில் இருந்து வந்தன.

    சொந்த வீடு

    புறநானூறு நிறைவேறியவுடன் மேற்கொண்டு ஆராய்ச்சி வேலையை நடத்தி வருவதற்குப் பின்னும் வசதியான வீடு இருந்தால் அனுகூலமாக இருக்குமென்று நினைத்தேன். என் தந்தையார் ஏதேனும் ஒரு வீடு சொந்தத்தில் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்தார். அவர் காலத்தில் அது கைகூடவில்லை. போதிய பொருளின்மைதான் காரணம். இடவசதி அவசியம் வேண்டியிருந்தமையின் இனிமேல் தாமதம் செய்யக்கூடாதென்றெண்ணிக் கையிலிருந்த தொகையோடு ஒரு பகுதி கடனாகப் பெற்று ரூ. 3000 க்கு ஸஹாஜி நாயகர் தெருவில் ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட்டை எனக்கு விற்றவர் சாமிநாதையரென்பவர். அவரிடம் அதை வாங்கியபோது “இந்த வீடு உங்களிடம் இருந்தாலும் என்னிடம் இருந்தாலும் ஒன்றுதான். இரண்டு பேரும் ஒன்றே யல்லவா?” என்றேன்.

    அந்த வீடு மூன்று கட்டும் மாடியும் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வசதியாக அமைந்திருந்தது. காவேரிக் கரையில் காலேஜு க்கு எதிரே இருந்தமையால் காலேஜில் முதல் மணி அடித்த பிறகு கூடப் புறப்பட்டுப் போய்ச் சேரும்படி இருந்தது. நல்ல நாளில் சொந்த வீட்டிற் குடி புகுந்து தமிழாராய்ச்சியை நடத்தி வந்தேன்.

    பாண்டித்துரைத் தேவர்

    புறநானூற்றைப் பெற்றுக் கடிதமெழுதியவர்களுள் பாலவ நத்தம் ஜமீன்தாராகிய பாண்டித்துரைத் தேவரும் ஒருவர். அதில் அவர், “தங்களால் லோகோபகாரமாய் அரிய நூல்கள் அச்சிடுவதாக எடுத்துக் கொள்ளப்பட்ட நன்முயற்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய எப்பொழுதும் ஆவலுற்றிருப்பவனாதலின் அதற்குரிய நற்சமயம் அறிவிக்கக் கேட்டுக் கொள்ளும் தங்கள் பாண்டித்துரை” (14-11-1894) என்று குறிப்பித்திருந்தார். இக்கடிதம் வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவர் திருவாவடுதுறையாதீன கர்த்தரைத் தரிசிக்கும் பொருட்டுத் திருவிடைமருதூருக்கு வந்தார். ஆதீன கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் அவர் வரவை எனக்குத் தெரிவித்து என்னையும் வரும்படியாக எழுதினார். அவ்வாறே சென்று பாண்டித் துரையைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் புறநானூற்றுப் பதிப்பைப் பாராட்டி விட்டு “இனிமேல் எந்த நூலை அச்சிடப் போகிறீர்கள்!” என்று கேட்டார்.

    “பல நூல்கள் இருக்கின்றன, மணிமேகலையை அச்சிடலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும் அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவுபடவில்லை. புறத்திரட்டென்ற தொகை நூல் ஒன்று இருக்கிறது. அதில் இப்போது வழக்கில் இல்லாத பல நூற் செய்யுட்கள் உள்ளன. புறநானூற்றைப் பதிப்பித்தபோது புறத் துறைகளின் இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள எண்ணினேன். அந்நூலிற்கண்ட துறைகளுக்கு விளக்கம் தேடுகையில் புறப்பொருள் வெண்பாமாலை மிகவும் உபயோகமாயிற்று. அதனை நன்கு ஆராய்ந்தேன். அதற்குக் பழைய உரையொன்று என்பால் இருக்கிறது. மூலம் மாத்திரம் சரவணப் பெருமாளையரால் முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது உரையுடன் வெளியிடலாமென்று எண்ணுகிறேன்” என்றேன் நான்.
    செய்யுட் கடிதம்

    அவர் இராமநாதபுரம் சென்றவுடன் எனக்கு ஒரு செய்யுட் கடிதமும் ஐந்நூறு ரூபாய்க்கு ஓர் உண்டியலும் 17-12-1894 அன்று எனக்கு அனுப்பினார். அக்கடிதத்திற் சில பகுதிகள் வருமாறு.

    (கலி வெண்பா)

      1. “திங்கள் புரையுந் திருவதனச் செல்வியொரு
      பங்கினமர் பெம்மான் பதமலரே - துங்க

      2. முடிக்கணியாத் தாங்கி முதுபரவை வேலிப்
      படிக்கணியா யென்றும் பலநூல் - வடிக்கும்

      3. உளத்தார்க் கொருநிதியா யோங்குபுகழ் மேய
      வளத்தா லுயர்குடந்தை மன்னித் - துளக்கரிய

      4. நேமிநா தன்மருகி நேயமனையா ளோடுவாழ்
      சாமிநா தைய தகுநண்ப - மாமுகவை

      5. மன்னியபாண்டித்துரைபல் வந்தனஞ்செய் தின்றெழுதும்
      நன்னிருப மீதாம்..............

      6. காமாரி தந்தவிளங் காதலனே ராய்த்தமிழின்
      மாமாரி பெய்துலகை வாழ்விப்போய் - ..............

      7. பயன்சிறிய தேனும் பனையளவாக் கொள்வர்
      நயன்றெரிவோ ரென்றவுண்மை நாடி - முயன்றிதுபோ

      8. தைந்நூறு ரூபா வனுப்பினனஃ தேற்றருள்வாய்
      மெய்ந்நூ றுரீஇயொழுகும் வித்தகா - மைந்நூறி

      9. ஆமாலை யிற்சுவையுண் டாக்கும் புறப்பொருள்வெண்
      பாமாலை யச்சிற் பதிவுசெயும் - மாமுயற்சி

      10. ஊறிகந்து முற்ற லுறுவிப்பா னோங்குகவான்
      ஆறுகந்த சென்னியருள்.”

    1. செல்வி - உதாதேவியார், பெம்மான் - சிவபெருமான்.
    2. முதுபரவை வேலிப்படிக்கு - பழைய கடலாகிய எல்லையையுடைய பூமிக்கு. வடிக்கும் - இயற்றும்.
    4. நேமிநாதன் மருகி - திருமாலுக்கு மருமகளாகிக் கலைமகள். நேய மனையாள் - அவனுக்கு அன்புள்ள மனையாளாகிய திருமகள். முகவை -இராமநாதபுரம்.
    6. காமாரி - சிவபெருமான்.
    7. காதலன் - முருகக்டவுள்.
    8. மெய்ந்நூறுஉரீஇ - மெய்யில் திருநீற்றைப் பூசி.
    மை நூறி - குற்றத்தை நீக்கி.
    9-ஆம் ஆலையின் சுவை உண்டாக்கும் - ஆகின்ற கரும்பைப்போலச் சுவையை உண்டாக்கும். 10. ஊறு இகழ்ந்து - இடையூறு நீங்கி. ஆறு உகந்த சென்னி - கங்காதரனது அருள் ஒங்குக.

    பாண்டித்துரைத் தேவர் இங்ஙனம் செய்த உதவியை நான் பாராட்டி எழுதியதோடு, அம்பலவாண தேசிகரிடமும் தெரிவித்தேன். அவர் உடனே முந்நூறு ரூபாய் வழங்கினார். இவ்விருவரும் உதவிய பொருளைக் கொண்டு வீட்டுக்காக நான் வாங்கின கடனை அடைத்து விட்டேன்.

    புறப்பொருள் வெண்பாமாலை

    பாண்டித்துரைத் தேவர் கடிதம் புறப்பொருள் வெண்பா மாலைப் பதிப்பைத் தொடங்கத் தூண்டுகோலாக உதவியது. அந்த நூலை அடுத்தபடி பதிப்பிக்க எடுத்து வைத்துக் கொண்டேன்.

    புறப்பொருள் வெண்பாமாலை என்பது புறப்பொருளின் இலக்கணத்தைக் கூறும் சூத்திரங்களையும் அவ்விலக்கணத்துக்கு இலக்கியமாகிய வெண்பாக்களையும் கொண்டது. வெண்பாமாலை என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. சேரகுலத்திற் பிறந்த ஐயனாரிதனார் என்பவர் அந்நூலின் ஆசிரியர். என்னிடமிருந்த உரையின் ஆசிரியர் இன்னாரென்று அக்காலத்தில் எனக்குத் தெரியவில்லை. பிறகு, இராமநாதபுரம் மகாவித்துவான் ஸ்ரீ ரா. இராகவையங்கார், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்த ஒரு சுவடியிற் கண்ட குறிப்பினால் அவ்வுரையாசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயகரென்று புலப்படுவதாகத் தெரிவித்தார்,

    இளம்பூரணம்

    புறப்பொருள் வெண்பா மாலைச் சுவடிகள் சில என்பால் இருந்தன. பின்னும் கிடைக்குமோ வென்று தேடலானேன். தி. த. கனகசுந்தரம் பிள்ளை என்னிடம் ஒரு பழைய ஏட்டுச் சுவடியைக் கொடுத்து, “இந்தச் சுவடி இன்னதென்றுவிளங்கவில்லை; புறப்பொருள் பற்றிய வெண்பாவை இடையிலே கண்டேன்; பாருங்கள்” என்று சொன்னார். நான் அதை எடுத்து வந்து பார்க் கையில் ஏடுகள் வரிசையாக இராமல் நிலைமாறிக் கோக்கப் பட்டிருந்தன. மிகவும் சிரமப்பட்டு ஒழுங்குபடுத்திப் பிரதி செய்வித்தேன். அப்பால் அதைப் படித்துப் பார்க்கையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் உரையென்று தெரிந்தது. புறத்திணையின் உரையில் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுட்கள் பல உதாரணமாகக் காட்டப் பெற்றிருந்தன. பதிப்பிக்கப் பட்டிருந்த பொருளதிகார உரையை வைத்து ஒப்பு நோக்கியபோது அவ்வுரை வேறாகக் காணப்பட்டது. ‘ஏதோ வேறு பழைய உரையாக இருக்க வேண்டும்’ என்று தோற்றியதே தவிர இன்னாருடைய தென்பது விளங்கவில்லை. மற்றும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்.

    புறப்பொருள் சம்பந்தமாக உள்ள எல்லா நூல்களையும் படித்து ஆராயத் தொடங்கி இலக்கண விளக்கத்தைப் படித்தேன். அதில் மாலைநிலை என்னும் துறையைப் பற்றிச் சொல்லுகையில் உரையில், உரையாசிரியர் இன்னவாறு எழுதினாரென்ற குறிப்பு இருந்தது. அக்குறிப்பிலிருந்து என்னிடமிருந்த தொல்காப்பிய உரை, உரையாசிரியரென்று வழங்கும் இளம்பூரணருடையதென்று தெரிய வந்தது. அப்போது நான் மிக்க ஆனந்தத்தை அடைந்தேன். புறப்பொருளிலக்கண ஆராய்ச்சியில் நான் எதிர்பாராமற் பெற்ற பெரிய லாபம் இது. மீண்டும் அவ்வுரையை நன்கு ஆராய்ந்து அதில் வரும் மேற்கோள்களைக் கவனித்து இன்ன நூலென்று குறித்து வந்தேன்.

    புறப்பொருள் வெண்பா மாலைப் பதிப்புக்கு வேண்டிய அங்கங்களைச் சித்தம் செய்துகொண்டு சென்னைக்குச் சென்று அதனை அச்சுக்குக் கொடுத்தேன்.
    ----------

    அத்தியாயம்-120
    மணிமேகலை ஆராய்ச்சி

    திருவாவடுதுறை யாதீன கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் தமிழ்ப் பயிற்சி மிகுதியாக உடையவர். ஸம்ஸ்கிருதத்தில் அன்பும் சங்கீதப் பழக்கமும் அவர்பால் இருந்தன. கல்லிடைக்குறிச்சி வித்துவான் முத்து சாஸ்திரிகளிடம் அவர் தனியே ஸம்ஸ்கிருதம் பயின்றார். வித்துவான்களுக்குச் சம்மானம் செய்வதில் அவரைப் போஜனென்றும் கர்ணனென்றும் பாராட்டுவார்கள்.

    திருவாவடுதுறைப் புத்தகசாலை

    ஆதீனத்தின் சார்பில் ஒரு நல்ல புத்தகசாலையை அமைக்க வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு உண்டாயிற்று. அங்கே இயல்பாகவே ஒரு புத்தகசாலை இருந்தாலும் அதைப் பின்னும் விரிவுபடுத்தி, தமிழ், ஸம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் பாஷைகளில் உள்ள பலவகையான அச்சுப் புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டு மென்று எண்ணினார். புத்தகசாலைக்குரிய இடமாக ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டுவித்தார். இப்போது ஸரஸ்வதி மஹால் என்று வழங்குவது அதுவே. புத்தக சாலைக்கு வேண்டிய புத்தகங்களை வாங்குவதற்காகத் தேசிகர் என்னைச் சில காரியஸ்தர்களுடன் சென்னைக்கு அனுப்பினார்.

    மற்றொரு வேலையையும் என்பால் அவர் ஒப்பித்தார். இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி சில முறை திருவாவடுதுறைக்கு வருவதாக இருந்தது எப்படியோ நின்று விட்டது.

    அவரை ஒரு முறையேனும் மடத்துக்கு அழைத்து வரவேண்டுமென்ற ஆவல் மடத்ைதைச் சார்ந்தவர்களுக்கு இருந்தது. நான் புத்தகங்கள் வாங்கும் பொருட்டுச் சென்னைக்குச் செல்ல எண்ணிய காலத்தில் ஸேதுபதி சென்னையிலிருந்தார். “இந்தச் சமயத்தில் அவர்களைக் கண்டு எப்படியாவது இங்கே வரும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பு உங்களைச் சார்ந்தது” என்று அம்பலவாண தேசிகர் என்னிடம் சொன்னார்.

    நான் சென்னைக்கு வந்து முதற்காரியமாகப் பாஸ்கர சேதுபதி மன்னரைப் பார்த்தேன். தமிழ் நயந்தேரும் அவர் மிகவும் பிரியமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் வந்த காரியத்தைத் தெரிவிக்கவே அவர் ஒப்புக்கொண்டார். உடனே அந்தச் சந்தோஷச்செய்தியை அம்பலவாண தேசிகருக்குக் கடிதவாயிலாகத் தெரிவித்தேன். பிறகு புத்தக சாலைக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டன. பல பாஷைகளிருலுமுள்ள புத்தகங்களை வாங்கினோம். வை. மு. சடகோபராமானுஜாசாரியர் புத்தகம் வாங்கும் விஷயத்தில் உடனிருந்து உதவி செய்தார். புத்தகங்களையெல்லாம் ரெயில்வே கூட்ஸ் மூலம் திருவாவடுதுறைக்கு அனுப்பச் செய்தேன்.

    மணி ஐயர் தரிசனம்

    அப்போது மணி ஐயர் ஹைகோர்ட்டு ஜட்ஜாக நியமனம் பெற்றிருந்தார். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரைக் கண்டு ஊக்கமடைந்து வருவது வழக்கம்: அந்த முறை சந்தோஷம் விசாரிக்கச் சென்றேன். “புறநானூறு மிகவும் நன்றாயிருக்கிறது. இப்போது என்ன நடக்கிறது?” என்று என்னைக் கண்டவுடன் அவர் கேட்டார். புறநானூற்றுப் பிரதியை அவர் பெற்று எனக்குப் பணமும் முன்பு அனுப்பியிருந்தார்.

    “ஜட்ஜ் உத்தியோகம் ஆகியிருக்கிற சந்தோஷ சமாசாரம் கேள்வியுற்றேன். ஜனங்களுடைய அதிருஷ்டந்தான் இது. இதற்குமுன் தங்களோடு பழகினமாதிரி இனிமேல் பழகுவதற்கு மனம் அஞ்சுகிறது” என்றேன்.

    “என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? எனக்கு இப்போது கொம்பு முளைத்துவிட்டதா என்ன? நீங்கள் எப்போதும் போல் வரலாம்; பேசலாம்; சாப்பிடலாம்; என்னால் ஆகவேண்டிய காரியங்களை மனம் விட்டுச் சொல்லலாம்” என்று அவர் சொன்ன போது பரோபகாரத்தையே தம் வாழ்க்கையின் நோக்கமாகக் கருதியிருக்கும் அவர் இயல்பு என்றும் மாறாதென்பது அந்தத் தொனியிலேயே வெளிப்பட்டது.

    அவரிடம் விடைபெற்று வேறு நண்பர்களைப் பார்த்துப் பேசியிருந்துவிட்டுத் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன். பாஸ்கர சேதுபதி 1895-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அங்கே வருவதாகச் சொல்லியிருந்தார். அச்சமயம் திருவாவடுதுறையில் முக்கியமான குருபூஜை நடக்கும் சந்தர்ப்பமாக இருந்தது. அதற்கு முன்பே புத்தக சாலையைத் திறந்துவிட நிச்சயித்து நாள் பார்த்த போது ஜனவரி 30-ஆம் தேதி நல்ல நாளாக இருந்தது. புத்தக சாலைக்கு என்ன பெயர் வைக்கலாமென்று அம்பலவாண தேசிகர் கேட்டார். வித்தியா நிதி என்ற பெயர் வைக்கலாமென்று சொன்னேன். ஜனவரி மாதம் 30-ஆம் தேதியன்று வித்தியா நிதி திறக்கப் பெற்றது. கும்பகோணம், மாயூரம் முதலிய பல இடங்களிலிருந்து பல கனவான்களும் வித்துவான்களும் வந்திருந்தார்கள்.

    அடுத்தநாள் பாஸ்கர சேதுபதி மடத்திற்கு வந்தார். உபசாரங்கள் எண்ணிப் பார்க்கவும் முடியாத சிறப்புடன் இருந்தன. பாஸ்கர விலாஸம் என்ற பெயருடன் மிகப்பெரிய கீற்றுக்கொட்டகை ஒன்று போடப்பட்டது. கீற்றுக் கொட்டகையாயினும் பெரிய மாளிகையைப் போன்ற அலங்காரங்கள் அதில் அமைக்கப்பெற்றன. நான் உடனிருந்து சேதுபதியோடும் ஆதீனத் தலைவரோடும் சம்பாஷித்து மகிழ்ச்சியுற்றேன். சேதுபதியவர்கள் விடைபெற்றுப் புறப்பட்டார்.

    மணிமேகலை ஆராய்ச்சி ஆரம்பம்

    சென்னையில் அச்சாகிக்கொண்டிருந்த புறப்பொருள் வெண்பாமாலை முற்றும் பதிப்பித்து நிறைவேறியது. அந்த நூற் பதிப்பில் எனக்கு அதிகமான சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால் நான் அப்போது ஆராய்ச்சி செய்து வந்த மணிமேகலைதான் பலவகையான சிக்கல்களை உண்டாக்கியது. முதலில் அந்நூல் இன்ன சமயத்தைச் சார்ந்ததென்பதே எனக்குத் தெரியவில்லை. கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த மளூர் ரங்காசாரியரே அது பௌத்த சமயத்தைச் சார்ந்த தென்பதை எனக்குத் தெரிவித்தார். x அதுகாறும் இன்னதென்று தெரியாமல், அல்லற் பட்டுக் கொண்டிருந்த எனக்கு, அதுமுதல் வேறுவகையான அச்சம் உண்டாயிற்று. ‘நாம் சைவமடத்திற் பயின்றமையால் சைவசமய நூல்களைக் கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே வரும் வைஷ்ணவ வித்துவான்களின் பழக்கத்தால் வைஷ்ணவ மதத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்க முயன்ற காலத்தில் ஜைன மதத்தைப் பற்றிய செய்திகள் தெரியாமல் உழன்றோம். நல்ல வேளையாக ஜைன நண்பர்கள் கிடைத்தார்கள். புதிதாக அச் சமயத்தைப்பற்றிய செய்திகளை அறிந்தோம். இப்போது புத்த சமய நூலையல்லவா எடுத்துக்கொண்டோம்! இதுவும் நமக்குத் தெரியாக மதமாயிற்றே. ஜைன சமயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜைன நண்பர்கள் இருந்தார்கள். புத்தமதமே இந்தியாவில் இல்லையே. பௌத்தர்களை நாம் எங்கே தேடு வோம்! பௌத்த மதத்தைப் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வோம்?’ என்று என் சிந்தனை சுழன்றது.

    அப்போது ரங்காசாரியர் அபயமளித்தார். “நீங்கள் பயப்பட வேண்டாம்; பௌத்த மத சம்பந்தமான புத்தகங்கள் நூற்றுக் கணக்காக இங்கிலீஷில் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நான் பலவற்றைப் படித்திருக்கிறேன். பாராதவற்றை நான் படித்துப் பார்த்து உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

    நான் அவரை மணிமேகலை ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாகப் பற்றிக்கொண்டேன்.

    பௌத்த மத ஆராய்ச்சி

    அது முதல் பௌத்த மத ஆராய்ச்சியிலே புகுந்தேன். தமிழ் நூல்களில் எங்கெங்கே பௌத்த மத விஷயங்கள் வருகின்றனவென்று தேடித் தொகுக்கலானேன். நீலகேசியின் உரையில் பௌத்த மத கண்டனம் வருமிடங்களில் புத்தரைப் பற்றிய வரலாறுகளும் பௌத்த சமயக் கொள்கைகளும் காணப்பட்டன. புத்த மித்திரர் என்ற தமிழ்ப் புலவர் இயற்றிய வீரசோழியமென்னும் இலக்கண நூலின் உரையில் புத்த தேவனைப் பற்றிய பல செய்யுட்கள் உதாரணமாக வந்துள்ளன. அவற்றையும் தனியே எடுத்து எழுதிப் படிக்கலானேன். சிவஞான சித்தியார் பரபக்கம், ஞானப் பிரகாசர் உரையில் பௌத்த மத கண்டனமுள்ள இடத்திற் பல பௌத்த சமயக் கருத்துக்கள் வருகின்றன. அவற்றையும் கவனித்து வைத்துக் கொண்டேன். இவற்றையன்றித் தமிழிலோ ஸம்ஸ்கிருதத்திலோ பௌத்த மதநூல் ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லை. பாளிபாஷையிலே தான் பெரும்பான்மையான பௌத்த மத நூல்கள் உள்ளன வென்று ரங்காசாரியர் தெரிவித்தார்.
    ---------
    x இதன் விரிவை நினைவுமஞ்சரியிலுள்ள ‘மணிமேகலையும் மும்மணியும்’ என்ற கட்டுரையிற் காணலாம்.
    ----------

    ஆங்கிலத்தில் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன்பர்க், ரைஸ் டேவிஸ் முதலியோர் எழுதிய புத்தகங்களை ரங்காசாரியர் படித்துக் காட்டினார்.

    சில புத்தகங்களை விலைக்கு வருவித்துக் கொடுத்தேன். புத்த பகவானது சரித்திரத்தை கேட்கக் கேட்க அவருடைய இயல்புகளில் என் உள்ளம் புதைந்து நின்றது.

    அடுத்தடுத்து மணிமேகலையையும் படித்து வந்தேன். புலப்படாமல் மயக்கத்தை உண்டாக்கிய பல விஷயங்கள் சிறிது சிறிதாகத் தெளியலாயின. இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துக்கள் அதிற் காணப்பட்டன. அவற்றைப் படித்து நான் இன்புற்றேன். ரங்காசாரியர் கேட்டுக் கேட்டுப் பூரித்துப் போவார். “ஆ! ஆ! என்ன அழகாயிருக்கிறது! மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கின்றன!” என்று சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார் புத்தரைப் புகழும் இடங்களைப் பல முறை படித்துக் காட்டச்சொல்லி மகிழ்ச்சி யடைவார். “நான் இங்கிலீஷில் எவ்வளவோ வாசித்திருக்கிறேன்; ஆனால் இவ்வளவு இனிமையான பகுதிகளை எங்கும் கண்டதில்லை” என்று சொல்லுவார்.

    இனிய பகுதிகள்

    பௌத்த சமயத்தினர் கூறும் நான்கு சத்தியங்களாகிய துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கையும்,

      “பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;
      பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;
      பற்றின் வருவது முன்னது; பின்ன
      தற்றோ ருறுவ தறிக”

    என்று மணிமேகலை சுருக்கமாகக் கூறுகிறது. புத்த பிரானைப் புகழும் பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும்.

    ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன், தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம் வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.

    இடையிடையே பிற தமிழ் நூல்களிற் கண்ட தமிழ்ப்பாடல்களைச் சந்தர்ப்பம் வந்தபோது நான் எடுத்துச் சொல்லுவேன். புத்தர் பிரான் நிர்வாண மடைந்த காலத்தில் அவர் அருகில் இருந்தோர் புலம்புவதாகக் கொள்ளுதற்குரிய செய்யுள் ஒன்று வீரசோழிய உரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றிருந்தது;

      “மருளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால்
            என்செய் கேம்யாம்
      அருளிருந்த திரு மொழியா லறவழக்கங் கேட்டிலமால்
            என்செய் கேம்யாம்
      பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக் கண்டிலமால்
            என்செய் கேம்யாம்”

    என்னும் அச் செய்யுளை வாசித்தபோது படிக்க முடியாமல் நாத்தழுதழுத்தது. ரங்காசாரியரும் அதில் நிரம்பியுள்ள சோகரஸத்தில் தம்மை மறந்து உருகினார்.

    இவ்வாறு புத்த சரித்திரத்திலே ஈடுபட்டு உருகியும் பௌத்த மத தத்துவங்களை அறிந்து மகிழ்ந்தும் பெற்ற உணர்ச்சியிலே மணிமேகலை ஆராய்ச்சி நடந்தது.

    ஸுமங்களர் செய்த உதவி

    மணிமேகலை இலங்கைக்குச் சென்றதாக அக்காப்பியம் தெரிவிக்கிறது. இலங்கையிலே உள்ள சில இடங்களின் பெயர்கள் அதில் வருகின்றன. கொழும்புவிலிருந்த பொ. குமாரசாமி முதலியாருக்கு அவ்விடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிவிக்க வேண்டுமென்று எழுதியதோடு பௌத்த மத விஷயங்களை அறிவதற்குத் துணை செய்வார் யாரேனும் இருப்பின் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். அங்கே வித்யோதய கலாசாலையில் பிரின்ஸிபாலாக இருந்தவரும் பௌத்த மத ஆசிரியருமாகிய ஸுமங்களரென்னும் பௌத்தப் பெரியாரொருவர் உள்ளாரென்று முதலியார் தெரிவித்தார். பௌத்த மத நூல்களைப் பற்றியும், அச்சமயக் கொள்கைகளைப் பற்றியும் பல செய்திகளை அப்பெரியாரைக் கேட்டு எழுதச் செய்து எனக்கு அனுப்பினார்.

    “இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும் சிலம்பு.”

    என்பதில் வரும் சமனொளி யென்பது சமந்த மென்றும் ஆடம்ஸ்பீக் என்றும் வழங்கப்படுமென்பது அவரால் தெரிந்தது. புத்த தேவருடைய பாதப் படிமைகள் அங்கு உள்ளன என்பதையும் அறிந்தேன்.

    உள்ளங் கவர்ந்த பகுதிகள் ரங்காசாரியரோடு இருந்து மணிமேகலையைப் படித்து இன்புறுவதை யன்றி நானும் தனியே படித்துப் படித்து ஈடுபடலாயினேன். இந்த உடம்பை,

      “வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
      புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது
      மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை
      பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்
      புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
      அவலக் கவலை கையா றழுங்கல்
      தவலா வுள்ளந் தன்பா லுடையது மக்கள் யாக்கை”

    என்று இழித்துக் கூறிய பகுதியிற் கருத்தூன்றினேன். அன்ன தானத்தைச் சிறப்பிக்கும்,

    “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே”

    என்ற அடிகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. தான தருமம் இல்லாமைபற்றிச் சுவர்க்கத்தை ஆபுத்திரனென்பவன் இழிவாகக் கூறுகிறான்:

      “அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்
      நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
      யாவரு மில்லாத் தேவர்நன் னாட்டுக்
      கிறைவ னாகிய வொருபெரு வேந்தே”

    என்று இந்திரனை நோக்கி அவன் சொல்லும் வார்த்தைகளில் அமைந்த பொருளாழத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்தேன்.

    ரங்காசாரியர் ஒன்றரை வருஷ காலம் கும்பகோணத்தில் இருந்தார். நாள் தவறாமல் அவரிடம் சென்று அவர் சொல்லும் பௌத்த மதக் கருத்துக்களைக் குறித்துக் கொண்டு வந்தேன். அதன் பிறகு அவரைச் சென்னைக்கு மாற்றி விட்டார்கள். அவர் சென்னைக்குப் புறப்படும் பொழுது, “இந்தப் புத்தகத்தை நீங்கள் விரைவில் பதிப்பித்து வெளியிடுங்கள்; இது மாணிக்கத்தைப் போல அருமையானது” என்றார்.

    “தாங்கள் சென்னைக்குப் போவதனால் மணிமேகலையின் சம்பந்தம் உங்களை விடாது. அங்கேயும் வந்து தங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நான் விடப்போவதில்லை” என்றேன் நான்.

    “அப்படியானால் நான் மிகவும் பாக்கியம் செய்தவனே” என்று அவர் தம் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டார். அவர் உள்ளத்தில் மணிமேகலையிற் கண்ட அரிய வரலாறுகளும் இனிய பகுதிகளும் குடி கொண்டன.
    ----------

    அத்தியாயம்-121
    மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்

    மேல் நாட்டில் எனக்கு நண்பரானவர்களில் ரெவரெண்ட் ஜி. யூ. போப் ஒருவர். அவர் பல காலம் தமிழ் நாட்டில் இருந்தவர். தமிழில் சிறுவர்களுக்குப் பயன்படும் வண்ணம் சிற்றிலக்கணம் ஒன்று எழுதியிருக்கிறார். ‘போப்பையர் இலக்கணம்’ என்ற பெயரோடு தமிழ் நாட்டில் அது வழங்கியது. திருவாசகத்தையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவர் வெளியிட்டிருக்கிறார். ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிடியில் தமிழ்ப் பேராசிரியராக அவர் இருந்து வந்தார்.

    ஒரு சமயம் பூண்டி அரங்கநாத முதலியாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது போப்பினுடைய பிரஸ்தாவம் வந்தது. அப்போது முதலியார், “அவர் பதிப்பித்த நாலடியார் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் உழைத்துப் பல குறிப்புக்களை எழுதியிருக்கிறார். தங்கள் சீவகசிந்தாமணிப் பதிப்பைப் பற்றியும் அதில் பாராட்டி எழுதியிருக்கிறார்” என்று சொல்லித் தம்மிடமிருந்த பிரதியைக் கொடுத்தார்.

    போப் துரையின் நட்பு

    பிறகு புறநானூறு வெளியானபின் அதில் ஒரு பிரதி அவருக்கு அனுப்பினேன். அரங்கநாத முதலியார் இல்லாத காலம் அது. சில மாதங்கள் வரையில் போப்பிடமிருந்த கடிதம் வரவில்லை. புத்தகம் அவரிடம் போய்ச் சேர்ந்ததோ, இல்லையோ என்ற சந்தேகத்தோடு நான் இருந்தேன். மே மாதம் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது அது. ‘இந்தியன் இன்ஸ்டிடியூட்’ 26-4-1895

    “, , , , ,தங்கள் புறநானூற்றைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்க வேண்டும். தாங்கள் சிறப்பாகப் பதிப்பித்த சீவக சிந்தாமணிப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதை அடிக்கடி உபயோகிப்பதுண்டு. என் நாலடியார்ப் பதிப்பில் முகவுரை 41-ஆம் பக்கத்தில் அதைப் பற்றிக் குறித்திருக்கிறேன். தாங்கள் இன்னும் ஏதேனும் பதிப்பித்திருக்கிறீர்களா? தங்கள் பதிப்பு நூல்களைப் பற்றி ராயல் ஏஷியாடிக் ஸொஸைடிக்கு ஒரு கட்டுரை எழுதியனுப்ப உத்தேசித்திருக்கிறேன். புறநானூற்றை இன்னும் தெளிவு படுத்த முடியாதா? எனக்குத் தமிழ் தெரியுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தாலும் எனக்கு அதில் பல பகுதிகள் விளங்கவில்லை. ஆதலால் இன்னும் தெளிவும் சுலபமுமான நடையில் உரை வேண்டும். பண்டிதரல்லாத என்போலியரிடம் கருணை கொள்ளுங்கள்.

    “சிந்தாமணி பெரும்பாலும் சுலபமாகவே இருக்கிறது. அருமையும் பெருமையுமுள்ள தமிழின் பொருட்டுத் தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சித் திறனமைந்த பதிப்பு ஒன்று வேண்டும்,.,,,,,புராணக் கதைகளை விலக்கிவிட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு எழுத வேண்டும்,,,,புறநானூற்றை எவ்வாறு படித்துப் பயன் படுத்தலாமென்பதையேனும் தெரிவியுங்கள்.”

    அவர் முதல் முறையாக எழுதிய இக் கடிதத்தால், அவருக்கிருந்த தமிழன்பை ஒருவாறு அளந்தறிய முடிந்தது. தமிழ் நூல்களை நல்ல முறையில் நல்ல உருவத்தில் பதிப்பிக்க வேண்டுமென்ற கருத்துடைய எனக்கு அவர் எழுதியனவெல்லாம் மிகவும் பொருத்தமாகத் தோற்றின.

    அடுத்தபடி புறப்பொருள் வெண்பாமாலைப் பிரதி ஒன்றை அவருக்கு அனுப்பினேன். அதைப் பெற்றவுடனே பின் வரும் கடிதத்தை எழுதியனுப்பினார்.

    “பேலியல் காலேஜ்” ஆக்ஸ்போர்டு. 21-10-1895

    “, , , , தாங்களனுப்பிய புறப்பொருள் வெண்பா மாலைக்காக நன்றி பாராட்டுகிறேன். அதன் பிரதி ஒன்று எங்கள் தமிழ்ப் புத்தகசாலையில் இருக்கிறது. அதைப் படித்து முடிக்க முயன்றேன்.

    நானும் எவ்வளவோ திட்டம் போடுகிறேன்; ஆனால் நீங்கள் இளைஞர், நான் கிழவன்-

    ‘ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
    கோடியு மல்ல பல.’

    நான் மிகவும் அசௌக்கியமாக இருந்தேன்; ஆயினும் இன்னும் ஏதேனும் செய்யலாமென்று நம்பியிருக்கிறேன்..,,,,,உங்கள் பதிப்பு திருத்தமாகவும் பூர்ணமாகவும் இருக்கிறது. பழந்தமிழ் நூல்களெல்லாம் புதுத் தமிழர்களுக்கு விளங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள்,,,,,,”

    இக் கடிதத்தில் திருக்குறட் செய்யுளைத் தமிழிலே எழுதியிருந்தார். அவர் எழுத்துக்களிலே நடுக்கமும் வார்த்தைகளிலே தேக அசௌக்கியத்தைக் காட்டும் குறிப்பும் இருந்தன. ‘ஒரு பொழுதும் வாழ்வ தறியார்’ என்ற அருமைத் திருக்குறளை அவர் எழுதுகையில் அவரது மனநிலை எப்படி இருந்திருக்குமென்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவோ காரியங்களைச் செய்யவேண்டுமென்ற ஆசையோடு உழைத்து வரும்போது இடையிலே வாழ்க்கை முடிந்து விட்டால் என் செய்வதென்ற பயம் அவர் நெஞ்சில் இருப்பதை அக்குறள் வெளிப்படுத்தியது. அவர் இன்னும் பல வருஷங்கள் வாழ வேண்டுமென்று வாழ்த்தினேன்.

    நல்ல வேளையாக அவரது தேக அசௌக்கியம் மாறியது. முதுமைத் தளர்ச்சியிருந்தாலும் தமிழாசை அவர் உடம்பில் ஒரு புதிய முறுக்கை ஏற்றியிருக்க வேண்டும். 1896-ஆம் வருஷ ஆரம்பத்தில் அவர் மீட்டும் எனக்குக் கடிதம் எழுதினார்.

    மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம் 3-1-1896.

    “, , , , ,நான் நெடுங்காலம் கடிதம் எழுதாமல் தாமதம் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும். தங்கள் அற்புதமான பதிப்புக்களாகிய புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இரண்டையும் எளிதிற் படித்து இன்புற்று வருகிறேன். அவ்விரண்டும் ஒன்றையொன்று அழகாக விளக்குகின்றன.

    பாரி, அவன் மகளிற், கபிலர், கோப்பெரூஞ் சோழன், பிசிராந்தையார். பொத்தியார் முதலியவர்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கர்ணபரம்பரைச் செய்திகள் வேண்டும்; 115 முதல் 120 வரையிலுள்ள பாடல்கள் உள்ளங் கவர்வன, , , , தங்களுக்கு நாலடியாரின் பிரதி ஒன்று அனுப்பச் சொன்னேன். ஆக்ஸ்போர்டிலிருந்து கிடைத்ததா?,,,,,புது வருஷ வாழ்த்துக் கூறுகிறேன்.”

    அவர் அனுப்பச் செய்த நாலடியார் எனக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்து கொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப் பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது.

    பாரிஸ் நகரத்தில் இருந்த ஜூலியன் வின்ஸோனது தமிழன்பையும் ஆக்ஸ்போர்டிலிருந்த போப்பினுடைய தமிழன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறப்புடையதாக இருந்தது. இருவரிடத்தும் விடா முயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றனரென்றெண்ணி வருந்தினேன்.

    போப் துரை மேலும் பல கடிதங்கள் எழுதினார். புறநானூற்றிலிருந்தும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்தும் பல அரிய செய்யுட்களைத் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஒவ்வொரு வருஷ ஆரம்பத்திலும் அத்தகைய மொழி பெயர்ப்பொன்றை வாழ்த்துடன் எனக்கு அனுப்பி வந்தார்.

    இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று. மணிமேகலை ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.

    சுந்தரம் பிள்ளை கடிதங்கள்

    1896-ஆம் வருஷ ஆரம்பத்தில் திருவனந்தபுரத்தில் இருந்த புரொபஸர் பி. சுந்தரம் பிள்ளை, தாமுள்ள காலேஜில் தமிழாசிரியர் வேலைக்குத் தக்க ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களென்று தெரிவித்தார். அன்றியும், நான் அவ்வேலையை ஏற்றுக்கொண்டால் ஆரம்பத்தில் ரூபாய் அறுபத்தைந்து கிடைக்குமென்றும், படிப்படியாக உயருமென்றும் எழுதினார். எனக்கு அது சம்மதமாக இல்லை. பிறகு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அந்த ஸ்தானத்தில் நியமித்து விட்டார்கள்.

    அக்காலத்தில் சுந்தரம் பிள்ளை இயற்றிய மனோன்மணீய நாடகத்தின் சில பகுதிகள் காலேஜ் வகுப்புகளுக்குப் பாடமாக இருந்தன. அவற்றை நான் பாடம் சொல்லி வரும்போது பாராட்ட வேண்டிய இடத்திற் பாராட்டி விட்டுப் பிழையாகத் தோற்றிய சிலவற்றைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னேன். இவ்விஷயத்தை யார் மூலமாகவோ அறிந்த சுந்தரம் பிள்ளை அக்குற்றங்கள் இன்னவையென்று தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் எழுதினார். நான் அங்கங்கே கண்டவற்றைத் தொகுத்து எழுதியனுப்பவே அவர் உசிதமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டு தம் நன்றியறிவைத் தெரிவித்தார். அது முதல் அடிக்கடி அவர் அன்போடு எனக்குக் கடிதங்கள் எழுதி வந்தார்.

    காதையும் பாட்டும்

    மணிமேகலையை விரைவில் அச்சுக்குக் கொடுக்கும் பொருட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். மிதிலைப் பட்டியில் கிடைத்த பிரதி தான் எனக்குப் பெருந்துணையாக இருந்தது. மற்றப் பிரதிகளில் ஒவ்வொரு பகுதியும் காதையென்ற பெயருடையதாக இருந்தது. மிதிலைப் பட்டிப் பிரதியில் பாட்டு என்று இருந்தது. முதலில் பதிகமென்பது கதை பொதி பாட்டு என்றும், விழாவறை காதை யென்பது விழா வறைந்த பாட்டு என்றும், இவ்வாறே மற்றவற்றின் பெயர்களும் மாறிக் காணப்பட்டன. அந்தத் தலைப்புக்களிலிருந்து காதை யென்பதற்குப் பாட்டென்னும் பொருள் கொள்ளலாமென்று தெரிய வந்தது. மற்ற ஆதாரங்களைக் கொண்டும் அப்பொருளே உறுதியாயிற்று.

    மணிமேகலை மூலம்

    மணிமேகலையின் மூலம் மாத்திரம் 1891-ஆம் வருஷம் திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையால் அச்சிடப்பெற்றது. பொருள் வரையறை செய்து கொள்ளாமலே பல விடங்களில் ஏட்டிலுள்ள பாடங்களை அவர் அமைத்திருந்தார். அந்தப் பிரதியைக் கொண்டு நூற் பொருளை நன்கு அறிதல் சிரமமாகவே இருக்கும். அது பதிப்பிக்கப்பெற்று வந்த காலத்திலேயே அதைப்பற்றி, தி. த. கனக சுந்தரம் பிள்ளை எனக்கு எழுதியிருந்தார்; “மணிமேகலையில் மூன்று மூன்று பாரம் எனக்குக் காட்டினார்கள். அவர்கள் போடுவது நான் முன் எண்ணியிருந்ததிலும் கேடாகவே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியில் இருக்கின்றபடியே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியிலிருப்பது இதிலும் நலமென்று சொல்லலாம். ஏட்டில் சொக்கலிங்க மென்றிருப்பதை ஒருவர் முழுவதுங் கலிங்கமென்று பொருள் பண்ணி வாசித்தபோதிலும் மற்றொருவராவது சந்தர்ப்பம் நோக்கிச் சொக்கலிங்க மென்று வாசிப்பார். இவர்கள் அதனைச் சேரக் கலிங்கமென்று அச்சிலிட்டதன் பின் ஏட்டைக் காணாதவர்களெல்லாம் சேரக்கலிங்கமென்று தானே படிக்கவேண்டும்? ‘எட்டி குமரனிருந்தோன்றன்னை’ என்பது ‘எட்டிருமானிருந்தோன்’ என்றும், ‘ஆறறி யந்தணர்’ என்பது ‘ஆற்றி யந்தணர்’ என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே யறிந்து கொள்ளவும்” (29-3-1891) என்று குறித்திருந்தார். பின்னால் புத்தகம் வெளி வந்த காலத்தில் அதைப் பார்த்தபோது, பின்னும் ஆராய்ச்சிக்கு இடமுண்டென்றே தெரிந்தது.

    குறிப்புரை

    அப்பதிப்பு வெளிவந்து ஏழு வருஷங்களாயினமையின் நான் செய்த ஆராய்ச்சியின் பயனாகப் பலவகைக் குறிப்புக்களுடன் மணிமேகலையை வெளியிடுவதில் பிழையொன்றுமில்லை என்று கருதினேன். அன்பர்கள் பலர் மணிமேகலை முழுவதற்கும் உரை எழுதி வெளிப்படுத்த வேண்டுமென்று கூறினர். பழந் தமிழ் நூல்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று போப் துரை எழுதிய கடிதங்களும் எனக்குத் தூண்டுகோலாயின. பதவுரையின்றேனும் குறிப் புரையாக எழுதி முடிக்கலாமென்று தொடங்கிப் பெரும்பாலும் எழுதி நிறைவேற்றினேன். சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதையென்னும் பகுதியில் பிற சமய இலக்கணங்கள் வருகின்றன. தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை என்னும் பகுதியில் பௌத்த மதத்தினர் கூறும் அளவையிலக்கணம் முதலியன உள்ளன. இவ்விரண்டற்கும் குறிப்புரை எழுதுவது எளிதென்று தோற்றவில்லை. வடமொழித் தர்க்க சாஸ்திரங்களிற் பாரங்கதராக விளங்கிய குறிச்சி மகாமகோபாத்தியாய ரங்காசாரியரிடம் போய்க் கேட்டேன். முன்னதிலுள்ள விஷயங்களை அவர் விளக்கினார்.

    ஆனால் பின்னதிலுள்ள விஷயங்களை அவரால் விளக்க இயலவில்லை; “இந்த முறையுள்ள பழைய நூல்கள் இக்காலத்து வழங்கவில்லை. இது பிராசீன தர்க்கம்” என்று சொல்லிவிட்டார்.

    கும்பகோணம் காலேஜில் ஸம்ஸ்கிருத பண்டிதராக இருந்த பெருகவாழ்ந்தான் மகா மகோபாத்தியாய ரங்காசாரியரிடமும், திருமலை ஈச்சம்பாடி சதாவதானம் ஸ்ரீநிவாஸாசாரியரிடமும் சில வட மொழிப் பிரயோகங்களில் உண்டான ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

    மற்றவற்றிற்கெல்லாம் ஒரு வகையாகக் குறிப்புரை எழுதி விட்டு அளவையிலக்கணம் வரும் பகுதியைப் பலமுறை வித்துவான்களுடைய முன்னிலையில் பரிசோதித்து இயன்ற வரையில் சுத்த பாடங்களென்று தோற்றியவற்றைத் தெரிந்து எழுதிக் கொண்டேன். பாடபேதங்களை அங்கங்கே அடிக்குறிப்பில் அமைத்தேன்.

    என் உவகை

    எல்லாம் சித்தமானவுடன் மணிமேகலையை எடுத்துக்கொண்டு சென்னை சென்று வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் 5-6-1896 அன்று அச்சுக்குக் கொடுத்தேன்.

    அடிக்குறிப்பில் நான் எழுதிய குறிப்புரையோடு, புத்தகம் அச்சாகத் தொடங்கியது. முதல் பாரத்தைப் பார்த்து உத்தரவு கொடுத்த போது என் உள்ளத்தில் இருந்த உவகைப் பெருக்கை இறைவனே உணர்வான்! ‘இந்த நூலையும் நாம் பதிப்பிப்போமா!’ என்று அலந்திருந்தவனாதலின் அதற்கு ஓர் உருவும் ஏற்பட்டதைப் பார்த்து என் உள்ளமும் உடலும் பூரித்தன.
    ----------

    அத்தியாயம்-122
    நான் பெற்ற பட்டம்

    மணிமேகலையின் பதிப்பு நடக்கையில் அந்நூலுக்கு அங்கமாக மணிமேகலையின் வரலாற்றைச் சேர்க்க எண்ணி அவ்வாறே கதைச் சுருக்கத்தை எழுதி முடித்தேன். பௌத்த சமய சம்பந்தமான செய்திகள் இந்நாட்டில் வழங்காமையால் அவற்றைமணிமேகலையின் குறிப்புரையில் அங்கங்கே விளக்கியுள்ளேன். ஆனாலும் தொடர்ச்சியாக அந்த மதக் கொள்கைகளைத் தனியே எழுதி நூலுக்கு அங்கமாகச் சேர்த்தால் படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கு மென்பது என் கருத்து. மளூர் ரங்காசாரியரோடு மணிமேகலையைப் பற்றிப் பேசி விஷயங்களைத் தெரிந்து கொண்ட காலங்களிலெல்லாம் அவர் கூறுவனவற்றைத் தனியே குறித்து வைத்துக் கொண்டேன். பௌத்த மத சம்பந்தமான ஆங்கிலத்திலுள்ள நூற் பகுதிகள் சிலவற்றைச் சில அன்பர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்தும் வைத்துக் கொண்டேன்.

    மும்மணிகள்

    புத்தர், பௌத்த தருமம், பௌத்த சங்கம் என்னும் மூன்றையும் பௌத்தர்கள் மும்மணிகள் என்று வழங்குதல் மரபு. என்னிடமிருந்த குறிப்புக்களின் உதவியால் அம் மும்மணிகளைப் பற்றிய வரலாறுகளை எழுதத் தொடங்கினேன். ரங்காசாரியர் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் நான் எழுதியவற்றை அவ்வப்போது அவரிடம் படித்துக் காட்டிச் செப்பம் செய்து கொண்டேன். மாற்றலாகி அவர் சென்னைக்குச் சென்ற பிறகு நான் சென்னைக்கு வரும் போதெல்லாம் அதுகாறும் எழுதியவற்றைப் படித்துக்காட்டுவேன். இடையிடையே தமிழ்ச் செய்யுட்களை நான் அமைத்திருத்தலைக் கண்டு அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து பாராட்டுவார்.

    பாண்டித் துரைத் தேவர் வருகை

    1896-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பாலவநத்தம் ஜமீன்தாராகிய பொ. பாண்டித்துரைத் தேவர் கும்பகோணத்திலிருந்த மௌன ஸ்வாமிகளைத் தரிசித்தற்கு வந்தார். அக்காலத்தில் அவரைத் தக்கபடி வரவேற்று உபசரித்துப் பல கனவான்கள் கூடிய மகா சபையில் அவரைப் பேசச் செய்தேன். இரண்டு மூன்று நாட்கள் அவர் கும்பகோணத்தில் தங்கியிருந்தார்; என் வீட்டுக்கு ஒரு முறை வந்தார். அப்போது பல அன்பர்களையும் அழைத்து உபசரித்து அவருடன் வந்திருந்த சங்கீத வித்துவான் சீனுவையங்கார், திருக்கோடிகா கிருஷ்ணையர் முதலியவர்களைக் கொண்டு என் வீட்டில் ஒரு சங்கீத விநிகை நடை பெறச் செய்தேன். என்னிடமிருந்த ஏட்டுச் சுவடிகளையெல்லாம் பாண்டித்துரைத் தேவர் பார்த்துப் பெருவியப்புற்றார். மணிமேகலை அப்போது அச்சாகி வருவது தெரிந்து அதற்குப் பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.

    என்னிடம் இருந்த புறத்திரட்டை அச்சமயம் அவரிடம் காட்டி அது பல பழைய நூல்களிலிருந்து திரட்டிய பல செய்யுட்களைக் கொண்டதென்பதைத் தெரிவித்தேன். “நான் பல நூல்களிலிருந்து நீதிகளைக் கூறும் செய்யுட்களைத் திரட்டி வகுத்து ஒரு நூல் வெளியிடலாமென்று எண்ணியிருக்கிறேன். இதை ஒரு முறை பார்த்தால் எனக்கு உபயோகமாக இருக்கும்” என்றார். அந்தச் சுவடியைச் சில மாதங்களுக்குப் பிறகு அவர் கும்பகோணத்துக்கு மகாமகத்துக்காக வந்த சமயம் பெற்றுக் கொண்டார்.

    உத்தம சம்பாவனை

    1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து கூடினர்.

    அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங் களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார். எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான் யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்? அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.

    பன்னூற் றிரட்டு

    மகா மகத்துக்குப் பாண்டித்துரைத் தேவரும் அவருடைய நண்பரும் சிறந்த தமிழ் வித்துவானுமாகிய வீர. லெ. சிந்நய செட்டியாரும் வந்திருந்தனர். அவ்விருவர்களுடைய சல்லாபத்தாலும் நான் இன்புற்றேன். அப்போதுதான் புறத்திரட்டுப் பிரதியைப் பாண்டித்துரைத் தேவரிடம் சேர்ப்பித்தேன். பலநீதிச் செய்யுட்களை அவர் திரட்டிப் பன்னூற்றிரட்டு என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதற்குப் புறத்திரட்டு மிகவும் உதவியாயிருந்ததென்று தெரிய வந்தது.

    குமாரனுக்கு விவாகம்

    1897-ஆம் வருஷம் ஜு ன் மாதம் என் குமாரன் சிரஞ்சீவி கலியாண சுந்தரத்துக்கும் நாகபட்டினத்தில் இருந்த ஸ்ரீ சக்கரபாணி ஐயரென்பவருடைய குமாரி கமலாம்பாளுக்கும் விவாகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் வதூகிருகப் பிரவேசம் நடந்தது. அப்போது அம்பலவாண தேசிகர் முதலியவர்கள் எனக்குப் பல வகையில் உதவி புரிந்தார்கள். என் குமாரனுடைய விவாக தினம் விக்டோரியா மகாராணியாருடைய வைர ஜூபிலிக் கொண்டாட்ட நாள். பல இடங்களிலும் அக்கொண்டாட்டம் நடந்தது. கரூரில் ஜில்லா முன்ஸீபாக இருந்த ஸ்ரீ ஏ. சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் அவ்வூரில் நடந்த வைபவத்துக்கு மகாராணியார் விஷயமாகச் சில பாடல்கள் எழுதி அனுப்ப வேண்டுமென்று விரும்பியபடி எழுதியனுப்பினேன்.

    மணிமேகலைப் பதிப்பு

    மணிமேகலை மூலமும் அரும்பதவுரை முதலியனவும் 1898-ஆம் வருஷம் ஜு லை மாதத்தில் அச்சிடப் பெற்று நிறைவேறின. முகவுரையும், புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம், மணிமேகலைக் கதைச் சுருக்கம் என்பவையும் முதலில் சேர்க்கப் பெற்றன.

    புத்தகம் வெளி வந்து உலாவியபோது எனக்குக் கிடைத்த பாராட்டுக்கள் பல. 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்களை என் குறிப்புரையிற் காட்டியிருந்தேன். இவற்றையன்றி, தமிழ் வடமொழி நூல்களின் உரையாசிரியர்கள் வாக்கிலிருந்து பல செய்திகளை அங்கங்கே கொடுத்தேன். அந்த நூல்களைப் பற்றியும் உரையாசிரியர்களைப் பற்றியும் நான் அறிந்துகொண்ட செய்திகள் யாவும் ‘அரும்பதவுரையிலடங்கியவை’ என்னும் பகுதியில் உள்ளன. புறத்திரட்டினால் தெரிந்த குண்டலகேசிச் செய்யுட்கள் சிலவற்றை அந்நூலைப் பற்றிச் சொல்லுமிடத்தில் சேர்த்திருந்தேன். அப் பகுதியைக் கண்ட அன்பர்கள், “இங்கிலீஷில் ‘என்ஸைக்ளோ பீடியா’ என்று ஒரு வகை அகராதி உள்ளது. அதைப் போல இருக்கிறது இது. இந்த மாதிரி நீங்கள் ஒவ்வொரு நூலுக்கும் எழுதினால் கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகமாகப் போட்டு விடலாம்” என்றார்கள். அத்தகைய பொருள் விளக்க அகராதி தமிழில் வேண்டுமென்ற ஆவல் இயல்பாகவே எனக்கு உண்டு. அவ்வன்பர்கள் கூறிய பிறகு அந்த ஆவல் அதிகரித்தது.

    முதல் முதலாக நான் உரையெழுதிய நூல் மணிமேகலை. எனது உரை எளிய நடையில் அமைந்தமை பற்றிப் பலர் பாராட்டினர். பல விஷயங்களை விளக்குகின்றதென்று பலர் புகழ்ந்தனர். கிறிஸ்டியன் காலேஜில் தமிழாசிரியராக இருந்த வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், “யான் இம் மணிமேகலைப் பதிப்பைப்பற்றி முகமனா வொன்றும் எழுதுகின்றிலேன். மிகவும் அற்புதமாயிருக் கின்றது. யான் விரும்பியாங்கே குறிப்புரையும் பிறரால் இது வேண்டும் இது வேண்டாவென்று சொல்லப்படாதவாறு செவ்வனே பொறித்திருக்கும் பெற்றிமையை யுன்னுந் தோறு மென்னுள்ளங் கழிபேருவகை பூக்கின்றது. இப்போழ்தன்றே யெந்தஞ் சாமிநாத வள்ளலைக்குறித்துக் குடையும் துடியும் யாமும் எம்மனோரும் ஆடிய புகுந்தாம். இன்னும் எம் மூரினராய் நின்று நிலவிய நச்சினார்க்கினிய நற்றமிழ்ப்பெருந்தகை போன்று பன்னூற் பொருளையும் பகலவன் மானப்பகருமாறு பைந் தமிழமிழ்தம் பரிவினிற்பருகிய பண்ணவர் பெருமான் எந்தம் மீனாட்சிசுந்தர விமலன் நுந்தமக்கு வாணாள் நீட்டிக்குமாறு அருள்புரிவானாக’ என்று எழுதினார்.

    எனக்குக் கிடைத்த பட்டம்

    இப்படி நாள்தோறும் மணிமேகலை புகுவித்த மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் கடிதங்களும் வார்த்தைகளும் என் பால் வந்து கொண்டேயிருந்தன. 1899-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 7-ம் தேதி வெளிவந்த ‘விவேக திவாகரன்’ என்னும் ஒரு பத்திரிகையில் ‘ஆனந்தன்’ என்ற புனை பெயரோடு ஓரன்பர் ‘பௌத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசாரியர்’ என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். தலைப்பைப் பார்த்தவுடன் பௌத்த சமய ஆசிரியர் ஒருவரைப் பற்றியது போலும் என்ற ஆவலோடு படிக்கத் தொடங்கினேன். ஆனால் விஷயம் என்னைப் பற்றியதாக இருந்தது.

    “கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதரான உத்தமதானபுரம் சாமிநாதையரவர்கள் தனது கால முழுவதும் சங்கத்து நூல்களின் ஆராய்ச்சியினையே செய்து அதி புராதன அரிய பௌத்த சமய பிரபல கிரந்தங்களான சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலையாதி யச்சிட்டுத் தமிழ் நாடு முழுவதும் பரவச் செய்து அவர் படைத்த கீர்த்தி எத்தகையராலும் கொண்டாடத் தக்கதேயாம். ஐயரவர்கள் காலமெல்லாம் பௌத்த சமய நூல் களின் கையெழுத்துப் பிரதிகளைத் தேச தேசமாய், நாடு நாடாய், ஊரூராய், கிராமங் கிராமமாய், வீதி வீதியாய், வீடு வீடாய்ச் சென்று சம்பாதிப்பதிலும், அகப்பட்ட நூல்களைப் பரிசோதிப்பதிலும் அவற்றிற்கு அரும்பதவுரை எழுதுவதிலும், அவற்றிலுள்ள பௌத்த சமய ஆசாரியர்களின் சரித்திரங்களைத் தெரிந்து கொள்வதிலும் அவர்கள் மரபறிவதிலும் அவரெடுத்துக் கொண்ட முயற்சியும், கழிந்த காலமும், அடைந்த வருத்தமும் அளவு படுவனவல்ல. பௌத்த சமய ஆராய்ச்சியிலேயே எந்நாளும் அவர் மனம் நாடிக் கொண்டிருக்கும். அவர் இருக்கும் போதும் நடக்கும் போதும் சந்தியாவந்தனம் புரியும் போதும் சிவ பூஜை செய்யும் போதும் தூங்கும் போதும் பௌத்த சமய சிந்தனையே யன்றி வேறு கிடையாது. இங்ஙன மிலையேல் இத்தகைய அரிய கிரந்தங்களை வெளிப்படுத்தல் முடியாது. இவ்வுண்மை அவரச்சிட்ட நூல்களின் முகவுரைகளிற் காணலாம். புத்தர் பிராமணர் கொள்கைக்கு விரோதஞ் செய்தாரில்லை யெனப்பல ஐரோப்பியர்களின் அபிப்பிராயங்களை எடுத் தெழுதியிருக்கிறார். புத்தர் ஈசன் உண்டென்றாவது ஆன்மாக்கள் உண்டென்றாவது விளங்கக் கூறாமையினாலேயே திருஞானசம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் முதலியோர் மறுத்துரைத் தாரேயன்றி வேறு காரணமில்லையென்று காட்டியிருக்கின்றார்.

    பௌத்த நூலின் கடைப் பக்கத்திலே சில தேவாரங்களையும் அச்சிட்டனர். ஜன்மாந்தர புண்யத்தினாலேயே இவ்வாராய்ச்சி ஐயரவர்கட்குச் சித்தித்திருக்கும் போலும். என்னை! உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எந்நூல்களுக்கும் ஒத்த துணிபாகலின், இவ்வுண்மை, ‘மன்னுயிர் தாங்குங் கருத்தொடு ஆவயிற்றுதித்தனன்’ என்று கூறிய மணிமேகலை பாத்திர மரபு கூறிய காதையினும் 358-ஆம் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விசேட வுரையானும் காணலாம். பௌத்த சமய நூல்கள் ஆராய்ச்சி செய்பவர் இவரைக் காட்டிலும் வேறு இக்காலத்தில் அகப்படுவது அருமை. ஆதலின் பல தேயங்களிலுமுள்ள பௌத்த சமயர்கள் இவர்பால் நன்றி பாராட்டித் தங்கள் சமயத்துக்கேற்ற ஒரு பெரும் பட்டப் பெயர் இவருக்குச் சூட்டி அன்பு பாராட்டுவார்களென நம்புகின்றனம். அங்ஙனம் செய்யாரேல் அவர்கள் செய்ந்நன்றி கொன்றவரே யாவர். ஐயரவர்களின் முயற்சியின் பலனாக அடுத்த ஜன்மத்தில் ஐயர் புத்த குருவாக விளங்கினும் விளங்குவர். அங்ஙனமே பௌத்த சமய போதிநாதன் ஐயரவர் கட்கு அருள் புரிவாரென்பது நிச்சயம்.”

    என்பால் இவ்வளவு மதிப்புடைய அவ்வன்பருடைய கட்டுரையைக் கண்டு நான் நகைத்தேன். அவருடைய ஸ்துதி நிந்தை எனக்கு வருத்தத்தை உண்டாக்கவில்லை. சிந்தாமணி முதலியவற்றையும் பௌத்த நூல்களின் வரிசையிலே சேர்க்கும் இந்த ஆனந்தருக்குத் தமிழ் நூல்களில் எவ்வளவு அன்பு உண்டென்பதை நானா சொல்லவேண்டும்?

    என்னுடைய அன்பர்கள் இதைக் கண்டு சிரித்தார்கள். ‘பௌத்த சமயப் பிரபந்தப் பிரவர்த்தனாசாரியர்’ என்று எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த அப்பட்டத்தை நான் பெட்டியில் வைத்துப் போற்றி வந்தேன். வெளியிடும் சந்தர்ப்பம் இப்போதுதான் வாய்த்தது. முன்னே சிந்தாமணி பதிப்பித்த காலத்தில் ஒரு ஜைனப் பெண்மணி என்னை ‘பவ்ய ஜீவன்’ என்று அன்போடு அழைத்ததனால் நான் ஜைனனாகவில்லை. இப்போது இவர் குறிப்பாகப் புத்த சமய குருவென்றதால் நான் பௌத்தனாகவில்லை.

    மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, பெருங்கதை என்பவற்றில் என் கருத்தைச் செலுத்தலானேன்.
    ------

This file was last updated on 28 Dec. 2016
.